Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

நல்லுரைக்கோவை -
நான்காம் பாகம் (கட்டுரைகள்)
உ.வே. சாமிநாதையர் எழுதியது.

nalluraikkOvai - 4 (essays)
of u.vE cAminAta aiyar
In tamil script, unicode/utf-8 format




Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing a scanned image version of this work for the etext preparation.
This etext has been produced via Distributed Proof-reading Implementation and we thank the following volunteers for their assistance:
Anbu Jaya, S. Karthikeyan, G.Mahalingam, R. Navaneethakrishnan,
P. Thulasimani, V. Ramasami, K. Vinayagar and S. Mithra.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2013.
to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/


நல்லுரைக்கோவை
(நான்காம் பாகம்) (கட்டுரைகள்)
உ.வே.சாமிநாதையர் எழுதியது.


Source:
நல்லுரைக்கோவை (நான்காம் பாகம்)
மகாமகோபாத்தியா தாக்ஷிணாத்ய கலாநிதி
டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் எழுதியது
ஸ்ரீ தியாகராச விலாஸ் வெளியீடு
1952, Kabeer printing Works, Chennai.

பொருளடக்கம்
    முகவுரை
    1. மந்திரியின் தந்திரம் 11. அபூர்வ தண்டனை
    2. தாசில் அனந்தராமையர் 12. வித்துவான் தியாகராச செட்டியார்
    3. பண்டைத் தமிழர் 13. வேங்கடராம பாகவதர்
    4. யானையின் கண்ணீர் 14. இரண்டு புலவர்கள்
    5. உதிர்ந்த மலர்கள் 15. பிச்சைப் பாட்டு
    6. அவன் யார்? 16. பவ்ய ஜீவன்
    7. ராமதாசர் 17. பொறாமைத் தீ
    8. பாலைப் பழம் 18. படக்காட்சி
    9. "சிவசிதம்பரம்" 19. கும்மாயம்
    10. பழைய மேஜை 20. திருடனைப் பிடித்த விநோதம்



கணபதி துணை

முகவுரை
~~~~~~~~~~~~

நல்லுரைக்கோவையின் நாலாம் பாகமாகிய இது முன் வெளியிடப்பெற்றவற்றைப் போலவே கட்டுரைகளும் சிறு வரலாறுகளும் அடங்கிய தொகுதியாகும். வசன நடையிலுள்ள புத்தகங்களைப் படிப்பதில் தமிழ் நாட்டாருக்குள்ள விருப்பத்தை அறிந்து இவற்றை வெளியிடலானேன். அவ்வப்போது பல அன்பர்கள் இவ்வெளியீடுகளைப் பாராட்டிக் கூறும் வார்த்தைகளும் எழுதிவரும் கடிதங்களும் எனக்கு ஊக்கத்தை விளைவிக்கின்றன.

இத்தொகுதியிலுள்ள பல விஷயங்கள் சிவசிதம்பரமென்பது ஒரு பாடபுத்தகத்திலும் அபூர்வ தண்டனை யென்பது தாருல் இஸ்லாம் ஆண்டு மலரிலும் வித்துவான் தியாகராச செட்டியாரென்பது கரந்தைக் கட்டுரையிலும் பொறாமைத் தீ யென்பது சுதேசமித்திரன் 1938-ஆம் வருஷம் விஜயதசமி மலரிலும், கும்மாயமென்பது தினமணி (1937) வருஷமலரிலும், திருடனைப்பிடித்த விநோதமென்பது ஆனந்த விகடன் (1938) தீபாவளி மலரிலும் வெளிவந்தவை. ஏனைய கலைமகளில் வெளியானவை.

வழக்கம்போலவே தமிழ் நாட்டார் இவ்வெளியீட்டை ஆதரித்து உதவுவார்க ளென்று நம்புகிறேன்.

'தியாகராஜவிலாஸம்', திருவேட்டீசுவரன்பேட்டை
24-4-39

இங்ஙனம், வே. சாமிநாதையர்
---------------



கணபதி துணை

நல்லுரைக் கோவை : நாலாம் பாகம்
1. மந்திரியின் தந்திரம்


பழையகாலத்தில் தமிழ்நாட்டில் சிறந்த நிலையில் இருந்த ஜமீன்களுள் சொக்கம்பட்டியென்பது ஒன்று. வடகரையாதிக்க மென்றும் அந்த ஜமீன் வழங்கப்படும். அங்கே இருந்த ஜமீன்தாரர்களுள் சின்னணைஞ்சாத் தேவர் என்பவர் புலவர் பாடும் புகழுடையவராக வாழ்ந்து வந்தார். அவர் திருக்குற்றாலம், பாபநாசம், திருமலை முதலிய தலங்களில் பல வகையான நிபந்தங்களை அமைத்தனர். அவர் தண்டமிழ் வாணர்களை மிக்க அன்புடன் ஆதரித்து வந்து பெரும்புகழ் பெற்றார். மேலகரம் திரிகூடராசப்ப கவிராயர், செங்கோட்டைக் கவிராச பண்டாரம், கிருஷ்ணாபுரம் கவிராயர் முதலியவர்கள் அவருடைய ஆதரவு பெற்றவர்கள். அக்காலத்தில் அவருடைய ஆட்சியை யாவரும் போற்றினர். ஒரு பெரிய அரசாங்கத்துக்கு உதாரணமாகச் சொல்லக்கூடிய நிலையில் அவருடைய சம்ஸ்தானம் விளங்கியது. அவ்வளவுக்கும் காரணம் அந்த ஜமீன்தாருடைய ஸ்தானாதிபதியாக இருந்த பொன்னம்பலம்பிள்ளை யென்பவரது அறிவாற்றலே யாகும்.

பொன்னம்பலம் பிள்ளை சிறந்த தமிழ்ப் புலமை வாய்ந்தவர்; வாசுதேவநல்லூர்ப் புராணத்தையும் வேறுபல தனிப் பாடல்களையும் இயற்றியுள்ளனர். அவர் வாசுதேவ நல்லூரிற் பிறந்த வேளாள குலதிலகர். பேராற்றலும் அரசியலை ஒழுங்குபெற நடத்தும் மதியூகமும் அவர்பாற் பொருந்தியிருந்தன. அவருடைய நல்லறிவும் ஆட்சிமுறையும் குடிகளுக்கும் சம்ஸ்தானாதிபதிக்கும் ஒருங்கே இன்பத்தை உண்டாக்கின.

பொன்னம்பலம் பிள்ளையின் அறிவின் திறத்தில் ஈடுபட்ட சம்ஸ்தானாதிபதியாகிய
சின்னணைஞ்சாத் தேவர் தம் அமைச்சராகிய அவர் யாது கூறினும் அதன்படியே நடந்து வந்தார். அமைச்சருடைய சாதுரியமான மொழிகளும் தமிழ்ப் புலமையும் அரசியல் யோசனைகளும் யாவரையும் வணங்கச் செய்தன. வேறு சம்ஸ்தானத் தலைவர்களெல்லாம், "இத்தகைய அமைச்சர் ஒருவர் நமக்கு இல்லையே!" என ஏங்கினர்.

அக்காலத்தில் இருந்த இராமநாதபுரம் சேதுபதி மன்னர் பொன்னம்பலம் பிள்ளையை ஒரு சமயம் வருவித்து அவருடைய பெருமையை உணர்ந்து போற்றினார். அவரோடு பேசுவதில் சேதுபதிக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. அடிக்கடி அவருடைய பழக்கம் இருக்க வேண்டுமென்பது அவ்வரசர் விருப்பம். ஆயினும் தம்முடைய ஜமீன்தாரிடத்தில் அன்பும் அந்தச் சம்ஸ்தான நிர்வாகத்தில் நோக்கமும் உடைய பொன்னம்பலம் பிள்ளை அங்ஙனம் இருப்பது சாத்தியமாகுமா? பலமுறை சேதுபதி விரும்பினால் ஒருமுறை சென்று சிலநாள் இருந்து வருவார். அப்பொழுது சேதுபதி மன்னர் அவரை இராமநாதபுரத்திலேயே இருத்திவிடுதற்குரிய தந்திரங்கள் பல செய்தும் அவர் இணங்கவில்லை.

ஒருமுறை சேதுபதியரசரிடம் பொன்னம்பலம் பிள்ளை வந்திருந்தபோது அவர் தம் ஜமீன்தாருடைய சிறந்த குணங்களைப் பற்றியும் தம்பால் அவருக்குள்ள அன்பைப்பற்றியும் எடுத்துக் கூறினார்.

"உங்களுடைய அபிப்பிராயம் இல்லாமல் சம்ஸ்தானத்தில் ஒரு காரியமும் நடைபெறாதாமே?" என்று கேட்டார் சேதுபதி.

"ஆம். ஆனால் அப்படி இருப்பது அதிகாரத்தினால் அன்று; அன்பினாலேதான். எங்கள் எஜமானுக்கு நான் செய்வதிற் குறையிராது எந்ற நம்பிக்கையுண்டு. நாடும் குடிகளும் நன்மை அடைய வேண்டுமென்பதே அவர்களுடைய நோக்கம்; தாமே நேரில் அதிகாரம் செலுத்தவேண்டுமென்ற விருப்பம் அவர்களுக்கு இல்லை. யாருடைய அதிகாரமாக இருந்தால் என்ன? எல்லாம் அவர்களுடைய பெயராலேயே நடைபெறுகின்றன."

" அப்படியானால் உங்கள் ஜமீன்தார் உங்கள் யோசனையைக் கேட்டுத்தான் எல்லாக் காரியங்களையும் செய்வாரோ?"

" கூடிய வரையில் அப்படித்தான் செய்வது வழக்கம். அவர்களிடம் நான் வெறும் சம்பளம் வாங்கும் மந்திரியாகமட்டும் நடந்து கொள்ளவில்லை. அவர்கள் என்னை ஆருயிர் நண்பனாகவே கருதி யிருக்கிறார்கள். ஒரு சம்ஸ்தானாதிபதி, ஒரு காரணமும் இல்லாமல் என்றுக்கும் பற்றாத என்னிடத்தில் இவ்வளவு அன்பு வைக்கும்போது, என்னுடைய நன்மையைக் காட்டிலும் அவர்களுடைய நன்மை யையே சிறந்ததாக நினைப்பது என் கடமையல்லவா?"

" உங்களுடைய சம்ஸ்தானாதிபதியை ஒருமுறை பார்க்க விரும்புகிறேன்."

" நன்றாகப் பார்க்கலாம். பரிவாரங்களுடன் சொக்கம்பட்டிக்கு விஜயம் செய்தால்" மகாராஜாவை வரவேற்பதைக் காட்டிலும் சந்தோஷந்தரும் செயல் வேறொன்று இல்லை."

" நான் அங்கே வருவதைக் காட்டிலும், உங்கள் சம்ஸ்தானாதிபதி இங்கே வந்தால நலம் அல்லவா?"

" அப்படியும் செய்யலாம். ஆனால் அதற்கு இது தக்க சமயமன்று. மகாராஜா அவர்களுக்கு முறையாகத் திருமுகம் அனுப்பி மரியாதையோடு வருவிக்கவேண்டும். அப்படிச் செய்தாலும் நான் அங்கே சென்று அவர்களை வரச்சொன்னால் தான் அவர்கள் விஜயம் செய்வார்கள். என்னுடைய விருப்பம் இல்லாமல் வரமாட்டார்கள்."

" நீங்கள் அவரை வரும்படி எழுதியனுப்பலாமே?"

" அவ்வளவு உரிமையை நான் மேற்கொள்ளலாமா? எங்கள் தலைவர் கருணை
மிகுதியினால் எனக்குச் சில அதிகாரங்களைக் கொடுத்திருக்கிறார்கள்; அவற்றை நான் தவறாகச் செலுத்தலாமா? எனக்கு இணங்கி அவர்கள் நடந்தாலும் அவர்களோ ஒரு சம்ஸ்தானாதிபதி; நான்ஓர் ஊழியன். நான் என்னுடைய வரம்புகடந்து நடக்கக்கூடாது. இங்கே வரும்படி நான் எழுதுவது முறையன்று."

" அப்படியானால், நானே ஒரு கடிதம் அனுப்பி வருவிக்கின்றேன்."

" மகாராஜாவின் திருமுகத்தைக் கண்டவுடன் அவர்கள் புறப்படமாட்டார்கள். இவ்விஷயமாக என் அபிப்பிராயத்தை அறிந்து கொண்டுதான் வருவார்கள்"

" உங்களுக்குத் தெரியாமலே நான் அவரை இங்கு வருவித்து விடுகிறேன்" என்றார் சேதுபதி மன்னர்.

இருவருக்கும் அப்போது வாக்கு வாதம் நடைபெற்றது. சேதுபதியோ சொக்கம்பட்டி ஜமீன்தாரை வருவித்துவிடுவதாக வீரம் பேசினார். அது முடியாதென்று பொன்னம்பலம்பிள்ளை கூறினார்.

மறுநாள் சேதுபதி வேந்தர் பொன்னம்பலம் பிள்ளை அறியாதபடி அவர் எழுதியது போல ஒரு கடிதம் எழுதி ஆள்மூலம் சொக்கம்பட்டி ஜமீன்தாருக்கு அனுப்பினார். 'உடனே புறப்பட்டு இவ்விடத்திற்கு விஜயம் செய்யவேண்டும்' என்று பொன்னம்பலம் பிள்ளை எழுதினதாக அக்கடிதம் அமைந்திருந்தது.

அதுகண்ட சின்னணைஞ்சாத்தேவர் அதுவரை சேதுபதியிடம் சென்று வாராமையால் சிறிது மயங்கினார். அக்காலத்தில் சேதுபதியைப் போன்ற கௌரவம் சின்னணைஞ்சாத் தேவருக்கும் இருந்தது. 'இங்ஙனம் நம் அமைச்சர் எழுதுவதற்குக் காரணம் தெரியவில்லை. ஆயினும் அவர் நம் நன்மையைக் கருதியே ஒவ்வொரு காரியத்தையும் செய்வார். இப்படி அவர் முன்பு செய்தது இல்லை. எதற்கும் நாம் அங்கே அதிக ஆடம்பரமின்றிச் செல்வோம்' என்றெண்ணிச் சில வேலைக்காரர்களை மட்டும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.

சொக்கம்பட்டியிலிருந்து ஜமீன்தாருடைய பல்லக்கு வருமென்றும், உடனே தமக்குத் தெரிவிக்க வேண்டுமென்றும், வந்தவருக்கு இடம் கொடுத்து உபசரிக்க வேண்டுமென்றும் சேதுபதி தம் அதிகார்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதிகாரிகளும் சின்னணைஞ்சாத் தேவரை எதிர்பார்த்திருந்தனர். தேவர் வந்து தமக்கென அமைத்திருந்த விடுதியில் தங்கினார். சேதுபதி வேந்தரைத் தாமே சென்று பார்ப்பது தம் கௌரவத்திற்குக் குறைவாதலாலும், தாம் தம் அமைச்சருடைய விருப்பத்தின்படி வந்திருப்பதாலும் அவர் அங்கேயே தங்கித் தம் அமைச்சரது வரவை எதிர்பார்த்திருந்தார்.

அவர் வந்திருப்பது பொன்னம்பலம் பிள்ளைக்குத் தெரியாது. பிள்ளையை வியப்படையுமாறு செய்யவேண்டுமென்று கருதிய சேதுபதி அவரையும் அழைத்துக்கொண்டு சின்னணைஞ்சாத் தேவர் தங்கியிருந்த விடுதிக்கு வந்தார். நெடுந்தூரத்தில் வரும்போதே தம்முடைய தலைவரைக் கண்டுகொண்ட பொன்னம்பலம் பிள்ளை ஏதோ சூது நடந்திருக்குமென்று தெரிந்து கொண்டார். உட்புகுந்து சின்னணைஞ்சாத் தேவரருகிற் செல்லும்போது அவர் திடுக்கிட்டுப்போவாரென்று சேதுபதி நினைத்தார். அவரோ அங்கே சென்றவுடன், " ஏனடா சின்னணைஞ்சாத்தேவா! ஸமுகத்தில் சௌக்கியமா?" என்று கேட்டார். ஸமுகம் என்பது சம்ஸ்தானாதிபதியைக் குறிப்பது. தாமே ஸமுகமாக இருக்கத் தம்மை இப்படி ஒருமையில் அழைத்துக் கேட்பதுபற்றி ஜமீன்தார் கோபம் அடையவில்லை. தாம் முன்னரே சந்தேகித்தபடி ஏதோ சூழ்ச்சியினால் சேதுபதி தம்மை வருவித்திருக்கிறா ரென்றும், தம் அமைச்சர் தக்க காரணங் கொண்டே அப்படிப் பேசுகிறாரென்றும் அவர் ஒருநொடியில் ஊகித்துக் கொண்டார்.

" எஜமான்! ஸமுகத்தில் ஸௌக்கியமே. உங்களைப் பிரிந்திருப்பதுதான் கஷ்டமாக இருக்கிறதாம்" என்று பணிவுடன் அவர் விடையளித்தார்.

" அப்படியா! விரைவிலேயே புறப்பட வேண்டியதுதான்" என்று சொல்லிவிட்டுப் பொன்னம்பலம் பிள்ளை மேலே நடந்தார்.

சேதுபதி மன்னருக்கு ஒன்றும் விளங்கவில்லை; அவர் அதற்குமுன் சின்னணைஞ்சாத் தேவரைப் பார்த்தவரல்லர்; ஆதலின் அங்கே வந்தவரே ஜமீன்தார் என்று அறிந்து கொள்ள முடியவில்லை. ' இவர் ஜமீன்தாராக இருந்தால், நமது முன்னிலையில் இந்த அமைச்சர் இப்படிப் பேசுவாரா? இவர் ஸம்ஸ்தானத்தைச் சேர்ந்த அதிகாரியாக இருக்கலாம். அமைச்சரை ஏமாற்ற எண்ணிய நாமே ஏமாந்து போனோம். ஜமீன்தார் இவரைக் காட்டிலும் அறிவாளியென்று தெரிகிறது. தாம் வராமல் தம் பெயருள்ள ஓர் அதிகாரியை அனுப்பிவிட்டார். இல்லாவிட்டால் இவ்வளவு சிறந்தவராகிய பொன்னம்பலம் பிள்ளைக்கு அவரிடத்தில் அன்பு இருப்பதற்கு நியாயம் இல்லையே' என்று எண்ணினார். இருவரும் அரண்மனைக்கு மீண்டார்கள்.

பொன்னம்பலம் பிள்ளை தனியே வந்து தம் ஸம்ஸ்தானாதிபதிக் கண்டு பொய்க் கடிதம் வந்ததும் பிறவும்தெரிந்து கொண்டார்; " நான் செய்த அபசாரத்தை மன்னிக்க வேண்டும். ஸமுகத்தின் கௌரவத்திற்கு இங்கெல்லாம் இவ்வளவு சுலபமாக வருதல் ஏற்றதன்று. அதனால், நான் இந்தத் தந்திரம் செய்தேன். ஸமுகத்திற்கு அகௌரவம் ஏற்பட்டாலும் நம் இருவருக்கு மட்டுந் தானே அது தெரியும்? உரிமைபற்றியும், வேறு வழியில்லாமையாலும் இவ்வாறுசெய்தேன்.க்ஷமித்தருள வேண்டும்" என்று வேண்டினார்; தம்முடைய அருமைத் தலைவரை அவ்வாறு பேசநேர்ந்ததே யென்பதை நினைந்து நினைந்து உருகினார்.

சின்னணைஞ்சாத் தேவரோ சிறிதும் மனம் வருந்தாமல்," நீர் நம்முடைய மானத்தைக் காப்பாற்றினீர். நாம் தெரியாமல் செய்த பிழையை உம்முடைய சாதுரியத்தால் மாற்றி விட்டீர். நீர் உள்ள வரையில் நமக்கு என்ன குறை!" எந்று கூறித் தம் அமைச்சரைத் தேற்றினார்.

அப்பால் பொன்னம்பலம் பிள்ளை சேதுபதியிடம் தம் அரசர் தம்மை வரும்படியாகச் சொல்லி யனுப்பி யுள்ளாரென்று கூறி விடைபெற்றுக்கொண்டு, சமஸ்தான அதிகாரியாக நடித்த சின்னணைஞ்சாச் தேவருடன் சொக்கம்பட்டி போய்ச் சேர்ந்தார்.

[ குறிப்பு: இவ்வரலாற்றை, திருவாவடுதுறை யாதீன வித்துவானும் இப்பொழுது அவ்வாதீனத்தைச் சார்ந்த மதுரைக் கட்டளை விசாரணைத் தலைவராக இருப்பவர்களுமாகிய ஸ்ரீமத் சங்கரலிங்கத் தம்பிரானவர்கள் தெரிவித்தார்கள்.]
--------


2. தாசில் அனந்தராம ஐயர்


ஏறக்குறைய ஐம்பது வருஷங்களுக்குமுன்பு கும்பகோணம், சீகாழி, நன்னிலம் முதலிய தாலூகாக்களில் தாசில் உத்தியோகத்தில் அனந்தராம ஐயரென்ற ஒரு பெரியவர் இருந்தார். அவர் பிராணணர்களுள் மழநாட்டுப் பிரகசரண வகுப்பிற் பிறந்தவர்; வைதிக ஒழுக்கமுடையவர்; சிவபக்திச் செல்வர்; நாள் தோறும் விடியற் காலையில் எழுந்து நீராடி நித்திய கர்மானுஷ்டானங்களையும் பஞ் சாட்சரஜபம் முதலியவற்றையும் முடித்து விட்டுச் சிவபூஜை செய்வார்; ஸ்ரீ ருத்திரம் சொல்லி அபிஷேகமும், மகாகைலாஸ அஷ்டோத்திர மந்திரம் சொல்லிச் சிவார்ச்சனையும் தவறாமற் செய்வார்.

அவர் எப்பொழுதும் வைதிகக் கோலத்தோடே இருப்பார்; உத்தியோக நேரத்தில்
மட்டும் சட்டையை அணிந்துகொள்வார். அவர் நெற்றியில் விபூதி எப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டிருக்கும்; கழுத்தில் ருத்திராட்சவடம் விளங்கும்.

அனந்தராம ஐயருக்கு அக்காலத்தில் 'மாஜிஸ்திரேட்' அதிகாரமும் இருந்தது. யாருக்கும் துன்பம் உண்டாகாதபடி அவர் உத்தியோகம் பார்த்து வந்தார். தம்மிடம் வரும் வழக்குகளில் சமாதானம் செய்யக்கூடிய வற்றை முயன்று சமாதானம்செய்விப்பார். இதனால் கட்சிக்காரர்களுக்கு வீண்செலவுகள் நேராமற் போகும். மேலதிகாரிகளுக்கும் குடிகளுக்கும் திருப்தியுண்டாகும்படி அவர் தம் உத்தியோகத்தை வகித்து வந்தார்.

அவர் தாம் உத்தியோகம் பார்த்த இடங்களில் உள்ள ஆலயங்களையும் தர்ம ஸ்தாபனங்களையும் உரியவர்களைக் கொண்டு நன்றாக நடத்தி வரும்படி ஏர்பாடு செய்தார்; ஆலயங்களில் பூஜை முதலியன ஒழுங்காகவும் சிறப்பாகவும் நடக்கும்வண்ணம் செய்தார். அவருடைய தெய்வபக்தியும், தூய ஒழுக்கமும் அவருடைய உத்தியோக மதிப்பை அதிகப்படுத்தின. அவர்பால் உத்தியோகம் பார்ப்பவர்களும் அவரைப்போலவே இருக்க வேண்டுமென்று முயன்று வந்தார்கள்.

கும்பகோணத்தில் அவர் வேலைபார்த்த போது முதலில் பக்தபுரி அக்கிரகாரத்தில் ஒரு வீட்டில் இருந்துவந்தார். அந்நகருக்கு வந்த இரண்டு மூன்று நாட்களுக்குப் பின் அமாவாசை வந்தது. அன்று அவர் வழக்கமபோலக் காவிரியாற்றுக்குச் சென்று ஊற்றில் ஸ்நானம் செய்துவிட்டு ஆற்றின் நடுவிலிருந்த பந்தலில் ஜபம் செய்து கொண்டிருந்தார். அமாவாசைத் தர்ப்பணத்துக்குரிய தர்ப்பைகள், கூர்ச்சம், பவித்திரம் முதலியவை அடங்கிய சிறு கட்டு ஒன்றும், மடிவஸ்திரங்களை வைத்துக்கொள்ளும் மடிசஞ்சியும், தீர்த்தபாத்திரமும் அவர் பக்கத்தில் இருந்தன.

அப்பொழுது 'பட்டா' கொடுக்கவேண்டிய காலமாதலின் வெளியூர்களிலிருந்து கணக்குப்பிள்ளைகள் பலர் வந்திருந்தனர். அவர்களுள் அந்தணராகிய ஒருவர் ஸ்நானம் செய்து தர்ப்பணம் பண்ணுவதற்காகக் காவிரிக்கு வந்தார்; ஸ்நானம் செய்தார். பின்பு தர்ப்பணம் செய்ய எண்ணி, மந்திரம் சொல்வதற்கு யாரேனும் சாஸ்திரிகள் அகப்படுவாரா வென்று பார்த்தார். அங்கிருந்த வைதிகர்களுள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்குத் தர்ப்பணம்பண்ணி வைத்துக்கொண்டிருந்தனர்.

கணக்குப்பிள்ளை, ஜபம் பண்ணிக்கொண்டிருந்த தாசில்தாரைப் பார்த்தார். நூதனமாக வந்தவராதலின் அவர் தாசில்தாரென்பது கணக்குப்பிள்ளைக்குத் தெரியாது.
தோற்றத்தினால், அவரை ஒரு நல்ல வைதிகப் பிராமணரென்று எண்ணினார். அவருக்கருகில் தர்ப்பை முதலியன வைத்திருப்பதைப் பார்த்தபோது அவர் வேறு எவ்விதம் எண்ணுவார்?

தாசில்தாரிடம் கணக்குப்பிள்ளை சென்றார்; "சாஸ்திரிகளே! தர்ப்பணம் பண்ணி வைக்கிறீரா?" என்று கேட்டார். அனந்தராம ஐயரோ சிறிதும் வேறுபாடின்றி அமைதியாக, " ஆஹா, பண்ணி வைக்கிறேன்" என்றார். தாசில்தார் மந்திரங்களை நிறுத்திச் சொல்லக் கணக்குப்பிள்ளை தர்ப்பணம் செய்தார்; "சாஸ்திரிகளே! நீர் நன்றாகப் பண்ணி வைக்கிறீர். எல்லோரும் மனோவேகத்தில் மந்திரத்தைச் சொல்வார்கள். நீர் நிதானமாகவும் ஸ்பஷ்டமாகவும் சொல்லுகிறீர்" என்று கணக்குப்பிள்ளை பாராட்டிவிட்டு, எப்பொழுதும் கொடுக்கும் தக்ஷிணைக்கு இரட்டைப்படியாக இரண்டணாவைக் கொடுத்தார். சாஸ்திரிகளாக இருந்த தாசில்தார் அதை வாங்கிக்கொள்ளவில்லை. "நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டார். 'நம்முடைய தோற்றத்திலிருந்து ஏழையென்று தெரிந்து சாஸ்திரிகள் வேண்டாமென்கிறார் போலும்' என்று நினைத்தார் கணக்குப்பிள்ளை.

தர்ப்பணம் முடிந்தபிறகு கணக்குப் பிள்ளை தாசில்தாரை நோக்கி, " இன்று அமாவாசையாதலால் கண்ட இடத்தில் சாப்பிடக் கூடாது. இந்தப் பக்கத்தில் யாராவது அன்னம் போடுவார்களா?" என்று கேட்டார். சாஸ்திரிகளுக்குப் போஜனம் கிடைக்கும் இடங்களெல்லாம் தெரிந்திருக்கு மென்பது கணக்குப்பிள்ளையின் எண்ணம்.

அனந்தராம ஐயர், பக்தபுரி அக்கிரகாரத்தில் இன்னவிடத்திலுள்ள வீட்டில் போடுகிறார்களென்று தம் வீட்டையே குறிப்பிட்டார்; ஆனால் அது தம் வீடென்பதை வெளியிடவில்லை.

கணக்குப்பிள்ளை அந்த வீட்டிற்குச் சென்று திண்ணையில் இருந்தார். வேறு சிலரும் சாப்பிடும்பொருட்டு வந்து அங்கே காத்திருந்தனர். தாசில்தார் தர்ப்பண முதலியவற்றை முடித்துக்கொண்டு மடிசஞ்சியுடன் தீர்த்தபாத்திரத்தை ஏந்தியவராய் வீட்டுக்கு வந்து பூஜை செய்தார். கணக்குப்பிள்ளை அவர் அந்த வீட்டிற் பூஜைசெய்யும் சாஸ்திரி களென்று தீர்மானம் செய்துகொண்டார். அவ்வீட்டுத் தலைவர் யாரென்பதை அவர் தெரிந்து கொள்ளவில்லை; விசாரிக்கவு மில்லை. அவருடைய ஞாபகம் முழுவதும் விரைவிலே போஜனம் செய்துவிட்டுக் கச்சேரிக்குப் போக வேண்டுமெனபதில் அழுந்தியிருந்தது.

பூஜையானவுடன் இலை போட்டுவிட்டு வேலைக்காரர்கள் திண்ணையிலிருந்தவர்களை யெல்லாம் போஜனத்துக்கு அழைத்தார்கள். கணக்குப்பிள்ளையும் சென்றார். சிறந்த வியஞ்சனங்களுடன் ஆகாரம் அளிக்கப்பட்டது. சாப்பிடும்போது தாசில்தார் அங்கே பந்தி விசா ரணைசெய்து கொண்டிருந்தார். யாவரும் மௌனமாகப் போஜனம் செய்தனர். கணக்குப் பிள்ளை இடையில் வியஞசனமொன்றை விரும்பினார். தாசில்தாரைப் பார்த்து, " ஓய் சாஸ்திரிகளே! இந்தப் பொரித்த கூட்டை இன்னும் கொஞ்சம் கொண்டுவரச்சொல்லும்" என்றார். அவர் தமக்குப் பழக்கமானவரென்ற நினைவினால் சிறிது கம்பீரமாகவே பேசினார். " ஆஹா, அப்படியே" என்று தாசில்தார் உள்ளே சென்று அங்ஙனமே பரிமாறச் செய்தார். கணக்குப்பிள்ளைக்கு அருகில் அமர்ந்து சாப்பிட்டவர்கள் தாசில்தாரை அவர் " சாஸ்திரிகளே" என்று கூப்பிட்டதைக் கேட்டுத் திடுக்கிட்டனர். தாசில்தார் உள்ளே சென்றபொழுது கணக்குப்பிள்ளையிடம் ஒருவர், " ஓய் பிராம்மணா, என்ன பைத்தியக்கார மனுஷ்யரா யிருக்கிறீர்? தாசில்தாரவர்களைச் சாஸ்திரிகளே யென்று கூப்பிடுகிறீரே! இல்லாத அதிகாரமெல்லாம் பண்ணுகிறீரே!" என்றார்.

கணக்குப்பிள்ளை பிரமித்துப்போனார்; அவருக்கு விஷயம் விளங்கிவிட்டது. தமக்குத் தர்ப்பணம் செய்துவைத்த சாஸ்திரியும், போஜனம் செய்துவைக்கும் அன்னதானப் பிரபுவும், கச்சேரியில் பட்டாக்கொடுக்கப்போகும் தாசில்தாரும் ஒருவரே என்பதை அப்போதுதான் உணர்ந்தார். அவருடைய மனம் குழம்பியது. உடம்பெல்லாம் வேர்த்தது. அந்த அருமையான சாப்பாட்டை ருசியறிந்து உண்டு கொண்டிருந்த அவருடைய உள்ளத்தில் அச்சம் புகுந்துகொண்டது. உணவில் ஞாபகமே இல்லாமல் தலை குனிந்துகொண்டே ஒரு வகையாகச் சாப்பிட்டார்.

யாவரும் உண்டதும் தாம்பூலம் அளித்து நமஸ்காரம் செய்தபின்பே தாசில்தார் உண்பது வழக்கம். அப்படியே அவர் தாம்பூலம் கொடுத்தார். வந்தவர்கள் விடைபெற்றுக் கொண்டு சென்றனர். கணக்குப் பிள்ளையோ மேல்வஸ்திரத்தை இடையிலே கட்டிக்கொண்டு பரவசராய்த் தாசில்தார் காலிலே விழுந்து வணங்கினார்; அவருடைய கண்களில் நீர் ததும்பியது; "நான் பெரிய அபசாரம் செய்துவிட்டேன். க்ஷமிக்கவேண்டும். தங்களைத் தெரிந்து கொள்ளாமல் இருந்தது பெரிய பிழை" என்று இரக்கம் தோன்றக் கூறினார்.

" நீர் ஒன்றும் குற்றம் செய்யவில்லையே. தர்ப்பணம் செய்வதில் உமக்கிருந்த சிரத்தையை நான் அறிந்து சந்தோஷித்தேன். என்னை வேதவித்துக்களுள் ஒருவனாக எண்ணியது எனக்கு ஒரு பெரிய பாக்கியந்தான். அப்படி உம்முடைய மனத்தில் படும்படி நான் இருந்தது பெருமையாகத் தோற்றியதே யல்லாமல் சிறுமையாக எனக்குத் தோற்றவில்லை. உம்முடைய வைதிக சிரத்தையை நான் பாராட்டுகிறேன். இனி இந்த ஊருக்கு வந்தால் இங்கேயே ஆகாரம் செய்துகொள்ளலாம்" என்று தாசில்தார் சொல்லிக் கணக்குப்பிள்ளைக்கு விடை கொடுத்தனுப்பினார்.

தாசில்தாருடைய குணங்களை நினைந்து கணக்குப்பிள்ளை உருகிக்கொண்டே சென்றார்.

அனந்தராம ஐயர் அப்பால் சிலகாலம் கும்பகோணம் மேட்டுத்தெருவிலுள்ள ஒரு வீட்டில் குடியிருந்தார். அவர் குடியிருந்த வீட்டின் பக்கத்துவீட்டுக்கொல்லையில் ஒரு முருங்கை மரம் இருந்தது. அது தாசில்தாருடைய வீட்டுப் பக்கம் சாய்ந்திருந்தது. தாசில்தாருடைய தாயார் அங்ஙனம்சாய்ந்திருந்த பக்கத்திலுள்ள கிளையிலிருந்து சில காய்களைப் பறித்துச் சமையல் செய்தனர். அதனை யறிந்த அயல் வீட்டுக் காரர் அனந்தராமஐயருடைய நடுநிலைமையைப் பரிசோதிக்க எண்ணி அதைக் குறித்து ஒரு பிராது எழுதி அனுப்பினார்.

தம் தாயார் இங்ஙனம் செய்தது அனந்த ராம ஐயருக்குத் தெரியாது. ஆதலின் இந்தப் பிராதைக் கண்டவுடன் அவர் திடுக்கிட்டார். உடனே விசாரித்து அந்தக் குற்றத்திற்காகக் கால் ரூபாய் அபராதம் போட்டு உடனே தம் கையிலிருந்தே செலுத்தி விட்டார்.

பிராது செய்தவர் தாம் இங்ஙனம் செய்தது குறித்து மிகவும் வருந்தினார். அனந்தராம ஐயர் நியாயம் வழங்கும் சிறப்பு இந்நிகழ்ச்சி யால் எங்கும் பரவியது.
---------------------


3. *பண்டைத் தமிழர்

    * மன்னார்குடி, கௌமார குருகுலத்தின் ஆதரவிற் செய்யப்பட்ட பிரசங்கம்.

முன்னுரை

தமிழரென்பது தமிழ் என்னும் பகுதியடி யாகப் பிறந்த பெயர்; தமிழ் என்பது ஒரு மொழியின் பெயர். அம்மொழி வழங்கும் நாடு தமிழ் நாடு. தமிழ்நாட்டில் வாழ்பவர்களைத் தமிழர் என்றல் பொருந்தும். தேசங்கள் மொழிவேற்றுமையாற் பிரிக்கப் பட்டிருந்தன வென்று தெரிகிறது.

    " தமிழ் கூறம் நல்லுலகத்து" (தொல்காப்பியம், சிறப்பு),
    " இமிழ்கடல் வேலித் தமிழகம்" (பதிற்றுப்பத்து )

பிறமொழி வழங்கும் நாடுகளைக் குறிப்பிடுகையில் அவற்றை, "மொழி வேறுபட்ட தேசம்" என்று வழங்கி வந்தனர்:

    "மொழிபெயர் தேஎத்தர்" (குறுந்தொகை),
    "தமிழ்கெழு மூவர் காக்கும்
    மொழிபெயர் தேத்த பன்மலை யிறந்தே" (அகநானூறு.)

பண்டைக் காலத்துத் தமிழர்கள் மக்கட் பிறவி எடுத்ததற்கு ஏற்ற இயல்புகளை உடையவராக இருந்தனர். மெய்வாய் முதலிய ஐம்பொறி யுணர்ச்சியோடு மனவுணர்ச்சியும் பெற்றவர்களை மாக்களென்றும் தமிழர் வழங்கி வந்தனர்:

    " மக்கள் தாமே ஆறறி வுயிரே" (தொல்காப்பியம்.)

மன உணர்ச்சியாவது, இது செய்யத் தக்கது, இது செய்யத் தகாதது என்னும் பகுத்தறிவாகும்:

    தக்க வின்ன தகாதன வின்னவென்
    றொக்க வுன்னல ராயின் உயர்ந்துள
    மக்களூம் விலங்கே" (கம்பராமாயணம், வாலிவதைப்படலம்.)

"மக்களும் மாக்களும் அறிவு விசேடத்தால் வேறுபட்டிருந்தாலும் உருவத்தால் மாக்கள்
மக்களைப்போன்றே இருப்பர். இத்தகைய ஒப்பை யாம் எங்கும் கண்டதில்லை" என்று
வியந்து திருவள்ளுவர்,

    "மக்களே போல்வர் கயவர் அவரன்ன
    ஒப்பாரி* யாங்கண்ட தில்."

என்று கூறிய அழகு மிகவும் போற்றத்தக்கது. கல்வியறிவில்லா மக்கள் விளங்காகவும் கருதப் பட்டனர்:
-----------
* ஒப்பாரி-ஒப்பு

    "விலங்கொடு மக்க லனையர் இலங்குநூல்
    கற்றாரோ டேனை யவர்" (குறள்.)

மக்களுக்குரிய இயல்புகளோடு பண்டைத் தமிழர் வாழ்ந்து வந்தனர்.

பண்டைத் தமிழர் வாழ்க்கை

மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் இயற்றுஞ் செயல்கள் பல. அவற்றை ஒருவாறு உடலுக்கு ஆக்கந்தருவன, உள்ளத்திற்கு ஆக்கந்தருவன, உயிருக்கு ஆக்கந்தருவன என்று மூன்று பிரிவாகக் கொள்ளலாம்.

1. உடலாக்கம்

உடலுக்கு ஆக்கந்தருவன உணவு, இருப்பிடம் முதலியன. இவற்றுள் தலை சிறந்தது உணவாகும். உடல் பல தொழில்களைச் செய்து வாழ்வதற்கு உணவு இன்றியமையாதது. மருத்துவ நூல்களும் இக்கருத்தை வற்புறுத்திக் கூறும். அவ்வுணவு உழவினாற் பெறப்படுவது. உழவுத் தொழிலில் தமிழர் மேம்பட்டிருந்தனர். உழவிற் குரிய ஏர், மேழி, கொழு, கலப்பை, பல்லி முதலிய கருவிகளின் பெயர்களும் உழவைப் பற்றிய செய்திகளும் தமிழ் நூல்களிற் சொல்லப்பட்டுள்ளன. திருக்குறளில் உழவைப்பற்றிய அதிகாரம் ஒன்று உள்ளது. அதில உழவின் சிறப்பும் அதற்குரிய முறைகளும் கூறப்பட்டுள்ளன. உழவையும் உழவரையும் சிறப்பித்து 'ஏரெழுபது' என்னும் நூலொன்றைக் கம்பர் இயற்றியுள்ளார். எல்லாவகைத் தொழில்களும் உலகில் நடைபெறுதற்கு ஆதாரம் உழவே என்பதைப் பண்டைத் தமிழர் நன்கு அறிந்திருந்தனர். இது,

    "சுழன்றுமேர்ப் பின்ன துலகம் அதனால்
    உழந்தும் உழவே தலை" (குறள்)

என்பதனால் அறியப்படும்.

உழுதலைச் செய்யும் வேளாளர்கள் மிக்க மதிப்போடு பாராட்டப்பட்டனர். அவர்களுள்
உழுதுண்பார் உழுவித்துண்பாரென்று இருவகையினர் உண்டு. அரசர்கள் தம் கீழுள்ள
குடிகளைப் பாதுகாக்கும் முறையில் வேளாளர்களைப் பாதுகாத்தல் முதன்மையானதென்று எண்ணினார்.

    "பகடுபுறந் தருநர் பார மோம்பி" (புறநானூறு, 35),
    "குடிபுறந் தருநர் பார மோம்பி" (பதிற்றுப்பத்து, 13)

என்பவற்றில் இக்கருத்து அமைந்திருத்தல் காண்க.

தம்பால் வந்தவர்களுக்கு வேண்டியவற்றை உதவிப் பாதுகாத்தலும் அரசனுக்கு
உரிய வரியைச் செலுத்தி அதனால் அவனது காரியங்களை நடப்பித்தலுமாகிய செயல்களால் அவ்வேளாளர்,

    "இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
    உழவிடை விளைப்போர்" (சிலப்பதிகாரம்)

என்று சிறப்பிக்கப்பட்டனர். அரசர்களது போர்க்களத்தைப்பாடிய பொருநர் முதலியோர் உழவர்களது ஏர்க்களத்தையும் பாடிவந்தனர். நிலங்களுக்கு உரியவர்களாதலின் அவர்கள் 'காணியாளர்' என்று வழங்கப்பட்டனர். சோழ நாட்டிலிருந்த வேளாளர்கள் வேள், அரசு என்னும் பட்டங்களைப் பெற்றனர். அந் நாட்டு வேளாளர் அறுபத்து நான்கு கோத்திரத்தினர்; நயினாரென்னும் பட்டப் பெயருடையவர். பாண்டி நாட்டு வேளாளர் காவிதி என்னும் பட்டம் பெற்றார்கள். சோழன் கரிகாலன் தொண்டை நாட்டில் வேளாளராகிய நாற்பத் தெண்ணாயிரம் நற்குடிகளை நிறுவினான் என்றும், அவர்கள் முதற்குடிகளாதலின் முதன்மையாரென வழங்கப்பட்டனரென்றும், அவர்களே முதளியாரென்றும் ஒரு செய்து வழங்கி வருகிறது.
--------------------------------------------------
* இது 'நாயனார்' என்பதன் திரிபு என்பர்.

வேளாளர் அரசர்களுக்கு அமைச்சராகவும் இருந்தனர். அரசர்களுக்கு அவர்கள் தம்
பெண்களை மணம் செய்துகொடுத்தும் வந்தனர். கரிகாலனுடைய தந்தையாகிய இளஞ்சேட்சென்னி நாங்கூர் வேளினுடைய மகளை மணந்து கொண்டான்.

இவற்றால் பண்டைத் தமிழ்மக்கள் உழவினிடத்துக் காட்டி வந்த ஊக்கமும் வேளாளர்
பெற்ற சிறப்பும் தெரியவரும்.

*ii. உள்ளத்து ஆக்கம்

உள்ளம அறிவுடையதாதல் வேண்டும். அவ்வறிவே மனிதரை மக்களாகச் செய்வது.
அது கல்வியினாற் பெறப்படுவது.

    "தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத் தூறு மறிவு" (குறள்),

"தாம்கற்ற, நூலளவே யாகுமாம் நுண்ணறிவு" (ஔவையார்)

என்பவற்றால் கல்விக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு விளங்கும். பண்டைத் தமிழர்களது கல்வி நிலையைபற்றிக் கூறுவதே அவர்கள் உள்ள நலத்தைப் பற்றிக் கூறுவதாகும்.

அக்காலத்து மக்களிற் பெரும்பாலோர் கல்வி யறிவுடையவர்களாயிருந்தனர். தன்
மகனுக்குக் கல்வி கற்பிப்பது தந்தையினது முதற்கடமையாக இருந்தது. அதனால்தான்
இன்னார் இன்னார் மாணாக்கராதற்குரியோரென்பதைக் கூறப்புகும் இலக்கணச் சூத்திரமொன்று,

    " தன்மகன் ஆசான் மகனே மன்மகன்"

எனத் தன் மகனை முதலிற் கூறுகின்றது.

    " சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே" (புறநானூறு)

    " தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
    முந்தி இருப்பச் செயல்" (குறள்)

என்பவற்றால் தந்தையினது கடமை இன்னதென்று அறிந்து கொள்ளலாம். தம் மக்களுக்குக் கல்வி கற்பிக்கும் கடமையைச் செய்ய இயலாத சிலர் அவர்களைத் தக்க ஆசிரியர்பால் ஒப்பித்தனர். எங்ஙனமாயினும் மக்களது கல்வியைப்பற்றிய நாட்டம் தந்தைமாருக்கு இருந்து வந்தது. ஆகையினாலேதான்,

    " தந்தையொடு கல்விபோம்"

என்று புலவர் ஒருவர் பாடியுள்ளார்.

கல்வியைப்பற்றிய நினைவு தமிழ்மக்களுக்கு அதிகமாக இருந்தது. நூற்பாயிரங்களில் ஆசிரியர் மாணவர் முதலியோருடைய இயல்புகளும்,
பாடஞ்சொல்லும் முறை பாடம் கேட்கும் முறை என்பனவும் வரையறையாகக் கூறப்பட்டிருத்தலை ஆராய்ந்தால் அக்காலத்துக் கல்வி நிலையின் அமைப்பு நன்கு விளங்கும். கல்வியிலேயே பற்றுடையாராகி ஊக்கத்தோடு மாணவர்கள் கற்று வந்தனர். ஏழைகள் செல்வர்களிடம் பொருள் பெறும்போது பணிந்தொழுகிப்
பெருதல்போலக் கல்வி கற்றல் வேண்டும் என்று திருவள்ளுவர் விதிக்கின்றார்:

    "உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
    கடையரே கல்லா தவர்." (குறள்.)

ஆசிரியருடைய மனமுவப்ப ஒழுகியும் அவருக்கு ஒரு துன்பம் வரின் உதவி செய்
தும் பொருள் உபகாரம் செய்தும் அவருக்கு அடங்கி நிற்றளில் வெறுப்படையாமல் கற்றல் வேண்டுமென்று புறநானூறு கூறுகின்றது:

    "உற்றுழி யுதவியு முருபொருள் கொடுத்தும்
    பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே."

கல்வி கற்றற்குரிய கல்விச் சாலைகள் ஊர்தோறும் இருந்தன;

    "கணக்காய ரில்லாத ஊரும் ...
    நன்மை பயத்த வில" (திரிகடுகம்)

கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் 'கணக்காயர்' எனக் கூறப்படுவர். கணக்கு என்பதற்கு
நூல் என்பது பொருள். பல புலவர்கள் கணக்காயர்களாக இருந்தனர். நக்கீரர் தந்தையாராகிய மதுரைக் கணக்காயனாரும் கணக்காயன் தத்தனார் என்னும் புலவரும் கணக்காயர்களே.

கல்விமுறை சிறப்பாக இருந்ததற்குக் காரணம் கேட்ட பாடங்களைச் சிந்தித்துத்
தெளிந்து வந்தமையே.

    " ... .. நெஞ்சுகள னாகக் கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்து."

செய்யுட்களை மனப்பாடஞ் செய்யும் வழக்கமானது தொன்றுதொட்டு வந்தது. இப்பயிற்சிஉண்டாவதர்காகவே நூற் செய்யுட்களில் அகராதி முறையும் அந்தாதி என்னும் முறையும் அமைக்கப் பெற்றனவென்று சில பெரியோர்
கூறுவார். பழையகாலத்து மாணவர்களும் கற்றோர்களும் தங்களுக்குத் தெரிந்த பாடல்கள் மறவாமல் இருப்பதற்காக, வழி நடக்கும்பொழுதும் வேறு ஏதாவது செய்யும் பொழுதும் ஒருவர் ஒரு பாடலைக் கூற, அதன் ஈற்றடியிலுள்ள ஈற்றுச்சீரை முதலாக உடைய வேறு ஏதாவது ஒரு செய்யுளைச் சொல்லிப் பழகுதல் வழக்கம. இத்தகைய கல்விமுறை அக்காலத்தில் இருந்தமையினாலேதான் அளவற்ற தமிழ் நூல்கள் 300 ஆண்டுகளுக்கு முன் வரையில் இறவாமல் இருந்து வந்தன.

இளமையிற் கல்விகற்கும் வழக்கம் மிகவும் சிறந்தது. ஆதலின் இளமைப் பருவந் தொடங்கிப் பண்டைத் தமிழர் எப்பொழுதும் படித்து வந்தனர்.

    "என்னொருவன், சாந்துணையுங் கல்லாத வாறு" (குறள்)

என்பதில் இறக்கும் வரையில் கற்கவேண்டு மென்று கூறப்பட்டிருத்தல் காண்க. மணஞ்
செய்துகொண்ட பின்னரும் கல்வி கற்றற் பொருட்டுத் தக்க ஆசிரியர்களைத் தேடிக் கொண்டு மனைவியரைப் பிரிந்து பிறநாட்டுக்குச் செல்லும் வழக்கம் இருந்தது. ஒரு நாயகன் தன் மனைவியைப் பிரியும் பிரிவு வகைகள் ஆறு. அவற்றுள் ஒதற்பிரிவு என்பது ஒன்று. மூன்று வருஷங்கள் அவ்வாறு பிரிந்திருக்க லாம் என்பது இலக்கணம்:

    "வேண்டிய கல்வி யாண்டுமூன் றிறவாது" (தொல்காப்பியம்.)

ஆகையால், கல்வியில் அவர்கள் எவ்வளவு கருத்துடையவர்களாக இருந்தார்கள் என்பதை அறியலாம்.

புலவர்கள் தாங்கள் படித்துவிட்டோ மென்று அமைந்திராமல் மேன்மேலும் நூல்களைப் படித்து ஆராய்ச்சி செய்துகொண்டே இருந்தார்கள். பல சிற்றூர்களில் இருந்த புலவர்கள் ஓரூரிற் கூடி நூலாராய்ச்சி செய்து வந்தனர். தத்தமக்கென வெவ்வேறு தொழில்களுடையவர்களாக அவர்கள் இருந்தாலும் நூலாராய்ந்து வந்தனர். உறையூர் இளம் பொன் வாணிகனார், உறையூர் மருத்துவன் தாமோதரனார், மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், கொல்லனழிசி, மதுரைப் பெருங்கொல்லனார் முதலிய புலவர்களின் பெயர்கள் அவர்களுடைய தொழிலையும் உணர்த்துகின்றன.

புலவர் கூடிய சபை சங்கம் எனப்படும். பண்டைக் காலத்தில் மதுரையிற் சங்கம் இருந்தது. அங்கே பல புலவர்கள் கூடி நூல்களை இயற்றியும் ஆராய்ந்தும் வந்தனர். யாரேனும் புதியதாக நூல் செய்தால் அது சங்கப் புலவர்களின் முன்னிலையிலாயினும் அரசர அவைக்களத்தில் அறிஞர் முன்பேனும் அரங்கேற்றப்பட்டு வந்தது. எந்த நூலும் அரங் கேற்றப்படாவிடத்து மதிப்புப் பெறுவதில்லை. இக்காலத்துக் கிடைக்கும் தமிழ் நூல்களுள் மிகப் பழையதாகிய தொல்காப்பியம் என்னும் இலக்கணநூல் நிலந்தருதிருவிற்பாண்டியன் அவைக்களத்து அதங்கோட்டாசானென்னும் புலவர் முன்பு அரங்கேற்றப்பட்டதாகும்.

மதுரையில் இருந்த சங்கங்களைப் போலவே பல இடங்களிற் சங்கங்கள் இருந்தன. தமிழின் வகைகளாகிய இயல் இசை நாடகம் என்னும் மூன்றற்கும் தனித்தனியே சங்கங்கள் இருந்தன. சேர நாட்டிலும் கொங்கு நாட்டிலும் பல சங்கங்கள் இருந்தன. ஒவ்வோர் அரசரிடத்தும் ஒவ்வொரு செல்வரிடத்தும் சில சில புல வர்கள் இருந்து வந்தனர். அவர்கள் யாவரும் நூல்களை ஆராய்ந்தும் பல புதிய நூல்களை இயற்றியும் வந்தனர். அரசர்களும் கல்வியறிவிற் சிறந்தவர்களாக இருந்தனர். பண்டைப் புலவர்களுடைய வரிசையிற் பல அரசர்கள் காணப்படுகின்றனர்.

தமிழ்நாட்டிற் கல்வி பரவியதற்குப் பல காரணங்கள் இருந்தன. கிராமந்தோறும் கணக்காயர்கள் இருந்து பாடஞ் சொல்லி வந்தமை அவற்றுள் ஒன்று. அன்றி, பல சிற் றூர்களிற் புலவர்கள் இருந்தனர். பழம் புலவர்களுட் பலர் சிற்றூர்களிற் பிறந்தவராகவே காணப்படுகின்றனர். கடியலூர் உருத்திரங் கண்ணனார், நல்லூர் நத்தத்தனார், மாங்குடி மருதனார், கோவூர்கிழார் முதலிய புலவர்களுடைய பெயர்களே அவர்கள் சிற்றூரிற் பிரந்தமையை விளக்கும். அவர்கள் தத்தம் ஊர்களிற் சிறந்த கல்வியைப் பரப்பிவந்தனர். அவர்கள் பல ஊர்களிற் சஞ்சாரம் செய்து வந்தபோதும் அவர்களாற் பல ஊர்களிலுள்ளார் கல்விப் பயிற்சி பெற்றனர்.

    "கற்றில னாயினும் கேட்க" (குறள்.)

கல்வி பரவுதற்கு மற்றொரு சிறந்த வழி உண்டு. அது கேள்வி ஆகும். ஒவ்வொரு விஷயத்தையும் ஒவ்வோரதிகாரத்தில் அடக்கிக் கூறிய திருவள்ளுவர் கல்வியைப்பற்றி அவ்வாறு கூறுதல் இயலாதென எண்ணி, 'கல்வி' என விதிமுகமாக ஓர் அதிகாரமும், 'கல்லாமை' என மறைமுகமாக ஒன்றும், கல்வியோடு தொடர்புடைய 'கேள்வி' என்னும் அதிகாரம் ஒன்றும் கூறியிருக்கின்றனர். பல நாள் கற்ற நூல்களை ஆராய்ந்து அவற்றிலுள்ள சாரங்களை அறிதலைவிட அவ்வாறு ஆராயந்தோர்கள் சாரமாக எடுத்துக் கூறுவதைக் கேட்டல் சிறந்ததல்லவா? செவியில் இயல்பாகத் தொளையிருப்பினும் கேள்வி யென்பதனால் மேலும் தொளைக்கப்படாவிடின் அச்செவி செவிட்டுச் செவியென்றார் திருவள்ளுவர்:


    "கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
    தோட்கப் படாத செவி."

குற்றமற்ற கேள்வியைக் கேளாதவர்கள் காதிலுள்ள தொளைகள் அம்புகளால் உண்டாக்கப்பட்ட தொளைகளுக்கு ஒப்பாமென மற்றொருவர் கூறியுள்ளார்:

    எய்கணை விழுத்தொளை யன்றே செவித்தொளை
    மையறு கேள்வி கேளா தோர்க்கே" (இரும்பல்காஞ்சி)

இத்தகைய கல்வி கேள்விகளில் மகளிரும் சிறந்திருந்தனர். கல்விக்குரிய தெய்வமாக வணங்கப்படும் கலைமகள் பெண்ணாக இருக்க, மகளிர்க்குக் கல்வியுரிமை இன்றென்று சிலர் கூறுதல் ஒரு வியப்பேயாகும். பண்டைக் காலத்தில் புலமை நிறைந்த மக்களுள் பெண்பாலார் பலர் காணப்படுகின்றனர். ஔவையார், வெண்ணிக் குயத்தியார், பெருங்கோப்பெண்டு, பாரிமகளிர், பொன்முடியார், காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்பவர்கள் அவர்களுட் சிலர். அவர்களுடைய செய்யுட்கள் பல எட்டுத்தொகை முதலிய நூல்களில் உள்ளன.

தலைவனும் தலைவியும் அழகு முதலியவற்றால் ஒத்திருத்தல் வேண்டுமென்பது இலக்கணம். அந்த ஒப்பின் வகையுள் 'உணர்வு' என்பது ஒன்று. அது கல்வியரிவேயாகும்.பெண்டிர்க்குரிய இயல்புகளைக் கூறும் ஒரு சூத்திரத்தில்,

    "அறிவு மருமையும் பெண்பா லான"

என்று தொல்காப்பியர் கூறுதலால் பெண்பாலார் கல்வியறிவிற் சிறந்திருந்தன ரென்பதை உணரலாம். சீவகசிந்தாமணியில் விசயை யென்னும் அரசமாதேவியின் கல்விச் சிறப்பு,

    "வண்டுமொய்த் தரற்றும் பிண்டி
    வாமனார்வடித்த நுண்ணூல்
    உண்டுவைத் தனைய நீயும்" (சீவகசிந்தாமணி, 237)

என்று போற்றப்படுகிறது. சிலப்பதிகாரத்திற்
கூறப்படும் கவுந்தியடிகள் என்னும் ஆரியாங்கனையின் மூதறிவும், மணிமேகலையிற் காணப்படும் மாதவி, சுதமதி, மணிமேகலை என்பவர்களின் இயல்புகளும் மகளிரின் கல்விச் சிறப்பிற்குரிய உதாரணங்களாகும். அன்றியும் பௌத்த சமண சமயவாத நூல்கள் பல மகளிரே வாதமிட்டனரென்று கூறுகின்றன. நீலகேசி முதலிய நூல்களால் இதனை அறியலாகும். பௌத்தர்களில் ஸ்திரீகளின் சங்கங்களும் உண்டு.

iii. உயிராக்கம்

உயிர்க்கு உறுதி பயப்பனவற்றை அறம், பொருள், இன்பம், வீடு என நான்கு வகையாகப் பெரியோர்கள் பிரித்தனர்.

அறம்

அறம் பலவேறு வகைப்படினும் ஈதலையே தலைமை யுடையதாகக் கொண்டனர் பெரியோர் :

    "ஈத லறம்" (ஔவையார்.)

இந்த ஈகையானது பண்டைத் தமிழர்பால் மிகச் சிறந்திருந்த இயல்பு ஆகும். பிறர்க்கு
ஈதலே வாழ்வின் பயன் என்பதை அவர்கள் உணர்திருந்தனர்; பொறாமை, ஆசை,
கோபம், இன்னாச்சொல் முதலியன இன்றி இனிய முகத்தோடு ஈந்துவந்தனர்.

அக்காலத்து அரசர்களெல்லாம் ஈகையிற் சிறந்திருந்தார்கள். பெருமிதம் அல்லது வீரத்திர்குரிய காரணங்களுள் கொடையும் ஒன்று. மூவகை முரசுகளுள் கொடைக்குரிய முரசு ஒன்று. கொடுத்துப் புகழ்பெற்ற பெருவள்ளள்களின் வரலாறுகள் பல பண்டைத் தமிழ் நூல்களில் விரிந்து கிடக்கின்றன. அவர்களுடைய ஈகையே உலகை நிலை நிறுத்திப் புலமையையும் நூல்களையும் அழியாது காத்ததென்பது மிகையாகாது. ஒரு மனிதனுக்கு உளவாகுந் துன்பத்துள் இறத்தலே பெரிது ஆகும். அந்தத் துன்பத்தினும் பெரிய துன்பம் வேறில்லை; ஈதலிலாத் துன்பம் அதனினும் மிக்க துன்பம் என்பது பண்டைத் தமிழர் கொள்கை;

    "சாதலி னின்னாத தில்லை இனிததூஉம்
    ஈத லியையாக் கடை"

என்று திருவள்ளுவர் கூறுதல் காண்க. தன் பால் வந்து இரந்தார்க்கு உரிய பொருள் உதவுதற்கு இயலாதெனின் உயிரை விட்டு விடுவானென்று ஒரு தலைவனைத் தலைவி புகழ்வதாகக் கூறும் பின்வரும் பகுதி அறிதற்குரியது:

    "இன்மை உரைத்தார்க் கதுநிறைக்க லாற்றாக்கால்
    தன்மெய் துறப்பான்." (கலித்தொகை)

நாட்டை இழந்திருந்த குமணனென்னும் ஒரு வள்ளலை ஒரு புலவர் சென்று இரந்த காலத்து, நாட்டை இழந்த துன்பத்தினும் அவர் தன்பால் ஒன்றும் பெறாது போதல் மிக்க துன்பத்தை அவனுக்கு விளைவித்தது; அதனால், தன் தலையைக் கொண்டு சென்று கொடுத்துத் தம்பிபாற் பரிசில் பெறும்படி அவன் தன் வாளை அப்புலவரிடம் கொடுத்தானென்பர்;

    "பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென்
    நாடிழந் ததனினும் நனியின் னாதென
    வாடந்தனனே தலையெமக் கீய" (புறநானூறு)

என இச் செய்தியை அப்புலவரே கூறினர்.

ஈயுங்காலத்து இதனால் இப்பயன் கிடைக்குமெனக் கருதி அவர்கள் கொடுப்பதில்லை.
அவ்வாறு செய்தல் தர்மத்தை விலைக்கு விற்கும் வியாபாரமென அவர் கருதினர். ஆய்
என்னும் ஒரு வள்ளலைப்பற்றி,

    "இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
    அறவிலை வாணிகன் ஆஅ யல்லன்" (புறநானூறு)

என்று ஒருவர் கூறுதல் காண்க. ஒரு நாள் தம்பால் இரவலர் வாராவிடின் அந்த நாள்
கெட்ட நாளென்று அவர்கள் கருதினர்.

    "இரவலர் வாரா வைகல்
    பலவா குகயான் செலவுறு தகவே" (குறுந்தொகை)

"புரப்போர் புன்கண் கூர
இரப்போர்க் கீயா வின்மையா னுறவே" (புறநானூறு)

என்று அரசர் கூறும் சபதமொழிகளால் ஈயா மையை எவ்வளவு இழிவுடையதாக அவர்கள் கருதி வந்தனர் என்பது புலப்படும்.

அரசர்கள் எவ்வாறு ஒழுகி வந்தனரோ அவ்வாறே குடிகளும் ஒழுகினர். அக்குடிகள் தம்பால் வந்தவர்களுக்கு வேண்டியன ஈந்து பாதுகாத்து வந்தனர்.

ஈதலுள்ளும் பசிக்கு உணவு ஈதல் தலை சிறந்த பேரறமென்று தமிழர் உணர்ந்திருந்தனர்.

    "உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே" (மணிமேகலை)

என்பதனால் அன்னதானம் உயிரைக் கொடுத்தலோடொப்பக் கூறப்பட்டது காண்க. பிறர் பசியைத் தீர்த்தவனுக்குப் பசிப்பிணியின் துன்பம் இல்லை என்பது அவர்கள் துணிபு.

    "காணார் கேளார் கான்முட மானோர்
    பேணுத லில்லோர் பிணிநடுக் குற்றோர்
    மா*வரும் வருகவென் றிசைத்துட னூட்டி" (மணிமேகலை)

என்னும் அடிகளால் அன்னதானத்திற் குரியவர்களுள் இன்னார் சிறந்தவர்களென்பது விளங்கும். பண்ணனென்னும் ஓருபகாரி அன்னமளித்ததைச் சிறப்பித்துக் கூறும் பாடலொன்று புறநானூற்றில் உண்டு. அவனுடைய வீட்டில் உண்பவர்களது பேரொலி ஆலமரத்திற் பலபறவைகள் கூடி ஒலித்தலை ஒத்திருந்தது:

    "யாணர்ப் பழூமரம் புள்ளிமிழ்ந் தன்ன
    ஊணொலி யரவம்."

அவன், சிறுபிள்ளைகளுக்குக் காலையில் தயிர்ச் சோற்றைக் கொடுத்து வந்தான். அதனை அவர்கள் கையில் எடுத்துக்கொண்டு வரிசையாகத் திரும்பிச் சென்றார்கள். அவ்வாறு செல்வது எறும்புகள் தம் முட்டைகளைக் கொண்டு வரிசையாகச் செல்லுதல் போல உள்ளதென்று கிள்ளிவளவனென்னும் அரசன் கூறுகின்றான்:

    "முட்டை கொண்டு வற்புலஞ் சேரும்
    சிறுநுண் எறும்பின் சில்லொழூக் கேய்ப்பச்
    சோறுடைக் கையர் வீறுவீ றியங்கும்
    இருங்கிஉளச் சிறாஅர்."

அப்பண்ணன், "பசிப்பிணி மருத்துவன்" என்றும் சிறப்பிக்கப் படுகின்றான். அன்னதானத்தின் பெருமை மணிமேகலையில் மிகவும் சிறப்பித்துக் கூறப்படுகின்றது. பெரும்பாணாற்றுப்படையில் வேடர், இடையர், வலைஞர் முதலியோர் தம்பால் வந்த பாணர் முதலியவர்களுக்கு உணவு அருத்தி உபசரித்த செய்தி மிகவும் அழகாக உடைக்கப்படுகிறது. வீட்டிலுள்ள பெண்கள் கணவர்கள் இல்லையாயின் தங்கள் பிள்ளைகளை அனுப்பி 'மாமன்' முதலிய முறைகளைச் சொல்லி விருந்தினரை அழைத்து வரச்செய்து விருந்தூட்டி அனுப்புதலுண்டு.

ஈகையையன்றிப் பிற அறங்கள் பல உண்டு. திருக்குறள், நாலடியார் முதலிய நூல்கள் பலவகை அறங்களை நன்கு விளக்கிக் கூறுகின்றன. ஈகைக்குப் பின்வருவது ஒழுக்கம். ஒழுக்கம் உயிரினும் சிறந்ததாகக் கருதப்பட்டது. பொய்யாமை, செய்நன்றியறிதல் முதலிய பல அற இயல்புகள் தமிழர் வாழ்க்கையிற் சிறந்திருந்தன. பாவங்களுள் பிராயச்சித்தம் இல்லாதது செய்ந்நன்றி மறத்தல் என்பதை அவர்கள் உறுதியாக நம்பினர்:

    "நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
    செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென
    அறம்பா டிற்றே" (புறநானூறு)

    "என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டா முய்வில்லை
    செய்ந்நன்றி கொன்ற மகற்கு" (குறள்)

உள்ளதைக் கொண்டு திருப்தியடைதலாகிய ஒரு சிறந்த குணம் அவர்கள்பால் இருந்தது. அக்குணமே அவர்களுடைய இன்ப வாழ்விற்கு அடிப்படையாக இருந்தது:

    "ஆன்றவிந் தொடங்கிய கொள்கைச்
    சான்றோர் பலர்யான் வாழு மூரே" (புறநானூறு)

பொருள்

பொருள் வருவாய்க்கு உரிய வழி உழவும் வாணிகமும் ஆம். பொருளை ஈட்டிக் காத்து
வருவாய்க்குத் தக்கபடி செலவியற்றும் தன்மை அக்காலத்தார்பால் இருந்தமையின் அவர்களது வாழ்க்கை இன்பமுள்ளதாக இருந்தது.

பொருளென்னும் பிரிவில் அரசியலைத் திருவள்ளுவர் அமைந்திருக்கின்றார் அரசர்கள் தமக்குக்கிடைத்த அதிகாரம் பிறருக்கு நன்மைசெய்யும் பொருட்டே என்பதை அறிந்திருந்தார்கள். குடிகளுடைய நலத்தையே தம் நலமாகக் கொண்டிருந்தனர். காவலன் கோல்கோடின்உலகு அழிந்துவிடும் என்பது அவர்கள் கொள்கை.

    "குடிபழி தூற்றுங் கோலே னாகுக" (புறநானூறு)

என்று சபதங் கூறுதலால், குடிகளால் தூற்றப் படுதலை எவ்வளவு அஞ்சினார் அரசர் என்பது விளங்கும். அவர்கள் குடிகளுக்கு இன்பந்தரும் செயல்களை ஆராய்ந்து செய்தனர்; உழவிற்குப் பயன்படும் நீர்நிலைகளை அமைத்தனர்.

    "நிலனெளி மருங்கி னீர்நிலை பெருகத்
    தட்டோ ரம்ம விவட்டட் டோரே" (புறநானூறு)

என்று ஒரு புலவர் அரசனொருவனுக்குக் கூறும் அறிவுரையில் நீர்நிலைகளை அமைக்கும் கடமையை எடுத்துக் காட்டுதலைக் காணலாம். கரிகாற் சோழன் காவிரிக்கு கரை கட்டினான். அவன் நாட்டுப் புலன்களின் விளைவைப்பற்றி, "பிற நாடுகளில் ஏரி நீராலும் ஏற்றத்தினால் இறைக்கும் நீராலும் விளையும் தானியங்கள் காவிரி சூழ்ந்த கரிகாலனது சோழ நாட்டில் நெல்லை அரியும் பொழுது சிந்துகின்ற நெல்லளவேயாகும்" என்று ஒரு புலவர் கூறுகின்றார்:

    "எறியும் ஏற்றத்தி னானும் பிறநாட்டு
    வாரி சுரக்கும் வளனெல்லாம்- ஓரின்
    அரிகாலின் கீழுகூஉம் அந்நெல்லே சாலும்
    கரிகாலன் காவிரிசூழ் நாடு."

அரசர் ஆறிலொரு பங்கு வரிவாங்கி அவ்வறிப் பொருளைக் குடிகளின் நலத்திற்குச் செலவிட்டு வந்தனர். மிதமானவரி வாங்க வேண்டுமென்று ஓரரசருக்கு ஒரு புலவர் பின்வருமாறு அறிவுருத்துகிறார்: "வயலிலே உள்ள நெல்லை அறுத்துச் சிறிது சிறிது யானைக்குக் கவளமாக இட்டு வரின் ஒருமா அளவும் இல்லாத வயலின் நெல்லும் பலநாளுக்கு ஆகும். நூறு வயலாக இருந்தாலும் யானை தனியே உட்புகுந்து உண்டால் வாயிற் புகுவதிலும் அதன் காலால் அழிக்கப்படுவது அதிகமாகும்."

    "காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே
    மாநிறை வில்லதும் பன்னாட் காகும்
    நூருசெறு வாயினுந் தமித்துப்புக் குணினே
    வாய்புகுவ தனினும் கால்பெரிது கெடுக்கும்" (புறநானூறு)

அரசர்கள் தங்கள் ஆட்சியை நடத்துவதற்குத் துணையாக அமைச்சர், பிரதானி, அறிவிற் சிறந்த சான்றோர் முதலியோரை அமைத்துக் கொண்டிருந்தார்கள். ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்னும் இரண்டு குழுவினர் அவர்களது அரசியல் நன்கு நடைபெற உதவி புரிந்து வந்தனர். ஐம்பெருங்குழுவில் மாசனம் ஒருவகையார்.

வழக்குக்களைத் தீர்த்து நியாயம் வழங்குவதில் பண்டைத் தமிழரசர்கள் நடுவுநிலைமை வழுவாமல் இருந்து வந்தனர். அறங்கூறவைய மென்னும் தருமாசனங்களை நிறுவி அவற்றில் அறிவிலும் பிராயத்திலும் முதிர்ந்த சான்றோர்களைக் கூட்டி நியாயம் வழங்கச் செய்தார்கள்.

    "அறநிலை திரியா வன்பி னவையத்துத்
    திறனில் ஒருவனை நாட்டி மெலிகோல்
    செய்தே னாகுக" (புறநானூறு)

என்று ஓரரசன் சபதஞ் செய்கின்றான். இத நாள் அரங்கூறவையத்தில் தக்க சான்றோர்களை நாட்டுவதில் அக்காலத்து அரசர்களுக்கு இருந்த ஊக்கமும், சான்றோரல்லாதார் நாட்டப்படின் கோல்கோடுமென்று எண்ணியிருந்த கொள்கையும் புலப்படுகின்றன.

    "பிணக்கறுக்கு மூத்தோரை யில்லா வவைக்களனும்" (திரிகடுகம்)

என்பது பிராயத்தில் முதிர்ந்த சான்றோர்கள் அவைக்களத்தில் இருக்கவேண்டுமென்பதைப் புலப்படுத்துகின்றது.

இளமையிலேயே அரச வுரிமையைப் பெற்ற சோழன் கரிகாலனிடத்து நியாயம் பெற வேண்டுமென்று இரு வழக்காளர் வந்தனர். அவர்கள் கரிகாலனைக் கண்டவுடன், 'இவன் மிக்க இளைஞனாக இருக்கின்றானே; இவன் நன்றாக நியாயம் வழங்குவானா?" என்று ஐயமுற்றார்கள். அதனைக் குறிப்பா லறிந்த கரிகாலன் அரண்மனையுட் புகுந்து ஒரு முதியோன்போல வேடம் புனைந்து வந்து அவர்களது வழக்கைத் தீர்த்தனன். இந்த வரலாற்றாலும் அவையத்தார் முதியோரா யிருத்தல் வேண்டுமென்பது விளங்குகின்றது. இத்தகைய அவைகள் உறையூர், மோகூர், மதுரை முதலிய நகரங்களில் இருந்தனவென்று தெரிகின்றது.

அரசர்கள் எப்பொழுதும் நல்ல அறிஞருக்கு இடையே அரசியலை நடத்தி வந்தார்கள். அவர்கள் அரசர்பாலிருந்த நற்குணங்களை எடுத்துப் பாராட்டி மேன்மேலும் அவை பெருகுமாறு செய்து வந்தார்கள். சிறு பாணாற்றுப்படை, பாட்டுடைத் தலைவனுடைய சுற்றத்தார்களுள் அறிஞர்கள் அவனது செய்ந்நன்றி யறிதல் முதலிய நற்குணங்களைப் புகழவும், வீரர்கள் அஞ்சினோரைக் கொல்லாமல் விடல் முதலிய வீரச்செயல்களைப் புகழவும், பரிசில்பெற வந்தவர்கள் அறிவுடைமை முதலியவற்றைப் புகழவும் அவன் வீற்றிருந்தானென்ற செய்தி யொன்றைக் கூறுகின்றது. அதனால் இன்னார் இன்னார் இன்ன இன்ன செயல்களைப் புகழவேண்டு மென்னும் முறை உண்டென்று தெரிகின்றது. அரசன்பால் ஒரு காரியங் கருதி வந்தவர்கள் அதனை வெளியிட்டுக் கூற அஞ்சினராயினும் அவனைச் சூழ்ந்துள்ளவர்கள், தாமே அறிந்து அவனிடம் அவர்களுடைய குறைகளைக் கூறி ஆவன செய்விக்கும் இயல்புடையவர்களாக இருந்தனர்:

    "நல்லோர் குழீஇய நாநவி லவையத்து
    வல்லா ராயினும் புறமறைத்துச் சென்றோரைச்
    சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி
    நல்லிதின் விளக்குமவன் சுற்றத் தொழுக்கமும்" (மலைபடுகாடாம், 77-80)

இவ்வாறு அரசியல் எல்லோருக்கும் நன்மையை விளைத்து ஒழுங்காக நிகழ்ந்தது.

இன்பம்

"காதலிருவர் கருத்தொருமித் தாதரவு பட்டதே இன்பம்" என்பது ஔவையார் வாக்கு. தலைவனும் தலைவியும் ஒன்றுபட்ட கொள்கையோடு இல்லறம் நடத்தி வருதலே இன்பமென்பது பண்டைத் தமிழர் கொள்கை.

    "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது" (குறள்)

இந்த இல்வாழ்க்கையில் விருந்தோம்புதல் தலை சிறந்த அறமாக வைக்கப்பட்டுள்ளது. தலைவி, தலைவனிடத்தே ஊடினபொழுது அதற்கு அஞ்சய தலைவன் ஒரு விருந்தினனோடு இல்லிற் புகுவானேல் அவள் ஊடலை மறந்து விருந்தினரை உபசரிக்கத் தொடங்குவாள். தலைவனும் தலைவியும் இருதலைப் புள்ளின் ஓருயிர் போல அன்பாற் பொருந்தி இன்பம் நுகர்ந்துவந்தனர். அகப்பொருளிலக்கணம் தமிழிற் சிறந்திருத்தலே தமிழரது இன்ப ஒழுக்கத்தின் பெருமையையும் வரையறையையும் புலப்படுத்தும் அடையாளமாகும்.

தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே உள்ள அன்பின் திறத்தைப் பண்டைத் தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் பலபடப் பாராட்டிப் பேசுகின்றன. அந்த அன்புடைய வாழ்க்கையைப் பொருளாகக் கொண்டு பாடப்பட்ட செய்யுட்கள் மிக்க நயமுடையனவாக உள்ளன. தலைவிக்குத் தலைவன்பாலுள்ள அன்பை விளக்கும் பின் வரும் செய்யுட்கள் இங்கே அறிதற்குரியன:

    "அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத்
    தேன்மயங்கு பாலினு மினிய வவர்நாட்டுவ லைக் கூவற் கீழ
    மானுண் டெஞ்சய கலிழி நீரே" (ஐங்குறுநூறு, 203)

தோழீ, நீ வாழ்வாயாக. நம்முடைய இடத்தில் தேனோடு கலந்த பாலினும் என் தலைவரது நாட்டில் தழைக்குவியலோடு கூடிய பள்ளத்தின் கீழுள்ளதும் மான்கள் உண்டு எஞ்சியதுமாகிய நீர் இனியதாயிருக்கின்றது" என்பது இதன் பொருள்.

    "கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக்
    கொடுத்த தந்தை கொழுஞ்சோ றுள்ளாள்
    ஒழுகுநீர் நுணங்கறல் பொலப்
    பொழுதுமறுத் துண்ணுஞ் சிறுமது கையளே."

"தன் கணவனுடைய குடி வறுமை உற்றதாக, தன்னை ஈன்ற தந்தை வீட்டிலுள்ள வளம் பொருந்திய உணவை விரும்பாதவளாகிப் பொழுது இடைவிட்டு உண்ணுகின்ற சிறிய வன்மையையுடையவள்" என்பது இதன் பொருள். இச்செய்யுளில் தலைவி தலைவனோடு தானும் வறுமைத் துன்பத்தைப் பொருந்தியிருந்த அன்பின் திறன் புலப்படுதலைக் காணலாம்.

    "ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது வானோ ரமுதம் புரையுமா லெமக்கென"

என்பது தொல்காப்பியச் சூத்திரம். தலைவன் தலைவியினால் தொடப்பட்ட உணவு எத்தகையதாயிருப்பினும் அமுதம் போன்றதெனக் கூறுவான். இதில் தலைவனது அன்பு புலப்படுகின்றது.

வீடு

தமிழர்களுக்கு கடவுள்பால் அன்பு மிக்கிருந்தது. எல்லாவற்றிற்கும் தலைவன் இறைவனே என்னும் கொள்கையை உடையவர்கள் அவர்கள். நிலத்தைக் குறிஞ்சி, பாலை,முல்லை, மருதம், நெய்தல் என் ஐந்து பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தெய்வத்தைத் தலைமையுடையதாக வைத்துவழிபாடு செய்து வந்தனர். குறிஞ்சிக் கடவுளாகிய முருகனை வெறியாட் டெடுத்து வழிபட்டனர். திருமுருகாற்றுப்படை யென்னும் நூலில் முருகனது வழிபாட்டு முறைகளும் அவன் இருக்கும் இடங்களும் கூறப்படுகின்றன. பாலை நிலத்தார் பெரும்பாலும் துர்க்கையை வழிபட்டனர். முல்லை நிலத்தார் குரவையாடல் முதலியவற்றால் திருமாலை வழிபட்டனர். மருத நிலத்தினர் இந்திரனை வழிபட்டனர். நெய்தல் நிலத்தினர் சுறவுக்கோடு நட்டு வருணனை வணங்கினர். இத் தெய்வங்களையன்றி வேறு பல தெய்வங்களையும் அவர்கள் வழிபட்டு வந்தனர். ஊர்களிற் பல கோயில்கள் இருந்தன. "ஊரானோர் தேவகுலம்" என்னும் இலக்கண மேற்கோளினால் ஊர்தோறும் கோயில் இருந்தமையை யறியலாகும்.

    "பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
    முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே"

என்பதில் சிவபெருமான் திருக்கோயிலை ஓரரசன் வலம் வரும் செய்தி கூறப் படுகின்றது. சிலப்பதிகாரத்தால் காவிரிப்பூம்பட்டினத்தில் பல சமயத் தெய்வங்களுக்குரிய கோயில்கள் இருந்தனவென்று தெரிகின்றது. தெய்வங்களையன்றி அவர்கள் ஆயுதங்களை வழிபடும் முறையும் இருந்து வந்தது. இந்திரனது வச்சிராயுதம், முருகனது வேல், சிவபிரானது சூலம் என்பவற்றை அவர்கள் வழிபட்டனர். பல தெய்வங்களுக்கு விழாக்கள் நடந்தன. காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சிவபெருமானுக்குரிய பங்குனி உத்திர விழா உறையூரில் நிகழ்ந்தது. திருமாலுக்குரிய ஓணவிழாவைப் பற்றி மதுரைக்காஞ்சி யென்னும் நூல் கூறுகின்றது. மதுரையில் ஏழு நாளில் ஒரு விழா நடந்தது. ஆவணியவிட்ட விழா, கருவூர் உள்ளி விழா என்பன வேறு சில விழாக்கள்.

வைதிகவாழ்வும் தமிழ் நாட்டில் இருந்தது. அந்தணர்களைப் பற்றிக் கூறும் இடங்களில் அச்செய்திகளைக் காணலாம். முக்கோலந்தணர் என்னும் ஒரு பிரிவினர் இலக்கியங்களிற் காணப்படுகின்றனர். அந்தணர்கள் காலையிலெழுந்து வேதமோதுவதற்குப் பூவில் வந்து ஊதுதலை உவமையாக மதுரைக் காஞ்சி கூறுகின்றது. விடியற்காலையில் அவர் கள் வேதம் ஓதுவதனால் விடிந்தமையை யறிந்து மதுரையிலுள்ள மக்கள் துயிலெழுவார்களாம்:

    "நான்மறைக் கேள்வி நவில்குர லெடுப்ப
    ஏம வின்றுயி லெழுத லல்லதை
    வாழிய வஞ்சியுங் கோழியும் போலக்
    கோழியி னெழாதெம் பேரூர் துயிலே" (பரிபாடல்)

உலகம் நிலையா தென்பதனையும் நிலைத்த இன்பத்தைப் பெறுதற்கு மெய்யுணர்தல்
இன்றியமையாத தென்பதையும் அதற்குத் தவம் கருவிஎன்பதனையும் தவத்தினும் சிறந்த தொன்றில்லை என்பதனையும் பண்டைத் தமிழர் நன்கு அறிந்திருந்தனர். உலகம் நிலையாமையை உணர்ந்து பற்றற்றுத் தவமுயலும் தன்மை சிறந்ததாக மதிக்கப்பெற்றது.

    "வையமுந் தவமுந் தூக்கின் தவத்திற்கு
    ஐயவி யனைத்து மாற்றாது" (புறநானூறு)

என்பதனால் தவத்தின் பெருமை புலப்படுகின்றது. பலவகை மதத்தினரும் தவத்தைப் போற்றினர். பலவகை மதத்தினரது தவச்சாலைகள் மதுரை முதலிய இடங்களில் இருந்தன. துறவியர்கள் பலர் தமிழ் நாட்டில் இருந்தனர். தாபதர்களென்று அவர்கள் வழங்கப்பட்டனர். கடவுளையும் வானையும் வாழ்த்திய திருவள்ளுவர் துறந்தார் பெருமையைப் பின்பு எடுத்துக் கூறியதனாலேயே அவர்கள்பால் அக்காலத்துத் தமிழர்களுக்கு இருந்த நன்மதிப்பு வெளியாகும்.

    "நாலிரு வழக்கிற் றாபதப் பக்கம்" (தொல்காப்பியம்)

என்னும் சூத்திரம் துறவியரது எண்வகை ஒழுக்கங்களைக் கூறுகின்றது.

உலகநிலையாமையைக் கூறும் செய்யுட்கள் பல தமிழ் நூல்களில் உண்டு. அச் செய்யுட்கள் புறப்பொருளில் காஞ்சித்திணையின் பாற்படும். அப்படி ஒரு திணை வகுத்துக் கொண்டதனாலேயே தமிழர்கள் மெய்யுணர்வையடையவேண்டுமென்று செய்து வந்த முயற்சியினே அறியலாம். அறிவிற் சிறந்த ஆன்றோர்கள் பலர் வீரத்திலும் கொடை முதலியவற்றிலும் சிறந்த அரசர்களுக்கு உலக நிலையாமையை எடுத்துக்கூறி மெய்யுணர்வு பெறவேண்டுமென்று அறிவுறுத்தியிருக்கின்றார்கள்.

    "பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
    மருளானா மாணாப் பிறப்பு"

என்றகொள்கை பண்டைத் தமிழர் வாழ்வில் சிறந்திருந்தமையின் அவர்கள் பற்றற்ற நிலையைப் பெறுதற்குரிய முயற்சிகளைச் செய்து வந்தனர். கந்தழி என்று போற்றப்படும் ஒன்றினைப் பெற அவர்கள் முயன்றனர். கந்தழி யென்பது சார்பானாற் றோன்றாது பற்றற்று நிற்கும் வர் பொருள். அதுவே வீட்டின்பமாம்.

பண்டைத் தமிழர் நாகரிகம்

நாகரிகம் என்தபற்குக் கண்ணோட்டமென்றே பொருள் கொண்டனர் பண்டைத்
தமிழர்.

    "முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்
    நஞ்சு முண்பர் நனிநா கரிகர்" (நற்றிணை)

எனினும் இக்காலத்தில் அச்சொல் நகர சம்பந்தமானது என்னும் பொருளில் வழங்குகின்றது. அந்த நாகரிகவாழ்க்கையிலும் பண்டைத் தமிழர் சிறந்திருந்தனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் உண்டு.

ஒரு நாடு நாகரிகத்திற் சிறந்திருந்தமையை அந்நாட்டு நகரங்களின் சிறப்பு, வியாபாரம், பலவகைக் கலைஞானம், வீரம், புலமைத்திறம் முதலியவற்றால் அறியலாம்.

நகர அமைப்பு

தமிழ் நாட்டில் அக்காலத்தில் நகரங்கள் பல இருந்தன. அவைகள் உயர்ந்த நாகரிக அமைப்புக்களோடு விளங்கின. ஒழுங்கான வீதிகளும் முடுக்குத் தெருக்களும், முச்சந்தி நாற்சந்தி ஐஞ்சந்தி என்னும் சந்திகளும், அம்பலம் பொதியில் மன்றம் முதலிய பொது இடங்களும், அகழ் மதில் முதலிய அரண்களும் இருந்தன. நகரத்தில் வரும் சாக்கடைநீர் தெருவினிடையே பூமிக்கு அடியில் ஓடுமாறு செய்யப்பட்டது. அதற்குக் கரந்துபடை என்று பெயர். வேண்டியபோது நீரைக் கொணர்ந்தும் வேண்டாதபோது போக்கியும் விடும் எந்திரங்களும் கரப்பு நீர்க் கேணிகளும் மாலைக்காலத்தில் நகரமாந்தர்கள் உலாவி வருவதற்குரிய சோலைகளும் இருந்தன. பலவகைக் கோயில்கள் இருந்தன. காவிரிப்பூம்பட்டினம், உறையூர், மதுரை, வஞ்சி, காஞ்சி முதலிய நகரங்களைப் பற்றிப் பழைய தமிழ் நூல்களாற் பலவகைச் செய்திகளை நன்கு அறியலாம்.

ஊர்களில் இருந்த வீடுகள் பலவகைக் கட்டுக்களுடன் நன்றாக அமைந்திருந்தன. இன்னார் இன்னார்க்கு இன்ன இன்ன முறையில் வீடுகள் அமைக்கவேண்டும் என்னும் நியதி இருந்தது. கதவுநிலைகள் சித்திரங்களால் அழகு பெற்றிருந்தன. நிலையில் தெய்வங்களின் படிமங்களை அமைத்துப் பூசித்து வந்தனர். சுவர்களில் சித்திரங்கள் எழுதப்பட்டன.

வியாபாரம்

அக்காலத்தில் உள்நாட்டு வியாபாரமும் வெளிநாட்டு வியாபாரமும் நன்றாக நடைபெற்றன. கப்பல் வியாபாரம் சிறந்திருந்தது.புகார், தொண்டி, முசிரி, கொற்கை முதலிய பலதுறைமுகப் பட்டினங்கள் இருந்தன. அப்பட்டினங்களில் இடையறாது ஏற்றுமதி, இறக்குமதி நிகழ்ந்து கொண்டிருந்தன. காவிரிப்பூம் பட்டினத்துத் துறைமுகத்தைப்பற்றிய செய்தி பட்டினப்பாலை யென்னும் நூலிற் கூறப்பட்டுள்ளது. அங்கே கடற்கையிலுள்ள தெருக்களிற் பெரிய பண்டக சாலைகள் இருந்தன. கப்பலில் இருந்து இறங்கிய பண்டங்கள் மலைபோல் குவிந்திருந்தன. கப்பல்களுக்கு ஊர் சமீபத்தில் இருப்பதைக் காட்டும் விளக்கு உண்டு. கலங்கரை விளக்கமென்பது அதன் பெயர்.கடற்கரையில் இருந்த வீடுகளிலுள்ள விளக்குகளை மரக்கலத்திலுள்ளார் அறிந்து துறைமுகத்திற்கு வருதலும் உண்டு. பண்டகசாலைகளிலுள்ள பண்டங்களைக் காக்கும் காவலாளர்கள் தங்கள் கடமையைச் செவ்வனே ஆற்றி வந்தனர். இறக்குமதி செய்யும் பொருள்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பண்டப் பொதிகளுக்கும் சோழருடைய புலிப்பொறியாகிய முத்திரையை இட்டனர். அப்பண்டங்களுக்குச் சுங்கம் வாங்கி வந்தனர்.

    "பொன்மலிந்த விழுப்பண்டம்
    நாடார நன் கிழிதரும்
    ஆடியற் பெருநாவாய்" (மதுரைக்காஞ்சி)

என்பதில் விலையுயர்ந்த பண்டங்களைக் கப்பல் கொணரும் செய்தி கூறப்பட்டுள்ளது.

கப்பல்களில் யானை குதிரை முதலியன பிற நாட்டிலிருந்து வந்தன.

    "நனந்தலைத் தேத்த நன்கல னுய்ம்மார்
    புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொ டனைத்தும்"

என்பதிற் குதிரைகள் கப்பலில்வந்தமை கூறப்படுதல் காண்க. யவனம், ஈழம் முதலிய பிற நாட்டோடு தமிழ்மக்கள் வியாபாரம் செய்து வந்தனர்.

உள்நாட்டு வியாபாரத்திற்கும் சுங்கவரி உண்டு. வியாபாரிகள் தங்கள் பண்டங்களோடு செல்லும் வழிகளில் அவர்களைப் பாதுகாத்தற்குரிய காவலாளர்கள் இருந்தனர். சுங்கம், 'உல்கு' என்னும் பெயரால் வழங்கப் பெறும். அரசினுக்கு வரும் பொருள் வகையில் உல்கும் ஒன்று.

நகரங்களில் பெரிய அங்காடிகள் இரந்தன். காலைக் கடையாகிய நாளங்காடியும் மாலைக் கடையாகிய அல்லங்காடியும் இருந்தன. இன்ன இன்ன பொருள்கள் இன்ன இன்ன இடத்தில் விற்கப்படும் என்பதைக் குறிப்பித்தற்கு அவ்வவ் விடத்தில் அடையாளமுள்ள கொடிகள் இருந்தன. இராக்காலத்தில் விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன. கடைகளிலும், தட்டுக்களிலும் பொருள்களை விற்பவர்களும் பொருள்களை வைத்துக்கொண்டு வீட்டு நிழலிலிருந்து விற்பவர்களும் உண்டு.

இத்கைய நிலையில் வியாபாரம் இருந்தது. அதனை நடத்தும் வாணிகர் சிறந்த நிலையில் இருந்தனர். அவர்களில் இப்பர், கவிப்பர், பெருங்குடி வாணிகரென்னும் மூன்றுவகையினர் உண்டு. அவர்கள் லாபத்தை வெளிப் படையாகச் சொல்லி விற்றனர். அரசர்களாற் பெரிதும் மதிக்கப்பெற்றனர். அன்றி, அவர்களால் எட்டி என்னும் பட்டத்தையும் அதற் குரிய பொற்பூவையும் அடைந்தனர்.

கலைகள்

பண்டைத் தமிழர் வழ்க்கையைச் சிறப்பித்த கலைகள் பல. சிற்பம், ஓவியம், நெய் தற்றொழில், பொன்வேலை, மண்ணினாற் பாவை முதலியன செய்தல் போன்ற பலவற்றில் அவர்களுடைய முயற்சி சிறந்து விளங்கிற்று. மண்ணிலும் மரத்திலும் கல்லிலும் பலவகைச் சிற்பங்கள் அமைக்கப்பட்டன. சுவரிலும் துணிகளிலும் பல ஓவியங்கள் எழுதப் பட்டன. மெல்லிய ஆடைகள் நெய்யப்பட்டன. அவை பாம்பின் தோலைப் போலவும் மூங்கிலின் உள்ளிடத்தை உரித்தால் வரும் தோலைப் போலவும் மிக்க மெல்லியனவாக இருந்தன. தொட்டாலன்றிக் கண்ணிக்குத் தெரியாத ஆடைகள் இருந்தன. பட்டினாலும் மயிரினாலும் பல ஆடைகள் செய்யப்பட்டன. பொன் வெள்ளி மணி முதலியவற்றாற் பலவகை அணிகள் செய்யப்பட்டன. மணிகளின் இலக்கணங்களை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

வீரம்

தமிழ்ப் பொருளிலக்கணத்துள் ஒரு பகுதி நாகிய புறப்பொருள் பெரும்பாலும் வீரச் செயல்களைப் பற்றியே அமைந்தது. அதனால் அவர்களது வீரச் சிறப்பு நன்கு புலப்படுகின்றது. அரசர், மறவர் முதலியோரின் வீரத்தைப் பற்றிய பல வரலாறுகள் பழைய நூல்களிற் சொல்லப்பட்டுள்ளன. பகைவர்களை எதிர்த்து முகத்திலும் மார்பிலும் பெறும்புண்ணை விழுப்புண் என்பவர். (விழுப்புண் – சிறப்பையுடைய புண்.) அந்த விழுப்புண் படாத நாட்களைக் கெட்ட நாளாக வீரர் கருதினர். போரென்றால் வீரர்களுக்கு மிக்க இன்பம் உண்டாகும்:

    "போரெனிற் புகலும் புனைகழன் மறவர்" (புறநானூறு.)

மறக்குடியில் பிறந்த பெண்மக்கள் தங்கள் பிள்ளைகள் மிக்க வீரராக இருத்தலை ஒரு
பெருமையாக்க் கருதினர்.

    "களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" (புறநானூறு)

என்பது ஒரு வீரத்தாயின் கூற்று. மகளிரது வீரக்கருத்தைப் புலப்படுத்தும் பலதுறைகள்
புறத்திணையில் உள்ளன.

வீரர்கள் மிக்கிருந்த பலபடைகளை அரசன் உடையவனாக இருந்தனன். அரசர்கள் போருக்குச் சென்ற பிறகு பகைவருடைய நாட்டிலே பாசறை அமைத்துக்கொண்டு தங்குவார்கள். முல்லைப் பாட்டு என்னும் நூலில் இத்தகைய பாசறை ஒன்றின் அமைப்பு மிகவும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. படைகள் பலவிதமாக இருந்தன. பிறநாட்டிலிருந்து வந்த வீரர்களும் தமிழர்படைக்கு உதவி செய்தனர். பல வேறு பாஷைகளைப் பேசும் படைகளைத் தமிழரசர்கள் உடையவர்களாக இருந்தனர். தமிழ்நாட்டுப் படைகளும் பிறநாட்டு அரசர்களுக்கு உதவி செய்துவந்தன.

படைத்தலைவர்களை அரசர்கள் மரியாதையோடு நடத்திவந்தனர். அவர்களுக்குப் பட்டங்களும் நிலங்களும் வழங்கப் பெற்றன. 'ஏனாதி' என்பது அப்பட்டங்களுள் ஒன்று; அப்பட்டத்திற்குரிய மோதிரம் ஒன்று உண்டு. அதனை ஏனாதி மோதிரம் என்பர்.

வீரர்களிடத்தில் அரசர்களுக்கும் மக்களுக்கும் நன்மதிப்பு இருந்தது.பாசறையில் இருந்த அரசன் ஒருவன் நள்ளிரவில், முதல் நாளில் யுத்தம் செய்து புண்பட்ட வீரர்களைப் பார்த்து ஆறுதல் கூறுதற்காக வெளிவந்து வாடைக்காற்றும் மழைத்துளியும் வீசுதலைப் பொருட்படுத்தாது ஒவ்வொரு வீரனையும் காணும் செய்தியொன்று பின்வரும் அடிகளில் கூறப்பட்டிருக்கின்றது:

    "களிறுகளம் படுத்த பெருஞ்செய் யாடவர்
    ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து
    புடைவீ ழந்துகி லிடவயிற் றழீஇ
    நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
    சிலரொடு திரிதரும் வேந்தன்" (நெடுநல்வாடை)

போரிற் பொருது இறந்த வீரர்களின் ஞாபகக் குறியாக வீரக்கல் நாட்டி அதில் அவ்வீரர்களுடைய பெயர்களையும் செயல்களையும் எழுதி வழிபட்டு வந்தனர்.

போர் முறைகள் பல உண்டு. கப்பற்போரும் நடந்துவந்தது. நெடுஞ்சேரலாதனும் அவன் மகன் செங்குட்டுவனும் பகைவரோடு கப்பற் போர் செய்தனர்.

புலவர் நிலை

ஒரு நாட்டின் சிறப்பினைப் பிற்காலத்தவர்கள் அறியும்படி செய்துவைக்கும் உபகாரிகள் புலவர்களே. அவர்களை ஒருநாடு எவ்வளவு உயர்வாகப் போற்றி வந்ததோ அவ்வளவு அந்நாட்டின் நாகரிகம் சிறந்திருந்தது என்று கூறலாம். பண்டைத் தமிழ்ப் புலவர்கள் அரசர்களைவிடச் சிறந்தவர்களாக மதிக் கப்பெற்றனர். அரசர்கள் அவர்களை ஆசிரியர்களாகக்கொண்டு வழிபட்டுவந்தனர். அரசர்கள் தகுதியல்லாதவற்றைச் செய்தகாலையில் அவர்களை இடித்து அறிவுரை கூறும் பேராற்றல் புலவர்களுக்கு உண்டு. அவர்கள் தடையின்றி எங்குஞ் செல்லலாம். பகையரசர் நட்பரசர் என்னும் வேறுபாடு அவர்களுக்கு இல்லை. அரசர்கள் புலவர்களைப் போற்றி வந்த பல வரலாறுகள் உண்டு. புலவர்களாற் பாடப் பெறுதலைப் பெரும்பாக்கியமாக அக் காலத்து அரசர்கள் எண்ணினர். அந்தப் புகழ் பேரின்பத்தை ஈயுமென்பது அவர்கள் கொள்கை.

இரு பெருவேந்தர் போர் புரிகையில் அவர்களுக்கு இடையே நின்று புலவர்கள் சமாதானம் செய்வித்தனர். வேந்தர்களுக்குத் தூதாகச் சென்று நன்மைபுரிவித்தனர். பேகனென்னும் சிற்றரசன் ஒருவன் தன் மனைவியாகிய கண்ணகி என்பவளைத் துறந்திருந்த பொழுது பல புலவர்கள் அவனுக்கு அறிவுரை கூறி மீண்டும் அவளை ஏற்குமாறு செய்தார்கள்.

அவ்வளவு உயர்நிலையிற் புலவர்கள் இருந் தமைக்குக் காரணம் அவர்கள்பால் இருந்த பெருந்தன்மையே. அவர்கள் யாரையும் மதியாமல் அறவழியே நடந்தனர். 'நல்லிசைப் புலவர்கள்' என்றும் 'சான்றோர்' என்றும் அவர்கள் வழங்கப்பட்டனர். அரசர்கள் தீய நெறியில் நடந்தால் அவர்களைக் கண்டிக்க அஞ்சார்கள். தங்களைக் காத்துக்கொள்ள வேண்டுமென்னும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. பிறருக்கு நன்மை செய்யவேண்டு மென்றும் தம்மைச் சாரந்தவர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றும் அவர்கள் எண்ணினர். பொய்யாமையும் செய்ந்நன்றியறிவும் குணமும் அவர்கள்பால் மிகச் சிறந்திருந்தன. உலகியலை அவர்கள் நன்றாக அறிந்திருந்தனர். கடவுள் படைப்பிலமைந்த பலவகைப் பொருள்களைக் கண்டு அவற்றின் அழகிலும் செயல்களிலும் ஈடுபட்டனர். அவர்களுடைய செய்யுட்களில் உவமையாக்க் காணப்படுவன இயல்பாக அமைந்த பொருள்களாக இருக்கும். உள்ளதை உள்ளவாறே கூறும் அழகு அவர்களுடைய செய்யுட்கள்தோறும் விளங்குகின்றது. சிறந்த குணங்களும் உயர்ந்த புலமைத்திறனும் அவர்கள்பால் இருந்தமையே அவர்களுக்கு நன் மதிப்பை உண்டாக்கியது.

பின்னுரை

இதுகாறும் கூறியவற்றால் பண்டைத்தமிழர் மக்களுக்குரிய இயல்புகளை உடையராகி இருந்தனர், உடனலத்திற்குரிய உணவைத் தரும் உழவுமுயற்சியிற் சிறந்திருந்தனர், உழவர்கள் நல்ல நிலையில் இருந்தனர், உளநலத்தைத் தரும் கல்விநிலை மிகச் சிறந்திருந்தது, உயிர்க்கு உறுதிதரும் அறம் பொருள் இன்பம் வீடுகளுள் ஈதல் முதலிய அறங்கேஐச் செவ்வனே செய்தார்கள், பொருள் வருவாய்க்குரிய ஞெயல்கல் பல செய்தனர், அரசர்கள் குடிகள் நலத்தை ஓம்பிச் செங்கோல் செலுத்தி வந்தனர், தலைவன் தலைவியரிடையே அன்பு இருந்தமையால் இல்வாழ்க்கை இன்பம் செறிந்ததாக இருந்தது, வீட்டுநெறிக்குரிய பல காரியங்களை அவர்கள் இயற்றி வந்தனர், தெய்வபக்தி, மெய்யுணர்வு முதலியன அவர்களிடத் திருந்தன, துறவியர்கள் இருந்தனர், அவர்களுடைய நாகரிக வாழ்க்கையில் நகர அமைப்பு வியாபார நிலை என்பன உயர்வு பெற்றிருந்தன, பலகலைகளில் அவர்கள் வல்லுநராயிருந்தனர், வீரத்தில் அவர்களு சிறந்திருந்தனர், வீரர்களைப் போற்றிவந்தனர், புலவர்கள் நன்கு மதிக்கப்பெற்றனர் என்பன ஒருவாறு விளங்கும்.
-----------------


4. யானையின் கண்ணீர் *


* அய்மென், ஷண்முகானந்த சங்கத்தார் வெளியிட்ட திங்கள் மலர், 1937.

புதுக்கோட்டை ஸம்ஸ்தானத்தில் திவான் ரீஜண்டாக இருந்து பல அரிய செயல்களைச்
செய்த பெரியாராகிய ஸ்ரீமான் அமராவதி சேஷையா சாஸ்திரிகள் தமிழ்நாட்டுக்குப் புகழ் உண்டாக்கியவர்களுள் ஒருவர். புதுக்கோட்டைவாசிகள் இப்பொழுது பல விதமான நன்மைகளைப் பெற்றிருப்பதற்கு முக்கியமான காரணம் அப்பெரியாருடைய அரும்பெருஞ் செயல்களேயென்று சொல்ல வேண்டும். சாஸ்திரியாருடைய பேராற்றலை மேல்நாட்டாரும் பலபடியாகப் பாராட்டி யிருக்கிறாரகள். ஒரு தமிழரசை உலகம் முழுவதும் மதிக்கும்படி செய்த அவருடைய வரலாறுகள் பலரால் எழுதப் பட்டிருக்கின்றன.

சாஸ்திரிகளுடைய சமயோசித புத்தியும், நிர்வாகத் திறமையும், ஊக்கமும் ஒப்புயர்வற்றன. ஜனங்களுடைய இயல்புகளை நன்றாக அறிந்து அவர்களுடைய குறைகளைத் தீர்ப்பதில் அவருக்கு இருந்த ஊக்கம் அதிகம்; வாயில்லாப் பிராணிகளுடைய இயல்புகளை யுணர்ந்து அவற்றின் துனபங்களை நீக்குவதில்
பின்னும் மிக்க கவன முடையவராக அவர் இருந்தார்.

அவர் புதுக்கோட்டையில் உத்தியோகம் பார்த்தபின்பு கும்பகோணத்தில் சுக ஜீவியாக இருந்து காலங் கழிக்கலானார். அக்காலத்தில் நான் அவரை அடிக்கடி பார்த்துப் பேசி மகிழ்வதுண்டு. தாம் புதுக்கோட்டையில் இருந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை உத்ஸாகத்தோடு அவர் கூறுவார். அவருடைய வாய் மொழியால் அறிந்த பல வரலாறுகள் அவருடைய பேராற்றலை எனக்கு விளக்கின. அவர் மிகவும் ஸ்தூலமான சரீரமுடையவர். ஆதலின் பெரும்பாலும் புறத்தே செல்லாமல் இருந்த இடத்திலேயே யிருந்து தம்முடைய அதிகாரத்தைச் செலுத்திவந்தது வியத்தற்குரியது. அரசாங்கத்தில் நடைபெறும் ஒவ்வொரு விஷயத்தையும் அவர் நன்றாக அறிந்திருந்தார்.

அவரைப் பார்த்தால் யானையொன்று உட்கார்ந்திருப்பதுபோலவே தோன்றும். உண்மையில், அவர் புதுக்கோட்டை அரசாங்கத்தில் மிக்க கம்பீரமான வாழ்க்கையை நடத்தி யானையைப் போலவே விளங்கினார். அந்த யானை சொன்னவற்றுள் புதுக்கோட்டை யரசர்க்குரிய பட்டத்து யானையைப் பற்றிய செய்தி ஒன்று. அவர் கூறியபடியே அதனை எழுதுகிறேன்:-

(ஸ்ரீ சேஷையா சாஸ்திரியார் : *இந்தப் பக்கத்தில் ஸ்ரீ சேஷையா சாஸ்திரிகள் படம் உள்ளது*)

"ஒருசமயம் பட்டத்துயானைக்கு மதம் பிடித்ததாகச் சிலர் என்னிடம் சொன்னார்கள்; சிலகாலமாக அது தனக்குக் கொடுக்கும் ஆகாரத்தை உண்பதில்லை யென்றும், ஏதாவது கொடுத்தால் அதை எறிந்து விடுகிறதென்றும், காலில் போட்டு மிதித்து விடுகிற தென்றும், அதனருகே ஒருவரும் நெருங்க முடியவில்லையென்றும் சொன்னார்கள். யானை அடிக்கடி பிரிறிக் கொண்டே யிருந்தது. ஆகாரம் இல்லாமல் எவ்வளவு நாள்தான் இருக்க முடியும்?

"உடனே அந்த யானையின் பாகனைக் கூப்பிட்டனுப்பி விசாரித்தேன். அவன் மிகவும் பயத்தோடு என்னிடம் வந்தான். பழைய பாகன் சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டதாகவும் தன்னை அந்த யானைக்குப் பாகனாக அதிகாரிகள் நியமித்திருப்பதாகவும் சொன்னான்; 'நான் என்ன செய்வேன்! என்னால் ஆன தந்திரங்களை யெல்லாம் செய்து பார்த்தேன். அது வழிக்கு வரவில்லை. இப்பொழுதுதான் மதம் பிடிக்க ஆரம்பம். இப்படாய்யே இருந்தால் மிஞ்சிவிடும். என்னுடைய துரதிர்ஷ்டம் இப்படி வந்து சேர்ந்தது!' என்றான். நான், 'இப்பொழுது எங்கே இருக்கிறது அது?' என்று கேட்டேன். அவன் இடத்தைக் கூறி விட்டு,'அதன் நிலை பயங்கரமாக இருந்தமையால் நான்கு கால்களிலும் சங்கிலியிட்டு ஜாக்கிரதையாகக் கட்டியிருக்கிறேன்' என்றான்.

"நானே ஒருமுறை அந்த யானையைப் பார்க்க விரும்பினேன். ஒரு நாள் அந்த யானை இருந்த இடத்துக்குப் போனேன். கரும்பு, அரிசி, அச்சுவெல்லம் முதலியவைகளை ஆட்களிடம் சொல்லி எடுத்துவரச் செய்தேன். கரும்பை அதனிடம் போடச் சொன்னேன். அதனை யானை எடுத்து மறுபடியும் கீழே போட்டுவிட்டது; அப்பால் பயங்கரமான குரலோடு அது முழங்கியது. அதனுடைய கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக பெருகி வழிந்தது.

"இந்த நிலையில், அந்த யானையைச் சுற்றி வேடிக்கை பார்க்க அங்கே வந்து சிலர் கூடினார்கள். சில நிமிஷங்கள் சென்றன. யானைகூட்டத்தைப் பார்த்தது. திடீரென்று எதையோ புதிதாகக் கண்டது போலக் கூட்டத்தின் ஒரு பக்கமாக நோக்கித் தன் துதிக்கையை நீட்டி நீட்டிக் கத்தத் தொடங்கிற்று.

"அது தன் துதிக்கையை நீட்டிய பக்கத்தில் ஒரு மாது நின்று கொண்டிருந்தாள்; அவள் விம்மி விம்மி அழுதாள். அவளுடைய கண்ணீருக்குக் காரணம் புலப்படவில்லை. யானையின் கண்ணீருக்கும் அவளுடைய கண்ணீருக்கும் ஏதோ சம்பந்தம் இருக்க வேண்டுமென்று நான் ஊகித்தேன்.உடனே அவளை அழைத்து, 'நீ யார்? எதற்காக அழுகிறாய்?'என்று கேட்டேன்.

"அவள், சாமீ! இந்த யானைக்குப் பாகராயிருந்தவர் என் புருஷர். அவர் இரண்டு வாரத்துக்குமுன் இறந்துபோனார். இந்த யானையை அவர் சொந்தப் பிள்ளையைப் போலவே காப்பாற்றி வந்தார். அவர் இறந்து போன துக்கத்தால் நான் வெளியிலே வரவில்லை. இதற்கு மதம் பிடித்திருக்கிறதென்று சில பேர் சொன்னார்கள். எங்கள் வீட்டுப் பிள்ளையைப் போல வளர்ந்த இதைப் பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தேன். எத்தனை தடவை என் கையால் இதற்குத் தீனி கொடுத்திருக்கிறேன்! இதைப் பார்க்கிறபோது என் புருஷருடைய ஞாபகம் வந்தது; அதனால் துக்கம் தாங்க முடியவில்லை. அவர் இருந்தால் இந்த யானைக்கு இப்படித் துன்பம்வரப் பார்த்துக்கொண்டிருப்பாரா?' என்று சொல்லி விட்டு மீண்டும் அழுதாள்.

"நான் அவளைச் சமாதானப்படுத்தி, 'நீ வருத்தப்பட வேண்டாம். இந்த யானைக்கு உன் கையால் ஏதாவது கொடு; வாங்கிக் கொள்கிறதா பார்ப்போம்' என்றேன்.

"அவள் ஒரு கரும்பை யெடுத்து யானையினுடைய துதிக்கை எட்டுந் தூரத்திற்குச் சென்று பயந்து கொண்டே அதை நீட்டினாள். யானை மிக்க ஆவலோடு அதை வாங்கிக் கொண்டது. அதனால் மேலெல்லாம் தடவிக் கொண்டது. பிறகு தன் வாய்க்குள் வைத்துக்கொண்டு தின்ன ஆரம்பித்தது. அங்கிருந்த யாவரும் ஆச்சரியமடைந்து சந்தோஷத்தால் ஆரவாரம் செய்தார்கள்.

அவள் பின்னும் சில கரும்புகளை யானைக்குக் கொடுத்தாள். எல்லாவற்றையும் அது தின்றது. அதற்குத் தன் பழைய பாகனிடத்தில் இருந்த அன்பின் உறுதி இதனால் தெரிந்தது. அவனுடைய மரணமே அந்த யானைக்கும் அவன் மனைவிக்கும் கண்ணீரை உண்டாக்கக் காரணமாயிற் றென்பதை நான் உணர்ந்த போது என் கண்ணிலும் நீர்த்துளி உண்டாயிற்று.

"விஷயம் எனக்கு நன்றாக விளங்கியது. யானையின் நோய்க்குப் பரிகாரமும் தெரிந்தது. நேரில் பார்க்காமல் விஷயத்தைக் கேள்வியுற்று யானையின் மதநீரைப் பார்க்க எண்ணிச் சென்றேன். அது கண்ணீரால் தன் துக்கத்தைத் தெரிவித்தது. அன்றுமுதல் அந்த யானைக்குப் பழைய பாகன் மனைவியே கவளம் ஊட்டிவந்தாள். அவள் வீட்டுப் பிள்ளையைப் போல வளர்ந்த அதற்கு அவள் உணவளித்தல் தானே நியாயமாகும்? புதிய பாகனும் நாளடைவில் அவள் மூலமாக யானையின் பழக்கத்தைப் பெற்றான். அந்த யானையால், தன் கணவன் இறந்தபின்பும் அவளுக்கு ஸம்ஸ்தானத்தின் உதவி கிடைத்தது. புருஷனுக்குப் பின்பு பிள்ளை தாயைக் காப்பாற்றும் முறைக்கு இது பொருத்தமாக இருந்தது."
---------


5. உதிர்ந்த மலர்கள் *


*1889-ஆம் வருஷம்.

பத்துப் பாட்டை நான் ஆராய்ந்து பதிப்பிக்கத் தொடங்கியபோது எனக்கு முதலில் மூலமுள்ள பிரதி கிடைக்கவில்லை. பதவுரை மட்டும் அடங்கிய பிரதிகளே கிடைத்தன. அதன் முதற் பதிப்பில் உரையிலிருந்து தொகுத்த மூலத்தையே வெளியிட்டேன். அக்காலத்தில் மூலப்பிரதி எங்கேனும் கிடைக்குமோவென்று சிரமப்பட்டுத் தேடியும் பயனில்லை.

உரையில் நச்சினார்க்கினியர் கொடுத்துள்ள மூலப்பகுதிகளை இணைத்து எதுகை, மோனை,பொருட்டொடர்பு முதலியவற்றை ஆராய்ந்து ஒருவகையாக அமைத்துக் கொண்டேன். அந்த நிலையிலும் ஓர் இடையூறு உண்டயிற்று.

பத்துப்பாட்டில் எட்டாவது பாட்டாக இருப்பது குறிஞ்சிப்பாட்டென்பது. அது சங்கப்புலவர்களில் தலை சிறந்தவராகிய கபிலரால் ஆரிய அரசனாகிய பிர‌கத்தன் என்பவ‌னுக்குத் தமிழின் நயத்தைத் தெரிவிக்கும் பொருட்டுப் பாடப் பெற்றது.அதன்கண் ஒரு தலைவி ஒரு தலைவனைக் கண்டு காமுற்று அள‌வளாவிய செய்தியாகிய களவொழுக்கம் மிக அழகாகச் சொல்லப்படுகின்றது:

மலைவாணர் மகளாகிய ஒரு தலைவியை அவளுடைய தாய்,"தினைக்கொல்லையைக் காத்து வருவாயாக"என்று கூறித் தோழியுடன் அனுப்பினாள். தலைவியும் தோழியும் தினைக்கொல்லைக்குச் சென்று ப‌ரண்மேலிருந்து கிளி முதலியவற்றை ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.

பிறகு அருவியிலே விளையாடி மகிழ்ந்தும், பாட்டுக்களைப் பாடியும், பலவகையான‌ அழகிய மலர்களைப் பறித்துப் பாறையிலே குவித்தும், தழைகளையெல்லாம் ஆடைபோலக் கட்டி உடுத்தும், மாலைதொடுத்து அணிந்தும், இடையிடையே கிளிகளை ஓட்டியும் பொழுது போக்கினார்கள்.

அப்பொழுது அங்கே ஒரு தலைவன் வந்தான். அவன் அழகும் வீரமும் உடையவன். அவன் தன் தலைமயிரில் எண்ணெயும் மயிர்ச் சாந்தும் பூசியிருந்தான். அகிற்புகையினால் அதனை உலர்த்தினமையின் அதில் வாசனை கமழ்ந்தது. அவ்வாசனைபற்றி வண்டுகள் அவன் குடுமியிலே மொய்த்தன. பல மலர்களை அவன் தன் தலையில் அணிந்து பிச்சி மலரால் தொடுத்த ஒற்றைவடத்தைச் சுற்றிக் கொண்டிருந்தான். ஒரு காதில் அசோகந்தளிரைச் செருகியிருந்தான். பூமாலையும் ஆபரணமும் அவன் மார்பிலே விளங்கின. கையில் வில்லையும் அம்புகளையும் ஏந்தியிருந்தான். இடையிலே கச்சையும் காலிலே வீரக்கழலும் திகழ்ந்தன.

அவனோடு சில நாய்கள் வந்தன. அவை குரைத்துத் தலைவியையும் தோழியையும் வளைத்துக்கொண்டன. அவர்கள் அஞ்சி வேறிடத்திற்குச் செல்ல முயன்றார்கள். அப்பொழுது அவ்வீரன் அவர்களை நோக்கி இனிய சொற்களைக் கூறி அவர்கள் அழகைப் பாராட்டினான்.

எப்படியேனும் அவர்களோடு பேச வேண்டுமென்பது அவன் விருப்பம். அதனால் பொய்யாக, "நான் வேட்டையாடி வந்தேன். யானை முதலிய சில மிருகங்கள் எனக்குத் தப்பி இங்கே வந்தன. அவற்றை நீங்கள் கண்டீர்களோ?" என்று வினாவினான்.மகளிர் இருவரும் நாணமிகுதியால் ஒன்றும் விடை பகரவில்லை.

மேலும் அவன், "என் வினாவிற்கு ஏற்ற விடை தாராவிடினும் என்னோடு ஒரு வார்த்தையாவது பேசக்கூடாதா?" என்று சொல்லிவிட்டு ஒரு பூங்கொம்பை எடுத்துக் குரைத்துக் கொண்டிருந்த தன் நாய்களை அடித்து அடக்கினான். தலைவியின் வாயிலிருந்து ஒரு சொல்லேனும் வருமோவென்று எதிர்பார்த்து நின்றான் அவன். ஒன்றும் வரவில்லை.

அப்பொழுது, வேடன் ஒருவனால் தினைப் புனத்திலிருந்து துரத்தப்பட்ட ஒரு யானையானது மதமிகுந்து மரங்களை முறித்துக் கொண்டு அவ்வழியே வந்தது. அதைக்கண்ட அம்மகளிர் இருவரும் அஞ்சி நடுங்கினர். அவர்களுடைய நாணம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. உயிருக்கே ஆபத்து வந்த போது நாணம் என்செய்யும்! உடனே அவ்வீரனருகிலே ஓடிச் சென்று நடுங்கி நின்றார்கள்.

நினைத்த பொருள் கைவந்தவனைப்போல‌ அவன் மகிழ்ந்து மிகவும் எளிதாக ஓர் அம்பைத் தொடுத்து யானையின் முகத்தில் எய்தான். அது வெருவி ஓடி விட்டது. மகளிர் அச்சம் நீங்கினர்.

தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே ஒருவகை அன்பு உண்டாயிற்று. பிறகு மகளிர் இருவரும் மலையருவியிலே குதித்து விளையாடுகையில் கால் நிலையாமல் நீரால் இழுத்துச் செல்லப் பட்டனர். அப்பொழுது தலைவன் சென்று அவர்களைக் காப்பாற்றினான். தலைவியைத் தழுவிக் கொண்டு அன்பு செய்தான். அதுமுதல் அவ்விருவரும் காதலராயினர். தினந்தோறும் சென்று தலைவன் தலைவியைக் கண்டு அளவளாவி வந்தான். தலைவி காலையிலே தினைப்புனஞ் செல்வதும் கிளியை ஓட்டுவதும் தலைவனைக் கண்டு பேசி அளவளாவி மகிழ்வதும் மாலையிலே தன் வீடு திரும்புவதுமாக இருந்துவந்தாள்.

பின்பு தினைக்கதிர் விளைந்தவுடன் தலைவிக்குத் தினைப்புனங்காக்கும் வேலை ஒழிந்தது. இதனால் அவள் தன் வீட்டிலேயே இருந்தாள். அக்காலத்தில் தலைவன் இராப்பொழுதில் அவளை நாடி வீட்டிற்கு வந்து சென்று கொண்டிருந்தான்.

அவன் வரும்போது இராக்காலமாதலின் இடைவழியிலே அவனுக்கு நேரக்கூடும் அபாயங்களுக்கும் தன் ஊரிலும் வீட்டிலும் உள்ள காவல்களுக்கும் பயந்து தலைவி வருந்தினாள். அந்த வருத்த மிகுதியினால் அவள் உடல் மெலிவுற்றது. அம்மெலிவைக் கண்ட தாய் முதலியோர் அதற்குக் காரணம் யாதென்று ஆராயத் தொடங்கினர்.

தலைவிக்கு உண்டான நோய், மருந்தால் தீர்வதன்றென்பதை அவர்கள் அறிந்திலர். முதியவர்களையும் தெரிந்தவர்களையும் கேட்டார்கள்; கடவுளுக்குப் பூசை போட்டனர்; அவர்களால் நோயின் காரணத்தை அறிய முடியவில்லை. உண்மை ய‌றியாமல் அவர்கள் வருந்துவதையும் தான் தலைவனை மணம்செய்து கொள்வதற்கு வழியின்றித் துன்புறுவதையும் தலைவி உணர்ந்து யோசித்தாள். 'நம்முடைய காதலை வெளிப்படுத்தாவிடின் அதனை ய‌றியாத இவர்கள் ஏதேனும் செய்யத் துணிவார்கள். அதனால் ந‌ம்முடைய காதலுக்கும் கற்புக்கும் குறை நேரும். ஆபரணங்கள் உடைந்துவிட்டால் மறுபடி திருத்தி அமைத்துக்கொள்ளலாம். ஒழுக்கமும் கற்பும் வழுவினால் மறுபடியும் அமைத்துக்கொள்ள முடியுமா? எப்படியேனும் நம் நிலையைத் தாய்க்குத் தெரிவிப்பதுதான் பரிகாரம்' என்று துணிந்தாள்; துணிந்து தன் உயிர்த்தோழிக்கு அதனை அறிவித்தாள். அத்தோழி அதனைக் கேட்டு அவள் விருப்பத்தின்படியே செவிலித்தாய்க்குத் தலைவியின் காதல் வரலாற்றைச் சொல்லுகின்றாள்.

அப்படிச் சொல்லும் முறையிலே குறிஞ்சிப் பாட்டு அமைந்திருக்கின்றது. அதில் உள்ள வருணனைகளும், பழைய வழக்கங்களும், பிறவும் என் மனத்தைக் கவர்ந்தன. தலைவியும் தோழியும் பல மலர்களைப் பறித்துப் பாறையிலே குவித்த செய்தி கூறப்படுமிடத்தில் 99 மலர்களின் பெயர்கள் வருகின்றன. 'இவ்வளவு பூக்களின் பெயர்களை எதற்காக அடுக்கி இங்கே சொல்ல வேண்டும்?' என்று யோசித்தேன். ஆரிய அரசனுக்குத் தமிழச் சிறப்பை அறிவுறுத்த வந்த கபிலர், "தமிழர்கள் இயற்கையின் எழிலை நன்கு உணர்ந்தவர்கள் நிலப் பாகுபாடுகளையும் மரஞ் செடி கொடிகளின் இயல்புகளையும் தெளிவாக ஆராய்ந்தவர்கள். அவர்களுக்கு வார்த்தைப் பஞ்சமில்லை" என்பதை அவ்வரசன் தெரிந்துகொள்வதற்காக இப்படிப் பாடியிருக்க வேண்டுமென்று கருதினேன்.

மாலைக் காலத்தை எவ்வளவு அழகாக அவர் அதில் வருணித்திருக்கின்றார்!

சூரியன் அத்தகிரியிலே மறைகின்றான். மான்கணங்கள் மரத்தடியிலே வந்து கூடுகின்றன. பசுக் கூட்டங்கள் வயிறார மேய்ந்து விட்டுத் தம்முடைய கன்றுகளை நினைந்து விளித்துக் கொண்டே மந்தைகளிற் புகுகின்றன. அன்றிற் பறவை பனைமரத்தில் இருந்து துணையை அழைக்கின்றது. பாம்பு இரைதேடும் பொருட்டு மணியை உமிழ்கின்றது.

இடையர்களெல்லாம் தம்முடைய புல்லாங் குழலில் ஆம்பற்பண்ணை வாசிக்கின்றனர்.ஆம்பலரும்புகள் இதழ் விரிகின்றன. 'வீடுகளிலெல்லாம் சுமங்கலிகள் விளக்கேற்றுகின்றனர். அந்த‌ணர் அந்திக்கடனைச் செய்கின்றனர்.'

'இலைகளின் மேல் அமைத்த பரண்களில் வேடர்கள் கொடிய மிருகங்களை அச்சுறுத்தக் கொள்ளிக் கட்டையால் தீ உண்டாக்குகின்றனர். மேகங்கள் மலையைச் சூழ்கின்றன; எங்கும் இருள்கின்றது. காட்டிலே கல்லென்ற ஒலி உண்டாகின்றது. புள்ளினங்கள் தம்தம் கூடுகளில் வந்து ஒலிக்கின்றன. இப்படி மாலை வந்தது.'

இவற்றைப்படிக்கப்படிக்க இக்காட்சிகள் என் மனக்கண்முன் தோன்றலாயின.ஒரு முறை படித்தேன். இருமுறை படித்தேன். பலமுறையும் படித்தேன்.

மூல அடிகளை நன்றாக வரையறை செய்து வரும்போது, மலர்களை வரிசையாகச் சொல்லும் பகுதியின் இடையே சில அடிகள் விட்டுப்போயினவென்று தெரிந்தது. அங்கே ஏட்டில் இடம் விடப்பட்டிருந்த‌து. அழகாகத் தொடுத்த அம்மலர் வரிசையிலே சில மலர்கள் காணப்படவில்லை. அவ்வரிசையின் அழகு அதனால் சிறிது சிதைவுற்ற‌து. எவ்வள‌வோ இடங்களில் தேடியும் மூலம் கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தால் நைந்திருந்த நான், உரையின் உதவி கொண்டு ஒருவாறு மூலத்தைச் செப்பஞ் செய்யலா மென்ற தைரியத்தை அடைந்திருந்தேன்; மூலவரையறையும் ஒருவாறு அமைந்து வந்தமையால் திருப்தியுற்றேன். இடையிலே இம்மலர் வரிசை அற்றிருந்தது. நான் என் செய்வேன்! அங்கே செங்காந்தட் பூ முதல் செம்பூ வரையிற் பல மலர்கள் சொல்லப்படுகின்றன. செங்கொடுவேரி என்னும் பூவுக்கும் கூவிளம் பூவுக்கும் இடையிலே சிதைவு காணப்பட்டது. ஏட்டுச் சுவடிகளில் அடிவரையறையோ, அடிகளின் எண்ணோ இராது. எத்தனை அடிகள் அங்கே இல்லையென்று விளங்கவில்லை. 'எத்தனை மலர்கள் உதிர்ந்து விட்டனவோ! அவற்றை எங்கே தேடி எடுத்துக் கோத்துக் குறையை நிரப்புவோம்!' என்று நான் ஏங்கினேன். ஏடுகள் தேடாத இடம் ஏதாவது இருக்கிறதாவென்று யோசித்தேன். தமிழ் வாணர்களைப் பாதுகாத்தும் சைவத்தை வளர்த்தும் வரும் தருமபுர ஆதீன மடத்தில் நான் அதுகாறும் ஏடுகளைத் தேடாதது என் ஞாபகத்துக்கு வந்தது.

அக்காலத்தில் திருவாவடு துறையாதீனத்திற்கும் தருமபுர ஆதீனத்திற்கும் சில வழக்கு கள் நடந்தன.அதனால் இரண்டு மடத்தினர்களுக்குள்ளும் ஒற்றுமை இல்லை. தருமபுரமடத்தின் பழம் பெருமையையும், திருவாவடுதுறை மடத்தைப் போலவே அம்மடத்திலும் தமிழ் வளர்த்த பெரியார்கள் பலர் இருந்தமையையும் நான் அறிவேன். ஆயினும் திருவாவடு துறை மடத்தின் சார்பு பெற்றவனாதலின் நான் தருமபுரத்திற்குச் செல்லத் துணியவில்லை. பழங்காலத்தில் இவ்விரண்டு மடங்களும் ஒற்றுமையோடு இருந்தன. தருமபுரத்தைக் கீழை வீடென்றும் திருவாவடுதுறையை மேலை வீடென்றும் சொல்வார்கள்.

ஆதினங்களின் இடையே பிணக்கு நேர்ந்தபோது ஓர் ஆதினத்திற்குரியவர்கள் மற்ற‌ ஆதினத்திற்குரியவர்களோடு பழகாமல் இருப்பது வழக்கம். அதனால் 'தருமபுரம் செல்வ‌தைத் திருவாவடுதுறை மடத்தினர் விரும்பாமல் இருத்தல் கூடும்; தருமபுரத்தினர் உள்ளன்போடு என்வரவை ஏற்றுக்கொள்ளாமல் இருத்தலும் கூடும்' என்ற எண்ணத்தினாலேயே, பல இடங்களில் சென்று சென்று ஏடுகளைத் தேடிவந்த நான் தருமபுரம் செல்லாமலே இருந்தேன்.

இப்பொழுது அவற்றையெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தால் காரியம் நிறவேறுவது எப்படி? தமிழ்ப் பணியில் இந்த ஸம்பிரதாயங்களைப் பார்ப்பது அவசியமன்று. நமக்கு அகௌரவம் நேர்ந்தாலும் பெரிதன்று; நம் காரியம் நிறைவேறினால் அதுவே பெரிய கௌரவம்' என்று நினைத்துத் தருமபுரத்திற்குச் செல்லத் துணிந்தேன்.

கும்பகோணத்தில் நான் வேலையிலிருந்த காலம் அது. அக்காலத்தில் திருவாவடுதுறையில் ஸ்ரீ அம்பலவாண தேசிகர் 17-ஆம் பட்டத்து ஆதீனகர்த்தராக விளங்கினார். அவரிடம் சென்று என் கருத்தைத் தெரிவித்தேன். அவர் என்பால் பேரன்பு உடையவராதலின் மடங்களின் இடையிலே யுள்ள பகைமையைப் பாராட்டாமல், "அப்படியே செய்யலாம்" என்று சொல்லி விடை கொடுத்ததோடு மடத்தின் முக்கியக் காரியஸ்தராகிய ஸ்ரீ பொன்னுசாமி செட்டியாரென்பவரையும் உடன் அனுப்பி வண்டி முதலியவற்றையும் உதவினார்.

அன்று சனிக்கிழமை. காலையில் ஏழு மணிக்கு நான் பொன்னுசாமி செட்டியாருடன் தருமபுரம் சென்றேன். அந்த ஊரை அதற்கு முன் பாராதவன் ஆதலின் அதை முதன் முதலில் பார்த்தபோது எனக்குச் சிற‌ந்த இன்பம் உண்டாயிற்று. காவிரிக்கரையில் உள்ள அவ்வூரின் இய‌ற்கையழகைக் காணும்போது சோழ நாட்டின் பெருமையைப் புலவர்கள் வருணித்திருக்கும் பகுதிகள் நினைவுக்கு வந்தன.

மடத்திற்குச் சென்றேன். அங்கே நிலவிய ஒழுங்கான அமைப்பும் தவக்கோலம் பூண்டிருந்த தம்பிரான்களின் கூட்டமும் என் உள்ளத்தைக் கவர்ந்தன. திருவாவடுதுறை மடத்தில் அத்தகைய காட்சிகளைக் கண்டு ஈடுபட்டவனாதலின் தருமபுரத்திலும் அவற்றைக் கண்டபோது எனக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று. 'இதுகாறும் இங்கு வராதது ஒரு குறையே' என்று கூட நான் எண்ணலானேன்.

என் வரவைச் சொல்லியனுப்பிவிட்டு மடத்தினுட் சென்றேன்.

அங்கே ஆதீனத் தலைவர்களாகிய ஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர் ஒரு சாய்வு நாற்காலியிலே சாய்ந்துகொண் டிருந்தனர். நான் அவர் அருகிலே போய்க் கையுறையாகக் கொண்டு வந்திருந்த கற்கண்டுப் பொட்டலத்தை அவருக்கு முன் வைத்துவிட்டு நின்றேன். என்னைக் கண்டும் அவர் ஒன்றும் பேசவில்லை. வெறுப்பின் அறிகுறியாக இருக்கலாமென்றெண்ணினேன்; 'திருவாவடுதுறை மடத்திற்கு வேண்டியவர் இங்கே வரலாமா? எதற்காக வந்தீர்' என்று கடுமையாகக் கேட்டுவிட்டால் என் செய்வது என்ற அச்சம் வேறு என் உள்ளத்தில் இருந்தது. பேசாமல் அரைமணி நேரம் அப்படியே நின்றேன். தேசிகர் ஒன்றும் பேசவில்லை. நான் மெல்லப் பேசத் தொடங்கினேன்; "நான் குமபகோணம் காலேஜில் தமிழ்ப்பண்டிதனாக இருந்து வருகிறேன். தமிழ்நூல்களை ஆராய்ந்து பதிப்பிக்கத் தொடங்கி யிருக்கிறேன். இப்பொழுது பதிப்பித்தற்காகப் பத்துப்பாட்டு என்னும் சங்க நூலொன்றை ஸித்தம் செய்து கொண்டிருக்கிறேன். அதில் இடையிலே ஒரு பாகம் சிதைவாக இருக்கிறது. பல இடங்களில் தேடித் தொகுத்த சுவடிகளில் அந்தப் பாகம் காணப்படவில்லை. இந்த ஆதீனத்தின் பெருமையை நான் நன்றாக அறிந்தவன். பல பெரியோர்கள் இங்கே இருந்தார்க ளென்பதையும் உணர்ந்தவன். இந்த ஆதீன வித்துவானாக இருந்த சம்பந்தசரணாலயர் இயற்றிய கந்தபுராணச் சுருக்கத்தைப் பணித்து இன்புற்றிருக்கிறேன். கவிதா சார்வபௌமராகிய துறைமங்கலம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகளுடைய ஆசிரியர் இந்தமடத்தில் இருந்த வெள்ளியம்பலவாண முனிவரென்பவரே. இன்னும் பல வித்துவான்கள் மடத்தின் ஆதரவு பெற்றுச் சிறந்த நிலையில் இருந்திருக்கிறார்கள்; பல நூல்களை இயற்றியிருக்கின்றார்கள். ஆதலால் இங்கே பழங்காலந் தொடங்கிப் பல அருமையான ஏட்டுச் சுவடிகள் இருக்கும். அவற்றைப் பார்க்கவேண்டுமென்ற அவா எனக்கு நெடு நாட்களாக இருந்தது. இந்த இடத்திற்கு வந்தால் சிதைந்த பாகம் கிடைக்குமென்றெண்ணி வந்தேன். ஸந்நிதானம் கட்டளையிட்டால் நான் வந்த காரியத்தைக் கவனித்துக்கொண்டு செல்வேன். மடத்துக் காரியஸ்தர்கள் சிலரும் உடன் இருந்தால் நான் விரைவில் ஏட்டுச் சுவடிகளைப் பார்க்க அநுகூலமாக இருக்கும். அந்த உபகாரத்தினால் தமிழுக்குப் பெரிய சிறப்பு ஏற்படும். ஸந்நிதானத்தின் நன்றியை என்றும் மறவாமல் இருப்பேன்" என்று சொன்னேன்.

இவ்வளவையும் கேட்டபிறகு அவர் தலை நிமிர்ந்தார். 'என்ன சொல்லுவாரோ?' என்று அப்பொழுதும் என் நெஞ்சம் படபடத்தது. தலை நிமிர்ந்தபடியே அவர் சிறிது நேரம் இருந்தார். ஏதோ யோசிப்பவர்போலக் காணப்பட்டார். பிறகு, "நாளை வரலாமே" என்று அவர் வாக்கிலிருந்து வந்தது. 'பிழைத்தேன்' என்று நான் எண்ணிக்கொண்டேன்; 'இந்த மட்டிலும் அனுமதி கிடைத்ததே' என்று மகிழ்ந்தேன். "உத்தரவுப்படியே செய்கிறேன்" என்று சொல்லி மறுநாள் வருவதாக விடை பெற்றுக்கொண்டு பொன்னுசாமி செட்டியாருடன் மாயூரம் சென்றேன். தருமபுரம் மாயூரத்திற்கு அருகில்தான் இருக்கிறது.

மாயூரத்தில் அக்காலத்தில், சிறந்த தமிழ் வித்துவானும் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம்பிள்ளை யவர்களுடைய மாணாக்கரும் முன்ஸீப் வேலையில் இருந்து உபகாரச் சம்பளம் பெற்றவருமாகிய வேதநாயகம்பிள்ளை இருந்தார். அவர் வீட்டிற்குப் போனேன். அவர் நோய்வாய்ப்பட்டு மிகவும் மெலிந்திருந்தார். அவரைப் பார்த்து, அவரது உடல்நிலை கண்டு வருந்தினேன். அவர், "நான் இப்பொழுது வியாதியோடு சண்டை போடுகிறேன்; என்னோடு அது சண்டைபோடுகிறது. நார் ஜயிக்கிறார்களோ, தெரியவில்லை" என்று சொன்னார். வியாதியே ஜயித்ததனால் அதன்பின் சில மாதங்களில்அவர் இவ்வுலகவாழ்வை நீத்தார்.

அன்று வேதநாயகம் பிள்ளையோடு பேசிப் பொழுது போக்கினேன். இராத்திரி முழுவதும் எனக்குச் சரியாகத் தூக்கமே வரவில்லை. என் மனம் தருமபுரத்திலே இருந்தது. ஏடுகளைக் குவியல் குவியலாக் என்முன் கொண்டுவரச்செய்து பார்ப்பதாகவும் எவ்வளவோ அரிய நூல்கள் இருப்பதாகவும் மனத்திலே பாவனை செய்துகொண்டேன். அந்த ஓர் இரவு ஒரு யுகமாக இருந்த்து. எப்பொழுது விடியுமென்று காத்திருந்தேன்.

விடிந்தது. உடனே பொன்னுசாமி செட்டியாருடன் புறப்பட்டு ஏழு மணிக்குத் தருமபுரம் போனைன். அன்றும் ஸ்ரீ மாணிக்க வாசக தேசிகர் முதல் நாள் இருந்த கோலத்திலேயே இருந்தார். அதே சாய்வு நாற்காலி; அதே மௌனமான நிலை. நானும் முதல் நாளைப் போலவே அருகிலே போய் நின்றேன்.

சிறிது நேரத்திற்குப் பின் அந்த மடத்திற் காறுபாறாக இருந்த ஸ்ரீ சாமிநாதத் தம் பிரானென்பவர் அவ்வழியே வந்தார். அவரோடு எனக்குப் பழக்கம் இல்லாவிடினும் என்னைப்பற்றி அவர் நன்றாக அறிந்திருந்தார். நான் தமிழ் நூல்கள் விஷயத்தில் மேற்கொண்ட உழைப்பையும் திருவாவடுதுறை யாதீனத்திற்கு வேண்டியவனென்பதையும் அவர் தேசிகருக்கு எடுத்துச் சொன்னார். கேட்ட தேசிகர் மெல்ல, "சரி; ஆகவேண்டிய காரியத்தைக் கவனிக்கலாமே" என்று உத்தரவிட்டார்.

சில ஓதுவார்களையும் கணக்குப் பிள்ளைகளையும் எனக்கு உதவி செய்யும்படி தேசிகர் கட்டளையிட்டார். அவ்வாதீனத்துப் புஸ்தக சாலைக்கு அவர்கள் என்னை அழைத்துச் சென்றார்கள். அங்கே பல ஏட்டுச்சுவடிகள் இருந்தன. எல்லாவற்றையும் எடுத்து ஓரிடத்தில் தொகுத்து வைத்தார்கள்; ஆயிரக்கணக்கான ஏட்டுச் சுவடிகள் இருந்தன. அவற்றைக் கண்டவுடனே எனக்கு வியப்பு உண்டாயிற்று. எல்லாம் பழைய ஏடுகளே; புதிதாக எழுதப் பட்ட ஏடு ஒன்றேனும் அதிற் காணப்படவில்லை. பல காலமாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்ட அவ் வேடுகளை ஒவ்வொன்றாகச் சோதிக்கத் தொடங்கினேன்.

உடனிருந்தவர்களில் ஒரு சாரார் சுவடிகளின் கட்டை அவிழ்த்துக் கொடுத்தார்கள். நான் ஒவ்வொன்றாகப் பார்த்தேன். பார்த்தவுடன் அவற்றை மீண்டும் ஒரு சாரார் நன்றாகக் கட்டிவைத்தார்கள். சுவடிகளைப் பார்ப்பதும் ஒழுங்காகக் கட்டுவதுமாகிய காரியங்களில் அவர்களுக்கு நல்ல பழக்கம் இருந்தது.

சுவடிகளைப் பார்த்துக்கொண்டே வந்தேன். ஸ்தல புராணங்கள், மகா புராணங்கள், பிரபந்தங்கள், சைவசாஸ்திரங்கள் முதலிய பல வகைகள் இருந்தன. தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் உரைகளுடன் இருந்தன. சில நூல்களிற் பல பிரதிகளைக் கண்டேன். சிவதருமோத்திரத்தில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட பிரதிகள் இருந்தன. அங்ஙனம் இருப்பதற்குக் காரணம் என்னவேன்று நான் விசாரித்தேன். "இங்கே துறவு பூண்பவர்களில் ஒவ்வொருவருக்கும் காஷாயம் கொடுப்பவர்கள் இந்த நூலின் பிரதி ஒன்றைக் கொடுப்பது இவ்வாதீனத்தின் வழக்கம். அதனால் இவ்வளவு பிரதிகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன" என்று உடனிருந்தவர்கள் சொன்னார்கள். என்னுடைய தமிழாசிரியராகிய ஸ்ரீ மீனாட்சி சுந்தரம்பிள்ளை ஒருமுறை சிவதரு மோத்தரச் சுவடி எங்கும் கிடைக்காமல் அதனைப் பெறுவதற்கு எவ்வளவோ சிரமப்பட்டுக் கடைசியில் ஒரு மாணாக்கர் செய்த தந்திரத்தால் மிகவும் அரிதாகச் சிலநாள் மட்டும் வைத்துக்கொள்ளும்படி ஒரு பிரதியைப் பெற்றார்கள். * அவ்வரலாறு அப்பொழுது எனக்கு ஞாபகத்துக்கு வந்தது.
---------------
* ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம், பாகம் 1, பக்கம், 108-16.

ஏட்டுச்சுவடிகளைச் சோதித்து வரும்போது நான் பல அருமையான நூல்களைப் பார்த்தேன். அவற்றைப் பெறுவதில் எனக்கு விருப்பம் இருப்பினும் அதிகப் பழக்கமில்லாத அவ்விடத்திலுள்ளவர்கள் தருவார்களோ மாட்டார்களோ என்று அஞ்சி வாளாவிருந்தேன். அன்றியும் என்னுடைய நாட்டம் முழுவதும் பத்துப்பாட்டிலே தான் பதிந்திருந்த்து. மிக விரைவாகச் சுவடிகளைப் பார்த்து வந்தேன். பகல் பன்னிரண்டு மணி வரையிலும் பத்துப் பாட்டு அகப்படவில்லை. பல நூறு சுவடிகளைப் பார்த்தேன்; பயனில்லை. இடையிலே சிறிது நேரம் உண்ணுவதிற் போயிற்று; மற்றக்கால முழுவதும் சுவடிகளைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.

நாழிகை ஆகிக்கொண்டிருந்தது; பல சுவடிகள் சோதிக்கப் பட்டன; பத்துப்பாட்டு மட்டும் அகப்படவில்லை.

சூரியன் மறைந்தான். அன்று சூரியோதய காலத்தில் என்மனம் தரும்புர மடத்து ஏட்டுச் சுவடிகளைக் காண்பதில் ஊக்கமும் நாம் தேடியது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் உடையதாக இருந்தது. சூரிய அஸ்த மன காலத்திலோ என் நம்பிக்கை தளர்ந்தது. குறிஞ்சிப் பாட்டின் குறை நிரம்பாமலே போய் விடுமோ என்ற ஏக்கம் தலைப்பட்டது. விடுபட்ட மலர்களை நாம் காணக் கொடுத்து வைக்கவில்லையே என்று இரங்கினேன். குறிஞ்சிப் பாட்டிலுள்ள மலர்களெல்லாம் ஒரு மாலையாக என் அகக்கண் முன் வந்து நின்றன. அம்மாலையின் இடையிலே சில மலர்கள் உதிர்ந்தமையின் அது குறையாக இருப்பது போன்ற தோற்றத்தையும் நான் கண்டேன். 'ஐயோ! இந்த மாலை நிரம்புமா?' என்று எண்ணி எண்ணி நைந்தேன்.

இரவு வந்துவிட்டது. உயரமான குத்து விளக்குகளை ஏற்றிக் கொணர்ந்தார்கள். அவற்றிலுள்ள சுடரைத் தொழுதுவிட்டு நான் மேலும் பார்க்கத் தொடங்கினேன். மணி ஏழு ஆயிற்று; அதன் பின் எட்டு அடித்தது. மனக்கலக்கத்தோடு பார்த்துக்கொண்டே வந்தேன். 'இந்தத் தமிழ்நாடுதான் எவ்வளவு துரதிர்ஷ்டமுடையது! இவ்வளவு அருமையான நூல்களைப் பறிகொடுத்துத் தவிக்கின்றதே!' என்று எண்ணி உருகினேன். ஒன்பது மணியும் ஆயிற்று.

அப்பொழுது ஆதீனத் தலைவாராகிய ஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர் அங்கே வந்தார். அன்று அவர் மிளகுக்காப்புச் செய்துகொண்ட தினம். சடையுடையவர்கள் எண்ணெய் தேய்த்துக்கொள்வது வழக்கமில்லை. மிளகு முதலிய சில பொருட்களைப் பால் விட்டு அரைத்துத் தேய்த்துக் கொள்ளவார்கள். அதற்குத்தான் மிளகுக்காப்பு என்ற பெயர். துரம்புர ஆதீனத்தலைவர்கள் சடாதாரிகள். மாணிக்கவாசக தேசிகர் மிளகுக்காப்புச் செய்துகொண்டமையால் அவருடைய சடை ஈரமாக இருந்தது. அதைப் புலர்த்துவதற்காக ஒரு தவசிப்பிள்ளை அதைக் கையில் தாங்கி நின்றான். மற்றொருவன் தூபமுட்டியைப் பிடித்துக்கொண்டு அதற்குப் புகையூட்டிக்கொண்டு நின்றான். வேறொருவன் தூப முட்டியில் தசாங்கம், சாம்பிராணி முதலியவற்றைப் போட்டுக் கொண்டிருந்தான்.

இந்த நிலையில் வந்துநின்ற தேசிகரைக் கண்டதும் நான் எழுந்தேன். அவர் நின்றபடியே கையமர்த்தி, "நீங்கள் அப்படியே இருந்து பாருங்கள்" என்று சொல்லிவிட்டுச் சிறிதுநேரம் நின்றனர். அப்பால், "ஏதாவது கிடைத்த்தா?" என்று கேட்டார். நான் மிக்க கவலையோடு, "பல அருமையான ஏட்டுச்சுவடிகள் இருக்கின்றன. ஆனாலும், எனக்கு எது வேண்டுமோ அது கிடைக்கவில்லை. இங்கே இல்லை யென்றால் வேறிடங்களில் இருக்கநியாயமில்லை. என்னுடைய அதிர்ஷ்டம் இப்படி இருக்கிறது" என்று சோர்வு புலப்படும் தொனியில் விடையிறுத்தேன்.

"இருந்திருக்கும். யாராவது கொண்டு போயிருப்பார்கள்" என்று அவர் சொன்னார்.

"இந்த இடத்தைத் தவிரச் சுவடிகள் இருக்கும் இடம் இந்த மடத்தில் வேறு உண்டோ?" என்று கேட்டேன். வேலைக்காரர்கள் இல்லையென்று சொன்னார்கள்.

அப்பொழுது, முன்னே குறிப்பிட்ட காறுபாறு ஸ்ரீ சுவாமிநாதத் தம்பிரான் அங்கே வந்தார். எனக்கு வேண்டிய சுவடி கிடைக்காமல் வருத்தத்தோடு யான் சொல்லிக் கொண்டிருந்தவற்றைக் கேட்ட அவர், "சில தினங்களுக்குமுன் பதினெட்டாம் பெருக்கில் காவிரியிற் கொண்டுபோய் விட்டுவடுவத்றகாகப் பல பழைய கணக்குச் சுருணைகளையும் சிதிலமான வேறு சுவடிகளையும் கட்டிச் சிறிய தெரில் வைத்துக்கொண்டு போனார்கள். அதில் சில பழைய ஒற்றை ஏடுகளைக் கண்டேன். ஒருவேளை மடத்துத் தஸ்தாவேஜாக இருக்கலா மென்று எண்ணி அவைகள்மட்டும் எடுத்துக்கட்டி என் பீரோவின்மேல் வைக்கச் செய்தேன். அவைகளில் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கலாம்" என்று சொன்னார்.

"பார்க்கிறேன். அவற்றைக் கொண்டு வரச் செய்தால் அனுகூலமாக இருக்கும்" என்று நயந்த குரலில் நான் கூறினேன். உடனே அவர் உத்த‌ரவிடவே ஒருவர் சென்று ஒரு கட்டு ஒற்றை ஏடுகளை எடுத்துக் கொணர்ந்து என்முன் போட்டார். மிக்க ஆவலோடு அவற்றைப் பார்க்கத் தொடங்கினேன்.அந்தக்கட்டில் பலவகையான அளவுள்ள ஒற்றை ஏடுகள் இருந்தன.

சிலவற்றில் கணக்கு எழுதப்பட்டிருந்தது. சிலவற்றிற் பெரிய புராணச் செய்யுட்கள் காணப்பட்டன; இல‌க்கணச் சுவடிகளின் ஏடுகள் சில காணப்பட்டன. அவற்றைப் பார்த்து வந்தேன்.

ஓர் ஏட்டைப் படித்துப் பார்த்தேன். அது பத்துப்பாட்டு ஏடாக இருந்தது. அக்காலத்தில் பத்துப் பாட்டு உரை முழுவதும் என் ஞாபகத்தில் இருந்தது. அதனால் அந்த ஏட்டிலிருந்தது பத்துப் பாட்டு உரையே என்பதைக் கண்டுகொண்டேன். என் உள்ளம் சிறிதே ஊக்கம் பெற்ற‌து.

அப்பால் அந்த ஏட்டின் அளவில் இருந்த வேறு ஏடுகளை யெல்லாம் தொகுத்தேன். அவற்றைப் படித்துப் பார்க்கவோ நேரமில்லை. மணி பத்துக்குமேல் ஆயிற்று. மறுநாள் நான் கும்பகோணத்தில் இருக்க வேண்டியவன்; ஆதலின் அந்த ஒற்றை ஏடுகளை அப்படியே எடுத்துக்கொண்டுபோய் ஆராயலாமென்று எண்ணினேன், ஆதீனத் தலைவரிடம், "இப்பொழுது நாழிகையாய் விட்டது. நான் விடியற்காலையில் மாயூரத்தில் ரயிலேறிக் கும்பகோணம் போகவேண்டும். ஸந்நிதானத்தில் உத்தரவானால் இந்த ஒற்றை யேடுகளை எடுத்துக்கொண்டு போய்ப் பார்க்கிறேன். இதில் எனக்கு வேண்டியவைகளை மட்டும் பொறுக்கிக் கொண்டு கணக்கு முதலியவை இருந்தால் ஜாக்கிரதையாகக் கொண்டுவந்து சேர்த்து விடுகிறேன். இதில் சிறிதும் சந்தேகம் கொள்ளவேண்டாம்" என்று உறுதிமொழி கூறினேன்.

"அப்படியே செய்யலாம். அதில் என்ன தடை?" என்று தேசிகர் அன்போடு உடம்பட்டனர். முதல்நாள் வந்தபோது அவர் இருந்த நிலையையும் அப்பொழுது அவர் அன்போடு கவனித்துக்கொண்டிருந்து ஒற்றை ஏடுகளைக் கொண்டுபோகும்படி அனுமதி யளித்ததையும் நினைக்கும்போது எனக்கு வியப்புண்டாயிற்று. "எல்லாம் திருவருட் செயலே"எ ன்று எண்ணி ஆறுதல் அடைந்தேன்.

ஐம்பது அறுபது ஒற்றையேடுகளை அப்படியே க‌ட்டிக்கொண்டு எல்லோரிடமும் விடை பெற்றுப் புறப்பட்டு மாயூரம் வந்து சேர்ந்தேன். அன்றிரவு நான் உணவு உட்கொண்டேனோ, இல்லையோ ஞாபகம் இல்லை.

மறுநாட்காலை ரயிலேறிக் கும்பகோணம் வந்து சேர்ந்தேன். கொண்டுவந்த ஒற்றையேடுகளைப் பிரித்துப் பார்த்தேன். சில பத் துப்பாட்டு உரை ஏடுகள் ஒன்றற்கொன்று சம்பந்தமில்லாமல் கலந்திருந்தன. ஆத்திரத்தோடு ஒவ்வொன்றாகப் பார்த்தேன். நான் எந்தப் பாகம் காணாமல் தவித்தேனோ அதை ஓர் ஏட்டிலே பார்த்தேன். என் உச்சிமுதல் உள்ளங்கால் வரையில் ஒரே மயிர்க்கூச்சல் உண்டாயிற்று. என் கண்களைத் துடைத்துத் துடைத்துப் பார்த்தேன்; ஏட்டையும் துடைத்துப் பார்த்தேன்.

குறிஞ்சிப் பாட்டுத்தான் என்பதில் சந்தேகம் இல்லை; விடுபட்ட மலர்களையே நான் அதில் கண்டேன்.

    1 'தேமா-தேமாம்பூ,மணிச்சிகை-செம்மணிப்பூ,
    உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ்-தனக்கு
    உரித்தாக நாறும் விரிந்த கொத்தினையுடைய
    பெருமூங்கிற் பூ'

என்ற சிறுபகுதியே விடுபட்டிருந்தது.என் மனம் ஆறுதலுற்றது. இழந்த குழந்தையைக்
கண்டெடுத்த தாய்க்கு உண்டாகும் மகிழ்ச்சி யைத்தான் அதற்கு உபமானமாகக் கூறலாம்.
-----------
1 குறிஞ்சிப் பாட்டு. 64-65, உரை

விடுபட்ட மலர்கள் மூன்றே. ஆனாலும் அந்த மலர்களைத் தேடி என் மனம் அலைந்தது. மூன்று என்பது அதற்குமுன் எனக்குத் தெரியாது. மூன்றாக இருந்தால் என்ன?முப்பதாக இருந்தால் என்ன? குறை குறைதானே?

அப்பால் குறிஞ்சிப் பாட்டு முழுமையும் செப்பஞ்செய்து கொண்டேன். குறை நிரம்பிய குறிஞ்சிப் பாட்டை இப்பொழுது பத்துப் பாட்டுப் பதிப்பிற் காணலாம்.

பத்துப்பாட்டு ஏடுகளை மட்டும் தனியே எடுத்துவைத்துக்கொண்டு மற்ற‌வற்றை நான் வக்களித்தபடியே தருமபுரம் மடத்திற்கு அனுப்பிவிட்டேன். அவற்றை அனுப்பும்போது எனது மகிழ்ச்சியையும் நன்றியறிவையும் தெரிவித்து ஒரு கடிதமும் எழுதினேன்.

தருமபுரமடத்தில் இப்பகுதி கிடைத்ததைப் பத்துப்பாட்டுப்பதிப்பிலும் குறித்திருக்கிறேன்.(1) அங்கே கிடைத்த ஒற்றை இதழ்களில் உதிர்ந்த அம்மலர்களைக் காணாமல் இருந்தால், பத்துப் பாட்டின் முதற்பதிப்பு அச்சிறு குறையோடேதான் வெளிவந்திருக்கும். அக்குறை நேராதபடி ஆண்டவன் காப்பாற்றினான். குறிஞ்சிப் பாட்டு குறை நிரம்பப் பெற்றது; அதனால் (2)"ஆன்றோர் புகழ்ந்த வறிவினிற் றெரிந்து சான்றோ ருரைத்த தண்டமிழ்த் தெரியல்(3)" ஆகிய பத்துப்பாட்டு முழு உருவத்தோடு வெளிவந்து மணக்கின்றது.
---------
(1) 3-ஆம் பதிப்பு,பக்கம் 489,அடிக்குறிப்பைப் பார்க்க‌
(2) நச்சினார்க்கினியார் உரைச்சிறப்புப்பாயிரம்.
(3) தெரியல்-மாலை
-------


6. அவன் யார்?


தமிழ் இலக்கிய நூல்களில் இப்பொழுது நமக்குக் கிடைப்பனவற்றுள் மிகப் பழையன பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதிணெண் கீழ்க்கணக்கு என்பனவாம். இவற்றைச் சங்க நூல்களென்று கூறுவர். கடைச்சங்க காலத்தில் இருந்த புலவர்களாற் பாடப்பெற்ற செய்யுட்களை யுடைமையின் இவை இங்ஙனம் வழங்கப்படுகின்றன. இந்த‌ நூல்களால் தமிழ் நாட்டில் பண்டைக்காலத்தில் இருந்த புலவர் வரலாறுகளையும், அவர்களை ஆதரித்துப் போற்றிய செல்வர்கள் வரலாறுகளையும், அக்காலத்துத் தமிழ்நாட்டினர‌து நாகரிகநிலை ஒழுக்கம் முதலியவற்றையும் செவ்வனே அறிந்துகொள்கிறோம். புறநானூறு முதலிய நூல்களால் பல அரசர்களுடைய சரித்திரங்களையும், சிற்றரசர்களுடைய வரலாறுகளையும், வீரப் பெருமக்கள் அருஞ்செயல்களையும் தெரிந்துகொள்ளலாம். அவர்களுடைய குணங்களுட் சிறந்தனவாகக் காணப்படுவன வீர‌மும், ஈகையுமாம். வென்றிச் சிறப்பும் கொடைச் சிற‌ப்புமாகிய இவ்விரண்டு சிறப்புக்களை அவ்வரசர்கள் தங்களுடைய வாழ்வுக்கு இரண்டு கண்ணாகக் கொண்டு வாழ்ந்தார்கள். தங்களுக்கு எவ்வகையான குறை நேர்ந்தாலும் அதனை அவர்கள் இழிவாக்க் கருதார்கள். வீரமில்லா ரென்றேனும், கொடையியல் பிலரென்றேனும் கூறப்படுவதைக் காட்டிலும் இறந்துபடுவதை அவர்கள் மேலாக விரும்புவார்கள்.

    "விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள்
    வைக்குந்தன் னாளை யெடுத்து"

என்ற குறள் வீரமின்மையால் வாழ்வு பயனற்றொழியும் என்ற அரிய கருத்தை வெளியிடுகின்றது. இப்படியே,

    "சாதலின் இன்னாத தில்லை இனித்தூஉம்
    ஊதல் இயையாக் கடை"

என்ற குறள் ஈயாமல் இருப்பதினும் இறந்து படுதல் இனியதென்று கூறுகின்றது. இவ்விரண்டும் பண்டைக்காலத்துப் பெருமக்கள் கடைபிடித்த பேரறம்.

இங்ஙனம் வாழ்ந்தவர்களுள் கண்டீரக்கோப் பெருநள்ளி யென்பவன் இருவன். அவன் ஒரு சிற்றரசன். ஏழுவள்ளல்களில் ஒருவன். தோட்டியென்னும் மலைக்குத் தலைவன். அவனைப் புலவர் பலர் பாடிய செய்யுட்கள் புறநானூற்றில் இருக்கின்றன; அவற்றுள் வன் பரணர் பாடிய 150-ஆம் செய்யுளிற் கண்ட வரலாறு இங்கே சில வேறுபாடுகளுடன் வெளியிடப்படுகிறது.

ஒரு பெரிய மலையின் மேலுள்ள காட்டு வழியில் ஒரு புலவன் தன்னுடைய சுற்றத்தாருடன் நடந்து சென்றான். அவனுடைய ஓய்ந்த நடையும் முகத்திலுள்ள வாட்டமும் பல நாளாக அவன் பட்டினி கிடந்த நிலையைப் புலப்படுத்தின. உடன்வந்த சுற்றத்தாருடைய நிலையும் அப்படியே இருந்தது. அவனது இடையிலுள்ள ஆடை கறுப்படைந்தும் கிழிந்தும் மக்கியும் இருந்தது. குளிர்காலத்தில் மழைத்துளியால் நனைந்த பருந்தினது கரிய சிறகைப்போல அது தோற்றியது. அவனுக்கு, "நாம் எங்கே போகிறோம்?" என்ற நினைவுகூட இல்லை; 'யாரிடம் போகவேண்டும்?' என்ற குறிப்பும் இல்லை. கால்போன வழியே போய்க் கொண்டிருந்தான். அவனைத் தொடர்ந்து அந்தப் பட்டினிச் சுற்றத்தார் சென்றனர்.

கால்கள் ஓய்ந்தன. சிறிது இளைப்பாறலா மென்ற எண்ணம் புலவனுக்கு உண்டாயிற்று. அம்மலைவழியிலே இருந்த இரு பெரிய பலாமரத் தடியில் அவனும் சுற்றத்தாரும் தங்கினார்கள். 'எங்கே போவது? என்ன பண்ணுவது?' என்று திக்குத் தெரியாமல் அலைகின்ற அவர்களுக்கு எதிரே இரு வீரன் தோன்றினான். அவன் அந்தக் காட்டிலே வேட்டையாடிவிட்டு வந்தான். அவன் கையிலிருந்த (1)வில்லைப் பார்த்தாலே ஒரே காலத்தில் பல பொருள்களை ஊடுருவிச் செல்லும்படி அம்பை விடுபவன் அவனென்று தோற்றியது. அவன் காலில் அழகிய வீரக்கழல் இருந்தது. அவனுடைய உச்சியில் இரு சிறந்த நீலமணி ஒளி வீசியது. அவனது தோற்றத்தைப் பார்த்த மாத்திரத்திலே புலவனுக்கு அவனிடத்தில் ஒரு பெரு மதிப்பு உண்டாயிற்று. அஞ்சலி செய்தவண்ணமே புலவன் எழுந்தான். பாவம்! நெடுந் தூரம் நடந்துவந்த வலியினால் அவன்து கால் அவன் ஸ்வாதீனத்தில் இல்லை; நடுங்கியது. வீரன், "பேசாமல் அப்படியே உட்காருங்கள்" என்று கையமர்த்திப் புலவனை இருக்கச் செய்தான். அவனுடைய வார்த்தைகள் அன்பில் ஊறி வெளிவந்தன.
-------------
(1) இதனை 'வல்வில்' என்பர்.

புலவனும் அவனுடைய சுற்றத்தாரும் பசிப்பிணிக்கு இலக்காகி உயிரை விடும் தறுவாயிலுள்ளனரென்பதை அவ்வீரன் அறிந்து கொண்டான். "நீங்கள் எந்த ஊர்? எதற்காக வருகிறீர்கள்? எங்கே போகிறீர்கள்? யார் வரச் சொன்னாரகள்? என்னைத் தெரியுமா?" என்ற அசட்டுக் கேள்விகளை அவர்களிடம் கேட்கவில்லை. அந்தச் சமயத்தில் அவர்களுக்கு முதலில் வேண்டுவது ஆகாரமே என்பதை அவன் நன்றாக அறிந்தான். ஆதலின், தான் வேட்டையாடிக் கொணர்ந்திருந்த மான் தசையை ஓரிடத்திலே வைத்துவிட்டு அங்கிருந்த சுள்ளிகளைப் பொறுக்கி ஒரு கட்டையிலே தீயைக் கடைந்து மூட்டினான். அவனுடன் வந்திருந்த இளைஞர்கள் காட்டுவழியில் தனித்தனியே பிரிந்துவிட்டாரகள். அவர்களெல்லாரும் வருவதற்குமுன் தன் கையாலேயே மூட்டிய அத்தீயில் அத்தசையைச் சுட்டுப் புலவனுக்கும் பிறருக்கும் கொடுக்கவேண்டு மென்பது அவன் ஆசை. அவ்விளைஞர்கள் வரும் வரையில் பசி காத்திருக்குமா?

மிக்க விரைவில் நெய்விழுதுபோல இருக்கும் வெள்ளிய நிணத்தைப் பக்குவம் பண்ணிச் சுடச்சுடப் புலவனுக்கும் உடனிருந்தவர்களுக்கும் அவ் வீரன் கொடுத்தான். ஆகாரத்தைக் கண்டு எத்தனையோ நாளான அவர்களுக்கு அந்த உணவு தேவாமுதத்தைப்போல் இருந்தது. சுடச்சுட இருந்த அந்த ஆகாரம் அவர்களுடைய சுடு பசியை நீக்கியது.

அதுவரையில் புலவனுக்குத் தன்னைச் சுற்றிலுமுள்ள காட்சிகளைக் கவனித்துப் பார்க்கும் உணர்ச்சியில்லை. பசி எல்லாவற்றையும் அழுத்தி மேலோங்கியிருந்தது. வயிற்றில் ஆகாரம் விழுந்தவுடன் அவனுடைய கண்ணுக்கும் மூக்குக்கும் மற்றப் பொறிகளுக்கும் உணர்ச்சி உண்டாயிற்று. அருகிலுள்ள அருவி நீரைக் கையால் அள்ளி அள்ளிக் குடித்தான். யாவரும் குடித்து ஏப்பம்விட்டார்கள். புலவனுடைய கண்கள் அம்மலையிலுள்ள மரச்செறிவைக் கண்டு களித்தன; அவனுடைய உடம்பு அந்தக் காட்டின் குளிர்ச்சியை உணர்ந்தது; அவனுடைய மூக்கோ காட்டுமலர்களின் நறு மணத்தை நுகர்ந்த்து. "ஆகா! என்ன அழகிய மலை!" என்று பரமதிருப்தியோடு அவன் அந்த மலையையும் காட்டையும் கண்ணாரப் பார்த்து மகிழ்ந்தான். அப்பால் தனக்கும் தன் சுற்றத்தாருக்கும் விருந்தளித்த வீரனை நோக்கினான். என்ன அழகிய கோலம்! அவனைப் பிரிவதற்கு மனம் வரவில்லை. ஆயினும் பிரியத்தானே வேண்டும்?

"தெய்வமேபோல வந்து உதவி செய்தீர்கள். நாங்கள் போய்வருகிறோம்" என்றான் புலவன்.

"அப்படியா! நீங்களெல்லோரும் நன்றாகப் படித்தவர்களைப் போலக் காணப்படுகிறீர்கள். உங்களுக்குப் பரிசாக ஏதாவது கொடுக்க வேண்டும். காட்டுவாசிகளாகிய எங்களிடத்தில் என்ன உயர்ந்தபொருள் இருக்கிறது? இவற்றையாவது பெற்றுக்கொள்ள வேண்டும்" என்று பணிவுடன் சொல்லிக்கொண்டு அவ்வீரன் தன் கழுத்திலிருந்த பல முத்து வடங்களாலாகிய ஆரத்தையும் கையிலணிந்திருந்த பொற்கடகத்தையும் கழற்றினான்; புலவனது கையிற் கொடுத்து அஞ்சலி செய்தான்.

புலவனுக்கு உண்டான வியப்பின் அளவை வரையறுத்துச் சொல்லமுடியுமோ? "முன்பின் அறியாத இவன் நம்மை உப‌சரித்து இவ்வளவு உயர்ந்த பரிசைத் தருகிறான். கொடுப்பதோ மிக அரிய பரிசு; சொல்வதோ 'நான் எதைக் கொடுக்கப் போகிறேன்'என்ற பணிவான சொல். இந்தக் குணக்குன்றாகிய பெரியோன் யாரோ தெரியவில்லையே!" என்ற எண்ணத்துடன், "தங்களுடைய நாடு யாதோ?" என்று மெல்லக் கேட்டான். அவ்வீரன் ஒன்றும் கூறவில்லை. "தங்கள் திருநாமத்தை யான் அறிந்து கொள்ளக் கூடுமோ?" என்று பணிவுடன் பின்னும் புலவன் கேட்டான். அதற்கும் விடையில்லை.

"அவற்றைப்பற்றி நீங்கள் ஏன் அறிந்து கொள்ள வேண்டும்? நல்லது; போய்வாருங்கள்; வந்தனம்" என்று சொல்லி அரைக் கணத்தில் அவன் காட்டுக்குள் போய்விட்டான்.

"அவன் யார்? அவன் யார்?" என்று புலவனுடைய நெஞ்சம் கேட்டுக் கொண்டே யிருந்தது.

மிக்க உவ‌கையுடன் அவன் தன் சுற்றத்தோடு புறப்பட்டான். வழியில் கண்டவர்களிட‌மெல்லாம், தன்னைப்போற்றிய உபகாரியைப்பற்றிச் சொல்லி, "அவன்யார்?" என்று கேட்டான். "அவனா?அவன்தான் நள்ளி! இந்தத் தோட்டி மலைக்குத் தலைவன்" என்று அவர்கள் அவனுக்குச் சொன்னார்கள்.

"நள்ளியா!" என்று புலவன் ஸ்தம்பித்து விட்டான். நள்ளியைப்பற்றியும், தோட்டி மலையைப் பற்றியும் உலகமெல்லாம் புகழ்வதை அவன் கேட்டிருந்தான். தான் வந்த மலை தோட்டியென்றும், தான் கண்ட வீரன் நள்ளி யென்றும் அதுகாறும் அவன் அறியவில்லை. அவ்வீரனும் அறிவித்துக்கொள்ளவில்லை. அவ்வள்ளல் தன் கடமையைப் பிறர் அறியாமற் செய்துவிட்டு அக‌ன்றான். புலவனோ அவன் செய்த உப‌காரத்தை அதுமுதல் உலகமுழுதும் அறிவித்துக்கொண்டு வாழ்ந்தான்.
----------


7. ராமதாசர்


திருவிடைமருதூரில் மகாராஷ்டிர அரச பரம்பரையைச் சார்ந்த அமரசிம்மர் என்னும் அரசர் இருந்துவந்தார். அவர் சிவபக்தியும், சங்கீதத்தில் அபிமானமும், பெரியோர்களிடத்தில் அன்பும் உடையவர். தினந்தோறும் காலையில் எழுந்து சென்று காவிரியில் நீராடி விட்டு அங்கே கோவிந்ததீஷிதரவர்களாற் கட்டப் பெற்றுள்ள‌ புஷ்யமண்டபத்தில் ஜபங்களைச் செய்து கொண்டிருக்கும் பல பெரியோர்களை வலம்வந்து வணங்கி ஸ்ரீ மகாலிங்க மூர்த்தியைத் தரிசனம் செய்து பிறகு அரண்மனை வந்து சேர்வார். அவர் வாழ்ந்திருந்த அரண்மனை இன்றும் திருவிடைமருதூர் வடக்கு வீதியில் இருக்கிறது.

ஸ்ரீ மகாலிங்கமூர்த்தியிடம் அவருக்கு அளவிறந்த பக்தி உண்டு. அம்மூர்த்திக்கு வெள்ளிரதமும், மகாரதத்தின் முன்பு கட்டுவதற்குரியனவும் மிக்க அழகியனவுமாகிய நான்கு குதிரை யுருவங்களும் அவரால் அளிக்கப்பெற்றன. பெரியோர்களுடைய கூட்டுறவும், சங்கீத வித்துவான்களுடைய பழக்கமும் ஸ்ரீ மகாலிங்க மூர்த்தியின் தரிசனமும் அவருடைய தினசரி வாழ்க்கையில் தவறாமல் இருந்து வந்தன. அவருடன் வடமொழி வித்துவான்கள் சிலரும் மகாராஷ்டிர பாஷை யில் தேர்ச்சி பெற்றவர்கள் சிலரும் இருந்தார்கள்.

அரண்மனையின் கிழக்கே உள்ள இந்திரசபை மாடியில் அவர் இருநாள் காலையில் உலாவிக்கொண்டிருந்தார். மணி ஒன்பதுக்குமேல் இருக்கும். அப்பொழுது அவருடைய செவியில் மிக்க மதுரமான கீத ஒலி ஒன்று கேட்டது. அதுகாறும் அத்தகைய ஒலியை அவர் கேட்டிலர். அந்த ஒலியில் ஒரு தனியான கம்பீரமும் பக்தியும் இனிமையும் ஒருங்கே கலந்திருந்தன. அந்த இசையிலே அரசர் ஈடுபட்டார். அது வடநாட்டுச் சங்கீத முறையிலே அமைந்ததாகத் தெரிந்தது.

' இவ்வளவு நாட்களாக இத்தகைய மதுரமான தொனியை நாம் கேட்டோமில்லையே! இந்த அமுதமயமான கீதம் எங்கிருந்து வருகின்றது? இந்த ஒலி நம் உடம்பு முழுவதையும் சிலிர்க்கச் செய்கிறதே!' என்று அவர் எண்ணினார். அவர் கேட்ட சங்கீத நாதம் வரவரத் தெளிவாகக் கேட்டது. ' யாரோ தெருவில் பாடிக்கொண்டு வருவது போலல்லவா தோற்றுகிறது? இவ்வளவு அருமையான சங்கீதம் தெருவிலே இறைபடும்படி அந்த வித்துவானுக்கு என்ன துரதிருஷ்டம் வந்து விட்டது?' என்று சிந்தித்தார்.

அருகிலிருந்தவர்களை அவர் விசாரித்தார்; அவர்கள், " இந்த ஊரிலே சிலகாலமாக ஒரு பெரியவர் வந்திருக்கிறார். அவர் பரம பக்தராகக் காணப்படுகின்றார். அவருடைய கீத ஒலி எப்படி உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகிறதோ அப்படியே அவருடைய திருமுக ஒளியும் மனத்தைக் கவரும்" என்றார்கள்.

" அப்படியா? அவர் எதற்காக இப்படி வீதியிலே பாடிக்கொண்டு வருகிறார்?"

" அவர் தினந்தோறும் காலையில் காவிரியில் ஸ்நானம் செய்து ஜபதபங்களையும் ஸ்ரீ மகாலிங்க மூர்த்தியின் தரிசனத்தையும் முடித்துக்கொண்டு தோளில் உஞ்சவிருத்திச் செம்பை மாட்டிக்கொண்டு வீதி வழியே போகிறார். போகும்போது ஸ்ரீ ராமன்மீதும் கிருஷ்ணன் மீதும் பரமசிவன்மீதும் பல கீர்த்தனங்களையும் சுலோகங்களையும் பாடுகிறார். அவருடைய சங்கீதம் காலைவேளையில் எல்லோருடைய உள்ளத்திற்கும் ஊக்கத்தை அளிக்கிறது. அவர் போகும் போக்கிலே ஊரிலுள்ளவர்கள் அவர் செம்பை அரிசியால் நிறைத்து விடுகிறார்கள். சிலர் அவர் வீட்டிற்குப் பருப்பு, வெல்லம், கறிகாய், தயிர், பால் முதலியவற்றை அவருக்குத் தெரியாமலே கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள். அவருக்கு இந்த உலகஞாபகமே இராதென்று தோற்றுகிறது. ஜபதபங்களும் சிவ தரிசனமும் உஞ்சவிருத்தியுமே அவருடைய பொழுது போக்கு. அவரைப் பற்றி ஊரினர் யாவரும் பாராட்டிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்."

" என்ன ஆச்சரியம்! இத்தகைய மகான் இவ்வூரில் இருப்பது எனக்கு இதுவரையில் தெரியாமற் போயிற்றே! யாரோ சங்கீத வித்துவான் பாடுகிறாரென்றல்லவோ நினைத்தேன்? நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இவருடைய அனுக்கிரகத்தைப் பெறவேண்டுவது அவசியமென்ற விருப்பம் எனக்கு உண்டாகிறது. சங்கீதம், பக்தி இரண்டும் பொருந்தியிருப்பவர்களைக் காண்பது இக்காலத்தில் மிகவும் அரிது."

"ஆமாம்!இவருடைய சங்கீதமும் பக்தியும் ஒன்றை யொன்று விஞ்சி விளங்குகின்றன."

"அப்ப‌டியானால் எப்படியாவது அந்த மகானை இங்கே அழைத்து வந்து எனக்குப் பழக்கம் செய்துவிக்க வேண்டியது உங்கள் கடமை."

வீதியிலே பாடிக்கொண்டு வந்தவரே ராமதாஸ் என்னும் பெரியார். அவ‌ர் வடமப் பிராமணர். இளமைமுதலே சங்கீதம் பயின்றவர். சங்கீத அறிவோடு தெய்வபக்தியும் சேர்ந்தே அவர்பால் முதிர்ந்துவந்தது. அப்பால் அவ‌ருக்குக் காசியாத்திரை செய்து வர வேண்டுமென்ற அவா உண்டாயிற்று. யாத்திரையாகப் புறப்பட்டு வடநாட்டிலுள்ள பல திவ்ய ஸ்தலங்களைத் தரிசித்தார்; பல பெரியார்களோடு பழகினார்; சங்கீத அறிவு மிக்கவராதலின் வட நாட்டுச் சங்கீதத்தையும் அப்பியாசம் செய்தார்; அந்த நாட்டில் வழங்கும் பல‌ உருப்படிகளையும் பாடம்பண்ணினார்; பிறகு தம்முடைய ஜன்மதேசம் வந்தார். அவருக்கு விவாகமாயிற்று.

தஞ்சை முதலிய இடங்களுக்குச் சென்று அரசர்களுடைய சம்மானத்தை அவர் அடைந்தார்.அங்கே பல வித்துவான்களுடைய பழக்கமும் உண்டாயிற்று.வெறும் சங்கீத அறிவு மாத்திரம் இருந்தால் அவர் ஒரு ஸம்ஸ்தானத்தில் வித்துவானாக இருந்து விளங்கியிருப்பார். சங்கீதமாகிய சாதனத்தால் அடையப்படும் சாத்தியமாகிய பரம்பொருளினிடத்தே அவர் தீவிரமான பக்தி பூண்டவராதலால் அவருக்கு அரசர்களுடைய சேவையும் வித்துவான்களுடைய பழக்கமும் நகரவாஸமும் பிடிக்கவில்லை. நல்ல நதிதீரத்தில் அமைந்த சிறந்த ஸ்தலமொன்றில் இருந்து தம்முடைய‌ பக்திக்கு இடையூறின்றி வாழ்ந்து வரவேண்டுமென்று அவர் விரும்பினார். உஞ்ச‌விருத்தியினால் ஜீவனம் செய்யலாம் என்ற தைரியம் அவருக்கு இருந்தது. தம்முடைய சங்கீதத்தை அரசர்களுக்கும் பிரபுக்களுக்கும் அர்ப்பணம் செய்வதைவிடப் பரம்பொருளுக்கு அர்ப்பணமாக்குவதே தக்கதென்ற கொள்கையை அவர் கொண்டார்.

திருவிடைமருதூர் ராமதாசருடைய உள்ளத்திற்கு உவ‌ந்த இடமாயிற்று. காவிரியும், ஸ்ரீ மகாலிங்க மூர்த்தியின் திருக்கோயிலும், பக்தர்களுடைய கூட்டமும், நல்லோர்களுடைய இருக்கையும் அந்தத் தலத்தில் அமைந்திருப்பதைப்போல வேறு எங்கே இருக்கின்றன? "இனி நமக்குப் பூசத்துறையும் மகாலிங்க‌ மூர்த்தியுமே கதி" என்ற தீர்மானத்தோடு திரு விடை மருதூருக்கே வந்துவிட்டார்.

அவர் வந்த நாள் முதல் திருவிடைமருதூருக்கு ஒரு புதிய பெருமை உண்டாயிற்று.

    "எவ்வழி நல்லவர் ஆடவர்
    அவ்வழி நல்லை வாழிய நிலனே"

என்று புறநானூறு கூறுகின்றது. இயல்பாகவே பல வகையிலும் நன்மையைப் பெற்ற அத்திருத்தலம் நல்லந்தணராகிய‌ ராமதாசர் உவந்த வாசஸ்தலமானபோது பின்னும் அதனுடைய‌ நன்மை பெருகியது. திருவிடை மருதூர்த் திருவீதீயில் நாள்தோறும் காலையில் இனிய கானம் பரவியது. அந்த இன்னிசையிலே மனிதர் புகழ் காண‌ப்படவில்லை; பரம்பொருளின் மெய்ப்புகழ்தான் விள‌ங்கியது. அந்தக் கீதவொலியின் கவர்ச்சியும், அதனுள் அடங்கிய பக்திச்சுவையும், அதைப் பாடும் பெரியாருடைய தோற்றமும் எல்லாம் சேர்ந்து நாஸ்திகரையும் அவர் திருவடியிலே வீழ்ந்து அடைக்கலம் புகச் செய்யுமாயின், பெரிய பக்தரும் சங்கீத ரஸிகருமாகிய அமர சிம்மரை உருக்கியது ஒரு வியப்பாகுமோ?

அமரசிம்மருடைய விருப்பத்தின்படியே சில முதியோர்கள், ராமதாஸ‌ர் அரண்மனை வாயிலுக்கு நேரே வரும்போது அவர்பாற் சென்று அவரை வணங்கினார்கள். காலைக் கதிரவனுடைய‌ ஒளிக்கு எதிரே அப்பெரியாருடைய திருமுக மண்டலமும் பாலசூரியனைப் போலவே இலங்கியது. சூரியன் வீசும் வெம்மையாகிய கதிர்களைக் காட்டிலும் அந்தத் திருமுகத்திலிருந்து உண்டாகிய குளிர்ந்த கருணைக் கிரணங்கள் உயர்வுடையன அல்லவா?

"ஸ்வாமீ! ஒரு விஞ்ஞாபனம்.கேட்டருள வேண்டும்" என்று அவ‌ர்க‌ள் ப‌ணிவோடு சொன்னார்க‌ள்.

"என்ன‌ விசேஷம்?" என்று கேட்டார் ராமதாசர்.

"இங்கே உள்ள அமரசிம்ம மகராஜா, ஸ்வாமிகளுடைய திவ்ய தரிசனமும் சல்லாபமும் பெறவேண்டுமென்று காத்திருக்கிறார். கிருபை செய்ய வேண்டும்."

"மகாராஜாவா! நான் ஒரு பிக்ஷூகன். எனக்கு மகாராஜாவிடத்திலே என்ன வேலை? நான் ராஜசேவையே வெண்டாமென்று எண்ணி வந்தவன். அகிலலோக சக்கரவர்த்தியாகிய ஸ்ரீ *ஏகநாயக மூர்த்தியினிடத்திலே வந்தபிறகு வேறொரு ராஜாவை எதற்காகப் பார்க்கவேண்டும்?"
-------------
*ஏகநாயகரென்பது அத்தலத்து உத்ஸவ மூர்த்தியின் திருநாமம்.

"அப்படிச் சொல்லக் கூடாது. தங்களுக்கு மகாராஜாவால் ஆகவேண்டிய காரியம் ஒன்றுமில்லையென்பது வாஸ்தவந்தான். ஆனாலும் மகாராஜா ஒரு பெரிய பக்தர். அவர் தங்களைத் தரிசிக்க வேண்டுமென்று ஏங்கி நிற்கின்றார்."

"சரி, நாழிகையாயிற்று. நாளைக்குப் பார்க்கலாம்" என்று சொல்லி ராமதாசர் தம்முடைய பஜனையை மீட்டும் ஆரம்பித்து மேலே செல்லலானார்.

மறுநாள் ராமதாசர் வீதி வழியே வரும் போது மீட்டும் அரசரைச் சேர்ந்த முதியோர்கள் அவரிடம் வந்து வணங்கி நின்றார்கள். "மகாராஜா தங்கள் வாசஸ்தலத்துக்கே வந்து தரிசிக்கலாமென்று எண்ணீயிருக்கிறார். தங்களுடைய சம்மதத்தை எதிர்பார்க்கிறோம். மகா ராஜா வேறு இடங்களுக்குச் செல்வது வழக்கமன்று. ஆனாலும் பரம பக்த சிரோமணியாகிய தங்களுடைய இருப்பிடம் ஆலயத்துக்கு ஸமானம். ஆத‌லின் அங்கே வரலாமென்றே இருக்கிறார்" என்று அவர்கள் சொன்னார்கள்.

ராமதாசர் சிறிது யோசித்தார். 'அரசர் உண்மையிலேயே சிவபக்தராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தம்முடைய கௌரவத்தையும் நினையாமல் இப்படிச் செய்யத் துணியமாட்டார்.அத்தகைய பக்தரைப் போய்ப் பார்ப்பதில் குற்றமென்ன?' என்ற எண்ண‌ம் அவருக்கு உண்டாயிற்று.

"உங்கள் அரசர் பக்தராக இருக்கிறாரென்று தெரிகிறது. அவரை ஓர் அரசராக எண்ணிப் பார்க்க எனக்கு விருப்பமில்லை; பக்தராகவே எண்ணிப் பார்க்க‌ விரும்புகிறேன். பிக்ஷுகனாகிய என்னுடைய குடிசைக்கு அவர் வருவது முறையன்று. நானே என் நியமத்தை முடித்துக்கொண்டு வருகிறேன்." என்றார். பிறகு வழக்கப்படி உஞ்சவிருத்தியை முடித்துக்கொண்டு வீடு சென்று பூஜையை நிறைவேற்றிப் போஜனம் செய்தார். செய்த பின்பு அரண்மனையை நோக்கி வந்தார். அவருடைய வரவை ஒவ்வொரு க்ஷணமும் எதிர்பார்த்துக்கொண்டு அங்கே சிலர் நின்றிருந்தனர். அவர்கள் அவரை மரியாதையோடு உள்ளே அழைத்துச் சென்றார்கள். ராமதாசர் அரண்மனையுட் புகுந்தார்.

அமரசிம்மருடைய உவகைக்கு அளவு ஏது? "பாக்கியம்!பாக்கியம்!!" என்று உடல் பூரித்தார். கண்ணில் தாரை தாரையாக ஆனந்தபாஷ்பம் உண்டாயிற்று. ராம தாசரை அஞ்சலி செய்து தக்க ஆசனத்தில் இருக்கச் செய்தார். விநயத்தோடு சம் பாஷணை செய்தார். சம்பாஷணை செய்யச் செய்ய‌ அர‌ச‌ருக்கு அப்பெரியாருடைய‌ சிற‌ந்த‌ குண‌ங்க‌ள் புல‌ப்ப‌ட்டுக்கொண்டே வ‌ந்த‌ன. ராம‌தாச‌ரோ, "இவ‌ர் அர‌ச‌ராக‌ இருந்தாலும் ப‌க்த‌ர்க‌ளுக்குத் தாச‌ராக‌ இருக்கும் அட‌க்க‌ முடைய‌வ‌ர். மிக்க குணசாலி .ப‌ழ‌குவ‌த‌ற்குத் த‌குதியுடைய‌வ‌ர். ம‌காலிங்க‌மூர்த்திதான் இப்ப‌டி ஒரு ப‌க்த‌ருடைய‌ ப‌ழ‌க்க‌த்தை உண்டாக்கி வைக்கிறாரென்று தோற்றுகிற‌து.' என்று எண்ணினார். இருவ‌ரும் நெடுநேர‌ம் ச‌ல்லாப‌ம் செய்தார்க‌ள்.

அர‌ச‌ர் ஸ்ரீ ராம‌தாச‌ரைத் த‌ம்முடைய‌ ஆஸ்தான‌ வித்துவானாக‌ இருக்க‌வேண்டுமென்று பிரார்த்தித்தார். அவ‌ர் அத‌ற்கு இண‌ங்க‌வில்லை." என‌க்கு இனிமேல் உத்தியோக‌ நிர்ப்ப‌ந்த‌ம் எத‌ற்கு?" என்று அவ‌ர் கூறினார்.

அர‌ச‌ர்: இதை நிர்ப்ப‌ந்த‌மாக‌ எண்ண‌க் கூடாது. தின‌ந்தோறும் பாத‌க‌ம‌ல‌ம் நோவ‌ உஞ்ச‌விருத்தி செய்யும் சிர‌ம‌ம் இல்லாம‌ல் இங்கிருந்த‌ப‌டியே ப‌ஜ‌னை செய்து வ‌ர‌லாம் என்ப‌துதான் என் எண்ண‌ம்.

ராம‌: சிர‌ம‌ம் என்ன‌? உஞ்ச‌விருத்தி செய்வ‌தில் இழிவு ஏதாவது உண்டா? ம‌கான்க‌ளெல்லாம் இந்த‌க் காரிய‌த்தைச் செய்து த‌ம் வாழ்நாளைக் க‌ழித்திருக்கிறார்க‌ளே. திருவிசை ந‌ல்லூர், கோவிந்த‌புர‌மென்னும் இட‌ங்க‌ளில்
சில‌ பெரியோர்க‌ள் இப்பொழுதும் இதைச் செய்து வ‌ருகிறார்க‌ளே.

அர‌ச‌ர்: நான் இழிவென்று சொல்ல‌ வில்லையே! சிர‌ம‌மில்லாம‌ல் ஓரிட‌த்திலே இருக்க‌லாமே என்று என‌க்குத் தோற்றுகிற‌து.

ராம‌: என‌க்கு இந்த‌க் காரிய‌மே சிரம‌ ப‌ரிகார‌மாக இருக்கிறது.

அரசர் பலமுறை வேண்டிக்கொண்ட பிறகு அப்பெரியார் தமக்கு ஓய்வு நேர்ந்த காலங்களில் அரண்மனைக்கு வந்துபோவதாக வாக்களித்தார். உஞ்ச விருத்தியை அவர் நிறுத்தவேயில்லை.

அக்காலமுதல் அவ்விருவருக்கும் நட்பு முதிர்ச்சியடையலாயிற்று. ராமதாசரை ஆஸ்தான வித்துவானென்றே யாவரும் வழங்கலாயினர். அரசர் அவருடைய பழக்கத்தினாற் பலவகை நன்மைகளை அடைந்தார். வட நாட்டுச் சங்கீதச் சுவையை நன்றாக அனுபவித்தார்.

அப்பொழுது அங்கே ஆஸ்தானவித்துவானாக இருந்த கனம் கிருஷ்ணையர் ராமதாச ரோடு பழகிப் பல புதிய விஷயங்களை அறிந்து கொண்டார். நந்தன் சரித்திரக் கீர்த்ததனத்தை‌ இயற்றிய ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாரதியார் திருவிடைமருதூருக்கு வந்து சில வருஷங்கள் இருந்து ராமதாசரிடம் ஹிந்துஸ்தானி மார்க்கங்களைக் கற்றுக்கொண்டு சென்றார். வேறு சிலரும் கற்றுக் கொண்டனர்.

அமரசிம்மர் ராமதாசருடைய குடும்பத்திற்கு ஏதேனும் உதவிசெய்ய வேண்டுமென்று எண்ணினார். அவர் அறியாதபடி கும்ப கோணத்தில் அவர் பெயருக்கு ஒரு வீட்டையும் சில நிலங்களையும் வாங்கி அவற்றை அவர் பெயருக்கு எழுதிவைத்தார். ராமதாசர் தம்முடைய முதிர்ந்த பருவத்தில் அரசருடைய வேண்டுகோளின்படி அந்த இல்லத்திலே சென்று வாழ்ந்து வந்தார். அந்த வீடும் நிலங்களும் பிற்காலத்தில் ராமதாசருடைய பரம்பரையினருக்கே உரிமையாயின. அவ்வீடு பக்த புரி அக்கிரகாரத்தில் மேல்சிறகில் பல்லவி கோபாலையருடைய வீட்டிற்கு வடபுறத்தில் இருக்கின்றது. அவ்வீட்டில் சில மாதங்கள் குடியிருக்கும் பாக்கியம் எனக்கு வாய்த்திருந்தது.

ராமதாசருடைய பேரரை நான் பார்த்துப் பழகியிருக்கின்றேன். ஸ்ரீ கோபால கிருஷ்ண பாரதியார் பலமுறை அப்பெரியாரைக் குறித்துப் பாராட்டிப் பேசுவார். மேலே உள்ள வரலாற்றிற் பெரும்பகுதி அவர் சொல்லக் கேட்டதேயாகும்.

ராமதாசருடைய ஸாஹித்தியங்கள் கூடச் சில இருந்தன. கோபாலகிருஷ்ண பாரதியார் அவற்றைப் பாடுவதுண்டு. அவை இப்பொழுது மறைந்தன. பாரதியார் துறவுள்ளம் உடையவராதலின் அவர் ராமதாசரைப் பற்றிப் பேசும்போதெல்லாம், அம்மகானுடைய நிராசையைக் குறித்தே அதிகமாகப் பாராட்டுவார்.
---------------


8. பாலைப் பழம்


மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் நான் பாடங்கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் அப்புலவர் பெருமான் அவ்வப்போது இயற்றிவந்த நூல்களின் அமைப்பையும் அவற்றில் அநாயாசமாக அவர் கற்பனைகளை இயைக்கும் ஆற்றலையும் அறிந்து மகிழ்ந்து வருவேன். நினைத்த மாத்திரத்தில் நினைத்த கருத்துக்களைச் சுவைபட அமைக்கும் அவருடைய கவித்துவ சக்தியைப்பற்றித் தனியே இங்கு எழுதுவது மிகை.

வெள்ளம் கரை புரண்டு செல்லும்போது ஒரு பேராறு அங்கங்கே உள்ள பொருள்களையும் அடித்துத் தனக்குள் அடக்கிக்கொண்டு ஓடுவதுபோல அப்புலவர்பிரான் அவ்வப்போது கேட்கும் செய்திகளையும் அநுபவிக்கும் அநுப‌வ‌ங்க‌ளையும் காணும் காட்சிக‌ளையும் த‌ம்முடைய‌ க‌விதைக‌ளிலே அமைத்துவிடுவார். இத‌னை நான் ப‌ல‌ நிக‌ழ்ச்சிக‌ளால் உண‌ர்ந்திருக்கிறேன்.

1873-ஆம் வ‌ருஷ‌ம் திருப்பெருந்துறைப் புராண‌த்தை அவ‌ர் இய‌ற்றி அர‌ங்கேற்றினார். அந்நூல் இயற்ற‌‌ப்பட்டுவ‌ந்த‌ கால‌த்திலும் அர‌ங்கேற்றிய‌ கால‌த்திலும் நான் அவ‌ருட‌ன் இருந்து வ‌ந்தேன். ப‌ட்டீச் சுர‌த்தில் அப்புராண‌த்தின் முற்ப‌குதிக‌ள் இய‌ற்ற‌ப்ப‌ட்ட‌ன‌. அவ்வூரிலிருந்த‌ ஆறுமுக‌த்தா பிள்ளை யென்னும் செல்‌வ‌ர் பிள்ளைய‌வ‌ர்க‌ளை ஆத‌ரித்து வ‌ந்தார்.

பிள்ளைய‌வ‌ர்க‌ள் செய்யுள் இய‌ற்றுவ‌ற்குத் த‌னி இட‌ம் கால‌ம், த‌னிமை இவை வேண்டுவ‌தில்லை. எந்த‌ இட‌த்திலும் எந்த‌க் கால‌த்திலும் எத்த‌னை பேர்க‌ள் இருந்தாலும் அவ‌ருடைய‌ க‌விதை வெள்ள‌ம் பெருகிக்கொண்டே இருக்கும். கோயிலில் சிற்ப‌ வேலை செய்யும் சிற்பியும் சித்திர‌கார‌னுங் கூடச் சில சமயங்களில் தங்கள் வித்தகத் தொழிலை மறைவில் இயற்றுவார்கள். அப்புலவர்பிரானோ தம் கவிதைச் சிற்பத்தைக் காலம் இடம் என்னும் வரையறையின்றியே அமைத்துவந்தார்.

திருப்பெருந்துறைப் புராணச் செய்யுட்களிற் சில ஆறுமுகத்தா பிள்ளையின் வீட்டில் இருந்த காலத்திற் செய்யப்பட்டன. ஆறுமுகத்தா பிள்ளைக்கு மேலைப்பழையாறை என் சில சமயங்களிற்போய் நாங்கள் தங்குவோம். மாலைக்காலத்தில் குளிர்ந்த காற்று வீசும் போது அக்கவிஞர்பிரான் செய்யுட்களை இடை விடாமல் சொல்லிக்கொண்டே வருவார். நான் ஏட்டில் எழுதிக் கொண்டு வருவேன். அவ்வூரிலுள்ள திருமலைராயன் ஆற்றங்கரையின் வட பால் ஓர் அரச மரம் இருந்தது. அதன் கீழே மேடையொன்று உண்டு. அந்த மேடையில் இருந்து பல செய்யுட்களை அக்கவிஞர் சொல்லியிருக்கிறார். சில சமயங்களில் பட்டீச்சுரக் கோயிலிலும் திருச்சத்தி முற்றக் கோயிலிலும் உள்ள கோபுர வாயிலின் இடைகழித் திண்ணைகளிலே இருந்தபோது பல செய்யுட்கள் அவரிடமிருந்து வெளிப்பட்டன.

ஒருநாள் பிற்பகலில்,பட்டீச்சுரம் ஸ்ரீதேனுபுரேசர் கோயிலினின் இரண்டாவது கோபுர வாயிலில் உட்கார்ந்திருந்தோம். மெல்லென‌க் காற்று வீசியது. மனம் மிகத் தெளிவாக இருந்தது. குளிர்ந்த நிழலில் ஜனக் கூட்டமில்லாத இடத்தில் இருந்த அப்போது, கவிஞர்தலைவர் திருப்பெருந்துறைப் புராணத்திற் சில பகுதிகளை இயற்றத் தொடங்கினார். நான் ஏட்டை எடுத்து வைத்துக்கொண்டேன்.

அன்று பாட வேண்டியது திருநாட்டுப் படலத்தின் பாலைநிலத்து வருணனை. குளிர்ந்த இடத்தில் குளிர்ச்சியாக உள்ள நேரத்தில் வெம்மையான பாலைநிலவருணனை பாடப்பெற்றது. கடவுளின் சிருஷ்டியாகிய பாலைநிலம் வெம்மையாகத்தான் இருக்கும்; ஆனால், கவிஞரது சிருஷ்டியாகிய பாலைநிலம் நமக்குக் குளிர்ச்சியாகவும் இனிமை தருவதாகவும் உள்ளது. கடவுள் படைப்பாகிய பாலையை நாம் நினைக்கவும் அஞ்சுவோம்; அதிலே செல்லுதற்கு மனம் நடுங்கும்; கவிஞர் படைக்கும் பாலையிலோ நாம் பலமுறை சென்று சென்று இனிமையைக் காண்போம். இராமயணத்தில்,'கருதின் வேம் உள்ளமும் 'என்று பாலைவனத்தைக் கம்பர் வருணிக்கிறார். அவ்வருணனையைப் படிக்கும் நமது உள்ளம் இனிமையையே அடைகின்றது.

பிள்ளையவர்கள் பாலை வருணனையை ஆரம்பித்தனர்; அது 'நினைப்பினும் சுடும் விறல்' உடையதென்று தொடங்கினர். பாலை நிலத்தைத் தம் உள்ளத்திலே சிருஷ்டித்துக் கொண்டார்.

"அங்கங்கே ஈந்தின் இலையினால் வேய்ந்த சிறு சிறு குடிசைகள் காணப்படும். அவற்றில் மறத்தியரும் மறவர்களும் வாழ்வார்கள். மறவர்கள் துர்க்கையை வழிபட்டு உடல்வலியை மிகுதியாகப் பெறுவார்கள். அவர்கள் பாலை நிலத்திலே வாழ்ந்தாலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற மற்றநிலங்களில் உள்ள பொருள்களும் அவரகளிடம் உண்டு. பாலை நிலத்தின் வழியே செல்லுபவர்களிடம் கொள்ளை யடித்து அவர்கள் சம்பாதித்தவை அவை. அங்கே சிறிய கற்களை உண்டு வாழும் தூதுணம் புறாக்கள் அதிக உயரத்திலே பறக்கும். அவற்றைக் கண்டு மறவர் களிப்பர். அவர்கள் வழிப்பறி செய்யும் கொடுமையான இயல்பினரானாலும் சில சமயங்களிலே உபகாரம் செய்வதும் உண்டு. அங்கே விளையும் கர்ச்சூரப் பழத்தையும் நெல்லிக்காயையும் வருவோருக்கு அளிப்பர். பாதிரிமரங்கள் பல அந்நிலத்தில் வளரும்."

இத்தகைய கருத்துக்களை அமைத்துச் செய்யுட்களை இயற்றி வந்தார் கவித்தலைவர். நான் இடையிடையே சில விஷயங்களைக் கேட்பேன். அவர் விளக்கமாக விடைகூறுவார். அவருடைய கவிதை மேலும் பெருகலாயிற்று:

"பாலை நிலத்தில் வேப்பமரங்கள் தழைத்து வளர்ந்தன. தென்னாட்டைக் காக்கும் பாண்டியன் தம் மலரை அணிவதை அவை அறிந்து பெருமையை அடைந்து பரந்திருந்தன. அன்றியும் முன்பு வரகுணபாண்டியர் திருவிடைமருதூரில் தம் பழத்தைக் கண்டு சிவலிங்கத்தின் நினைவைப் பெற்று விதானம் அமைத்து மகிழ்ந்ததை உணர்ந்து தம் கிளைகளிற் பல கனிகளைத் தாங்கின."

இவ்வாறு கவிஞர் கற்பனையை அமைத்தார். பிறகு அகப்பொருட் செய்திகள் வந்தன. " தம் தலைவியரைப் பிரிந்து அவ்வழியே சில தலைவர்கள் செல்வார்கள். பெண்பருந்து வெயிலால் வெப்பமுற்றுத் துன்புறுவதை அறிந்து வருந்திய ஆண்பருந்து அதன்மீது தன் சிறகை விரித்து நிழல் செய்வதைக் கண்டு அவ்வாண்பருந்து பெண்ணின்பால் வைத்த அன்பின் மிகுதியை நினைந்து வியந்து, 'நாம் நம் காதலியரைத் துறந்து வந்தோமே! இப்பறவைக்குள்ள அன்பு நமக்கு இலதாயிற்றே!' என்று நாணமுற்று, அப்பாற் செல்வதை அத்தலைவர்கள் ஒழிவார்கள். சில மகளிர் தம் சுற்றத்தினரை நீத்துவிட்டுத் தம் காதலருடன் அந்நிலத்தின் வழியே செல்வார்கள். அவர்கள் பாலை நில வெம்மையால் துன்புறுவார்கள். அப்போது அங்கே வளர்ந்துள்ள கோங்கிலவ மரங்கள் வெடித்த காய்களினின்றும் பஞ்சை உதிர்த்து அவர்களுடைய மெல்லடியின் வருத்தத்தை நீக்கும். சுற்றும் வெம்மைநிறைந்த பல பொருள்கள் உள்ள பாலையில் அக்கோங்கிலவு நிற்றல் அரக்கரே நிரம்பி வாழும் இலங்கையில் விபீஷணன் இருந்ததை ஒக்கும்."

இங்ஙனம் பாலை நிலத்திலுள்ள வேம்பு, கோங்கு என்னும் மரங்களைப்பர்றிய செய்திகள் வெளிவந்த பின்னர் அக்கவிஞர் அந்நிலத்துக்குப் பெயரளித்த பாலை மரத்தைப்பற்றி எண்ணலானார்.

"பாலை மரத்தை நீர் பார்த்திருக்கிறீரா?" என்று ஆசிரியர் என்னைக் கேட்டார்.

"ஆம் பார்த்திருக்கிறேன்; அதன் பழத்தைக்கூடச் சிறு பிராயத்தில் உண்டிருக்கிறேன்" என்றேன்.

"பழம் ருசியாக இருக்குமா?" என்று அவர் கேட்டார்.

"தித்திப்பாக இருக்கும். அதில் ஒருவகையான பசை உண்டு. ஆதலின், பழத்ததைத் தின்றால் உதடு ஒட்டிக்கொள்ளும்" என்றேன்.

பிள்ளையவர்களுடைய முகம் மலர்ந்தது. அவர் என்னிடம் கேட்ட விஷ‌யத்தை உடனே உபயோகித்துக்கொள்ள எண்ணினார். நான் இளம்பிராயத்திலே வீதியிலே விலைக்கு விற்ற பாலைப் பழத்தை நெல்லைக் கொடுத்து வாங்கி உண்டதுண்டு. அப்பொழுது பெற்ற அனுபவத்தையே நான் சொன்னேன். என் மூலமாக அறிந்த அந்தச் செய்தியை அவர் தம் கவிதையிலே பொருத்தி விட்டார்;

"நம்முடைய பெயரை இந்த நிலம் அடைந்ததென்ற மகிழ்ச்சியால் அந்நிலத்தில் பாலை மரங்கள் மிகுதியாக வளர்ந்து பழுத்தன. அங்கே சென்று அம்மரத்தின் பழத்தை உண்டால் இனிமை மிகுதியினால் உண்டோருடைய‌ இதழ்கள் அதனை வெளிவிடாமல் வைத்துக் கொள்ளுவதற்கு ஒன்றோடு ஒன்று பொருந்தும்" என்ற கருத்தை ய‌மைத்து,

    "ஓங்கு நம்பெயர் இந்நிலம் உற்றதென் றுறந்து
    வீங்கு பாலைகள் ஆவயிற் பழுப்பன மேன்மேல்
    ஆங்கு மேவியக் கனியுணின் வெளிப்படா ததரம்
    நீங்கு றாமலோட் டத்தொடும் பொருந்துதல் நிசமே"
    [உறந்து-மிகுதியாகி, அதரம்-கீழுதடு, ஒட்டம்-மேலுதடு]

என்ற செய்யுள் அவர் வாக்கிலிருந்து எழுந்தது. அதை கேட்டதும் எனக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று. நான் பாலைப் பழத்தை உண்டகாலத்தில் சிறிதளவே இனிமை உண்டாயிருக்கும். இந்தப் பாட்டைக் கேட்ட போதோ அளவற்ற இனிமையை அனுபவித்தேன். ஒருவகையான பெருமிதங்கூட என் உள்ளத்தில் எழுந்தது. "நாம் சொன்ன விஷயமும் இப்பபுலவர் பிரானது அங்கீகாரத்தைப் பெற்று இலக்கியத்தில் இடம் பெற்றதே" என்ற திருப்தி தோன்றியது; அந்தப் பாலைநில வருணனை முழுவதையும் நானே பாடியிருந்தால் எவ்வளவு சந்தோஷம் உண்டாகுமோ அவ்வளவு சந்தோஷம் எனக்கு உண்டயிற்று.

திருப்பெருந்துறைப் புராணத்திலே இவ்வாறு ஒட்டிக் கொண்ட பாலைப் பழம் எனக்கு
என் இளம்பிராயத்தையும் பிள்ளையவர்களோடு பழகிய காலத்தையும் ஒருங்கே நினைப்பூட்டி நிற்கின்றது.
-----------


9. "சிவசிதம்பரம்"


சற்றேறக்குறைய நானூறு வருஷங்களுக்கு முன்பு தொண்டை நாட்டிலுள்ள* பூதூரென்னும் ஊரிலே வீரராகவ முதலியாரென்ற தொண்டை நாட்டு வேளாளத் தமிழ்ப்புலவர் ஒருவர் இருந்தார். அவர் பிறவியிலேயேகண்ணை இழந்தவர். அதனல் அவர் அந்தகக்கவி வீரராகவமுதலியாரென்றே வழங்கப்பெறுவர். அவருடைய தந்தையார் பெயர்வடுகநாத முதலியாரென்பது. அவருடையமுன்னோர்கள் பொன்விளைந்த களத்தூருக்குஅருகிலுள்ள அப் பூதூரில் பரம்பரையாக வாழ்ந்து வந்தனர்.
------------
* அவர் பிறந்த ஊர் பொன் விளைந்த களத்தூர், உழலூர் என்றும் சிலர் கூறுவர்.

வீரராகவ முதலியார் இளமை தொடங்கியே கல்வியில் மிக்க ஊக்கமுடையவராக இருந்தனர். தம்முடைய முதுகில் எழ்தச் சொல்லி எழுத்துக்களை அவர் கற்றனரென்று பெரியோர் சொல்லுவர். காஞ்சீபுரத்தில் இருந்தவரும் கந்தபுராணத்தை இயற்றியவருமான கச்சியப்ப சிவாச்சாரியாரிடத்தில் முதலியார் பாடங்கேட்டனரென்று சிலர் கூறுவதுண்டு. அவர்தமிழ் இலக்கண இலக்கியங்களை முறையாகப்பயின்றார். கம்பராமாயணத்தில் அவருக்கு மிக்கஅன்பு உண்டாயிற்று. அதனை முற்றும் ஐயந் திரிபறப் படித்து மனனம் செய்தார். அதிலுள்ள செய்யுட்களும் செய்திகளும் அவருக்குஅங்கை நெல்லிக்கனிபோல விளங்கின.

யாவரும் வியக்கும்படி கவிபாடும் திறமைஅவருக்கு அமைந்திருந்தது. சைவசமயத்திற்பற்றுடையவராதலின் பல சிவ ஸ்தலங்களுலுள்ள மூர்த்திகள் மீது சில பிரபந்தங்களைஅவர் இயற்றினார்; திருக்கழுக்குன்றப் புராணத்தைத் தமிழிற் பாடினார். பின்னும் அவரால் இயற்றப் பெற்றுள்ள நூல்கள் பல உண்டு.

ஒரு நாட்காலையில் அவர் வெளியே புறப்படுகையில் நீராடுதற்காக வெந்நீர் வைத்திருக்கும்படி தம் மனைவியாரிடத்தில் சொல்லிவிட்டுப் போனார்; சில நாழிகையளவில் வீட்டுக்குத்திரும்பிவந்தார்; வந்தவுடன் நீராட எண்ணினார்; அவர் தேவியார் நீரைக் கொணர்ந்துவைத்தனர். தொட்டுப் பார்க்கையில் அது சூடற்றதாக இருந்தது.

"இது வெண்ணீராக இல்லையே; தண்ணீராக இருக்கிறதே" என்று முதலியார் கூறினார்.அதுகேட்ட அவர் மனைவியார், "உங்களுடையசம்பாத்தியத்துக்கு இந்த ஜலம் போதாதோ?"என்று சற்று இகழ்ச்சியுடன் சொன்னார். அவ்வுரை செவியிற்பட்டபோது அக்கவிஞரது உள்ளம் மிக வருந்தியது. "நம் கல்வியின் மதிப்பையறியாது அறிஞர்களால் மதிக்கப்படாத செல்வத்தை நினைத்தன்றோ இவள் நம்மை அவமதிக்கிறாள்? இனி இங்கே இராமல் எங்கேனும்சென்று இதுகாறும் பெறாத பெருஞ் செல்வத்தைப் பெற்றுவருவோம்" என்று அவர் உறுதிகொண்டார். ஆனால் தம்முடைய கோபத்தைச்சிறிதும் வெளியிடாமல் மறுநாள் மாணாக்கன்ஒருவனை அழைத்துக்கொண்டு வெளியூர் போய்வருவதாக மனைவியாரிடம் சொல்லி வீட்டைவிட்டுப் புறப்பட்டார். "கற்றோருக்குச் சென்றவிடமெல்லாஞ் சிறப்பு" என்பதை அவர் நன்குஅறிந்தவர். தமிழ் பயில்வர் யாரையும் நண்பராகச் செய்துகொண்டு அவர்களால் நன்மை பெறலாமென்ற துணிவு அவருக்கு இருந்தது.

அக்காலத்தில் இலங்கையை ஆண்ட பரராசசேகரரென்ற அரசர் தமிழ் நன்கு பயின்றவரென்றும் தமிழ் வித்துவானகளை அவர் தாய்பொலப் போற்றி வருபவரென்றும் வீரராகவர் அறிந்தார். அவ்வரசர் பரராச சிங்கமென்றும் வழங்கப் பெறுவார். அவரிடம்எங்ஙனமேனும் சென்று தம் கவிப்புலமையைவெளிப்படுத்தித் தக்க பரிசுகளைப் பெற்றுவரலாமென்று கவிவீரராகவர் எண்ணினார்.எண்ணியபடிழே மரக்கலம் ஊர்ந்து கடல்தாண்டி இலங்கையை அடைந்தார்; பரராசசேகரர் ஆளும் இராசதானி சேர்ந்து அவரதுஅரண்மனையை நண்ணினார். கற்றவர்கள் யார்வரினும் யாதொரு தடையுமின்றி அவ்வரண்மனை அவர்களுக்கு இடங்கொடுக்கும். அரசருடைய கட்டளையின்படி அங்குள்ள ஏவலாளரும் அதிகாரிகளும் அவர்களுக்கு ஆவனசெய்து உபசரித்தல் வழக்கம். அங்ஙனமேகவிஞராகிய வீரராகவருக்கும் உபசாரங்கள்நடைபெற்றன. 'ஏவலாளர்களே இத்தகையநல்லியல்பு உடையவர்களாக இருக்கையில்அரசர் எப்படி யிருப்பாரோ! அவரோடு பழகுவதே ஒரு பேரூதியமாக இருக்கும்' என்றஎண்ணம் முதலியாருக்கு உண்டாயிற்று. அரசரோடு பேசவேண்டு மென்ற ஆவல் அவருக்கு வரவர அதிகரித்தது.

முதலியாருடைய வரவை அரசருக்கு ஆங்குள்ளோர் அறிவித்தனர். அவருக்குக் கண்ணில்லை யென்பதை யறிந்த பொறாமைக்காரர்களான சில புலவர்கள், "குருடர்களை அரசர்பார்த்தல் கூடாது" என்று கூறி அதற்குரியசில ஆதாரங்களையும் காட்டினர். அரசருக்கோபுலவரைக் கண்டு பேசவேண்டு மென்ற விருப்பம் பெரிதாக இருந்தது. தமிழருமை அறிந்தவராதலால் அவ்வரிய வித்துவானுடன் பேசிஇன்புறுவதை அழக்க அவர் விரும்பவில்லை.அப்பால் உடனிருந்த சிலர், "இடையிலேதிரையிட்டுப் பேசலாம்" என்று சமாதானமாக ஒரு வழி சொன்னார்கள். அரசருக்குஅங்ஙனம் செய்வதில் முழுவிருப்பம் இல்லாவிடினும் முதியோர் சிலர் பழைய வழக்கமென்று கூறவே அதற்கு இணங்கினார்.

இதற்கிடையே வீரராகவ முதலியாரிடம்யாரோ சிலர் வந்து, "அரசர் குருடரைப்பார்க்கமாட்டார். நீங்கள் ஏதேனும் பாடலை எழுதியனுப்பிவிட்டுக் கிடைக்கும் பரிசைப் பெற்றுச்செல்ல வேண்டியதுதான்" என்று கூறினார்கள். அதுகேட்ட தமிழ்ப்புலவர் 'இவ்வளவுதூரம் வந்தும் நம் கருத்து நிறைவேறாமற்போகும்போலிருக்கிறதே! இராமேசுவரம்போனாலும் சனீசுவரன் பின்னோடே யென்பதுபோல நம்முடைய அதிர்ஷ்டம் நம்மைத்தொடர்ந்து வருகிறதே! இந்த அரசர் மிக்கதமிழன்புடையவ ரென்றல்லவோ கேள்வியுற்றுவந்தோம்! கடவுள் என்ன வழி விடுவாரோ!'என்றெண்ணிக் கலங்கி இறைவனது திருவருளை நினைந்திருந்தனர்.

அப்பால் அரசர் அழைப்பதாக ஒருவர்வந்து முதலியாரை அழைத்துச் சென்றனர்.ஆனால் அரசரை நேரிற் பார்க்க முடியாதபடிஒரு திரை போடப்பட்டிருந்தது. புலவருடன்வந்த மாணாக்கன் மிகவும் கூரிய அறிவுடையவன். அரசரைப் பார்க்க வந்தபோது அவரைக்காணாமல் திரைமட்டும் அருப்பதை அவன்கண்டுவியந்தான்; அதனைத் தன் ஆசிரியர் பெருமானுக்குத் தெரிவிக்க எண்ணினான்; உடனே,"சிவசிதம்பரம்" என்று உரக்கச் சொன்னான்.பக்தியானால் அவன் அங்ஙனம் கூறுவது வழக்கம்போலுமென்று அரசரும் அங்கிருந்த ஏனையோரும் அப்போது எண்ணினர். ஆனால்அவன் அங்ஙனம் கூறுவது வழக்கமில்லையாதலால் ஏதோ ஒரு குறிப்போடு அதைச்சொல்லியிருக்க வேண்டுமென்று புலவர் கருதினார். குருடராகிய தம்மை அரசர் பார்க்கமாட்டாரென்று சிலர் கூறியதும் அப்போதுஅவர் நினைவுக்கு வந்தது. சிதம்பரத்தில் இரகசியத்தைத் திரையிட்டு மறைத்தல் போல அங்கும் திரையிடப் பட்டுள்ளதென்று அறிந்த கொண்டார். உடனே அவர்,

    "நரைகோட் டிளங்கன்று நல்வள நாடு நயந்தளிப்பன்
    விரையூட்டு தார்ப்புயன் வெற்பீழ மன்னனென் றேவிரும்பிக்
    கரையோட்ட மீதின் மரக்கலம் போட்டுனைக் காணவந்தால்
    திரைபோட்டு நீயிருந் தாய்சிங்க பூப சிரோமணியே"

என்னும் செய்யுளைச் சொன்னார்.

ஒருவிதமான பேச்சும் பேசாமல் வந்தவுடனே இந்தப்பாட்டை வித்துவான் சொல்லவும் அரசர் திடுக்கிட்டார்; 'திரையிடப் பட்டதை இவர் எங்ஙனம் அறிந்தார்! இவர் குருடரல்லர்' என்று எண்ணினார்; 'இவர் குருடரென்பது உண்மையாயின் தெய்விக சக்திபெற்றவராக இருக்கவேண்டும்; நேரிற்பாராமல்இவருடன் பேசுவது பிழை' என்று நிச்சயித்தார். உடனே திரை எடுக்கப்பட்டது.

மன்னரும் புலவரும் மனங்கலந்து பேசினர். இருவரும் பல நாட் பழகியவர்போன்ற அன்புடன் உரையாடினர். கவிவீரராகவர் பலநாள்வரை அங்கே யிருந்து அரசரால் உபசரிக்கப்பெற்றார்; கம்பராமாயணத்தில் அவதானம் செய்துகாட்டினார். இன்ன விஷயம் ,இன்ன காண்டம், இன்ன படலம், இன்ன செய்யுளில் சொல்லப்பட்டிருக்கின்றதென்று ஒருவர் கேட்கும் வினாவிற்கு உடனே விடை கூறுவது அந்த அவதானமாகும். இங்ஙனம் பலர் கம்ப ராமாயணத்திலுள்ள பல விஷயங்களைக் கேட்டனர். அவற்றிற்கெல்லாம் உரிய விடைகளை அளித்து அக்கவிஞர் எல்லோரையும் மகிழ்வித்தனர்; அப்பால் அரசர் விரும்பியபடியே இராமாயண வண்ணமொன்று பாடினர். அரசர் அவருடைய பேராற்றலை அறிந்து வியந்து போற்றினார்; அவரைப் பாராட்டிச் சில செய்யுட்களையும் பாடினார்.

சில தினங்களுக்குப் பிறகு முதலியார் விடைபெற்று அவ்வரசர் வழங்கிய யானையையும் நாட்டையும் வேறு பல உயர்ந்த சம்மானங்களையும் பெற்று ஊருக்குத் திரும்பினார்.

வீடு வந்தவுடன் தம் தேவியாரை அழைத்து,"யானைக் கன்றும் வளநாடும் பெற்ற எனக்கு வெந்நீர் வேண்டுமா வேண்டாமா?"என்று கேட்டார். மனைவியார் அவரைப் பலநாள் பிரிந்து வருந்தினவராதலின் தாம் செய்த பிழைக்காக‌ வ‌ருந்தி அழுத‌ன‌ர்; பிழை பொறுக்கவேண்டுமென்று ப‌ணிந்து வேண்டினார்.த‌ம் ம‌னைவியாரின்பால் மெய்யன்புடைய கவிஞர், "நீ அப்ப‌டிச் சொன்னதனாலன்றோ என்னுடைய புகழ் கடல் கடந்து பரவியது! நமக்கும் செல்வம் உண்டாயிற்று" என்று கூறி மகிழ்ந்தார்.
-------


10. பழைய மேஜை


கும்பகோணம் காலேஜிலிருந்து நான் சென்னைக்கு மாற்றப்பெற்று, 'பிர‌ஸிடென்ஸி காலேஜில்'1903-ஆம் வருஷம் நவம்பர் மாதத்தில் வந்து சேர்ந்தேன். எனக்கு முன்பு தமிழ்ப் பண்டிதராகச் சிலகாலம் ஸ்ரீ வை.மு.சடகோப ராமாநுஜாசாரியரென்பவர் வேலை பார்த்து வந்தார். ஸ்ரீமான் ஜே.பி.பில்டர்பெக் துரை அப்பொழுது காலேஜ் தலைவராக இருந்தார்.அவர் சிறந்த கல்விமான். சில வருஷங்கள் கும்பகோணத்தில் இருந்தவர்; ஆதலின் என்னை முன்னமே நன்றாக அறிந்தவர்; என்னிடம் மிக்க அன்புடயவர்.

நான் காலேஜுக்குச் சென்றதும் முதலில் அவரைப் போய்ப் பார்த்தேன்; அவர் சிறிது நேரம் அன்போடு பேசியிருந்து விட்டு, "இப்பொழுது வேலைபார்க்கும் பண்டிதரிடமிருந்து வேலையை ஒப்புக்கொள்ளுங்கள்; ஏதாவது வேண்டுமானால் சொல்லுங்கள்" என்று சொன்னார். உடனே நான் தமிழ் வகுப்புக்குச் சென்றேன். பண்டிதர் என்னிடம் வேலையை ஒப்பித்தார்.

வகுப்பில் ஒரு பழைய மேஜையும் பழைய நாற்காலி யொன்றும் பண்டிதருடைய உபயோகத்துக்காக இருந்தன. மேடை (Platform) இல்லை. நான் கும்பகோணத்தில் இருந்தபோதுதமிழ் வகுப்புக்கென்று தனியே அறை இல்லை.ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்தனி அறைஇருந்தமையின் பாடஞ் சொல்லுபவர்கள் அவ்வவ்விடத்திற்கு உரிய நேரங்களிற் போய்ப்பாடஞ் சொல்லிவிட்டு வருவார்கள். அவ்வறைகளுள் ஒவ்வொன்றிலும் கீழே பலகைகளாலாகிய மேடையும் அதன்மேல்சிறந்த மேஜையும் நாற்காலியும் உண்டு. அத்தகைய வகுப்புகளில் பாடஞ் சொல்லியநான் இராசதானி நகரமாகிய சென்னையிலுள்ள கலாசாலையில் பின்னும் சிறப்பானஅமைப்புக்கள் இருக்குமென்று எண்ணியிருந்தேன். ஆனால் எல்லாம் நான் எண்ணியதற்கு மாறாக இருந்தன. பிள்ளைகளுடைய முகத்தை நன்றாகப் பார்க்க முடியாதபடி மேஜை தரையிலே போடப்பட்டிருந்தது.அம்மேஜையோ பூட்டினால் திறக்கமுடியவில்லை;திறந்தால் பூட்ட முடியவில்லை. மேஜையின் மேற்பாகம் பல இடங்களில் பிளந்து உள்ளேவைத்திருக்கும் பொருள்கள் இன்னவென்பதை யாவரும் அறியும்படி தெரிவித்தது. ஒருபக்கத்தில் சிலேட்டு (கற்பலகை)கள் வைப்பதற்குரிய பள்ளம், அதற்கருகில் பலப்பங்கள்(எழுதுகோல்) வைப்பதற்குரிய பள்ளம்,வேறொரு பக்கத்தில் மைக்கூடு பேனா முதலியவை வைப்பதிற்குரிய குழிகள் ஆகிய இவ்வளவும் எனக்கு அதன் பழமையை நினைவுறுத்தின.

அந்தக் காலேஜின் பிறப்புமுதல் அன்று வரையில் உடனிருந்த பழைய பொருள்களுள் அந்த அருமையான மேஜையும் ஒன்றாக இருக்கவேண்டுமென்று தெளிந்தேன். நாற்காலியும் அந்த மேஜைக்கு ஏற்ற துணையாகவே இருந்தது.

நூறு வருஷங்களாக அந்தக் காலேஜில்பண்டிதர்களாக இருந்து வந்தவர்களைப்பற்றிநான் கேள்வியுற்றிருந்தேன். பஞ்சதந்திரவசனம் எழுதிய தாண்டவராய முதலியார்,திருவாசகம் பதிப்பித்த சிவக்கொழுந்து தேசிகர், இலக்கணம் எழுதிய மகாலிங்கையர், இயற்றமிழாசிரியாராகிய விசாகப்பெருமாளையர், புரசபாக்கம் பொன்னம்பல முதலியார், ஸ்ரீநிவாசராகவாசாரியார், ராஜகோபால பிள்ளை முதலிய பெரும்புலவர்கள் அந்தக் கலாசாலைசிறிய பள்ளிக்கூட (High school) மாக இருந்தது முதல் தமிழாசிரியராக முறையே இருந்துபுகழ்பெற்றவர்கள். அவர்களுடைய புலமையையும் புகழையும் அறிந்திருந்த நான், " அவர்கள் வகித்த ஸ்தானத்தை வகிக்கப்போகிறோம்"என்ற எண்ணத்தாற் சிறிது பெருமையைஅடைந்திருந்தேன். அவர்கள் கைபட்டுப்பழகியமேஜையும், நாற்காலியும் எனக்கு உரியனவாகுமென்று நான் நினைத்திலேன். அவற்றைக்கண்டபோது என்க்கு மேலே கூறிய பெரியார்களுடைய ஞாபகம் உண்டாயிற்று. அந்தப்பழைய பொருள்களை மாற்றி அமைக்க முயலாமல் பொறுமையோடு இருந்த அவர்களுடையநிலையும், அவர்களுடைய வகுப்பைத் தாமேகவனித்து வேண்டியன செய்யாத மேலதிகாரிகளுடைய நிலையும் அவ்வளவு காலம் நிலையாக அவை அங்கே யிருக்கக் காரணமாயின வென்பதை உணர்ந்தேன். " இந்தக் காலத்திற்கு ஏற்றபடி இராவிட்டாலும் பழமையை வெளிப்படுத்திக்கொண்டு பழம் புலவர்களுடைய நினைவை இவை உண்டாக்குகின்றன" என்று ஆறுதல் செய்துகொண்டேன்; வேறு என்ன செய்ய முடியும்?

அன்று 'பிரின்ஸிபால்' வழக்கம்போல் காலேஜைச் சுற்றி மேற்பார்வையிடும்போது என் வகுப்பின் பக்கமும் வந்தார்; என்னைக் கண்டு, "எல்லாம் சௌகரியமாக இருக்கின்றனவா?" என்று விசாரித்தார்.

நான் " இங்கே சௌகரியங்களுக்குஎன்ன குறை? இதோ இந்த மேஜையைப்போல வேறொன்றை எங்கும் பார்க்க முடியாது. ஏறக்குறைய நூறு வருஷ சரித்திரத்திற்குச் சாட்சியாக இது விளங்குகிறது. அக்காலத்துப் பண்டிதர்கள் கற்பலகையையும்பலப்பங்களையும் உபயோகப்படுத்தி வந்தனரென்பதை இந்தப் பள்ளங்கள் தெரிவிக்கின்றன. இதனோடு பழகிய புலவர்களைப் பற்றியசெய்திகள் எனக்குத் தெரியும். அவர்களுடையஞாபகத்தை இம்மேஜை உண்டாக்குகிறது.இந்த நாற்காலியும் இதற்கேற்ற 'ஜோடி'யென்றே தோற்றுகிறது. இந்த இரண்டினுடைய பெருமையையும் நான்மட்டும் அறிந்துமகிழ்வதுதான் ஒருகுறை. பலபேர் அறியும்படி ஒரு காட்சிச்சாலையில் இருந்தால் நன்றாக இருக்கும்" என்றேன்.

கலாசாலைத் தலைவர் சிரித்தார்.

"மாணாக்கர்களுள் ஒருவராக இருந்து ஆசிரியர் பாடஞ் சொல்லவேண்டு மென்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். அந்த உண்மையை இந்த வகுப்பில் நன்றாக அநுசரிக்கலாம். மாணாக்கர்களும் ஆசிரியரும் சமமான உயரத்தில் இருக்கும்படி இந்த மேஜை தரையின் மேலே இருக்கிறது. மாணாக்கர்களுடைய முகத்தைப் பார்ப்பதில் என்ன பயன்? அவர்களுடைய காதுக்குத்தானே சப்தம் கேட்க வேண்டும்?" என்று பின்னும் கூறினேன்.

'பிரின்ஸிபால்' சிரித்துக்கொண்டே போய்விட்டார்.

இடைவேளை உணவு அருந்த நான் சென்றேன். அப்பால் வகுப்புக்கு வந்தேன்; பார்த்தேன்; ஆச்சரியத்தால் மலைத்துப்போனேன். என்னுடைய அறை ஒரு நாடக அரங்கைப் போல மாற்றப்பட்டிருந்தது! 'தவறி வேறொரு வகுப்புக்கு வந்துவிட்டோமோ?" என்ற சந்தேகங்கூட உண்டாகிவிட்டது.

அறை முழுவதும் கீழே பிரப்பம்பாய் விரிக்கப்பட்டிருந்தது; நான் மனக்கோட்டை கட்டியிருந்தபடி பலகையாலான பெரியமேடை யொன்று போடப்பட்டிருந்தது; அதன்மேல் அழகிய மேஜையும் இரண்டு நாற்காலிகளும் காணப்பட்டன. யாரேனும் தெரிந்தவர்கள்வரின் இரண்டாவது நாற்காலி உதவும். வகுப்பின் ஒரு மூலையில் அழகிய 'பீரோ' ஒன்று வைக்கப்பட்டிருந்தது; எனக்கு உபயோகப்படும் புத்தகங்களை அதில் வைத்துக் கொள்ளலாம்.

'தலைவரென்றால் இவரல்லவா தலைவர்! குறிப்பறிந்து தம் கீழுள்ள ஆசிரியர்களுக்கு உதவிபுரியும் இந்தக் குணந்தான் குணம்! எவ்வளவு சீக்கிரம் ஏற்பாடு செய்துவிட்டார்!' என்று நினைந்து நினைந்து மகிழ்ந்தேன். உடனே சென்று என்னுடைய நன்றியறிவைத் தலைவரிடம் தெரிவித்துக்கொண்டேன்.

பழைய மேஜைகூட என் விருப்பப்படி என் அறையில் ஒரு பக்கத்தில் இருந்தது. அதன் பூட்டைச் செப்பஞ்செய்து அமைத்து அம்மேஜையையும் பயன் படுத்திக் கொண்டேன்; வந்தவர்களுக்கு அதன் பெருமையைச் சில சமயங்களில் சொல்லிவந்ததும் உண்டு.

சில வருஷங்களுக்குப் பின் ஸ்ரீமான் ஜே. எச்.ஸ்டோனென்பவர் 'பிரின்ஸிபா'லாக வந்தார். அவரும் கும்பகோணத்தில் சில வருஷங்கள் இருந்தவராதலின் என்னை நன்றாக அறிந்திருந்தார். அவர் காலத்தில் ஒருசமயம் (1908-ஆம் வருஷம்) நான் ஒருவாரம் அனுமதி பெற்று அயலூருக்குப் போயிருந்தேன். அப்பொழுது வந்திருந்த புதிய ஆங்கில ஆசிரியர் ஒருவருக்கு நல்லமேஜை, மேடை முதலியன அமைக்கும்படி தலைவர் உத்தரவிட்டிருந்தார். உத்தரவிடப்பட்டவர்கள் அவசரத்தில் வேறொன்றும் செய்யமுடியாமல் என்னுடைய மேஜை, நாற்காலி முதலியவற்றை யெடுத்துப் புதியவர் அறையில் அமைத்துவிட்டு என்னுடைய அறையில் பழைய மேஜை யொன்றையும் சிறிய மேடை யொன்றையும் அமைத்தனர். அந்த மேடையோ குறுகியதாததலின் மேஜையையும் நாற்காலியையும் போடுவதற்கு மாத்திரம் போதியதாக இருந்தது. முன் பின் இடம் இல்லை; பக்கத்திலும் இடம் இல்லை. அவ சரப்பட்டு அந்த நாற்காலியில் உட்கார வந்தால் வந்த வேகத்தில் ஒரு சமயம் நாற்காலி நகர்ந்து கீழே விழும் நிலையில் இருந்தது.

நான் அயலூரிலிருந்து திரும்பிவந்து பார்த்தேன்; பழைய மேஜையையும் குறுகிய மேடையையும் கண்டேன், ' முன்பு பழைய மேஜை போய்ப் புதியது வந்தது; இப் பொழுது அதுபோய் வேறொரு பழைய மேஜை வந்துவிட்டது; இந்த இடத்திற்கும் நல்ல மேஜைக்கும் ராசியில்லை போலும்!' என்று எண்ணி அந்த அமைப்பை மாற்றுவதற்குரிய சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

நல்ல வேளையாக அன்று பிற்பகலிலேயே 'பிரின்ஸிபால்' என்னுடைய அறைப்பக்கம் வந்தார். மற்ற நாட்களில் அவர் வரும்போது நான் பாடஞ் சொல்லிக்கொண் டிருப்பேன். அன்று அவரைக் கண்டவுடன் எழுந்து அவரிடம் சென்றேன். வழக்கம் போலன்றி நான் அங்ஙனம் வருவதைக் கவனித்த அவர், ஏதோ விசேஷம் இருக்கலாமென்றெண்ணி, " எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா?" என்று கேட்டார்.

"அதற்கென்ன சந்தேகம்?" ஆனால் ஒரு விஷயம் மட்டும் இங்கே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்."

"என்ன அது? சொல்லலாமே."

"பெரிய விஷயம் ஒன்றுமில்லை. இவ்வளவு காலமாக இங்கிருந்த மேஜை முதலியன இப்போது மாற்றப் பட்டிருக்கின்றன. இந்த மேஜை பழையதாக இருந்தாலும் தோஷமில்லை. இந்த மேடைதான் யோசிக்கக் கூடியதாக இருக்கிறது. பிள்ளைகளுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டு பாடஞ் சொல்லும்போது எனக்கு ஞாபகமெல்லாம் நாற்காலியிலேயே இருக்கிறது. இந்த மேடையோ மிகவும் குறுகியது. என் உடம்பு அசையுமானால் நாற்காலி நகரும்; உடனே நானும் நாற்காலியும் கீழே விழவேண்டியதுதான். அதனால் நான் பயந்து கொண்டே பாடஞ் சொல்லுகிறேன்."

ஸ்டோன் துரைக்கு நான் சொல்வதைக் கேடேடபோது சிரிப்பு உண்டாயிற்று; அதனை யடுத்து, " யார் இந்தக் காரியம் செய்தார்கள்?" என்ற கோபமும் தோன்றியது. ஒன்றும் சொல்லாமல் வேகமாகப் போய்விட்டார். மறு நாளே என் மேஜையும் மற்றவையும் திரும்பி வந்து பழையபடியே அமைக்கப்பட்டன்.
------------------


11. அபூர்வ தண்டனை


கும்பகோணத்தில் சோலையப்ப முதலியார் தெருவிற்குக் கிழக்கே கிருஷ்ணராயர் அக்கிரகாரம் என்ற ஒரு தெரு உள்ளது; அதில் இரகு நாதசாமி ராயரென்ற செல்வர் ஒருவர் இருந்தார். அவர் சிறந்த தருமங்களைச் செய்தவர். தம்முடைய வீட்டிலிருந்து காவிரி நதிவரையிற் பல வீடுகளைக் கட்டி வித்துவான்களுக்குக் கொடுத்து இருக்கச் செய்து வருஷாசனமும் வழங்கி வந்தார். காவிரி நதிக்கரையில் ஒரு படித்துறை கட்டினார். அவருடைய வீட்டிற்கு முன் ஒரு விசாலமான கொட்டகை ஒன்று உண்டு. ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான ஜனங்கள் அதில் இருக்கலாம். அந்நகரத்தில் ஸம்ஸ்கிருத வாக்கியார்த்தம், உபந்யாஸம், சங்கீதக் கச்சேரி முதலியன நடைபெறுவதற்கு ஏற்ற பொதுவிடமாக அக் கொட்டாகை உபயோகப்பட்டு வந்தது.

இரகுநாதசாமி ராயர் கருணையும் பரோபகார சிந்தையும் உடையவர். ஒவ்வொரு நாளும் பகலிலும் இரவிலும் அவருடைய வீட்டில் பலபேர்கள் உணவு கொள்வார்கள். வித்துவான்களிடமும் ஏழைகளிடமும் அவருக்கு மிக்க அன்பு உண்டு. சோழநாட்டுச் செல்வர்கள் யாவரும் அவரிடம் மதிப்புவைத்துப் பழகி வந்தனர். அவர் நகர சபைத் தலைவராகவும் தேவஸ்தான நிர்வாக சபைத் தலைவராகவும் இருந்து வந்தார். இங்கிலீஷிலும் ஸம்ஸ்கிருதத்திலும் அவருக்கு நல்ல பயிற்சி உண்டு.

அவருக்குப் பல கிராமங்கள் இருந்தன. அங்கங்கே தக்க காரியஸ்தர்கள் இருந்து நிலங்களைக் கவனித்து வந்தார்கள். அவர்களுக்கு இரகுநாதசாமி ராயரிடம் அன்பும் பயமும் இருந்தன. அவர்கள் தங்கள் தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்து வந்தார்கள்.

ஒரு கிராமத்திலிருந்த காரியஸ்தர் ஒருவர் நான்கு கலம் நெல்லைக் கணக்கெழுதாமல் சொந்த்த்துக்குச் செலவு செய்து விட்டார். அதைப் பற்றி ராயருக்குத் தெரிவிக்கவில்லை. வேறொரு காரியஸ்தர் அந்த்த் திருட்டைப் பற்றி ராயருக்கு எழுதினார்.

நெல்லைத் திருடியவர் அதற்குமுன் அத்தகைய செயலை ஒருபோதும் செய்தவரல்லர். வறுமைக் கொடுமையினால் அங்ஙனம் செய்ய நேர்ந்த்து. ஆயினும், 'திருடிவிட்டோமே! என்ன தண்டனை நேருமோ!' என்று பயந்து கொண்டே அருந்தார். 'ராயரவர்களுக்குத் தெரிந்தால் நம் வேலை போவதோடு திருட்டுக் குற்றத்துக்குரிய தண்டனையும் கிடைக்கும்' என்று கலங்கினார். அந்த நான்கு கலத்தையும் ஈடு செய்வதற்குரிய நிலையில் அவர் இல்லை; 'செய்தது செய்துவிட்டோம்; இனி வருவதை அனுபவிக்க வேண்டியது தான்' என்று நிச்சயித்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் தமக்குப் பேராபத்து நேருமென்று பயந்திருந்தார்.

அவருடைய குற்றத்தை யறிந்த இரகுநாதசாமி ராயர் ஒருநாள் அவரை வருவித்தார்; "நீர் நான்கு கலம் நெல்லைத் திருட்டுத்தனமாக எடுத்துச் செலவழித்துக் கொண்டீராமே?" என்று கேட்டார். காரியஸ்தருக்குக் கும்பகோணம் புறப்படும்போதே பாதிப் பிராணன் போயிருந்தது. ராயர் முன்பு நிற்கையில் தம்முடைய உணர்ச்சியையே அவர் இழந்தவரானார். அவர் உடல் நடுங்கியது. நாக்குத் தழுதழுத்தது. கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்தது. தவர் அடியற்ற மரம்போல் ராயருடைய காலில் விழுந்தார்; "தரும பிரபுவாகிய தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும். நான் ஏதோ தெரியாமற் செய்து விட்டேன். நான் மகா பாவி. பெற்றதாய்க்குத் துரோகம் செய்யும் சண்டாளன். என் தரித்திரத்தால் அப்படிச் செய்யும்படி நேர்ந்தது. தங்களை விட்டால் எனக்கு வேறு கதியில்லை. இந்த முறை க்ஷமித்துவிட்டால், நான் எப்பொழுதும் தங்களுக்கு அடிமையாக இருப்பேன். இந்தத் துரோகச் செயலைச் செய்ததற்கு எனக்கு ஏதாவது தண்டனை விதியுங்கள். வயிற்றில் மட்டும் அடித்து விடாதீர்கள்" என்று கதறினார்.

அவருடைய பேச்சும் நிலையும் உண்மையான பச்சாத்தாபத்தை வெளிப் படுத்தின; எப்படிப்பட்ட கல் மனத்தினரும் கரையும்படி இருந்தன.

"நீர் செய்தது தப்பு அல்லவா?" என்று கேட்டார் ராயர்.

"மகாபாதகமென்பதில் சந்தேகம் என்ன? என்னுடைய கெட்டகாலம்: இந்தக் குற்றத்தைச் செய்துவிட்டேன். கருணாமூர்த்தியாகிய தாங்கள் என் குற்றத்தைப் பொறுக்க வேண்டும்" என்று சொல்லிக் காலைப் பிடித்துக்கொண்டார்.

"எதற்காக நீர் திருடினீர்? என்ன செலவு செய்தீர்? உம்முடைய சம்பளம் உமக்குப் போதாதா?" என்று கேட்டார் ராயர்.

"எனக்கு மூன்று கலம் சம்பளம். முன்பு அது போதியதாக இருந்தது. இப்பொழுது என் குடும்பம் விருத்தியாகிவிட்டது. பழைய சம்பளம் போதவில்லை. சமீபத்தில் ஒரு விசேஷம் என் குடும்பத்தில் நேர்ந்தது. அதனால் நாலு கலம் எடுத்துக் கொண்டேன்" என்று நடுங்கிக் கொண்டே சொன்னார்.

"திருடினது திருடிவிட்டுச் சம்பளம் போத வில்லையென்று வேறு சொல்லுகிறீரோ?"

"உள்ளதைச் சொன்னேன். நான் திருடியதற்குக் காரணம் தங்களுக்குத் தெரிய வேண்டுமென்று சொன்னேனேயன்றிக் குறை கூறவல்ல. இவ்வளவாவது ஜீவிப்பதற்குத் தங்களுடைய கருணை தானே காரணம்!"

"சம்பளம் குறைவென்று சொல்லுகிறீரே; உமக்கு எவ்ளவு இருந்தாற் போதும்?"

"நாலு கலம் கொடுத்தாற் போதுமானது."

"சரி சரி; உம்மைச் சரியானபடி தண்டித்தால்தான் இதைப்போன்ற காரியத்தை இனிமேற் செய்யமாட்டீர். உமக்கு வேண்டியதை என்னிடம் சொல்லாதது தப்பல்லவா?"

"தப்புத்தான். எல்லாவற்றையும் க்ஷமித்துக் கொள்ளவேண்டும். எனக்கு எந்தத் தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்; ஜீவனத்தை மட்டும் கெடுக்கவேண்டாம். நான் குழந்தைக் குட்டிக்காரன். உங்களைப் போன்ற தயாளுவான பிரபுவை நான் எங்கே காணப் போகிறேன்!" என்று விம்மி விம்மி அழத் தொடங்கினார்.

குற்றம் செய்தவர்களுக்கு மறுபடியும் அக்குற்றம் செய்யாதபடி தண்டனை கொடுப்பதுதான் உசிதம். உமக்கு என் தண்டனை கொடுத்தால் இந்தக் குற்றத்தை இனிச் செய்ய மாட்டீரென்று யோசிக்கிறேன்" என்று ராயர் கடுமையான குரலோடு கூறினார்.

காரியஸ்தர் நடுங்கிக்கொண்டே நின்றார்.

"இனி இந்தச் சம்பளத்தை உமக்குக்கொடுப்பது தப்பு; இப்படியே கொடுத்து வந்தால் நீரும் இப்படியே செய்துகொண்டிருப்பீர்" என்று ராயர் மேலும் கோபத் தொனியோடு சொன்னார். காரியஸ்தர், 'நம்முடைய சம்பளத்தைக் குறைக்கப் போகிறார்' என்று தீர்மானித்துக் கொண்டார்.

"இனிமேல் உமக்கு மாதம் நாலு கலம் சம்பளம் போட்டிருக்கிறேன்" என்றார் ராயர்.

அந்த வார்த்தைகளைக் கேட்டபோது காரியஸ்தருக்குச் சொல்லமுடியாத ஓர் உணர்ச்சி உண்டாயிற்று; ஏதோ சொப்பனம் காண்பவரைப்போல இருந்தார்.

காரியஸ்தரது வறுமை நிலையே அவர் செய்த குற்றத்திற்குக் காரண மென்பதை உணர்ந்தார் ராயர். அவ்வறுமை நிலையை நீக்கினால் அவர் அங்ஙனம் செய்யாரென்று கருதி ஒரு கலம் சம்பளம் அதிகமாக்கினார்.

"இப்படிப்பட்ட தப்புக்களை இனிச் செய்யக்கூடாது. ஏதாவது வேண்டியிருந்தால் என்னிடம் சொல்லும். நான் கொடுக்கிறேன்" என்று ராயர் சொன்ன வார்த்தைகள் காரியஸ்தர் காதில் குளிர்ச்சியாக விழுந்தன. அவர் கண்களில் துக்கத்தால் வந்த நீர் மாறியது; நன்றியறிவால் கண்ணீர்த் துளிகள் உண்டாயின; மீட்டும் ராயர் காலில் விழுந்தார்; "இனி ஏழேழ் ஜன்மத்துக்கும் உங்களிடமே வேலைக்கு இருக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்க வேண்டும்" என்று கூறி எழுந்தார்.

இந்த நிகழ்ச்சியைப்பற்றி அக்காலத்தில் யாவரும் வியப்புடன் பாராட்டலானார்கள். ஏழைகளின் குறையை அறிந்து உதவும் ராயருடைய கனிந்த உள்ளத்தையறிந்து புகழாதார் இல்லை.
-------------


12. வித்துவான் தியாகராச செட்டியார்


கல்வியிற் சறந்த பெரியோர்களிற் பலர் தங்கள் கடமைகளை உண்மையோடும் ஊக்கத்தோடும் அன்போடும் செய்துகொண்டு, பிறருடைய செல்வத்துக்கேனும் அதிகாரத்துக்கேனும் அஞ்சிப் பிறழ்ந்தொழுகாமல் இன்புற்று வாழ்ந்து வந்ததுண்டு. அத்தகையோர்கள் நம் தமிழ் நாட்டில் பண்டைக் காலத்திலும் பிற்காலத்திலும் இருந்தனரென்பதை நூல்கள் வாயிலாகவும், கண்கூடாகவும், வேறுவிதமாகவும் அறிந்து வருகிறோம். பிற்காலத்தில் வாழ்ந்தவர்களுள், கும்பகோணம் காலேஜில் தமிழ்ப்பண்டிதராக இருந்து பெரும்புகழ்பெற்ற ஸ்ரீ சி. தியாகராச செட்டியார் ஒருவராவார்.

செட்டியார் தைரியம் மிக்கவர்; தம்முடைய கடமைகளை ஒழுங்காகச் செய்து வருபவர்; பிறருடைய நூல்களிலும் உரைகளிலும் உள்ள நயமான பகுதிகளைக் கண்டு மகிழ்ந்துபாராட்டுபவர்; பிழைகள் கண்டவிடத்து அஞ்சாமற் கண்டிக்கும் துணிவுடையவர். கல்வியறிவில்லாருடைய மேற்போக்கான நடிப்புகள் அவரிடம் பயன்படா.

அவர் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கேயுள்ள பூவாளூரென்னும் ஊரில், 'பூவாளூர்ச் செட்டியார்' என்னும் சைவமரபிற் பிறந்தவர். அவர் பிறந்த வருடம் 1825. அவருடைய தந்தையார் பெயர் சிதம்பரஞ் செட்டியாரென்பது. அவர் பதினெட்டுப் பாராயம் வரையில் தம்முடைய குடும்பத்திற்குரிய வியசாயத்தையும் வர்த்தகத்தையும் கவனித்து வந்தனர், தமிழ் நூல்களையும் தக்கவர்களிடத்திற் கற்றுவந்தார். அக்காலத்தில் அவருக்குப் பயிர்த்தொழில் முதலியவற்றில் ஊக்கம் உண்டாகவில்லை. பழம் பிறப்பின் வாசனையால் தமிழ்க்கல்வியை நன்றாகப் பயின்று தேர்ச்சிபெற வேண்டுமென்னும் அவா அவர்பால் உண்டாகி முதிர்ந்தது. ஆதலின், தந்தையாரிடம் விடைபெற்றுக் கொண்டு, திரிசிபுரம் மகா வித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் சென்று படிக்கத் தொடங்கினார். பிள்ளையவர்கள் அவருடைய அன்பையும் அறிவையும் ஊக்கத்தையும் அறிந்து அவர்பாற் பெரிதும் அன்பு வைத்துப் பாடஞ் சொல்லிவந்தனர். நாளடைவில், செட்டியார் தமிழ்ப் புலமை மிக்கவரானார்; பிள்ளயவர்களுக்கு அவரிடம் அளவற்ற அன்பு உண்டாயிற்று; அவர்களுடைய மாணாக்கர்களுக்குள்ளே சிறந்தவராக அவர் கருதப் பட்டார்.

அதன் பயனாக அவர் திரிசிரபுத்திற் பட்டாளத்தார்க்குரிய பள்ளிக்கூட மொன்றில் தமிழ்ப் பண்டிதராக நியமிக்கப்பெற்றார். அங்கிருந்து பாடஞ் சொல்லி நன்மதிப்பை அடைந்தார். அதன் பிறகு ஸ்ரீரங்கத்திலிருந்த ஒரு பள்ளிக்கூடத்திற் (Taluk High School) பண்டிதராக இருந்து பாடஞ் சொல்லிவந்தார். அக்காலத்தில் அவர் பாடஞ்சொல்லும் இயல்பு மாணாக்கர்கள் மனத்தையும் அவர்கள் வழியாக ஏனையோர் மனத்தையும் கவர்ந்துகொண்டது.

அப்போது, கும்பகோணம் 'மாகாணக் கலாசாலை' (Provincial School) யில் ஆசிரியராக இருந்த தண்டலம் கோபாலராவ் அவர்கள் செட்டியாருடைய கல்வியாற்றலைப்பற்றி யறிந்து 1865-ஆம் ஆண்டில் கும்பகோணத்திற்கு வருவித்துக்கொண்டார். அதுமுதல் செட்டியார் அங்கேயே பண்டிதராக இருந்து வந்தார். அந்தப் பள்ளிக்கூடம் காலேஜான பின்பும் இருந்து புகழ்பெற்றார். அவருடைய கல்வி யாற்றலின் சிறப்பு எங்கும் பாராட்டப் பெற்றது. யாவரும் அவரை மேலாக மதித்து மிக்க மரியாதையோடு உபசாரம் செய்து வந்தனர்.

1880-ஆம் வருஷம் வரையில் அங்கே வேலைபார்த்தனர். பின்பு, உபகாரச் சம்பளம் பெற்று முதலில் திருவானைக்காவிலும் பின்பு உறையூரிலும் இனிது வாழ்ந்து வந்தார். தாம் ஈட்டிய பொருளின் பெரும் பகுதியைப் பூவாளூர் நடராஜப் பெருமான் கட்டளை முதலியவற்றிற்குச் சேர்ப்பித்து ஸர்வஜித்து வருஷம் தை மாதம் 7-ஆம்தேதி (19-1-1888) சிவபிரான் திருவடி நீழலை அடைந்தார்.

ஸ்ரீதியாகராச செட்டியாருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகள் அவருடைய தைரியத்தையும் கல்விப் பெருமையையும் பிற இயல்புகளையும் நன்கு விளக்கும். இங்கே மூன்று நிகழ்ச்சிகளை மட்டும் தெரிவிக்கிறேன்.

தியாகராச செட்டியார் கும்பகோணத்தில் இருந்த காலத்தில் ஹைகோர்ட்டு வக்கீலாகிய ஒரு பெரியகனவான், நன்னூற் சூத்திரங்களில் 200-க்கு மேல் நீக்கிவிட்டு, மற்றவற்றைத் தொகுத்து உரையெழுதி வெளியிட்டார். அக் கனவான் சிறிதளவு தமிழறிவுடையவர்; தம்முடைய பிள்ளைகளும் தம் நண்பர்களுடைய பிள்ளைகளும் பள்ளிக்கூடங்களில் நன்னூற் பாடத்தைப் பயில இயலாமல் இருத்தலை அறிந்து வருந்திய அவர், 'இப்படி ஒன்றை வெளியிட்டு நம்முடைய நண்பர்களாகிய அதிகாரிகளின் உதவியாற் பள்ளிக்கூடங்களில் இதையே பாட புத்தகமாக வைத்தால் பயன்படுமே' என்று எண்ணினார்; நண்பர்கள் சிலர் அங்ஙனம் செய்தல் மிகவும் நல்லதென்று தூண்டினார்கள். அதனால் அக்கனவான் சட்டைப்பையில் வைத்துக்கொள்ளும் அளவில் அதனைப் பதிப்பித்து ஊர்தோறும் உள்ள பள்ளிக்கூடங்களில் வைக்கச் செய்தார். அதனை யாவரும் வாங்கியதோடன்றி அவ்வக்கீலை மிகப் பாராட்டவும் தலைப்பட்டனர்.

தமிழ்ப் பண்டிதர் வேலை பார்த்தவர்களில் இலக்கணம் கற்பிக்கும் வன்மையற்ற சிலர் அப்பதிப்பை விரும்பிப் பெற்று மிகவும் புகழ்ந்தனர்.

புத்தகத்தை வெளியிட்ட கனவான் கலா சாலைகள் உள்ள இடங்களுக்கெல்லாம் அதனை அனுப்பி அங்கங்கே பாடமாக வைக்கும்படி ஏற்பாடுகளைச் செய்துவந்தார். கும்பகோணத்தில் உள்ள 'டௌன் ஹைஸ்கூலு'க்கும் ஒருபிரதியை அனுப்பினார். அந்தப் பள்ளிக்கூடத்துத் தலைமையாசிரியரோ தமிழ்ப்பாட புத்தகங்களைப் பற்றியவரையில் தியாகராச செட்டியார் அவை தகுதியுடையன வென்று சொன்னால்தான் பாடமாக வைப்பார்; ஆதலின் அந்தப் புத்தகத்தைச் செட்டியாரிடம் கொடுத்து அவருடைய அபிப்பிராயத்தைக் கேட்டார். அதனைப் படித்துப் பார்த்த செட்டியார், "இது பாடமாக வைத்ததற்குத் தகுதியற்றது" என்று சொல்லிவிட்டார். அதனால் அந்தப் பள்ளிக்கூடத்தில் அது பாடமாக வைக்கப் பெறாமற் போயிற்று. பிறகு அப் புத்தகம் கும்பகோணம் காலேஜுக்கு அனுப்பப்பட்டது. அங்கும் அது பாடமாக வைக்கப் படவில்லை. செட்டியார் அந்த நூலை மதிக்கவில்லையென்ற செய்தி அருகிலுள்ள ஊர்களிலும் பரவியது. அதனால் அங்கங்கே உள்ள பள்ளிக்கூட ஆசிரியர்கள் அதனைப் பாடபுத்தகமாக வைக்க விரும்பவில்லை. அதனை வெளியிட்டோர் தக்க அதிகாரிகள் மூலம் செய்துவந்த முயற்சிகளால் அவ்வாசிரியர்கள் தரும சங்கடத்துக்கு ஆளாயினர்.

இந்த நிலையில், அந்தக்கனவான் ஒருமுறை கும்பகோணம் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்; அப்படியே காலேஜுக்கும் வந்தார். தம் புத்தகம் பாடமாக வைக்கத் தகுதியற்றதென்று செட்டியார் கூறியதையும், அதனாற் பல பள்ளிக்கூடங்களில் அது பாடமாக வைக்கப்படாமல் மறுக்கப் பெறுவதையும் அவர் உணர்ந்திருந்தார். தம்முடைய மதிப்பைச் செட்டியாருக்கு அங்குள்ளவர்களாற் புலப்படுத்திக் கண்டித்துவிட்டுச் செல்ல வேண்டுமென்பது அவர் எண்ணம; அதனால் காலேஜுக்கு வந்த அவர், தம்மோடு படித்த ஒரு சாலை மாணாக்கரும் அங்கே ஆங்கில ஆசிரியராக இருந்தவருமான சுந்தரராவ் என்பவருடன் சென்று பல வகுப்புக்களையும் ஆசிரியர்களையும் பார்த்துவிட்டுத் தமிழ் வகுப்புக்கும் வந்து நின்றார்; தியாகராச செட்டியார் பாடஞ் சொல்லும் ஆற்றலைக் கவனித்தார். அவரிடம் நேரிலே தம்புத்தகத்தைப்பற்றிக் கேட்க வேண்டுமென்று எண்ணியிருந்த அக்கனவான், ' இவரிடம் நாம் எப்படிக்கேட்பது? இவர் மிகச் சிறந்த கல்வியாற்றல் உடையவராகத் தோற்றுகிறார்' என்று எண்ணி அஞ்சி யாதொரு பேச்சும் பேசாமல் சுந்தரராவுடன் சென்றார்.

சுந்தரராவ் நாள்தோறும் பாடம் முடிந்தவுடன் தம்முடைய வண்டியில் தியாகராச செட்டியாரையும் ஏற்றிக்கொண்டு செல்வது வழக்கம். அன்று அவர் செட்டியாரையும் தம் நண்பராகிய அக்கனவானையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.

வண்டி செல்லுகையில், சுந்தரராவ் தம்முடைய நண்பரை இன்னாரென்று செட்டியாருக்குப் பழக்கம் செய்வித்து, " இவர்கள்புதிய முறையில் நன்னூல் ஒன்று அச்சிட்டிருக்கிறார்கள்; அதைத்தாங்கள் பார்த்ததுண்டோ?" என்று கேட்டனர். செட்டியார் " ஆம், பார்த்திருக்கிறேன்" என்று கூறிவிட்டுப் பேசாமல் இருந்தார்.

உடனே சுந்தரராவ் அந்தக் கனவானைப் பார்த்து, " இவர்கள் தியாகராச செட்டியாரவர்கள்; சிறந்த வித்துவான். இந்நாட்டில் இவர்களைப்போன்ற தமிழ் வித்துவான்களே இல்லை" என்று சொல்லிச் செட்டியாரைப் பழக்கம் பண்ணி வைத்தார்.

அதனைக்கேட்ட கனவான் தம்முடைய நண்பராகிய சுந்தரராவ் அருகில் இருக்கிறாரென்ற தைரியத்தினால் செட்டியாரை நோக்கி, " என்ன, ஐயா! நான் ஆராய்ந்து அச்சிட்ட நன்னூலைப் பாடம் வைக்கக்கூடாதென்று நீங்கள் கண்டித்தீர்களாமே! என்ன நியாயத்தைக் கொண்டு அப்படிச் செய்தீர்கள்?" என்று கேட்டார். அவருடைய கேள்வி அதிகாரத் தொனியோடு இருந்தது.

செட்டியார் உடனே, "அந்த நன்னூலைப் பதிப்பித்தவர்கள் தாங்களா! எனக்குத் தெரியாது. இருக்கட்டும்; நன்னூலில் 200 சூத்திரங்களுக்குமேல் விலக்கியிருக்கிறீர்களே; என்ன நியாயத்தைக் கொண்டு விலக்கினீர்கள்?" என்று வினவினார்.

கனவான்:- எல்லாச் சூத்திரங்களும் பயன் படுகின்றனவா? பிள்ளைகளுக்கு அவசியமானவற்றை மட்டும் வைத்து மற்றவற்றை நீக்கிவிட்டால், அவர்கள் எளிதிலே படிப்பார்களல்லவா?

செட்டியார்:- எல்லாச் சூத்திரங்களும் பயன்படவில்லையென்று உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் எந்தப் பள்ளிக்கூடத்திலாவது பாடஞ் சொல்லி யிருக்கிறீர்களா? பிள்ளைகளுக்கு எளிதாயிருக்க வேண்டுமென்றால் எல்லாச் சூத்திரங்களையும் எடுத்திருக்கலாமே? நீங்கள் விலக்கியுள்ள சூத்திரங்களெல்லாம் அவசியமாக இருக்கவேண்டுமென்று நான் காரணங்காட்டி நிரூபிப்பேன்; நீங்கள் அல்லவென்று மெய்ப்பிப்பீர்களா? நன்னூல் உங்கள் விருப்பப்படி குறைப்பதற்கும் கூட்டுவதற்கும் என்ன, கிள்ளுக் கீரையா? அது கிடக்கட்டும். நீங்கள் நன்னூலைப் பதிப்பிக்க வந்தீர்களே; அதிலுள்ள உதாரணங்களை ஏன் குறைத்திருக்கிறீர்கள்? அந்த உதாரணங்கள் எதற்காக இருக்கின்றன வென்பதை நீங்கள் அறிந்ததுண்டா? அன் மொழித்தொகைக்கு உதாரணம் வாக்கியத்தில் அமைத்துக் காட்டாமல் தொகைமொழியை மட்டும் காட்டியிருக்கிறீர்களே, பூங்குழல் வந்தாளென்பதைப் பூங்குழலென்று குறைத்து விட்டால் அன்மொழித் தொகை யென்று விளங்குமா? பூங்குழல் வந்தாளென்று வாக்கியத்தில் வரும்போதுதானே அது பூங்குழலை யுடையாளென்று பொருள்படும்? இவைகளை அறிந்து கொள்ளாமற் பதிப்பித் திருக்கிறீர்களே. 'தண்டையி னினக்கிளி கடிவோள், பண்டைய ளல்லண் மானோக் கினளே' என்ற உதாரணத்தைப் பிள்ளைகளுக்கு எளிதாக இருக்கவேண்டு மென்று நினைந்து 'தண்டையினினக்கிளிகடிவோள்' என்பதைமட்டும் காட்டி யிருக்கிறீர்களே; பண்டையளல்ல ளென்பதும் இருந்தால்தானே எதுகையின் பொருட்டுத் தட்டை யென்பது தண்டை யென்று வந்ததென்று தெரியும்?

கனவான்:- அவையெல்லாம் உபாத்தியாயர் சொல்லி விளக்கமாட்டாரா?

செட்டியார்:- உபாத்தியாயர் புத்தகத்தில் இருப்பதைத் தானே விளக்குவார்? உதாரணத்தின் பகுதி முற்றும் இல்லாதிருந்தாலும் இருப்பதே தப்பாக இருந்தாலும் எப்படி விளக்குவார்? உபாத்தியாயர் நன்னூல் முழுவதையுமே மனப்பாடம் பண்ணிச் சொல்லி விடுகிறார்; உங்களுடைய புத்தகம் எதற்கு?

இங்ஙனம் சொல்லி மேலும் மேலும் அப்பதிப்பிலுள்ள குறைபாடுகளை எடுத்துக் காட்டியதோடு சில கேள்விகளையும் செட்டியார் கேட்கத் தொடங்கினார். அவற்றிற்கு விடை சொல்ல இயலாமலிருக்க கனவான் மனங் குழம்பி ஆத்திரம் மிக்கவராகி உரத்த குரலில், "நான் என்ன பண்டிதனா?" என்றார். அவர் கேட்டமாதிரியில், பண்டிதனென்று கூறப்படுதல் இழிவென்று அவர் நினைத்தமை தோற்றியது.

செட்டியாருக்குக் கோபம் வந்துவிட்டது; "உங்களை எவனையா பண்டிதரென்று சொன்னான்? பண்டித ரல்லவென்று நினைத்துத்தானே சொல்லுகிறேன்! இதை உங்களுடைய ஏவலின்மேற் பதிப்பித்தவன் யாரோ அவன் அறியாதவன்; குல்லாய்க்கேற்றபடி தலையை நறுக்கிக்கொண்ட புத்திசாலையைச் சேர்ந்தவன்; நீங்கள் பண்டிதரென்பது இழிவான பட்டமென்று நினைப்பதாகத் தெரிகிறது; இப்படிப்பட்ட காரியத்தைப் பண்டிதர்களே செய்யவேண்டும். நீங்கள் சட்ட புத்தகங்களைப் படித்து ஆராய்ந்து வாதம் பண்ணுவதோடு நில்லாமல் தமிழ் வழிக்கு ஏன் வருகிறீர்கள்? உங்களுக்குத் தெரியாத துறையில் இவ்வளவு துணிவாக நீங்கள் இறங்கியதோடு தமிழ்ப் பண்டிதர்களையும் வற்புறுத்திப் பாடம் வைக்கும்படி தூண்டலாமா? உங்களுக்குத் தமிழபிமானம் இருந்தால் நல்ல புத்தகங்களை வாசித்து இன்புறும் அளவோடல்லவா நிற்க வேண்டும்?" என்றார்.

அந்தக் கனவானுக்கும் கோபம் சிறிது சிறிதாக வளர்ந்தது! மீசை துடித்தது. "என்னை இன்னாரென்று தெரியாமற் பேசுகிறீரே" என்று கோபத்துடன் அவர் கூறினார்.

உடனே செட்டியார், "உங்களை நன்றாகத் தெரிந்துகொண்டுதான் பேசுகிறேன்; உங்கள் கடிகாரச் சங்கிலிக்கும் சட்டைக்கும் மீசைக்கும் பயந்தவனல்லான் நான். வண்டியைவிட்டு இறங்குங்கள்; ஓரிடத்தில் இருந்து பேசுவோம். உங்களுடைய அறியாமையை வெளிப்படுத்துகிறேன்" என்று சொல்லிச் சுந்தர ராவைப் பார்த்து, "வண்டியை நிறுத்தச் சொல்லுங்கள்" என்றார்.

இந்த விபரீதத்தைக் கண்ட சுந்தரராவ் கவலையுற்று அந்தக் கனவானைப் பார்த்து 'நாமெல்லாம் படித்தவர்களோடு வாதம் செய்யலாமா? இவர்களிடம் நாங்கள் பெரிய மதிப்பு வைத்து மரியாதையோடு நடந்துகொள்ளுகிறோம். இவர்கள் இருப்பது எங்கள் காலேஜுக்கே கௌரவம். நீங்கள் இவர்களைத் தெரிந்து கொள்ளாமற் பேசுகிறீர்களே. தமிழ் விஷயத்தில் இவர்கள் இட்ட சட்டத்தை மீறுபவர் இங்கே யார் இருக்கிறார்? உங்களுடைய தமிழ்ப் படிப்பு எனக்குத் தெரியாதா? நாமிருவரும் சேர்ந்து படித்தவர்களல்லவா? இப்போது நான் ஒரு புத்தகம் போட்டு விடலாமா? நன்னூலைப் பதிப்பிக்க நம்மைப்போன்றவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?" என்று சொல்லிவிட்டுச் செட்டியாரையும் சமாதானப் படுத்தினார்.

இந்தப் பேச்சுக்கள் வண்டியிலே நிகழ்ந்தாலும், பக்கத்தில் நடந்து சென்ற மாணாக்கர்கள் காதிலும் மற்றவர்கள் காதிலும் பட்டன. மாணாக்கர்களுக்குத் தெரிந்தால் அப்புறம் வேறு விளம்பரங்கள் எதற்கு? இந்த நிகழ்ச்சி எங்கும் பரவியது; தியாகராச செட்டியாருடைய புகழ் பின்னும் மிகுதியாயிற்று.

மதுரையிலிருந்து ஓர் ஐரோப்பியர் தமிழின்பால் விருப்பமுற்று ஒரு பண்டிதருடைய உதவிபெற்றுப் படித்து வந்தார். தமிழ்ச் செய்யுட்களுக்கு ஒருவாறு பொருள் தெரிந்து கொள்ளும் அறிவைப் பெற்றபின்பு தமிழில் மிகச் சிறப்பான நூல் யாதென்று விசாரித்தார்; திருக்குறள் ஒப்பற்ற நூலென்பதை அறிந்து அதனைப் படித்தார்; இலக்கண நூலையும் இடையிடையே பயின்று வந்தார்; போப்பையர் இலக்கணத்தைப் படித்தார்; பிறகு யாப்பிலக்கண வசனத்தைப் படித்து அசை, சீர், தளை, தொடை என்பவற்றை ஒருவகையாகத் தெரிந்துகொண்டார். அதனால் தாம் படித்த நூல்களிலுள்ள செய்யுட்களில் எதுகை மோனை சரியாக அமைந்திருக்கின்றனவாவென்று ஆராயத் தொடங்கினார்.

ஒருசமயம், அவர், தாம் படித்துவந்த திருக்குறட் புத்தகத்தை எடுத்துத் திறந்தார்; திறந்த பக்கத்தில்,

    "தக்கார் தகவில ரென்ப தவரவ
    ரெச்சத்தாற் காணப் படும்"

என்ற குறள் அவர் கண்ணிற்பட்டது. 'இதில் எதுகை நன்றாக அமையவில்லையே' என்று எண்ணினார். எச்சமென்பதற்கு மக்களென்பது பொருளென்று அறிந்துகொண்ட பிறகு, 'ஏன் மக்களென்றே இதை மாற்றி விடக் கூடாது? அப்படிச் செய்தால் எதுகை அழகாக அமையுமே' என்று எண்ணித் தம் புத்தகத்தில் அவ்வாறே திருத்திக்கொண்டார். திருக்குறளைத் திருத்திவிட்டோம் என்ற எண்ணத்தால் அவருக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று.

இப்படியே மேலும் மேலும் சில குறள்களைத் திருத்தினார்; தமக்குப் பாடஞ் சொல்லும் பண்டிதரிடம் இவற்றைக் காட்டி, "ஏன்? நான் செய்தது எப்படி? இப்போது இந்தச் செய்யுட்கள் முன்பிருந்ததைவிட அழகாக இல்லையா?" என்று கேட்டார். பண்டிதர் என்ன செய்வார்! அவர் கூறுவதை மறுத்தற்கு அஞ்சினார்; "நன்றாக இருக்கின்றன; ஆனால் தக்க பண்டிதர்களிடம் காட்டி, இப்படிச் செய்வது சரியாவென்று ஆராயவேண்டும்" என்றார்.

ஐரோப்பியர்:- தாங்கள் பண்டிதரல்லவா?

பண்டிதர்:_ நான் பண்டிதனானாலும் உங்களைச் சேர்ந்தவனாதலின் என் கருத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வேறு சிலர் உடன்பட்டால் உங்கள் திருத்தத்துக்குக் கௌரவம் உண்டாகும்.

ஐரோப்பியர் தம் திருத்தங்களை யாரிடம் காட்டலாமென்று ஆராய்ந்தபொழுது, கும்ப கோணம் காலேஜிற் பண்டிதராக இருந்த தியாகராச செட்டியார் அவற்றை ஏற்றுக் கொண்டால் மற்றப் பண்டிதர்கள் உடம்படுவார்களென்றும் அவர் உபகாரச் சம்பளம் பெற்றுக்கொண்டு திரிசிரபுரத்துக்கு அடுத்த உறையூரில் இருக்கிறாரென்றும் அறிந்தார். உடனே அவர் திருச்சிராப்பள்ளியி லிருந்த செவல்பாதிரியாருக்குத் (Father Sewell) தாம் புறப்பட்டு வருவதாகத் தெரிவித்து ஸ்ரீதியாகராச செட்டியாரைப் பார்ப்பதற்கு உதவி புரிய வேண்டுமென்று கடிதம் எழுதினார். பிறகு குறித்த காலத்தில் திரிசிரபுரம் சென்றார். செவல்பாதிரியார் அவரைத் தக்க வண்ணம் உபசரித்து ஓர் அழகிய பெரிய வண்டியில் அவரை உறையூருக்கு அனுப்பினார்; அவருடன் தக்கவர் சிலரையும் போகச் செய்தார்.

ஸ்ரீதியாகராச செட்டியார் உறையூரிலுள்ள பெரிய தெருவில் அண்ணாமலை செட்டி யாரென்பவருடைய வீட்டில் இருந்து வந்தார். அக்காலத்தில் அவருடைய கண்ணொளி சிறிது மழுங்கி யிருந்தது. அவரைத் தேடிவந்த ஐரோப்பியர் உறையூருக்கு வந்து செட்டியாருடைய வீட்டை விசாரிக்கலானார். அங்குள்ளவர்கள் அத்தகைய சிறந்த வண்டியையும் வெள்ளைக்காரரையும் கண்டு வியப்பு மேலிட்டவர்களாய்ப் பெருங்கூட்டமாகக் கூடி அவ்வண்டியைப் பின் தொடர்ந்து வந்தார்கள். வண்டி செட்டியாருடைய இருப்பிடத்தின் முன்னே வந்து நின்றது.

செட்டியார் சிவ பூசையை முடித்து உணவருந்திவிட்டு வழக்கப்படியே கையில் ஒரு விசிறியுடன் வந்து இளைப்பாறுதற்கு அப்பொழுதுதான் வெளித்திண்ணையில் அமர்ந்திருந்தார்; முழங்காலளவுள்ளதாகிய பழுப்புநிற ஆடையொன்றையே அவர் உடுத்தியிருந்தார்.

துரையுடன் வந்தவர்களுள் ஒருவர் வண்டியிலிருந்து இறங்கிவந்து செட்டியாரிடம், "ஒரு பெரிய துரை வந்திருக்கிறார். உங்களைப் பார்க்க வேண்டுமாம்; அவரை வரவேற்று நாற்காலி போட்டு இருக்கச் செய்யுங்கள்" என்றார்.

செட்டியார், "துரையா? வரட்டுமே. இங்கே நாற்காலி இல்லை; இந்தத் திண்ணையிலேதான் உட்காரவேண்டும்" என்றார்.

கும்பகோணம் காலேஜில் எவ்வளவோ 'துரைகளைப்'ப் பார்த்தவர் அவர்; அன்றியும் அவரைப் பார்க்கப் பல துரைகள் வந்து செல்வதுண்டு; ஆதலின் அவருக்கு இந்தத்துரை வந்தது ஒரு பெரிய சிறப்பாகத் தோன்றவில்லை.

துரை வண்டியை விட்டு இறங்கிவந்து எதிர்த்த திண்ணையில் அமர்ந்தார்.

"தாங்கள் வந்தது எதன் பொருட்டு?" என்று கேட்டார் செட்டியார். துரை, "நான் குறளைத் திருத்தியிருக்கிறேன். உங்களுடைய அபிப்பிராயத்தைப் பெற்றுப்போக வந்தேன்" என்று கூறத் தொடங்கினார்.

அந்த வார்த்தைகளைக் கேட்டது செட்டியாருக்கு இடி விழுந்தது போல இருந்தது; "என்ன? குறளையா திருத்தினீர்கள்?" என்று வியப்பும் கோபமும் நிறைந்த தொனியிற் கேட்டார்.

"ஆமாம்; எதுகை மோனை சில இடங்களில் சரியாக இல்லை. அவை அமையும்படி திருத்தினேன்; 'தக்கார் தகவில ரென்ப தவரவர், எச்சத்தாற் காணப் படும்' என்பதைவிட, 'தக்கார் தகவில ரென்ப தவரவர், மக்களாற் காணப்படும்' என்பது எதுகை நயத்தோடுகூடி எவ்வளவு அழகாக இருக்கிறது பார்த்தீர்களா?" என்றார் துரை.

செட்டியார் எழுந்து நின்றார்; தலையிலே இரண்டடி அடித்துக்கொண்டு காதைப் பொத்திக் கொண்டார்; "ஐயையோ! குறளையா திருத்தினீர்? அது மதிப்புள்ள பழைய நூலாயிற்றே! இவ்வளவு நாளாக அறிவாளிகள் செய்யாத ஒன்றைச் செய்துவிட்டதாக எண்ணமோ! எச்சமென்னும் சொல்லின் பொருள் மக்களென்பதற்கு உண்டா? ஒருவருக்குப் பிறகு அவருடைய குணமுதலியவை எஞ்சி நிற்கும் சந்ததியென்று காரணத்தைப் புலப்படுத்தும் சொல்லல்லவா எச்சமென்பது? அவ்விடத்தில் அச்சொல் அமைந்ததனால் உண்டாகும் பொருட்செறிவு மக்களென்னும் சொல்லால் உண்டாகுமா? ஒரு பொருளையே தரும் பல சொற்கள் தமிழில் இருந்தாலும் அவை ஒன்றற் கொன்று சிறிது சிறிது வேறுபட்ட பொருளுடையனவாக இருக்கும். அவற்றை இடமறிந்து பெருங் கவிஞர்கள் உபயோகிப்பார்கள். அது தெரியாமல் திருத்தி விடலாமா? எதுகை நயத்தைவிடப் பொருள் நயம் அல்லவா சிறந்தது?" என்று சொல்லிவிட்டு, "குறளைத் திருத்தினவர் முகத்தில் விழிப்பது கூடப் பாவம்!" என்று கூறிக்கொண்டே உள்ளே சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டு இடைகழித் திண்ணையில் அமர்ந்துவிட்டார்.

துரைக்கு இன்னது செய்வதென்றுதோன்றவில்லை. உடன் வந்தவர்கள் ஜன்னல் வழியாகச் செட்டியாரிடம், "இவர் பெரிய மனிதர்; இப்படி இவரைத் தாங்கள் அவமதிக்கக் கூடாது. இவரால் உங்களுக்குப் பெரிய லாபம் உண்டாகும்" என்றார்கள்.

செட்டியார், 'இவரை யாரையா இங்கே வரச் சொன்னார்? உலக மெல்லாம் புகழும் திருக்குறளைத் திருத்திய இச் செயல் திருவள்ளுவரை அவமதித்ததாகுமல்லவோ? தெய்வம்போல யாவரும் கொண்டாடும் அவருடைய குறள் வேதமல்லவா? அதைத் திருத்தத் துணிந்தவர் வேறு என்ன தான் செய்யமாட்டார்? இவருக்கு மதிப்பு எங்கிருந்து வரும்? இவரால் எனக்கு ஒரு லாபமும் வேண்டாம். இனிமேல் நான் சம்பாதித்து யாருக்குக் கொடுக்கப் போகிறேன்? எனக்குப் பிள்ளைகுட்டிகள் இல்லை. போதும், போதும்; உங்கள் துரையை அழைத்துக்கொண்டு போய்விடுங்கள்' என்றார்.

தாம் என்ன கூறினாலும் செட்டியார் வழிக்கு வாராரென்பதை உணர்ந்த அவர்கள் துரையை அழைத்துக்கொண்டு மீண்டு சென்றார்கள்.

பிறருடைய குறையைக் கண்டவிடத்துக் கண்டிக்கும் இயல்புடைய செட்டியார் தம்முடைய நிலையை நன்றாக உணர்ந்திருந்தார். தம்முடைய அளவுக்கு மிஞ்சிய காரியத்தைப் பிறர் வற்புறுத்தினாலும் செய்யார்; இது சிலரிடத்தில் மாத்திரம் காணப்படும் அருமையான குணம்.

திருச்சிராப்பள்ளியிலும் வேறு இடங்களிலும் சிரஸ்தேதாராகவும் டிப்டி கலெக்டராகவும் இருந்து விளங்கிய திரு. பட்டாபிராம பிள்ளையென்பவர் தமிழபிமானம் மிக்கவர்; தமிழ்ப்புலவர்களை ஆதரித்துப் பாதுகாக்கும் இயல்பினர்; மகா வித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களை நன்கு அறிந்தவர்; ஸ்ரீதியாகராச செட்டியாரிடத்தில் மிக்க அன்பு பூண்டவர்; அறிவாளிகள் நிலையான காரியங்கள் செய்யவேண்டுமென்பது அவருடைய விருப்பம். திவ்யப் பிரபந்தங்களுக்குப் பெரியோர்களால் வடமொழி தென்மொழியிற் செய்யப்பெற்ற வியாக்கியானங்கள் இருப்பது போலத் தேவார திருவாசகங்களுக்கு இல்லையே யென்ற வருத்தம் அவருக்கு உண்டு. அதனால் சைவமடாதிபதிகளையும் சைவ வித்துவான்களையும் சந்திக்கும் பொழுதெல்லாம் திருமுறைகளுக்கு ஓர் உரை எழுதும்படி வற்புறுத்திக் கூறுவார். கேட்பவரிற் பெரும்பாலோர் இயன்றவரையில் உழைத்துப் பார்ப் போமென்றே விடை பகர்ந்து வந்தார்கள்.

தியாகராச செட்டியார் உபகாரச்சம்பளம் பெற்றுத் திருவானைக்காவில் சில ஆண்டுகள் இருந்தபோது பட்டாபிராம்பிள்ளை அவர் வீட்டுக்கு அடிக்கடி சென்று பார்த்து வருவார். அப்பொழுது அவரைத் திருவாசகத்திற்கு உரை எழுதவேண்டுமென்று வற்புறுத்திக் கூறுவார். அன்றியும் அங்கங்கே நிகழும் கல்லியாணங்களை விசாரிக்கப்போன காலங்களிலும் மற்ற இடங்களுக்குச் சென்றிருந்த காலங்களிலும் அவரைச் சந்தித்தபோதெல்லாம் மேலும் மேலும் கூறுவார்; "எழுத ஆரம்பித்தீர்களா? எவ்வளவு ஆயிற்று?" என்று கேட்பார்; அருகிலுள்ள கனவான்களிடம், "இவரிடம் எவ்வளவு நாளாகச் சொல்லி வருகிறேன்; கேட்கமாட்டேனென்கிறாரே!" என்று சொல்லுவார்.

ஒருநாள் செட்டியார் திருச்சிராப்பள்ளியிலுள்ள உறவினரொருவர் வீட்டில் நிகழ்ந்த ஒரு துக்கத்துக்காக அங்கே சென்று விசாரித்து நீராடி விட்டு ஈரத்துணியோடு மீண்டு காவிரி யாற்றுப் பாலத்தின்மேல் நடந்து வந்தார். அப்பொழுது நடுப்பகல் பன்னிரண்டு மணிநேரம். செட்டியார் வெயிலாலும் பசியாலும் மிகவும் களைப்படைந் திருந்தார்.

அச்சமயம் பட்டாபிராம்பிள்ளை ஸ்ரீரங்கம் சென்று பெருமாளைத் தரிசனம் செய்து விட்டு மார்பிற் சந்தனம் விளங்க உத்ஸாகமாக எதிரே ஒரு வண்டியில் வந்தார். செட்டியாரைக் கண்டவுடன் அவர் வண்டியை நிறுத்திக் கீழே இறங்கினார், செட்டியாரை யணுகி க்ஷேம சமாசாரம் விசாரித்தபின்பு வழக்கம் போலவே திருவாசகவுரை எவ்வளவாயிற்றென்று கேட்டார்.

நீண்டநாளாக இந்த விஷயத்தைப்பற்றி எவ்விடத்திலும் கேட்டு வந்ததனாலும், அப்பொழுது தமக்கு இருந்த தளர்ச்சியினாலும் செட்டியாருக்குக் கோபம் உண்டாயிற்று; "நீங்கள் கொஞ்சமாவது திருவாசகத்தின் பெருமையை அறிந்துகொள்ளவே யில்லை நென்று நிச்சயமாய்ச் சொல்லுகிறேன். அதற்கு என்னால் உரை எழுத முடியுமா? திருவாசகம் எவ்வளவு! என்னுடைய படிப்பு எவ்வளவு! அதற்கு உரையெழுத வேண்டுமென்றால் வேதம், உபநிஷதம், ஆகமங்கள், புராணங்கள், யோக சாஸ்திரங்கள் முதலியவை தெரிய வேண்டாமா? தமிழில் உள்ள இலக்கண இலக்கியங்களையும் சில சைவ சித்தாந்த சாஸ்திரங்களையுமே படித்த நான் எப்படி எழுத முடியும்?" என்றார்.

பட்டாபிராம்பிள்ளை :- திவ்யப் பிரபந்தத்திற்கு அவர்கள் வியாக்கியானம் செய்ய வில்லையா?

செட்டியார் :- என்ன ஐயா! உங்களுக்கு அவர்களுடைய படிப்பின் அளவு சிறிதேனும் தெரியாது போல் இருக்கிறது. அவர்கள் வடமொழி தென்மொழி இரண்டிலும் சிறந்த புலமையுடையவர்கள்; அவர்கள் உரையினாலல்லவா நூலின் பெருமை அதிகமாகின்றது? நான் உரை எழுதினால் திருவாசகத்திற்கு எவ்வளவு குறைவு உண்டாகுந் தெரியுமா? என்னுடைய உரையினால் அதற்குக் குறைவு ஏற்படவேண்டுமென்பது தங்கள் எண்ணமோ? எங்கே கண்டாலும் நச்சுநச்சென்று என் படிப்பின் அளவு தெரியாமல் திருவாசகத்துக்கு உரையெழுதும்படி சொல்லிச்சொல்லி என்னை வருத்துகின்றீர்கள். இனிமேலும் இப்படித் தொந்தரவு செய்வதாயிருந்தால், இதோ இந்தக் காவிரியில் இப்படியே பொத்தென்று விழுந்து என் உயிரை விட்டுவிடுவேன். பட்டாபிராம பிள்ளையவர்கள் திருவாசக்த்திற்கு உரையெழுதும்படி அடிக்கடி தொந்தரவு செய்ததனால் அந்தத் துன்பத்தைத் தாங்கமாட்டாமல், தியாகராச செட்டியார் ஆற்றில் விழுந்துவிட்டாரென்ற அபக்கியாதி உங்களுக்கு ஏற்படட்டும்.

பட்டாபிராம பிள்ளை உடனே செட்டியாருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு, "ஐயா! ஐயா! வேண்டாமையா! இனிமேல் நான் இதைப்பற்றிக் கேட்பதே இல்லை ஐயா!" என்று சொல்லிச் சமாதானப் படுத்திவிட்டு அவருடைய அயர்ச்சியான நிலையை அறிந்து தம் வண்டியில் ஏற்றித் திருவானைக்காவிலுள்ள அவர் இருப்பிடத்தில் அவரை விட்டுவிட்டு மீண்டு திரிசிரபுரத்திலிருந்த தம்மிடம் சென்றார்.
------------


13. வேங்கடராம பாகவதர்


சென்ற நூற்றாண்டில் தமிழ் நாட்டில் சங்கீதத்துக்குச் சிறந்த ஆதரவை அளித்துவளர்த்து விளங்கிய ஸம்ஸ்தானங்கள் பல. அவுற்றுள் தஞ்சாவூர் ஸம்ஸ்தானத்தை முன்னணியில் வைக்கலாம். அதனை ஆண்டு வந்த மகாராஷ்டிர அரசர்களுக்குப் பலவகைக் கலைஞர்களிடத்திலும் இருந்த அன்பு அளவற்றது. அவர்களுடைய ஆதரவைப் பெற்ற கலைகளில் சங்கீதத்தில் வல்ல வித்துவான்கள் அந்த ஸம்ஸ்தானத்தோடு அதிக சம்பந்தமுடையவர்களாய் இருந்தார்கள். நல்ல வித்துவான்கள் தமிழ் நாட்டில் எங்கே இருந்தாலும் அவர்களைத் தங்கள் ஸம்ஸ்தானத்துக்கு உரியவர்களாக ஆக்கிக்கொள்வதில் அந்த ஸம்ஸ்தான அதிபதிகளுக்கு ஒரு திருப்தி இருந்துவந்தது. ஆதலின் அந்த உயர்ந்த வித்தை தஞ்சையிலே தாண்டவஞ் செய்தது.

தஞ்சை ஸமஸ்தானத்தில் தொடர்பில்லாமல் பக்தி செய்வதையே தம் வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டு அங்கங்கே சில சங்கீத வித்துவான்கள் இருந்து வந்தனர். அவர்களுள் வேங்கடராம பாகவதரென்பவர் ஒருவர்.அ வர் சிறந்த தெய்வபக்தியுடையவர்; ஒழுக்கம் நிரம்பியவர்; பணத்தை மதியாதவர். இல்லற வாழ்க்கையை நடத்தினாலும் அவர்பால் உள்ளத் துறவு இலங்கியது.

வேப்பத்தூர், திருவிடைமருதூர், திருவிசலூர் முதலிய ஊர்களின் அக்கிரகாரங்களில் உள்ள பஜனை மடங்களில் அவர் வாசம் செய்து வந்தார். நாள்தோறும் உஞ்சவிர்த்தி செய்து கிடைக்கும் அக்ஷதையினால் பூஜை, போஜனம், அதிதிகளுக்கு அன்னமிடுதல் முதலியவற்றைச் செய்துகொண்டு மனவமைதியோடு காலங் கழித்தார்.

அவ‌ர் நல்ல சங்கீத வித்துவானக இருந்ததோடு தெலுங்கிலும் வடமொழியிலும் சிறந்த அறிவுடையவராக இருந்தார்; அவ்விரண்டு மொழிகளிலும் அழகிய கீர்த்தனங்களை இயற்றியிருக்கிறார். தெய்வத்துக்குத் தொண்டு புரிந்து தம்முடைய சங்கீதத்தை ஈசுவரார்ப்பணமாக்கி வாழ்ந்த அவருடைய பெருமை தமிழ்நாட்டில் மெல்ல மெல்லப் பரவியது. தஞ்சாவூர் ஸம்ஸ்தான‌த்தில் இருந்த வித்துவான்கள் அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டனர். சில சமயங்களில் அவ‌ருடைய பெருமையைப்பற்றி அவர்கள் தஞ்சை அரசரிடம் சொல்லும்படி நேரும். இங்ஙனம் தம்முடைய ஸம்ஸ்தானத்தில் உள்ள சிறந்த வித்துவான்களால் அடிக் கடி ஒருவர் பாராட்டப்படும்போது அத்தகைய சிறப்புடைய பெரியாரைப் பார்க்க வேண்டுமென்ற அவா அரசருக்கு எழாமல் இருக்குமா? வேங்கடராம பகாவதரைப் பார்க்க வேண்டுமென்ற‌ ஆவல் அரசருக்கு வரவர அதிகமாக வள‌ர்ந்தது.

தக்க மனிதர்கள் அரசருடைய ஏவலின்படி பாகவதர்பாற் சென்று தஞ்சாவூர் ஸம்ஸ்தானத்துக்கே வந்துவிட வேண்டு மென்று வேண்டினார்கள். உள்ளத் துறவியாகிய அவர் முதலில் மறுத்தார். ஆயினும் வந்தவர்கள் வற்புறுத்தவே, "பரமேசுவரனது திருவுள்ளம் இப்படி இருந்தால் நாம் ஏன் தடை சொல்ல வேண்டும்?" என்றெண்ணி அவர்களுடைய வேண்டுகோளுக்கு உடன்பட்டார்.

வேங்கடராம பகாவதர் தஞ்சாவூர் ஸம்ஸ்தானத்தின் தொடர்பைப் பெற்றார்.அரசர் அவருடைய சம்பந்தம் தமக்கு உண்டானது குறித்து மிக்க திருப்தியை அடைந்தார்; பாகவதருக்குப் பலவகையான மரியாதைகளைச் செய்தார்; பல உயர்ந்த ஆடையாபரணங்களை வழங்கினார்.

பஜனை மடங்களிலே வாழ்ந்து காலங்கழித்து வந்த பாகவதர் ஒரு மாளிகையில் வசிக்கலானார். தினந்தோறும் அவர் தோளில் மாட்டிக் கொண்டு உஞ்சவிர்த்தி செய்யும்போது கொண்டு போன செம்பு ஒரு பூஜைப்பொருளைப் போலத் தனியே ஓரிடத்தில் இருந்தது. அதிகமான சௌகரியங்கள் கிடைத்ததும் பாகவருடைய மனநிலை மாறவில்லை. 'இவ்வளவு அநுகூலங்களும் ஈசுவரனைத் தியானிப்பதற்கும், பூஜை செய்வதற்குமே நமக்கு ஏற்பட்டன. முன்னைக் காட்டிலும் ஏகாந்தமாக இருந்து நம் இஷ்டம் போல் ஈசுவரத் தியானம் செய்யலாம்' என்ற எண்ணந்தான் அவருக்கு உண்டாயிற்று.

பாகவதருடைய பூஜை முன்பு இருந்ததைக் காட்டிலும் பன்மடங்கு பெருகியது; தியானமும் அங்ஙனமே விரிந்தது; அதிதிகளை உபசரிக்கும் காரியமோ மிக அதிகமாயிற்று.

அரசர் பாகவதருடைய பெருமையை ஓரளவு அறிந்திருந்தார். ஆதலின் பாகவதர் தாமாக மனம் வைத்து வந்தபோது அவருடைய சங்கீதத்தைக் கேட்டு இன்புற்று வந்தார். மற்ற‌ வித்துவான்களும் பாகவதரிட‌த்தில் மிக்க மதிப்பு வைத்து ஒழுகிவந்தனர்.

பாகவதரிடம் பல மாணாக்கர்கள் ச‌ங்கீதப் பயிற்சி பெற்றனர். அரசர் அம்மாணாக்கர்களின் போஷணைக்குரிய பொருளுதவி செய்து வந்தார். சங்கீத பரம்பரை அபிவிருத்தியாவதில் யாவருக்கும் சந்தோஷம் இருந்தது.

ஒருநாள் வேறொரு ஸம்ஸ்தானத்திலிருந்து சில மந்திரிகளும் பல தக்க மனிதர்களும் தஞ்சாவூருக்கு வந்திருந்தனர். தங்களுடைய ஸம்ஸ்தானத்திலுள்ள சிறந்த அமைப்புக்களைப் பற்றியும் தானதர்மங்களைப் பற்றியும் வித்துவான்களைப்பற்றியும் அவர்கள் அரசரிடம் தெரிவித்தனர். தங்கள் தங்கள் புகழை வெளியிட்டுக் கொள்வதில் யாவருக்கும் விருப்பம் இருக்கும் அல்லவா? அரசரோடு உடனிருந்த ஸம்ஸ்தான உத்தியோகஸ்தர்கள் த‌ஞ்சாவூரிலுள்ள விசேஷங்களைப்பற்றிச் சிறப்பித்துச் சொல்லலானார்கள்; வித்துவான்கள் பலர் அரசருடைய ஆதரவின் கீழ் இருந்து வருவதை எடுத்துக் கூறினார்கள்; "எங்கள் ஸம்ஸ்தானத்தில் சங்கீத வித்தை மிகவும் பிரகாசிக்கிறது. இந்த உலகத்தையே அடிமைப் படுத்தும் சக்தியையுடைய வித்துவான்கள் பலர் இங்கே இருக்கின்றனர். ஸ்ரீ வேங்கடராம பாகவதர் ஒருவரே மற்ற‌ எல்லா ஸம்ஸ்தானத்து சங்கீத வித்துவான்களுக்கும் மேலாக இருக்கும் தகுதி வாய்ந்தவர். அவர் ஒரு தெய்வப் பிறப்பு. அவருடைய சங்கீதத்துக்கு இணையே இல்லை" என்று சொன்னார்கள். "அப்ப‌டியானல் அத்தகைய பெரியாரைப் பார்த்து அவ‌ருடைய சங்கீத இன்பத்தை அநுபவிக்க வேண்டுமென்று எங்கள் உள்ளம் விரும்புகிறது. வேங்கடராம பாகவதரென்ற அரிய வித்துவான் ஒருவர் இங்கே இருக்கிறாரென்று முன்பே சிறிது கேள்விப்பட்டிருக்கிறோம்" என்று வெளியூரிலிருந்து வந்தவர்கள் சொன்னார்கள்.

அரசர் அவர்கள் கூறியதைக் கேட்டுத் திருப்தியுற்றார்.பாகவதருடைய புகழ் வெளிநாடுகளிலும் பரவியிருப்பதை உணர்ந்த போது, "நாமல்லவா இதற்குக் காரணம்!" என்ற நினைவு அவருக்குச் சிறிது உண்டாயிற்று. "பாகவதரவர்களை அழைத்துவரச் சொல்லிப் பல்லக்கை அனுப்புங்கள்" என்று அரசர் உத்தரவிட்டார்.

அப்பொழுது காலை பத்து நாழிகை இருக்கும். பாகவதர் அக்காலத்தில் தெய்வ பூஜையும் தியானமும் செய்வது வழக்கம். அவ்வாறே அன்றும் அவர் தியானத்தில் இருந்தார்; பூஜையறையில் தம்மை மறந்து இறைவன் திருவடிமலரில் தம் உள்ளத்தைப் பறிகொடுத்து அமர்ந்திருந்தார். அப்பொழுது அவர் வீட்டு வாயிலிற் பல்லக்கு வந்து நின்றது. "அரசர் அழைத்து வரச் சொன்னார்" என்று அரண்மனை அதிகாரி ஒருவர் அங்கிருந்த சிஷ்யர்களிடம் சொன்னார்.

பாகவதர் தியானத்தில் அமர்ந்திருப்பது தெரிந்து,'என்ன செய்வது!" என்று அவ்வதிகாரி யோசித்தார்; சிறிது நேரம் காத்திருந்தார். பாகவதர் புற உலகத்திற்கு வரவில்லை. உடனே அதிகாரி சிஷ்யர்களிடம் தாம் வந்த நோக்கத்தை அறிவித்து அரண்மனைக்குப் போய்விட்டார்.

பாகவதர் தியானத்தில் அமர்ந்தால் யாரும் அவரை அணுகுவற்கு அஞ்சுவார்கள். ஆதலின் மாணாக்கர்கள் வலிந்து சென்று தெரிவிக்கவில்லை.

சிறிது நேரம் சென்ற‌து; அரண்மனையிலிருந்து வேறொருவர் வந்தார்; "அரசர் காத்திருக்கின்றார்; உடனே பாகவதரவர்களைப் பல்லக்கில் அழைத்து வரச் சொன்னார்" என்றார். மாணாக்கர்கள் என்ன செய்வார்கள்! வந்தவர் மீண்டு சென்றார்.

மூன்றாம் முறையாக ஒருவர் வந்தார். அவரும் ஒன்றும் இயலாமற் சென்றுவிட்டார். அரசரோ, பாகவதர் வருவார் வருவாரென்று காத்திருந்தும் அவர் வரக்காணவில்லை. அரசர்களுக்கு ராஜஸகுணம் இய‌ல்பு. எவ்வளவு நேரம் அது வெளிவராமல் இருக்கும்? "நீர் போய் உடனே அழைத்து வாரும். ந‌ம்முடைய ஆஸ்தானத்துக்குக் கௌரவம் உண்டாவதற்கல்லவா அவர் இருக்கிறார்? எவ்வாறேனும் நீர் அவரை அழைத்து வரவேண்டும் என்று கடுமையான தொனியோடு கூறித் தம் மந்திரியை அனுப்பினார்.

அவர் பாகவதர் வீட்டிற்கு வந்தார். வெளியிலே ராஜஸ தாமஸ குணங்களின் திருவிளை யாடல்கள் மிக்க வேகமாக நடந்துகொண்டிருப்ப, அவற்றில் ஓர் இம்மியளவையேனும் அறிந்து கொள்ளாமல் பரம ஸத்வ குணக் கடலில் மூழ்கி ஸர்வலோக சக்கரவர்த்தியாகிய் பரமேசுவரனின் பாதத்தில் தம் இதய மலரை அர்ப்பணம் செய்து எல்லாம் மற‌ந்த நிலையில் வீற்றிருந்தார் பாகவதர். மந்திரியானால் என்ன? அரசரே வ‌ந்தால்தான் என்ன? அவருக்குத் தெரியக் கார‌ணம் இல்லையன்றோ?

மந்திரி சாதரணமாக ஒருவர் வீட்டிற்கும் வருவதில்லை; அவரே வந்திருக்கும்போது காரியம் மிகவும் முக்கியமானதென்று மாணாக்கர்கள் ஊகித்துக் கொண்டார்கள். ம‌ந்திரி, அவர்களிடம், "எவ்வாறேனும் தியானத்திலிருந்து எழுப்புங்கள்" என்று கூறினார். தம் குருமூர்த்தியின் பெருமையை நன்குணர்ந்த அவர்கள் மிகவும் தருமசங்கடமான நிலையில் அகப்பட்டுத் தவிக்கலானார்கள்.

அவர்களுக்குள் புதிய மாணவன் ஒருவன் இருந்தான். அவன், "இச்சமயத்தில் நம் துணிவைக் காட்டினால் நமக்கு அரசருடைய தயை உண்டாகும்" என்று எண்ணினான். "நான் முயன்று பார்க்கிறேன்" என்று சொல்லிப் பாகவதர் அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்றான். அவருக்கு அருகில் நின்று கனைத்தான்; மெல்லக் கையைத் தட்டினான்; ஒன்றும் பயன் படவில்லை. 'துணிந்தது துணிந்து விட்டோம்; இனி எழுப்பாமல் இருக்கக் கூடாது' என்ற தைரியம் அவ‌னுக்கு உண்டாயிற்று. அவருடைய தோளைப் பிடித்துப் பல‌மாக அசைத்தான்.

பாகவதர் திடுக்கிட்டுக் கண்ணைத் திறந்தார்; "மகாராஜா தங்களைப் பார்ப்பற்கு நெடு நேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறார். ஆள்மேல் ஆள் விட்டார்; பல்லக்கு வந்திருக்கிறது. இதோ, மந்திரியவர்களே வந்திருக்கிறார்கள். நீங்கள் பல நாழிகைகளாக உலகத்தையே மறந்துவிட்டிருக்கிறீர்கள்" என்று அவன் ஒன்றன் பின் ஒன்றாகச் சமாசாரங்களை அடுக்கிக் கொண்டு போனான். பாகவதர் சிறிது நிதானித்தார். தூக்கத்திலிருந்து விழித்த ஒருவன் எல்லாவற்றையும் அறிந்து கொள்வதற்குச் சிறிது நேரமாகுமல்லவா? பாகவதருக்கு விஷயம் விளங்கச் சிறிது நேரமாயிற்று. பரமானந்தக் கடலில் மூழ்கியிருந்த அவரை வலிய உலக‌மாகிய இருட்டறைக்கு அரசருடைய உத்தரவு இழுத்து வந்தது.

"அப்படியா! குருமூர்த்தே!" என்ற இரண்டு வார்த்தைகள் அவருடைய வாக்கிலிருந்து புறப்பட்டன. தமக்குப் பிரியமான சிஷ்யரொருவரைக் கூப்பிட்டார்; "பூஜையைக் கட்டப்பா!" என்று உத்தரவிட்டார்; நேரே பழைய உஞ்சவிர்த்திச் செம்புள்ள இடத்திற்குச் சென்றார்; அழுக்குப் படிந்து பலகாலமாகப் புறக்கணிக்கப்பட்டிருந்த அதை எடுத்துத் தோளில் மாட்டிகொண்டார்.

"என்னோடு வரத் தைரியமுள்ளவர்கள் வரலாம்" என்று சிஷ்யர்களைப் பார்த்துக் கூறி விட்டு அப்பெரியார் வீதியிலே இறங்கிவிட்டார். மாணாக்கன் ஒருவன் அவருடைய பழைய சொத்தாகிய பூஜையைக் கட்டி எடுத்துக் கொண்டு அவருக்கருகில் நிழல்போல நின்றான்.

மந்திரிக்கு ஒன்றும் விளங்கவில்லை. "ஸ்வாமி! என்ன இது? எங்கே புறப்பட்டீர்கள்? பல்லக்கு வந்திருக்கிறதே!" என்றார்.

"இனிமேல் எனக்கு இங்கே என்னவேலை? உங்கள் ராஜாவுக்கு நான் உபயோகப்பட மாட்டேனென்பதைச் சொல்லிவிடுங்கள்" என்று கூறித் திரும்பிப் பாராமலே பாகவதர் தாளத்தைத் தட்டிக்கொண்டு நடந்தார்.

அப்பொழுது அவர் திருவாக்கிலிருந்து அவருடைய குருநாதருடைய ஸ்தோத்திரமாக எட்டுத் தெலுங்குக் கீர்த்தனங்கள் வெளிவந்தன.

[இந்த வரலாற்றையும் மேற்படி கீர்த்தனங்களிள் ஒன்றையும் என் தந்தையார் சொல்லக் கேட்டிருக்கிறேன்.]
---------


14. இரண்டு புலவர்கள்


நம்முடைய நாட்டின்கண் பழைய காலத்தில் கல்வி வளர்ச்சி அடைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் புலவர்கள். அவர்களுடைய வாழ்க்கைக்குரிய சாதன‌ங்களை வழங்கி அவர்களுக்கு ஊக்கமளித்து வந்தவர்கள் மன்னர்களும் ஜமீன்தார்களும் பிரபுக்களும் ஆவார்கள். இந்நாட்டில் இருந்த சேர, சோழ, பாண்டியர்களும் குறுநில மன்னர்களும் தங்கள் தங்கள் ஆஸ்தானங்களிற் பல புலவர்களைக் கூட்டி ஆதரித்து அப்புலவர்களால் தமிழ் நூற்பெருக்கமும் தம் புகழ்வளர்ச்சியும் உண்டாகச் செய்தனர்; புலவராற் புகழப் பெறுதலையே சிறந்த மதிப்பாகக் கருதினர். புலவராற் பாடப்பெறாவிடின் அது வாழ்க்கைப் பயனை இழந்ததுபோலாகும் என்றே அவர்கள் எண்ணினர்.

சென்ற நூற்றாண்டு வரையில் ஸம்ஸ்தானாதிபதிகள் தமிழ்க் கவிஞர்களை ஆதரித்து வந்தனர்; சில மடாதிபதிகளும் அங்ஙனமே செய்தனர். ஒவ்வொரு ஸம்ஸ்தானத்தின் சரித்திரத்தையும் ஆராய்ந்து பார்த்தால் பல புலவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழ் நூல்களை இய‌ற்றிய‌தற்கு அந்த ஸம்ஸ்தானங்களில் இருந்த தலைவர்களுடைய உபகாரமே முக்கியமான காரணமென்ப‌து தெரியவரும். புலவர்களுக்குப் பலவகைப் பரிசில்களும் கிராமங்களும் அவர்கள் அளித்தனரென்பதற்குரிய ஆதாரங்கள் பல இருக்கின்றன.

இரமநாதபுரத்தில் உள்ள‌ அரசர்களாகிய ஸேதுபதி மன்னர்கள் தமிழ் வளர்க்கும் பரம்பரையைச் சார்ந்தவர்கள். அவர்களுள் இரகுநாத சேதுபதி யென்பவர் ஒருவர். அவர் புலவர் பாடும் புகழுடையோராக விளங்கினார்.

இர‌குநாத சேதுபதி தமிழ்நயம் அறிந்து பாராட்டும் வள்ளல். அமிர்த கவிராயர், அனந்த கவிராயர், சர்க்கரைப் புலவர், சவ்வாதுப் புலவர் முதலியவர்கள் அம்மன்னருடைய அன்பில் வளர்ந்தவர்களே.

அமிர்த கவிராயர் இர‌குநாத சேதுபதியின் மீது ஒருதுறைக் கோவையொன்று பாடினார். ஒருதுறைக் கோவை யென்பது அகப் பொருளுக்குரிய துறைகளுள் ஏதேனும் ஒரு துறையையே பொருளாக வைத்து நூறு செய்யுளாலேனும் மேற்பட்ட செய்யுட்களாலேனும் பாடப்படுவது. அந்த வகையில் வேறு பல நூல்கள் இருப்பினும் ஒருதுறைக் கோவை யென்று பொதுவகையாற் கூறின் யாவரும் இரகுநாத சேதுபதி ஒருதுறைக் கோவையென்றே கொள்ளும் தலைமை அதற்கு இருந்து வருகிறது.

'நாணிக் கண் புதைத்தல்' என்னும் ஒரே துறையை வைத்துக்கொண்டு ஒவ்வொரு செய்யுளிலும் வெவ்வேறு கற்பனைகளை அமைத்து நானூறு செய்யுட்கள் பாடி அமிர்த கவிராயர் அப்பிரபந்ததை முடித்தார். அதன் இனிமையை அரசரும் அரசரைச் சார்ந்தோரும் புலவர்களும் அறிந்து இன்புற்ற‌னர்.

சிறந்த நூல்களை அரங்கேற்றுதல் பழைய கால வழக்கம். அரங்கேற்றம் பெரிய திருவிழாவைப்போல நடைபெறும். அமிர்த கவிராயருடைய பிரபந்தமும் அரங்கேற்றப்பட வேண்டுமென்பது புலவர் பெருமக்களுடைய விருப்பமாக இருந்தது. அரசர் அது மிகச் சிற‌ப்பாக ந‌டைபெறுவதற்குரிய காரியங்களைச் செய்யும்படி மந்திரிகளுக்கு உத்தரவிட்டார்.

உள்ளூரிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் பலர் அர‌ங்கேற்ற விழாவிற்கு வந்திருந்தனர். பல கனவான்களும் புலவர்களும் கூடியிருந்த மகாசபையில் கோவையின் அரங்கேற்றம் தொடங்கப்பட்டது. அரசர் தம் இருக்கையில் வீற்றிருந்தார். ஒவ்வொரு செய்யுளாகக் கூறி அமிர்த கவிராயர் பொருள் சொல்லி வந்தார். ஒவ்வொரு செய்யுளும் ஆனவுடன் அரசர் பொன்னாற் செய்யப்பெற்ற *எலுமிச்சம்பழ மொன்றைப் புலவருக்குப் பரிசாக உருட்டி வந்தார். சில செய்யுட்கள் ஆயின. மேலே ஒரு செய்யுளைச் சொன்னபோது யாவரும் அதன் பொருட்சிறப்பிலே ஈடுபட்டார்கள். மற்ற‌ச் செய்யுட்களைக் காட்டிலும் கவிராயருடைய திறமை அதில் அதிகமாக வெளிப்பட்டது. அதனைக் கூறி முடித்தவுடன் அரசர் வழக்கம் போலவே பொன் எலுமிச்சம்பழமொன்றை உருட்டினார். அப்பொழுது அருகில் இருந்த புலவர் ஒருவர், "இந்தச்செய்யுள் மிகவும் அருமையானது. இதை மகாராஜா அவர்கள் ந‌ன்றாக உடைத்துப் பார்த்து இதன் சிறப்பை உணரவேண்டும்" என்றார்.
-----------
*பொன் தேங்காயென்று கூறுவதும் உண்டு.

அதைக் கேட்ட அரசர், "நாம் நன்றாக இதன் சுவையை உணர்ந்தோம். இதற்கு உருட்டிய எலுமிச்சம்பழத்தை உடைத்துப் பார்த்தால் அது தெரியவரும்" என்றார். உடனே அந்தப் பொன் எலுமிச்சம் பழத்தை உடைத்துப் பார்த்தார்கள்.அதனுள்ளே மாணிக்கப் பரல்கள் இருந்தன. அரசர் வரிசைய‌றிந்து பரிசளிக்கும் திறத்தை யாவரும் அறிந்து வியந்து மகிழ்ந்து மிகவும் பாராட்டினர். பிறகு அரங்கேற்றம் இனிது நிறைவேறியது.

அதன்பின் அரசர் தம்மீது அப்பிரபந்தத்தைப் பாடியதற்காகத் தம் ஸம்ஸ்தானத்திலுள்ள பொன்னங்கால் என்னும் வளப்பம் மிக்க கிராமத்தை அமிர்த கவிராயருக்கு வழங்கினர். அதுமுதல் அவருக்குப் பொன்னங்கால் அமிர்த கவிராயரென்ற பெயரே வழங்கலாயிற்று.

இரகுநாத சேதுபதிவேந்தருடைய ஆஸ்தானத்தில் இருந்த அனந்த கவிராயரும் சிறந்த புலவர். அவர் அமிர்தகவிராயருக்கு உற‌வினர்; தமிழ்ச்செய்யுட்களை விரைவிலே பாடக்கூடியவர். மதுரைப் ப‌திற்றுப் பத்தந்தாதி என்ற நூலைப் பாடியவர் அவரே. அப்புலவர் தம் அரசரைப் பாராட்டிப் பல செய்யுட்களை இயற்றினார். சில பிரபந்தங்களைப் பாடியிருத்தலும் கூடும். ஆனால், அவை இப்போது கிடைக்கவில்லை. பாவாணர் தம்மைப் பாமாலை களாற் புனையப் புனைய அவர்களுக்குப் பரிசு பல வழங்கி ஆதரித்துப் பாதுகாத்து வந்த சேதுபதி வேந்தர் அனந்த கவிராயருக்கு மானூர் என்றதோர் ஊரை வழங்கினார். அது நல்ல வளப்பமுடையது.

மானூரைப் பெற்ற கவிராயர் மிக மகிழ்ந்து, "மகாராஜா அவர்கள் பல கலைகளைத் தம்மிடம் கொண்டு மானை எனக்கு வழங்கினார்கள்" என்று சாதுரியமாகக் கூறினார். கலையறிவுள்ளவரானமையாலேயே இந்தப் பரிசு வழங்கினாரென்ற கருத்துக்கொண்டு இங்ஙனம் கூறினார்.

இந்த வாக்கியத்திலே, "அரசர் பல ஆண்மான்களை வைத்துக் கொண்டு எனக்கு ஒரு பெண்மானை யளித்தார்" என்றும் ஒரு பொருள் தொனிக்கின்றது. அது கேட்ட அரசர், "உங்கள் மானுக்குக் கலையும் தருகிறேன்" என்று சொல்லிக் கலையூர் என்றதோர் ஊரையும் கவிராயருக்குப் பரிசாக அளித்தார்.

அரசருடைய சாதுரியத்தையும் வள்ளன்மையையும் புலவர்கள் பாராட்டினார்கள். அனந்த கவிராயர் மானூரையும் கலையூரையும் ஒருங்கே தமக்கு உரியனவாக்கிக் கொண்டார்.

புலவர்களுக்குள் போட்டி வந்துவிட்டால் அப்பொழுது வெளிவரும் நூலோ செய்யுளோ சிறந்ததாக இருக்கும். இதனை அறிந்த சேதுபதி அரசர் இரண்டு புலவர்களுக்குள் போட்டி விளைவித்துக் கலைவிநோதம் காண்பார். அந்தப் போட்டியால் மனவேறுபாடு உண்டாகாதபடி பார்த்துக்கொள்வார். இறுதியில் இரு சாராருக்கும் ஏற்றபடி பரிசளித்து மகிழ்விப்பார். அந்த ஆஸ்தானத்தில் இருந்த சர்க்கரைப் புலவர் சவ்வாதுப் புலவரென்னும் இருவரிடையேயும் இத்தகைய வாதம் நடப்பதுண்டு. 'சர்க்கரை தொண்டைமட்டும்; சவ்வாது கண்டமட்டும்' என்னும் பழமொழி யொன்று அவ்விரு புலவர்கள் சம்பந்தமாக வழங்கி வருகிறது.

உறவினர்களாகிய அமிர்த கவிராயரும் அனந்த கவிராயரும் ஒருமுறை ஒரு கவிதைப் போரில் ஈடுபட்டார்கள். வண்ணமொன்றைக் குறித்த காலவரையறைக்குள் இருவரும் பாட வேண்டுமென்றும், அதில் இன்ன இன்ன வார்த்தைகளும் இன்ன இன்ன பொருளும் இன்ன இன்ன முறையில் அமைய வேண்டுமென்றும், யார் முதலில் பாடி முடிக்கின்றாரோ அவர் மற்றவரின் காதை அறுத்து விடுவதென்றும் வரையறை செய்து கொண்டார்கள். அரசர் முன்னிலையில் இது நடைபெற்றது.

இருவரும் வண்ணம் பாடத் தொடங்கினர். அமிர்த கவிராயர் வண்ணம் பாடி எழுதி முடித்து விட்டார். அப்போது அனந்த கவிராயர் இறுதி வரியை எழுதிக் கொண்டிருந்தார். அமிர்தனார் கையில் தோட்டியை எடுத்துக்கொண்டு, "இவரே தோற்றார்; இன்னும் வண்ணத்தை முடிக்கவில்லை. இவர் காதை அறுத்துவிடுவேன்" என்று அனந்தனாரை அணுகினார். அதற்குள் அனந்தனார் வண்ணத்தை முடித்துவிட்டு, "பைத்தியமே! காதிருந்தாலல்லவோ அறுக்க முடியும்? அனந்தனுக்குக் காது ஏது?" என்று சாதுரியமாகக் கேட்டார். அனந்தன் என்பது ஆதிசேடனது பெயர். பாம்புக்குக் கண்ணே காதாக உதவுவதென்றும் அதற்குத் தனியே காதில்லை யென்றும் சொல்வார்கள். அனந்தனுக்குக் காது ஏதென்ற வாக்கியம் ஆதிசேடனுக்குக் காதில்லையென்ற பொருளைத் தோற்றச் செய்தது. அனந்தனார் தாம் தோற்றதாகச் சொல்லிக் கொள்ளாமல் சாதுரியமாக இங்ஙனம் கேட்கவே யாரும் கொல்லென்று நகைத்தார்கள். அமிர்த கவிராயர் தோட்டியைக் கீழே போட்டு விட்டார். காதை அறுக்கவேண்டுமென்பது அவர் கருத்தன்று.

அரசர் அனந்த கவிராயரது பேச்சினாற் கவரப்பட்டார்ர். அப்பேச்சுக்காகத் தனியே பரிசு வழங்கப்பட்டது. "அனந்த கவிராயர் பாட்டுக்கும் பரிசு பெறுவார்; பேச்சுக்கும் பரிசு பெறுவார்" என்று புலவர்கள் பேசிக் கொண்டனர்.
------------------------------------


15. பிச்சைப் பாட்டு


சென்னையில் இப்பொழுதுள்ள இராசதானிக் கல்லூரி (Presidency College) ஆரம்பத்தில் ஒரு சிறு பள்ளிக்கூடமாக இருந்தது. அப்போது மாகாணப் பள்ளிக்கூடம் (Provincial School) என்ற பெயரால் அது வழங்கி வந்தது. அக்காலத்தில் அதில் வெவ்வேறு துறைகளில் ஆசிரியர்களாக இருந்தவர்கள் பற்பல அரிய காரியங்களைச் செய்திருக்கிறார்கள். தமிழ் நாட்டிற் சிறந்த புகழ்வாய்ந்தவர்களாக விளங்கிய வித்துவான் தாண்டவராய முதலியார் முதலியவர்கள் அதில் தமிழ்ப்பண்டிதர்களாக இருந்தார்கள். அவர்களுள் ஒருவரான விசாகப் பெருமாளையரென்ற வீரசைவ வித்துவான் இலக்கணப் பயிற்சி மிக்கவர். அவர் இயற்றமிழாசிரிய ரென்னும் சிறப்புப் பெயர் பெற்றவர். அவருடைய தம்பியராகிய சரவணப் பெருமாளையரும் தமிழ்ப்புலமை மிக்கவர். அவ்விருவரும் சில நூல்களை இயற்றியுள்ளார்; சில பழைய நூல்களைப் பதிப்பித்து மிருக்கின்றனர். அவர்களிடத்திற் பாடங்கேட்ட சிறந்த மாணாக்கர்கள் பலர். தில்லையம்பூர்ச் சந்திரசேகர கவிராஜ பண்டிதரென்பவர் அவர்களுள் ஒருவராவர்.

இவர் தமிழ்மொழியிற் பேரன்புடையவர்; சிறந்த நூற்பயிற்சியுள்ளவர். தம் ஆசிரியர் இயற்றிய பஞ்சலக்ஷண வினாவிடை, பாலபோத இலக்கணமாகியவற்றையும், வேறு நூல்க களாகிய நன்னூல் விருத்தியுரை, யாப்பருங்கலக் காரிகையுர்ரை, தண்டியலங்காரம், வச்சணந்தி மாலை, விஷப்பிரதி விஷத்திரட்டு, அரபத்த நாவலர் இயற்றிய பரதநூல் முதலியவற்றையும் ஆராய்ந்து பதிப்பித்திருக்கிறார். இவர் பல மாணக்கர்களுக்குப் பாடஞ் சொல்லியும் வந்தார்; சித்தூர் ஹைஸ்கூலில் பல வருஷங்கள் தமிழாசிரிய‌ராக வேலை பார்த்தார்; திரிசிரபுரம் சி.தியாகராச செட்டியார் ஆறுமாதம் ஓய்வெடுத்துக்கொண்ட காலத்தில் கும்பகோணம் காலேஜிலும் பண்டிதராக இருந்து பாடஞ் சொன்னார்.

மற்ற வித்துவான்களோடு இவர் மனங்கலந்து பழகிப் பொழுதுபோக்குவார். இவரிடம் பொறாமை யென்பது மருந்துக்கும் இல்லை. பழம் புலவர்களுடைய வரலாறுகளை அறிவதிலும் முன்னோர் பாடல்களைத் திரட்டுவதிலும் இவருக்கு மிக்க ஊக்கம் இருந்து வந்தது. எங்கே சென்றாலும், அங்கே வழங்கும் புலவர் வரலாறுகளையும் பழம்பாடல்களையும் கேட்டு இவர் தொகுத்து வந்தார். பலரிடம் வினாவி அவர்கள் எழுதியனுப்பும் தனிச் செய்யுட்களையும் சேர்த்து வந்தார். பழைய பாட்டென்று யார் எதைச் சொன்னாலும் பொறுமையோடு கேட்டு எழுதிக்கொள்வார். இங்ஙனம் பலவகையாகச் சேர்த்துத் தனிப்பாடற் றிரட்டென்னும் புத்தகத்தை ஏறக்குறைய எழுபது வருடங்களுக்கு முன் வெளியிட்டார். இக்காலத்தில் பல‌ தனிப்பாடற்றிரட்டுக்கள் உலாவுகின்றன. முதன் முதலில் அத்தகைய நூலை வெளியிட்ட‌ பெருமை சந்திரசேகர கவிராஜ பண்டிதரையே சார்ந்ததாகும்.

இவர் என்பால் அன்புடையவராக இருந்தார். இவருடைய புத்தகத்திற் சேர்த்துக் கொள்ளும்படி நானும் பல செய்யுட்களை எழுதிஅனுப்பியதுண்டு. அக்காலத்தில் நான் திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து வந்தேன். இவர் திருவாவடுதுறைக்கு வந்த சமயங்களில் இவரோடு மனமகிழ்ந்து பொழுதுபோக்குவது எனது வழக்கம். என்னுடைய தமிழாசிரியராகிய மகாவித்துவான் ஶ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் காலம் சென்றுவிட்டமையால் பழைய நூல்களில் உள்ள சில சந்தேகங்களை அக்காலத்தில் இவரிடம் கேட்டு நான் தெரிந்து கொண்டிருக்கிறேன். கோபம் சிறிதும் இல்லாமல பொறுமையோடு இவர் பேசுவார்; விஷயங்களை ஆராய்வார்; பிறர் தூஷித்தாலும் கவனியார். தாம் தனிப்பாடல்களைச் சேகரித்த வரலாறுகளைப்பற்றி அவ்வப்போது சொல்வார். அவற்றை அக்காலத்திற்கேட்டபோது எனக்கு அளவிறந்த வியப்பு உண்டாகும். அவர் கூறியவற்றுள் ஒன்றை இப்போது தெரிவிக்கிறேன்.

சந்திர சேகர கவிராஜ பண்டிதர் சென்னையில் இருந்தபோது வண்ணார் பேட்டையிலுள்ள சஞ்சீவிராயன் தெருவிற் சில வருஷங்கள் வசித்துவந்தார். ஒருநாள் இரவு நிலா நன்றாக எறித்தது. இராப்பிச்சைக்காரன் ஒருவன் வீடுதோறும் சென்று அன்னப்பிச்சை வாங்கிக்கொண்டே வந்தான். அவன் பல ஊர்களைச் சுற்றினவன்; பல செய்யுட்களை அவன் அறிந்திருந்தான். "அம்மா, பிச்சை" என்று மட்டும் சொல்லிப் பிச்சை வாங்காமல், இனிய சாரீரத்தோடு தமிழ்ப்பாடல்களைப் பாடி அன்னங்கேட்பது அவன் வழக்கம்.

பிச்சைக்காரன் பாடிக்கொண்டே சந்திர சேகர கவிராஜபண்டிதர் இருந்த தெருவழியே வந்தான். அவனுடைய இனிய குரல் வீட்டுக்குள் இருந்தவர்களை வெளியே வரச்செய்தது; பெண்டிர் அவன் பாட்டில் மயங்கி அவனுக்கு மனமுவந்து அன்ன மளித்தனர்.

தெம்மாங்கு, வெண்ணிலாப்பாட்டு, பராபரக்கண்ணி முதலியவற்றை அவன் பாடுவான். ஒருகண்ணியில் ஓரடியையே திருப்பித்திருப்பிப் பாடுவான். ஒரு தெரு முழுவதற்கும் அந்த ஒரு கண்ணியே அவனுக்குப் போதியதாக இருக்கும். அன்று வீசிய நிலாவொளியில் அவனுடைய ஞாபகம் நிலாவைப்பற்றிய பாட்டொன்றிற் சென்றது.

"ஊரைச் சுடுமோ"

என்று அவன் ஆரம்பித்தான். தமிழ்ப்பாட்டாக யார் எதைச் சொன்னாலும் கேட்பதில் ஆவல்கொண்ட கவிராஜபண்டிதரை அந்த ஒலி வீட்டுக்குள்ளிருந்து வெளியே வருவித்தது. பண்டிதர் பிச்சைக்காரனருகிலே சென்று நின்றார். அவன், "ஊரைச்சுடுமோ" என்னும் தொடரையே பலமுறை நீட்டியும் குறுக்கியும் சொல்லிக்கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்றான். பண்டிதருக்கோ அந்த நிமிஷத்திலேயே பாட்டு முழுவதையும் அவன் சொல்லிக் கேட்க வேண்டுமென்ற ஆவல் உண்டாயிற்று. அவனாகச் சொல்லட்டு மென்று காத்திருந்தார். "ஊரைச் சுடுமோ" என்பதற்குமேல் ஓரெழுத்துக் கூட அவன் வாயிலிருந்து வரவில்லை.

அவர் பொறுமையை இழந்தார்; "அந்தப் பாட்டை முழுவதும் சொல்லிவிடப்பா" என்று கேட்டார். பிச்சைக்காரன் தலையெடுத்துப் பார்த்தான்; ஒன்று மில்லாமற் பிச்சை வாங்குவதைவிடச் சில பாட்டுக்களைப் பாடிப் பிச்சை வாங்க வெண்ணித் தான் பாடிவரும் பாட்டை ஒரு பெரியவர் கவனத்தோடு கேட்டு வருகிறாரென்பதை அவன் உணர்ந்தபோது அவனுக்குச் சிறிது கர்வமும் உண்டாயிற்று.

"இதோ சொல்லுகிறேன்" என்று கூறி மறுபடியும், "ஊரைச் சுடுமோ" என்றே தொடங்கினான். 'இவனுக்கு இதற்குமேல் தெரியாதோ?' என்ற சந்தேகம் பண்டிதருக்கு உண்டாயிற்று.

பலமுறை, "ஊரைச் சுடுமோ" என்பதையே திருப்பித் திருப்பிச் சொல்லிவிட்டு அப்பால் பெரிய புதையலை வெளியிற் கொண்டு வந்தவன் போல அவன்,

    "உலகந் தனைச்சுடுமோ"

என்றான்.

அதைக்கேட்ட பண்டிதர் அந்தப் பாட்டு ஒரு வெண்பாக இருக்கவேண்டுமென்று ஊகித் தறிந்தார். "பாட்டின் இனிமை முதலடியிலேயே ததும்பி நிற்கிறது! பின் அடிகள் எவ்வளவு இனிமையாக இருக்குமோ!" என்று ஏங்கினார்.

"ஐயா, நான் மறந்துவிட்டேன். தானாக வந்தால் வரும்; நானாக நினைத்தால் வருவதில்லை" என்றான் பிச்சைக்காரன்.

"யோசித்துப் பாரப்பா" என்று சொல்லிப் பண்டிதர் அவனைத் தம் வீட்டிற்கு அழைத்துச் சென்று அன்னமிடச் செய்தார். அவன் தன்னால் ஆனவரைக்கும் நினைத்து நினைத்துப் பார்த்தும் வரவில்லை. முதலடிக்கு மேலே பாடும் வழக்கம் அவனுக்கு இல்லை.

"பாட்டு முழுவதும் உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார் பண்டிதர்.

"நன்றாகத் தெரியும். எனக்கு ஒரு கிழவனார் அந்தப்பாட்டைச் சொல்லித் தந்தார். பிச்சைக்காரனுக்கு ஓரடி போதாதா? ஐயா!" என்றான் அவன்.

பண்டிதர், "எப்போதாவது பாட்டு முழுவதும் ஞாபகம் வந்தால் வந்து சொல்; இனாம் தருகிறேன்" என்றார்.

பிச்சைக்காரன், "என்னால் முடிந்தவரையிற் பார்க்கிறேன்" என்று கூறிவிட்டு அடுத்த தெருவுக்குப் போனான். பண்டிதருக்குத் தம் வீட்டில் இருப்புக்கொள்ளவில்லை. அவன் உத்ஸாகங்கொண்டு ஒருகால் அடுத்த தெருவில் பாட்டு முழுவதையும் சொல்லக் கூடுமோவென எண்ணினார்; அவனைப் பின் தொடர்ந்தார். அவன் அங்கும், "ஊரைச் சுடுமோ" என்ற தொடரையே பாடினான். தெருக்கோடியில் அவனுடைய வாயிலிருந்து இரண்டாவது அடியும் வந்தது:

    "ஊரைச் சுடுமோ வுலகந் தனைச்சுடுமோ
    ஆரைச் சுடுமோ வறியேனே"

என்று அவன் பாடினான். பண்டிதர் சந்தோஷத்தால் துள்ளிக் குதித்தார்; 'எத்தனை அழகான வெண்பா' என்று மகிழ்ந்தார். 'மற்றப் பகுதியும் இப்படியே இவன் வாயிலிருந்து நழுவி வராதா!' என்று ஆவலோடு எதிர்பார்த்தார். அன்று அந்த இரண்டடிக்குமேல் பிச்சைக்காரன் திருவாய் மலரவில்லை.

அப்பால் இரண்டு மூன்று நாட்கள், அன்னப்பிச்சை கேட்டு வந்த அவனிடம் இந்தக் கவியைப் பிச்சை கேட்டுக்கொண்டே பண்டிதரும் தொடர்ந்து அலைந்தார். ஒரு பயனும் உண்டாகவில்லை. பிச்சைக்காரனும் நாள் முழுவதும் பாட்டை ஞாபகப்படுத்திப் பார்த்தான். தோற்றவில்லை.

நான்காம் நாள் அவனுக்கு ஞானோதயமானது போலப் பாட்டின் பிற்பகுதி உதயமாயிற்று. அதைக் கேட்ட பண்டிதர் சிறந்த குரு ஒருவரிடம் உபதேசம் பெற்றுப் பிரம்மானந்தத்தை அனுபவித்தவர் போலானார். பல வருஷங்கள் தவஞ்செய்து ஓர் அருமையான பிள்ளையைப் பெற்றால் தந்தைக்கு எவ்வளவு ஆனந்தம் உண்டாகும்! பண்டிதர் அடைந்த ஆனந்தம் அதை விட அதிகமென்றே சொல்ல வேண்டும்.

பண்டிதர் பிச்சைக்காரனுக்கு 'இனாம்' கொடுத்தார். வேறு சில செய்யுட்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். அந்தப் பிச்சைக்காரன் தந்த பிச்சையாகிய பாட்டைத் தனிப்பாடற்றிரட்டிற் சேர்த்துப் பதிப்பித்தார். அது வருமாறு:-

    * "ஊரைச் சுடுமோ வுலகந் தனைச்சுடுமோ
    ஆரைச் சுடுமோ வறியேனே - நேரே
    பொருப்புவட்ட மானநகிற் பூங்கொடியீ ரிந்த
    நெருப்புவட்ட மான நிலா."

* இது விரகதாபத்தால் வருந்திய தலைவி ஒருத்தி நிலாவொளியை வெறுத்துக் கூறியது.

பண்டிதர் பதிப்பித்த தனிப்பாடற் றிரட்டில் உள்ள மற்றப் பாட்டுக்கள் சிலவே அவருடைய ஞாபகத்தில் இருந்தன. அவற்றுள்ளும் இந்தப்பாட்டே அவருடைய மனத்தில் பசுமரத்தாணிபோலப் பதிந்து நிலவியது.
------------------------


16. "பவ்ய ஜீவன்"


சீவக சிந்தாமணி தமிழில் உள்ள‌ சிறந்த காப்பியங்களில் ஒன்று. அது ஜைனசமயத் துற‌வியாகிய திருத்தக்க தேவரென்னும் பெரியாரால் இயற்றப்பெற்ற‌து. ஜைனர்கள் அந்நூலை ஒரு பாராயண நூலாகப் போற்றி வருகின்றனர்.

முத‌ன் முத‌லில் அந்த‌ நூலைத்தா‌ன் யான் ஆராய்ந்து வெளியிட்டே னென்ப‌து த‌மிழுல‌கு அறிந்த‌ விஷ‌ய‌ம். சிந்தாம‌ணியே என்னுடைய‌ த‌மிழ்நூற் ப‌திப்பில் முத‌ல் அரும்பு. வ‌ழ‌க் கொழிந்த‌ ப‌ழ‌ம் த‌மிழ் நூல்‌க‌ளை அறிவ‌த‌ற்கும் ஆராய்வதற்கும் அச்சிடுவற்கும் என் உள்ளத்தைப் பக்குவப்படுத்தி ஊக்கமூட்டியவை அந்த நூலும் அதன் உரையுமே. தமிழ்த் தொண்டினால் இன்பம் உண்டென்னும் உண்மையை எனக்கு முதன் முதலில் வெளிப்படுத்தியது அந்த நூலே.

முதன் முயற்சியிலே அடையும் சிரமங்கள் அளவிற‌ந்தன. சிந்தாமணியைப் போன்ற நூல்கள் தமிழ்நாட்டில் வழங்காத அக்காலத்தில் அதன் நடையே ஒரு தனிப் பாஷைபோல‌ இருந்தது. அதன் உரையோ பின்னும் புதியதாகவே தோற்றியது. அதில் உள்ள விஷயங்களோ ஜைனசமயத்தைச் சார்ந்தவை. சைவம், அத்வைதம், வைணவம் என்னும் மூன்று சமயக் கருத்துக்களே தமிழ்நாட்டில் அதிகமாக வழங்கின. ஜைன சமயத்தைப்பற்றி அறிந்தவர்களையோ, கூறும் தமிழ் நூல்களையோ காண்பது அரிதாக இருந்தது. அன்றியும் திருவாவடுதுறை யாதீனமாகிய சைவ மடத்தில் படித்த எனக்குப் புறச்சமயமாகிய ஜைனத்தைப்பற்றி அறிந்துகொள்ள‌ வாய்ப்பு ஏது?

நான் கும்பகோணம் காலேஜில் இருந்தேன். சிந்தாமணி ஏட்டுப் பிரதியைக் கொடுத்துப் படிக்கச் சொன்னவர் சேலம் இராமசாமி முதலியார். நானும் படித்து அவருக்கும் பாடஞ் சொல்லி வந்தேன். ஜைனசமயக் கொள்கைகளை அறிந்துகொள்வதற்கு மிகவும் பாடுபட்டேன். என்னிடம் படித்துக்கொண்டிருந்த இராமலிங்க பண்டாரமென்பவர் என் கஷ்டத்தை யறிந்து கும்பகோணத்தில் ஜைனர்கள் சிலர் இருக்கிறார்களென்று கூறியதோடு தமக்குத் தெரிந்த சந்திரநாத செட்டியாரென்ற ஒருவரை எனக்குப் பழக்கம் செய்விப்பதாகவும் சொன்னார்.

ஒருநாள் சந்திரநாதஞ்செட்டியார் வீட்டிற்கு அவரும் நானும் போனோம். அந்த வீடு ராம‌ஸ்வாமி கோவிலுக்கு மேல்புறமுள்ள ஒரு தெருவில் இருந்தது. அவர்கள் வீட்டில் வாழை மரமும், மாவிலைத் தோர‌ணமும் கட்டப்பட்டிருந்தன. மாக் கோலம் போட்டிருந்தார்கள். ஜைனசமய நூல்களில் மிகச் சிற‌ந்த பயிற் சியையுடைய வீடூர் அப்பாசாமி நயினார் என் பவரும் வேறு சிலரும் வந்திருந்தனர். முதலில் சந்திரநாத செட்டியாரையும் அப்பால் மற்றவர்களையும் நான் பழக்கம் செய்து கொண்டேன். "இன்று உங்கள் வீட்டில் ஏதோ சுபகாரியம் நடந்ததுபோலிருக்கிறது" என்றேன் நான்; "ஆமாம்!இன்று சிந்தாமணி பாராயண பூர்த்தி உத்ஸவம். சில மாதங்களாகச் சிந்தாமணி படனம் நடந்து வந்தது" என்றார். வீடூர் அப்பாசாமி நயினார் சந்தை சொல்லச் சந்திரநாத செட்டியார் முதலியோர் அதைப் படனம் செய்து வந்தார்களென்று அறிந்தேன். எனக்கு அப்போது இராமயண பட்டாபிஷேகம், பெரிய புராண படனம் முதலிய செய்திகள் ஞாபகத்துக்கு வந்தன.
-------------------
*இவர், கும்பகோணம் காலேஜ் பிரின்ஸிபாலாக இருந்து உப‌காரச் சம்பளம் பெற்றுள்ள ஸ்ரீமான் ராவ் பகதூர் அ.சக்கரவர்த்தி நயினார் அவர்களுடைய பிதா.

அப்பால் என்னுடைய சந்தேகங்கள் போவதற்கு அந்த ஜைனர்கள் பெரிதும் துணை செய்வார்களென்ற தைரியம் எனக்கு உண்டாயிற்று. அப்பாஞாமி நயினாரிடமிருந்து பல விஷ யங்களை நான் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அவர் சிலகாலம் கும்பகோணத்தில் இருந்தார். அவர் இருந்தவரையிலும் அடிக்கடி அவரிடம் சென்று விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். அவர் பிறகு வீடூர் சென்று விட்டார். நான் கண்டு பேசிய ஜைனர் பலர், கும்பகோணத்தில் தரணி செட்டியார் என்ற ஒருவர் இருந்தனரென்றும் அவர் ஜைன விஷயங்களில் ஓர் உரையாணியைப்போல விளங்கினாரென்றும் கூறினர்; "அவர் இருந்திருந்தால் இந்த விஷயங்களை உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்கிவிடுவாரே!" என்று இரங்கினர்.

சந்திரநாத செட்டியார் மிக்க செல்வர்; ஜைன நூற்பயிற்சி நன்றாக உடையவர். அவருக்குச் சிந்தாமணி முழுவதும் பாடமாக இருந்தது. வைணவர்கள் திவ்யப் பிரபந்தத்தை ஸேவிப்பது போல அவர் சிந்தாமணியை ஸேவித்து மனனம் பண்ணி யிருந்தார். நான் சிந்தாமணியை ஆராய்ந்தபோது நச்சினார்க்கினியர் தம் உரையினிடையே பின்னே வரும் செய்யுட்பகுதியை எடுத்துக் காட்டிச் சில செய்திகளை விளக்கி வருவதை அறிந்தேன். அப்படிக் காட்டப் பெற்ற பகுதிகள் எங்கே இருக்கின்றனவென்பதைத் தேடுவது ஆரம்ப காலத்தில் சிறிது கஷ்டமாக இருந்தது. அப்போது சந்திரநாத செட்டியாரைக் கேட்பேன். கேட்டவுடனே அவர் அப்பகுதிகள் இன்ன இன்ன இலம்பகத்தில் இன்ன இன்ன பாட்டில் வருகின்றனவென்று சொல்லிவிடுவார். இப்படியே சிந்தாமணியை ஜைனர்களிற் பலர் பாடம் பண்ணியிருந்ததை நான் அறிந்தேன். ஆனாலும் அச்செய்யுட்களை ஆராய்ச்சி முறையில் அவர்கள் படிக்கவில்லை; குற்றங் களைந்து சுத்தபாடமாக மனனம் செய்யவுமில்லை; பரம்பரையாக வந்த வழக்கத்தினாலும் பக்தியினாலும் சிந்தாமணியைப் பாராயணம் செய்தும் மனனம் செய்தும் வந்தார்கள்; சம்பிரதாயமாக வழங்கி வந்த உரை யொன்றையும் அவர்கள் நெட்டுருச் செய்திருந்தார்கள். அந்த உரை பெரும்பாலும் வடமொழிச் சொற்கள் நிரம்பியும் பரிபாஷைகள் விரவியும் அமைந்திருக்கும். மூலத்திலும் உரையிலும் பல காலமாக ஏறிப்போன வழுக்கள் வழுக்களாகவே இருந்தன, ஏட்டுப் பிரதிகளும் அவர்கள் பாடமும் எவ்வளவோ இடங்களில் மாறுபட்டிருந்தன. அதனால் அவர்கள் பாடத்தை வைத்துக்கொண்டு ஆராய்வதென்பது இயலாத காரியமாயிற்று.

ஒருமுறை சந்திரநாத செட்டியார் வெளியூருக்குச் சென்றிருந்தார். ஸமவசரணம் என்பதைப்பற்றி விரிவாக அறியவேண்டிய சந்தர்ப்பம் வந்தது. சந்திரநாத செட்டியார் இல்லாமையின் வேறு யாரையேனும் கேட்கலா மென்று எண்ணினேன். அவர் வீட்டிற்கு எதிர் வீட்டில் குணபால செட்டியாரென்ற ஒருவர் இருந்தார். அவரும் ஜைன சமய சாஸ்தி ரங்களிற் பயிற்சியுடையவரென்று கேள்வியுற்றேன். யாரேனும் ஒருவர் என் ஆராய்ச்சிக்குச் சிறிதளவு பயன்படக்கூடியவராக இருந்தாலும் அவரைத் தேடிப்பிடித்துப் பழக்கம் செய்து கொண்டு அவரிடமிருந்து அவருக்குத் தெரிந்தவற்றை அறிந்துகொள்வதில் எனக்குச் சிறிதும் சலிப்பு ஏற்படுவதில்லை. ஆதலின் குண பால செட்டியாரையும் பார்த்துப் பழக்கம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்று நிச்சயம் செய்துகொண்டேன். அதனால் ஒருநாள் அவர் வீட்டுக்குப் போனேன்.

அவரும் ஒரு செல்வர்; பிராயம் முதிர்ந்தவர். நான் போனவுடன் என்னை அன்போடு வரவேற்று உபசரித்தார். நான் அந்த ஊர்க் காலேஜ் உபாத்தியாயராக இருந்தமையின் என்னைப்பற்றி அவர் தெரிந்துகொண்டிருந்தார். ஒரு 'ஸோபா' வில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அந்த ஆசனத்தில் மூட்டைப் பூச்சிகள் இருந்தன. மிக்க உரிமையோடும் அவை மேலே உலாவிக்கொண்டிருந்தன. ஒன்றைக் கையில் எடுத்தேன். குணபால செட்டியார், "ஹா ஹா ஹா! கொல்ல வேண்டாம், கொல்லவேண்டாம்" என்று நடுங்கிக் கொண்டே கையை அசைத்தார். ஜீவகாருண்யத்தை உயிரினும் சிறந்ததாக மதிக்கும் ஜைனர்களில் அவர் ஒருவர் என்பதை அப்போது உணர்ந்தேன். கையில் எடுத்த மூட்டைப்பூச்சியை அதனுடைய இடத்திலே சுகமாக இருக்கும்படி விட்டுவிட்டு நான் அந்த 'ஸோபா' வினின்று எழுந்திருந்து வேறிடத்தில் உட்கார்ந்துகொண்டேன். அவரிடம் ஸமவ சரண மென்பதைப்பற்றிக் கேட்டேன். அவர் தமக்குத் தெரிந்தவற்றைக் கூறிவிட்டுத் தம் வீட்டில் இருந்த ஸமவசரணத்தைக் குறிக்கும் படமொன்றைக் காட்டினார். நான் பார்த்து மகிழ்ந்தேன். அவரிடம் மேலும் பல விஷயங்களைக் கேட்டேன். சிலவற்றைச் சொன்னார். மாலை ஐந்து மணி ஆயிற்று. அவர் உணவு கொள்ளப் போய் விட்டார். இரவில் உண்ணுவது ஜைனர்களுக்கு விரோதமானது.

அவர் ஜைன சம்பிரதாயங்களை அனுஷ்டானத்தில் ஒழுங்காக அநுசரிப்பது கண்டு நான் வியந்தேன். அவர் போஜனம் செய்த பிறகு ஜினஸ்தோத்திரங்கள் சொல்லிவிட்டுப் பிறகு வந்தார். சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தார். சிலவிஷயங்களை அவர் தெளிவாகச் சொல்ல இயலவில்லை; "நாளைக்கு வாருங்கள். இவைகளைத் தெரிந்துகொள்ளலாம்" என்று அவர் கூறி என்னை அனுப்பினார். 'புஸ்தகங்களைப்பார்த்துத் தெரிந்து சொல்வார்' என்றெண்ணி நான் எழுந்து என் வீடுபோய்ச் சேர்ந்தேன்.

மறுநாள் குறித்த வேளையில் அவருடைய வீட்டிற்குச் சென்றேன். வீட்டுத் திண்ணையில் அவர் உட்கார்ந்திருந்தார். நான் அவருக்கு எதிரே சிறிது தூரத்தில் உட்கார்ந்தேன். அவர் என்னைக் கண்டவுடன், " வாருங்கள்; இருங்கள்" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார். ஏதாவது புஸ்தகத்தை எடுத்து வருவாரென்று எண்ணினேன். சிறிது நேரத்தில் மீண்டு வெறுங் கையோடு வந்தார். " சரி; இப்போது உங்கள் சந்தேகங்களை யெல்லாம் சொல்லுங்கள்" என்று சற்று ஊக்கத்தோடு சொன்னார். அவர் என்னைக் கண்டதும், உள்ளே போனதும், மீண்டுவந்து ஊக்கத்தோடு இப்படிச் சொன்னதும் அவர் ஏதோ ஒரு புதிய சகாயத்தைப் பெற்று வந்திருக்கவேண்டுமென்று தோற்றச் செய்தன.

நான் ஒரு சந்தேகத்தைக் கேட்டேன். அவர் அதைக்கேட்டு அங்கே இருந்த ஜன்னல் வழியாக உள்ளே யாரோ ஒருவரிடம் அப்படியே சொன்னார்; உள்ளிருந்து சற்று மெல்லிய குரலில் அதற்கேற்ற விடை வந்தது. செட்டியார் அடைந்த புதிய சகாயம் அந்தக் குரலையுடையா ரென்பதை அறிந்து கொண்டேன். அக்குரலுடையார் ஒரு முதிர்ந்த பெண்பாலாரென்று தோற்றியது. என்னுடைய சந்தேகத்துக்கு அது தெளிவான விடையாக இருந்தது. நானிருந்த இடத்திலிருந்து உள்ளே இருப்பவர் இன்னாரென்று பார்க்க முடியவில்லை.

அடுத்தபடி வேறொரு கேள்வி கேட்டேன், செட்டியார் அதைக்கேட்டு ஜன்னல் வழியாக உள்ளே அனுப்பினார். உள்ளிருந்து அந்த மெல்லிய குரலிலே விடை வந்தது. இப்படி நான் கேட்பதும் செட்டியார் அதை ஜன்னல் வழியாகத் தெரிவிப்பதும் அங்கிருந்து விடை வருவதுமாக ஸம்பாஷணை நடைபெற்று வந்தது. நானும் அதற்குமுன் ஓரளவு ஜைன விஷயங்களை அறிந்திருந்தேனாதலின், உள்ளிருந்துவரும் விடைகளை நன்றாகத் தெரிந்து குறிப்பெடுத்துக்கொண்டேன். இப்படி நிகழும் போது இடையே உள்ளிருந்த குரல். " இவர் பவ்ய ஜீவன்போ லிருக்கிறதே!" என்றது.

நான் மிக சிரத்தையோடு மிக நுண்ணிய ஜைன சமயக் கருத்துக்களைக் கேட்டு வந்தேன். அக்கேள்விகளால் என்னைப்பற்றி ஓர் அபிப்பிராயம் அந்தக் குரலுடையாருக்கு ஏற்பட்டிருக்கவேண்டுமென்று தோற்றியது. பவ்ய ஜீவனென்பது ஜைனர்களுள் கிரமமாக மோக்ஷமடைவதற்குத் தகுதியான நிலைமையில் இருக்கும் ஆத்மாவைக் குறிப்பது. எனக்கு அவ்விஷயம் முன்பே தெரியும். ஆதலின் என்னைப் பவ்ய ஜீவனென்று உள்ளிருந்தவர் கூறினவுடன் என் உடல் மயிர்க்கூச் செறிந்தது. அருகத் பரமேஷ்டியின் பக்தி எனக்கு அதிகமென் றெண்ணியேனும், ஜைனர் கூறும் மோக்ஷபதவி எனக்குக் கிடைக்குமென்றேனும் நான் சந்தோஷ மடையவில்லை. சிந்தாமணியை ஆராய்வதற்கு என்பால் ஓரளவு தகுதி உண்டு என்பதை அந்த இனிய குரல் கூறி என்னைத் தேற்றியதாகவே நான் கருதினேன்.

சிந்தாமணிக்கு உரை எழுதத்தொடங்கிய நச்சினார்க்கினியர் மிகவும் உழைத்துச் செய்தி களை அறிந்து முதலில் ஓர் உரை வகுத்தனராம். அதை ஜைனப் பெரியார்களிடம் காட்டிய பொழுது அவர்கள் அங்கீகரிக்கவில்லையாம். அப்பால் அவர் ஒரு ஜைனவித்தியார்த்தி போல் சித்தாமூரிலுள்ள ஜைனமடத்திற்குச் சென்று ஜைன சமயநூல்களைக் கற்றுப் பிறகு இரண்டாம் முறை உரை எழுத, அதை யாவரும் அறிந்து பாராட்டினராம்.

இந்த வரலாற்றை நான் கேள்விப்பட்டிருந்தேன், 'அத்தகைய நூலை, நடுக்காட்டில் வழிதெரியாது திகைப்பவனைப்போல நிற்கும் நான் எப்படி ஆராய முடியும்? எனக்குத் தகுதி ஏது?' என்று ஐயமும் அச்சமும் கொண்டிருந்தேன். "பவ்ய ஜீவன்" என்று எனக்கு யோக்யதாபத்திரம் ஒரு ஜைன அறிவாளிமூலம் கிடைத்ததென்றால் எனக்கு ஆறுதலும் ஊக்கமும் உண்டாவதில் என்ன ஆச்சரியம்?

"உள்ளே இருந்து பேசுபவர்கள்.....?" என்று பணிந்த குரலில் வாக்கியத்தை முடிக்காமலே செட்டியாரைக் கேட்டேன்.

"நம்முடைய பார்யை" என்று அவர் பெருமை தொனிக்கக் கூறினார். தம்மைக் காட்டிலும் தம் மனைவியாருக்கு அதிக அறிவு இருப்பதில் அவருக்கு எல்லையற்ற‌ திருப்தி இருந்தது.

"அப்படியா! அவர்கள் இன்றைக்கு எனக்கு மகோபகாரம் செய்தார்கள். நான் எங்கெங்கோ தேடி தேடிக் கஷ்டப்பட்டேன். இந்தக் காலத்தில் இவ்வளவு விஷயங்கள் அவர்களுக்குத் தெரிந்திருப்பது மிகவும் ஆச்சரியம்" என்றேன் நான்.

"எல்லாம் என் தமையனாரவர்கள் ஆசீர்வாதம். அவர்கள் இட்ட பிச்சை" என்று உள்ளிருந்த பெண்மணியார் கூறினர்; அப்படிச் சொல்லும்போதே அவர் குரல் இடையிடையே தழுதழுத்தது; துக்கத்தின் கலப்பு அதில் இருந்தது. அவர் அப்போது தம்முடைய தமைய‌னாரை எண்ணியதே அதற்குக் காரணம் என்று நான் ஊகித்துக் கொண்டேன்.

"அவர்கள் நாமோதயம் என்னவோ?" என்று நான் கேட்டேன். "தரணி செட்டியார்" என்று குணபால செட்டியாரே விடை பகர்ந்தார். "தரணி செட்டியாரவர்களா!" என்று ஆச்சரியப்பட்டேன் நான். பலர் அப்பெரியாரைப் பற்றி அடிக்கடி கூறியிருந்தது எனக்கு ஞாபகம் வந்தது.

"அவர்களைபற்றி நான் கேட்டிருக்கிறேன். அவர்களைப் பார்த்து விஷயங்கள் தெரிந்து கொள்ளும் அதிர்ஷ்டம் இல்லாவிட்டாலும் அவர்களுடைய அருமைச் சகோதரியாரிடமிருந்து தெரிந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்ததே; அதோடு, அவர்கள் எனக்கு, 'பவ்ய ஜீவன்'என்ற பட்டம்வேறு கொடுத்தார்களே; இதை நான் என்றும் மறவேன்' என்று நன்றியறிவோடு நான் கூறி விடை பெற்றுக் கொண்டேன்.
-------


17. பொறாமைத் தீ


*பல அரிய சங்கீதவித்துவான்கள் பல வருஷங்களுக்கு முன்பு தஞ்சை ஸம்ஸ்தானத்தின் ஆதரவிலே வளர்ந்து சங்கீத வித்தையைக் கற்று வளர்த்துக் கீர்த்தி பெற்று வந்தார்கள். பல உருப்படிகளை இயற்றியும், மாணாக்கர்களுக்குப் பயிற்சியளித்தும் அவர்கள் விளங்கினார்கள். பல திறப்பட்ட வாத்தியங்களில் வல்ல வித்துவான்களும் வாய்ப்பாட்டில் வல்லவர்களும், பரதத்தில் தேர்ந்தவர்களும், அந்நகரத்தில் வாழ்ந்திருந்தனர். மஹாராஷ்டிர அரசர்கள் அரசாண்ட காலத்தில் தஞ்சை ஒரு பெரிய
சங்கீத நிலயமாகவே இருந்தது.
----------
*சுதேசமித்திரன்-விஜய தசமி மலர்-1938

அந்நகரத்தில் இருந்து சங்கீத வித்தையில் மேம்பட்டு விளங்கியவர்களில் வீணைக் காளஹ‌ஸ்தி ஐயரென்பவர் ஒருவர். அவர் வீணையில் இணையற்ற தேர்ச்சி வாய்ந்தவர். அக்காலத்தில் இருந்த தஞ்சை அரசருக்குச் சங்கீதத்தில் மிக்க அபிமானமும் பயிற்சியும் இருந்தன. தினந்தோறும் அரண்மனையில் அரசர் பூஜை செய்யுங் காலத்தில் காளஹஸ்தி ஐயர் வீணை வாசித்து வருவார். அரசர் அதில் ஈடுபட்டு மிகவும் இன்புறுவார். இதனால் தஞ்சை ஸம்ஸ்தான வித்துவான்களுக்குள்ளே அவருக்கு ஒரு தனி மதிப்பு இருந்தது. அவரிடத்தில் ஒருவித தெய்விக சக்தி அமைந்துள்ளதென்றும் சிலர் கூறலாயினர்.

அவர் சங்கீதத்தில் தம்மிலும் சிறந்தவர் இலரென்ற எண்ணம் உடையவராக இருந்தார். அதனால் மற்ற வித்துவான்கள் அவரோடு நெருங்கிப்பழகுவதில்லை. மாணாக்கர்கள் அவரிடம் இசைப் பயிற்சி பெறுவதற்கு அஞ்சினார்கள். சில வித்துவான்களைப்போல் அவரும் பிறருக்குத் தம் வித்தையைக் கற்பித்தலில் விருப்பமின்றி இருந்தார்.

ஒரு சமயம் மைசூர் ஸம்ஸ்தானத்திலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. இந்தியாவின் பல இடங்களிலுமுள்ள வித்துவான்கள் அங்கே வருவார்களென்றும் அவர்களுடைய வினிகைகள் நடைபெறுமென்றும் அவர் அறிந்திருந்தார். ஆதலின் தாமும் அங்கே சென்று தம்முடைய ஆற்ற‌லைக் காட்டி வரவேண்டு மென்று எண்ணினார். தக்க சமயம் கிடைக்கவே, அங்கே போய்ச் சில நாட்களேனும் இருந்து வரலாமென்று நிச்சயித்தார். தஞ்சை அரசரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு தினந் தோறும் அரசருடைய பூஜையில் வீணை வாசிக்கும் பணியை வேறு யாரைக்கொண்டேனும் செய்விக்கும்படி ஒரு சங்கீத அதிகாரியிடம் சொல்லிவிட்டு அவர் மைசூர் சென்றார்.

* * *

மறுநாள் பூஜா காலத்தில் அரசர் ஒரு விசேஷத்தை அறிந்தார். என்றும் இல்லாதபடி அன்று வீணையின் இசை மிகவும் சிறப்பாக இருந்தது. அதனால் அவர் நெடுநேரம் பூஜை செய்திருந்து அந்த வீணாகானத்தில் இன்புற்றார். இடையே அருகிலிருந்தவரிடம், "இன்று யார் வீணை வாசிக்கிறார்கள்?" என்று கேட்டார். "காளஹஸ்தி ஐயருடைய குமாரர் வாசிக்கிறார்" என்ற விடை கிடைத்தது. அரசருக்கு அளவற்ற சந்தோஷம் உண்டாயிற்று.

அன்று முதல் இரண்டு மூன்று நாட்கள் வீணா கானம் ஒரு நாளை விட ஒரு நாள் உயர்வாகவே இருந்தது.

காள‌ஹஸ்தி ஐயருக்கு ஒரே குமாரன் இருந்தான். அவன் பேசப் பழகுவதற்கு முன்பே பாடப் பழகினான். வர வர அவனுடைய பிராயத்திற்கு மேற்பட்ட சங்கீத ஞானம் அவனுக்கு உண்டாயிற்று. தன்னை யொத்த பிள்ளைகளோடு விளையாடும்போதும் வீட்டில் இருக்கும்போதும் பாடிப்பாடி இன்புறுவான்.

தன் தந்தையார் வீட்டில் இல்லாதபோது அவன் வீணயை எடுத்துப் பழகத் தொடங்கினான். தன் தந்தையார் வாசிக்கும் காலங்களிலெல்லாம் கவனித்து வருவான். அதனால் அவருடைய உதவியில்லாமலே அவன் சங்கீதத்தில் விருத்தி ய‌டைந்து வந்தான். தன்னுடைய தகப்பனாருக்கு முன்பு அவன் பாடுவதில்லை.

அவனுடைய வீணைப் பயிற்சியோ விளையாட்டுப் பிள்ளைகள் மூலமாகப் பெரியவர்களுக்குத் தெரிந்தது. சில வித்துவான்கள் தனியே அவனை உத்ஸாகப் படுத்தி வீணை வாசிக்கச் செய்வார்கள். பல காலம் பயின்றவர்களுக்கும் சாத்தியமில்லாத பல வகைகளில் அவ‌ன் மிக்க ஆற்றல் பெற்றிருப்பதை அவர்கள் அறிந்து பூர்வ ஜன்ம புண்ணியப் பயனென்று பாராட்டுவார்கள்.

நாளடைவில் ஊரார் அவனைப்பற்றிப் பாராட்டுவது அதிகமாயிற்று. "இவன் தகப்பனாருக்கு மேல் வாசிக்கிறான்; அவருடைய‌ கர்வத்தை அவருடைய பிள்ளையே அடக்கி விடப் போகிறான்" என்று சிலர் கூறினர். "தமக்கு மிஞ்சி வீணக்கு வித்துவானில்லையென்று அவர் அகங்காரங் கொண்டிருக்கிறார். யாருக்கேனும் சொல்லிக்கொடுத்தால் தம் வித்தைக்குக் குறைவு வந்து விடுமேயென்று நினைக்கிற‌வர் அவர். தம் பிள்ளைக்குக் கூடச் சொல்லிக் கொடுப்பதில்லை. அவன் எப்படியோ மிக்க திறமையுள்ளவனாயினான்" என்று சிலர் பேசினர். சில வித்துவான்கள் அந்த இளைஞனை அரசருக்கு முன்பு வீணை வாசிக்கச் செய்ய வேண்டுமென்றும் விரும்பியதுண்டு.

காளஹஸ்தி ஐயர் ஊருக்குப் போன சமயத்தில் தஞ்சை அரண்மனையில் பூஜா காலத்தில் வீணையை வாசித்தவன் அவனே.
* * *

காளஹஸ்தி ஐயர் மைசூரிலிருந்து திரும்பி வரப் பத்து நாட்களுக்கு மேல் ஆயின. அது வரையில் அவருடைய குமாரன் அரண்மனையில் அரசருடைய பூஜாகாலத்தில் வீணை வாசித்துவந்தான். முதல்நாளில் அவன் சிறிது அச்சத்தோடு வாசித்தான். வர வர அவனுடைய பயம் நீங்கவே தன் ஆற்றல் முழுவதையும் காட்டத்தொடங்கினான் .சங்கீத ரஸிகராகிய அரசர் அந்த வீணாகானத்தில் ஈடுபட்டு அதிக மகிழ்ச்சியை அடைந்து வந்தார்.

காளஹஸ்தி ஐயர் மைசூரிலிருந்து மீண்டு வந்தார். வழக்கம்போல‌ அன்று அவர் அரசருடைய பூஜையில் வீணைவாசிக்கச் சென்றார். அவருடைய குமாரன் செல்லவில்லை. அவர் மைசூர் சென்ற‌போது தான் அரண்மனை சென்று வீணை வாசித்ததையும் அவன் அவருக்குச் சொல்லவில்லை.

அன்று பூஜையில் அரசர் சிலநாளாகக் கேட்டுவந்த இசைக்கும் அன்று கேட்டதற்கும் வேறுபாடு இருந்ததை உணர்ந்தார். காளஹஸ்தி ஐயர் வந்துவிட்டதை அறிந்து கொண்டார்.

அன்று மாலையில் காளஹஸ்தி ஐயர் அரண்மனைக்குச் சென்றார். தாம் மைசூர் சென்றதையும் அங்கே சம்மானங்கள் பெற்ற‌தையும் எடுத்துக் கூறினார். பின்பு, "நான் ஊரிலில்லாத காலத்தில் அரண்மனையில், வீணையை யார் வாசித்தார்களோ தெரியவில்லை. எப்போதும் இவ்விடத்து ஞாபகமாகவே இருந்தேன்" என்று கவலையோடு உரைத்தர்.

அப்போது அரசர், "நீங்கள் ஊரிலில்லையே என்ற‌ குறை இல்லாதபடி உங்கள் குமா ரன் செய்துவிட்டான். அவன் வீணை வாசிப்பானென்பதை இதுவரையில் நீங்கள் என்னிடம் சொல்லாமல் மறைத்துவிட்டீர்களே. உங்களுக்கு ஏற்ற புத்திரன் அவன். அவனுடைய வாசிப்புக்கும் உங்கள் வாசிப்புக்கும் சிறிதளவுகூட வேறுபாடு தெரியவில்லை. சில சமயங்களில் உங்களுடைய வாசிப்பைக் காட்டிலும் சிறிது உயர்வாகக்கூட இருந்தது. இனிமேல் நீங்கள் இடையிடையே சில தினங்களில் நம்முடைய பூஜைக்கு அவனையே வாசிக்கவரச் சொல்லலாம். அவனுடைய வினிகை ஒன்று நம் சபையில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கூறினார்.

காளஹஸ்தி ஐயர் திடுக்கிட்டார். "இவ்வளவும் உண்மையாயிருக்குமா?" என்று அவர் எண்ணலானார். அவர் மனத்தில் ஒருவிதமான கலக்கம் உண்டாயிற்று. அரசரிடம் விடை பெற்றுக்கொண்டு வீடு சென்றார்.

போகும்போதே அவருடைய மனத்திலே பல வகையான எண்ணங்கள் எழுந்தன. தமக்குத் தெரியாமல் தம்முடைய பிள்ளை இவ்வளவு வன்மை பெற்றிருப்பதில் அவருக்குச் சிறிதும் சந்தோஷம் உண்டாகவில்லை. அவனைத் தம் குமாரனாக எண்ணிப் பார்க்க அவர் மனம் இடங் கொடுக்கவில்லை; யரோ ஒரு வித்துவான் தமக்கு மேற்பட்டு வந்திருப்பதாக ஓர் எண்ண‌ந்தான் தோற்றியது. பொறாமையின் முளை தலை காட்டியது.

'மகாராஜா அவனையும் சில நாள் வாசிக்கச் சொல்லுகிறார். வினிகைவேறு நடத்த வேண்டுமாம். சரி சரி. வர வர அவனே மகாராஜாவுக்குப் பிரியமுள்ளவனாகி விடுவான். நாம் மூலையிலே கிடக்க வேண்டியதுதான். நம் வித்தை மங்கி ஒழிய வேண்டுவதே' என்றெல்லாம் அவர் யோசனை விரிந்தது. அவர் வீடு போய்ச் சேர்ந்தார்.

* * *

"அடே குழந்தாய்! நான் இல்லாதபோது மகாராஜா பூஜையில் நீ வீணை வாசித்தாயாமே! நீ வாசிப்பது எனக்குத் தெரியாதே' என்று காளஹஸ்தி ஐயர் குமாரனைக் கேட்டார்.

"எல்லாம் உங்கள் ஆசீர்வாதம். விளையாட்டாகக் கற்றுக்கொண்டேன். நீங்கள் வாசிப்பதைப் பார்த்துக் கற்றுவந்தேன். உங்களிடம் சொல்லுவதற்கு எனக்குப் பயமாகவும் வெட்கமாகவும் இருந்தது. நீங்கள் கூறுகிறபடி நான் அவ்வளவு சிற‌ந்த பழக்கத்தை அடையவில்லை. ஆசை மட்டும் அதிகமாக இருக்கிறது."

"அப்படியா! எங்கே கொஞ்ச‌ம் வாசித்துக் காட்டு பார்ப்போம்" என்று தகப்பனார் கூறினார்.

குமாரன் வணக்கத்தோடு வீணையை எடுத்தான். மெல்ல வாசிக்கத் தொடங்கினான். வாசிக்க வாசிக்க இனிமை அதிகமாகிக் கொண்டே வந்தது.அ வனே அந்த இனிமையில் ஒன்றிப் போய்த் தன் தந்தையையாரையும் மறந்து வாசித்து வந்தான். காளஹஸ்தி ஐயர் காதில் அந்த நாதம் புகப்புக அவனுடைய பெருமையை அவர் உணர்ந்தார். ஆனாலும் அவர் மனம் உருகவில்லை; அவருக்கு மகிழ்ச்சியே உண்டாகவில்லை. அந்த மெல்லிய இசை அவருடைய பொறாமைத்தீயையே மூட்டியது. அந்த இளைஞன் தம்முடைய பிள்ளையாகத் தோற்றவில்லை; பகைஞனாகவே தோற்றினான். பொறாமைப் பேய்க்குப் பிள்ளை தகப்பனென்பதேது?

அவன் வாசித்துக் கொண்டிருந்தபோது காளஹஸ்தி ஐயருடைய மனம் அதை அனுபவிப்பதிலே செல்லவில்லை; பொறாமையினால் வெதும்பிக் குழம்பியது.

ஒருவாறு வசிப்பதை நிறுத்தினான் குமாரன். "உன்னுடைய சாமர்த்தியத்தை இதுவரையில் அறிந்து கொள்ளவில்லையே!" என்று ஆவலோடு கட்டிக்கொள்ளப் போனார் தந்தையார்.

"வீணை வாசித்த அந்தக் கை எங்கே காட்டு, பார்ப்போம்" என்று சொல்லி அவனது இடக்கையை இழுத்து முத்தம் கொடுப்பவர்போல் வாய்க்கருகில் கொண்டுபானார்; வெடுக்கென்று நடுவிரலைக் கடித்து விட்டார். வீணை வாசிப்பதற்கு இடக்கை நடுவிரல் இன்றியமையாதது.

குமாரன் வீரிட்டு அலறினான். விரல் துண்டுபட்டது. அதிலிருந்து ரத்தம் பீரிட்டது. ச‌ற்று நேரத்துக்குமுன் இனிய கானத்தை எழுப்பிய அந்த விரல் துண்டுபட்டு ரத்த ஊற்றாக நின்ற‌து.

அவன் துடிதுடித்து நின்றான். அப்பொழுதுதான் தகப்பனாருக்கு, 'இவன் நம்குழந்தை; நம் பெயரைக் காப்பாற்றப் பிறந்தவன்' என்ற நினைவு வந்தது. பெற்ற பிள்ளை துடித்துக் கொண்டு ரத்தம் பெருகியோடும் விரலுடன் நிற்கும் காட்சி காளஹஸ்தி ஐயர் மனத்திலிருந்து பொறாமையை ஓட்டியது.

"ஐயோ! படுபாவி! என்ன காரியம் செய்தேன்!" என்று புலம்பத் தொடங்கினார். "பொறாமையினால், பெற்ற‌ பிள்ளைக்குத் துன்பம் உண்டாக்கினேனே! நான் மகா பாபி!" என்று கதறினார்.

இளஞன் அறிவு மிக்கவன்; கையில் உண்டான நோவை அவனால் தாங்க முடியவில்லை. ஆனாலும் தந்தையார் கதறுவதைப் பார்க்க அவன் மனம் சகிக்கவில்லை; "அப்பா! இனிமேல் வருந்தி என்ன பயன்? நீங்கள் எனக்கு உங்கள் வித்தையைச் சொல்லிக் கொடுக்கவில்லையான‌லும் உங்களுடைய கிருபையினாலேயே உங்களை என் மனக்கண்ணால் பார்த்துக்கொண்டு கற்று வந்தேன். நான் உங்களிடம் நேரே கற்றுக்கொள்ளவில்லையே என்று எண்ணும்போதெல்லாம் எனக்கு ஏகலைவன் ஞாபகம் வரும். அந்த கலைவனைப்போல மறைவிலே கற்றுக்கொள்வதாக நினைத்துக்கொள்வேன். இப்போது என் விரல் போயிற்று. ஏகலைவனுக்கு ஒப்பாக என்னை நினைத்துக் கொள் வதற்கு மற்றொரு காரணமும் ஏற்பட்டது. அவன் அம்புவிடும் விரலை இழந்தான். நான் வீணை வாசிக்கும் விரலை இழந்தேன்" என்று சமாதானம் சொன்னான். கேட்கும் போது தகப்பனார் பின்னும் விம்மி விம்மிப் புலம்பினார்.

காளஹஸ்தி ஐயர் எவ்வளவோ வருந்தித் துடித்தார். இழந்த விரலை மீண்டும் பெற முடியுமா? ஆனாலும் அவருடைய அன்பன் ஒருவன் அப்புண்ணை ஆற்றிவிட்டுத் தந்தத்தினால் ஒரு விரல் செய்து கொடுத்தான். அவன் தந்த அந்தத் தந்த விரலைக் குமாரன் பொருத்திக் கொண்டு வீணை வாசிக்கத் தொடங்கினான். அதுவரையில் காளஹஸ்தி ஐயர் துயிலை இழந்திருந்தனர். வீணை வாசிப்பதை மறந்திருந்தார். தம் அருமைக் குமாரன் மீண்டும் வீணை வாசிக்க ஆரம்பித்த பிறகு அவர்சிறிது ஆறுதலுற்றார்; அவனுடைய சங்கீதத்தை அனுபவிப்பதிலேயே பொழுது போக்கிக்கொண்டு வாழ்ந்து வந்தார்.

[ இவ்வரலாற்றை யான் பச்சை மிரியன் ஆதிப்பையர் பரம்பரையினரும் என் தந்தையாருக்கு நண்பருமாகிய புதுக்கோட்டை வீணை சுப்பையரென்பவரிடமும் என் தந்தையாரிடமும் கேட்டிருக்கிறேன்.}
-------


18. படக்காட்சி


தமிழ் மகள் களிநடம் புரிந்தகாலத்தில் அவளுடைய சிலம்பொலி எழுந்து தமிழரின் உள்ளதைக் கவர்ந்தது. இற்றைக்கு 1800 வருஷங்களுக்கு முன் இளங்கோவடிக ளென்னும் புலவர் பிரான் இய‌ற்றிய சிலப்பதிகார மென்னும் நூல் தமிழ் மக்களின் சிலம்பாகவே கருதத் தகும். இவ்வள‌வு நாட்களாகியும் அக்காவியம் இன்றும் புதிய சுவையோடு விளங்குகின்றது.

தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்குச் சிலப்பதிகாரம் செய்யும் உதவி மிகவும் சிற‌ந்தது. கடைச் சங்க காலத்தை அறிவதற்கு முக்கிய காரணமாக இருப்பது அதுவே. இறந்து பட்ட இசைத்தமிழ் நாடகத் தமிழின் சில பகுதிகளை யுடையதாகிப் பழந்தமிழ் வழக்கை வெளிப்படுத்திக் கொண்டு விளங்கும் அந்நூலுக்கு இணையாக வேறொன்றும் இல்லை.

அதை நான் முதலில் ஏட்டுச்சுவடியிலே படித்தபோது பல அற்புதங்கள் நிறைந்த புதிய உலகிற்குச் சென்றதுபோலே தோற்றியது. மூலத்தைக் காட்டிலும் அடியார்க்கு நல்லார் உரையினால் அறிந்து கொள்ளும் செய்திகள் அளவிறந்தன. இசைத்தமிழ் நாடகத் தமிழ்களைப் பற்றி நாம் இக்காலத்தில் அறிந்துகொள்ளும் செய்திகளிற் பல அடியார்க்கு நல்லார் இட்ட பிச்சையென்றே சொல்ல வேண்டும். எத்தனை நூல்கள் ! எத்தனை கலைகள் ! எத்தனை மேற்கோள்கள் !

சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதின அடியார்க்கு நல்லார் பிற்காலத்தவர். அவர் உரைக்கு முன்பு ஓர் உரை அதற்கு உண்டு; அவ்வுரை அரும்பதவுரை எனப்படும். அடியார்க்கு நல்லார் உரையெழுதுவதற்கு அவ்வரும்பதவுரை பெரிதும் துணை செய்தது. அவ்வாறெனின் அரும்பதவுரையின் சிறப்பை எப்படி நான் தெரிவிக்க முடியும்?

ஆனால் என்னுடைய துரதிர்ஷ்டம் அரும் பதவுரையுள்ள ஏட்டுப்பிரதி ஒன்றே எனக்குக் கிடைத்தது. பிற்காலத்தில் தமிழ்போன போக்கையும், அடைந்த அலங்கோலத்தையும் அப்பிரதியும் நிதரிசனமாகக் காட்டியது. பிழைகள் மலிந்தும் முன்பின் மாறியும் இடையிடையே விட்டும் அப்பிரதியில் விஷயங்கள் எழுதப்பட்டிருந்தன. அதனை முற்றும் படித்தறிவதே கஷ்டமாக இருந்தது. உரைப்பகுதிகள் வெவ்வேறு இடங்களில் மாறி மாறிக் கலந்திருந்தமையின் 'மூலத்தில் எந்தப்பகுதிக்கு எது பொருள்?' என்று தேடிப் பொருத்திப் பார்ப்பதற்குள் சிலப்பதிகாரம் முழுவதற்குமே உரையெழுதிவிடலாமென்று தோற்றியது. இத்தகைய பிரதியை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது!

சிலப்பதிகாரத்தை ஆராய்ச்சி செய்து வந்தேன். அரும்பதவுரையின் பிரதிகள் வேறு எங்கேனும் கிடைக்குமோ வென்று தேடிப் பார்த்தேன்; காத்திருந்தேன்; பயனில்லை. 1891-ஆம் வருஷம் சிலப்பதிகார‌த்தை அடியார்க்கு நல்லார் உரையோடு பதிப்பிக்கத் தொடங்கினேன். அக்காலத்தில் நான் கும்பகோணத்தில் இருந்தேன். பதிப்பு வேலை சென்னையில் வெள்ளைய‌ நாடார் ஜூபிலி அச்சுக்கூடத்தில் நடைபெற்று வந்தது.

அரும்ப‌த‌வுரைப் பிர‌தி வேறு கிடைத்தால் ப‌ரிசோதித்துச் சில‌ப்ப‌திகார‌ப்ப‌திப்பில் சேர்க்க‌லாமென்று எண்ணியிருந்தேன். என் எண்ண‌ம் நிறைவேற‌வில்லை.ஒரு ச‌ம‌ய‌ம் சென்னைக்கு வ‌ந்திருந்த‌போது திருத்த‌ணிகைச் ச‌ர‌வ‌ணப் பெருமாளைய‌ர் ப‌ர‌ம்ப‌ரையின‌ராகிய‌ குருசாமி ஐய‌ரென்ப‌வ‌ர் வீட்டில் சில‌ ஒற்றை யேடுக‌ள் கிடைத்த‌ன‌. அவ‌ற்றுள் சில‌வற்றில் அரும்பதவுரையின் பகுதிகள் காணப்பட்டன. அவற்றைக் கொண்டு என் பிரதியில் சில திருத் தங்கள் செய்து கொண்டேன். அந்தத் திருத் தங்களால் பழைய நிலையில் பெரிய மாறுபாடு ஒன்றும் உண்டாகவில்லை.

'இதை வெளியிடாமலே விட்டு விடலாம். அடியார்க்கு நல்லார் உரை விரிவாக இருக்கும் போது இந்த உரை எதற்கு?' என்று நினைத்தேன்.

'அடியார்க்கு நல்லார் உரை இல்லாத விடங்களில் இந்த உரையின் துணுக்குகள் உபயோகப்படுமே'என்று வேறோர் எண்ண‌மும் உண்டாயிற்று.

இதில் உள்ள‌ துணுக்குகளின் உதவியைக் கொண்டு நாமே அந்தப் பகுதிகளுக்கு ஒரு குறிப்புரை எழுதிவிடலாமே' என்று அடுத்தபடி நினைத்தேன். சில பகுதிகளுக்கு அங்ஙனமே குறிப்புரையெழுதிப் பதிப்பித்து வந்தேன். 'அரும் பதவுரையை விட்டு விட வேண்டியதுதான் என்ற முடிவுக்கும் வந்தேன். ஆனால் என் மனம் உறுத்திக் கொண்டே இருந்தது; 'கைக்கெட்டியும் வாய்க் கெட்டவில்லையே! கிடைத்த பிரதியும் நன்றாக இல்லையே!" என்று வருந்தினேன். 'தமிழ்நாட்டின் தவக்குறைவோ, ந‌ம்முடைய தவக்குறைவோ, ஏதானாலும் நாம் ஒரு அரிய பொருளை இழந்து விட்டோம் என்பது மட்டும் நிச்சயம்' என்று எண்ணி எண்ணி நைந்தேன்.

என் மனம் இப்படி ஊசலாடிக்கொண்டிருக்கையில் என்னுடைய அரிய நண்பர்களும் தமிழ்ச்சுவை யறிந்து இன்புறுபவர்களுமாகிய சிலர், "எப்படியிருந்தால் என்ன? பழைய பொருளை அழியாமல் காப்பாற்ற வேண்டும்; இருக்கிறபடியே போட்டுவிடுங்கள்" என்று அறிவுறுத்தினார்கள்.

அவர்கள் கூறியது பொருத்தமாகத் தோற்றியது. 'பழைய மாளிகைகளின் சின்னங்களைப் பழமையை நினைத்துப் பாதுகாப்பதில்லையா? அழகிற் குறைந்தனவென்று அவற்றை யார் புறக்கணிக்கிறார்கள்? நமக்குத் தெரிந்தவரையில் செப்பஞ் செய்து தனியே பதிப்பித்துச் சிலப்பதிகாரத்தின் பின்னே சேர்த்துவிடுவோம்' என்று தீர்மானம் செய்து கொண்டேன்.

1892-ஆம் வருடம் கோடை விடுமுறையில் நான் சென்னைக்கு வந்திருந்தேன். சிலப்பதிகாரப் பதிப்பு முற்றுப்பெறும் நிலையில் இருந்தது; நான் இரவும் பகலும் சோம்பலின்றி உழைத்து வந்தேன். எனக்கு உண்டான துன்பங்கள் பல. அதுகாறும் என்னுடன் இருந்து உதவிகள் புரிந்துவந்த ஒருவர் திடீரென்று பிணக்குற்று ஊர் போய்விட்டார். இவ்வளவு துன்பக்களுக்கிடையில் சிலப்பதிகாரம் மூலமும் அடியார்க்கு நல்லார் உரையும் பதிப்பிக்கப் பெற்றன. அரும்பதவுரையும் பதிப்பித்தாயிற்று. அதற்கு ஒரு சிறு முகவுரை எழுதிச் சேர்த்துச் சிலப்பதிகாரத்தை வெளியிட வேண்டும். அப்பொழுது என் மனம் பரம சந்தோஷத்தில் மூழ்கி யிருந்தது. முடிந்துவிடப் போகிறது என்ற எண்ணத்தினால் அதுகாறும் தெரியாத சிரமம் எனக்குத் தோற்றியது. நெடுந்தூரம் நடந்து செல்பவனுக்குத் தான் அடையவேண்டிய இடம் நெருங்கும்போது கால்வலி அதிகமாகத் தோற்றும்; அதுபோல எனக்கு உழைப்பினால் உண்டான அயர்வு தோற்றியது.

அன்று வெள்ளிக்கிழமை. மறுநாள் சனிக்கிழமை அரும்பதவுரையின் முகவுரை அச்சாகி முதிய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை அச்சுக்கூடம் இல்லை; நானும் கும்பகோணம் போய்ச் சேரவேண்டியவன்.

அச்சுக்கூடத்திற்கு அப்போது பணம் கொடுக்க வேண்டிய சமயம். என் கையில் பணம் இல்லை. திருவல்லிக்கேணியில் இருந்த விசுவநாத சாஸ்திரியாரென்பவர் எனக்கு அத்தகைய சமயங்களில் உதவுவார்; அவரிடம் பணம் கடனாக வாங்கி ஊருக்குப் போனபிறகு திரும்ப அனுப்பிவிடுவேன். அவர் பிரபல பாரிஸ்டரான நார்ட்டன் துரையினிடம் குமாஸ்தாவாக இருந்தார்.

மாலையில் அச்சுநிலயத்திலிருந்து மிகவும் களைத்துப் போய்த் திருவல்லிக்கேணிக்குச் சென்றேன். ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளைத் தரிசித்துக் கொண்டு விசுவநாத சாஸ்திரியார் வீட்டில் உணவுண்டு அன்றிரவு அங்கேயே தங்கினேன். அவர் நான் படுத்துக்கொள்ள‌ வசதியான இடம் கொடுத்தார். நான் படுக்கப் போகும்போது மணி பத்து இருக்கும். அதற்கு மேல் அரும்பதவுரைக்கு முகவுரை எழுதலாமென்று எண்ணிப் பேனாவைக் கையில் எடுத்தேன். கண் எரிந்தது. உடம்பில் என்னை அறியாமலே ஒரு சோர்வு இருந்தது. தலை சுழன்றது. உடம்பெல்லாம் வலி உண்டாயிற்று. 'இந்த நிலையில் நாம் என்ன எழுதப் போகிறோம்? விடியற்காலையில் எழுந்து எழுதி விடலாம்' என்று எண்ணி ஒரு மெழுகு வர்த்தியும் நெருப்புப் பெட்டியும் வாங்கி வைத்துக்கொண்டு படுத்தேன். படுத்த‌துதான் தாமதம்; தூக்கம் என்னை அமிழ்த்திக்கொண்டது. ஆனந்தமாகத் தூங்கினேன்.

இடையில் விழித்துக் கொண்டேன்.'முகவுரை எழுத வேண்டுமே' என்ற கவலை முன் னால் வந்து நின்றது. உடனே விளக்கை யேற்றி மணியைப் பார்த்தேன். அப்பொழுது சரியாக இரண்டு மணி. 'மறுபடியும் படுத்துக் கொண்டு விரைவில் விழித்துக்கொள்ளாமல் இருந்தால் காரியத்துக்குத் தடை ஏற்படும். இப்பொழுதே எழுதி விடுவோம்' என்ற ஒரு யோசனை தோற்றியது. பேனாவைக் கையிலெடுத்தேன். மனம் மட்டும் சோர்விலிருந்து மீளவில்லை. சிரமமும் நீங்கின‌பாடில்லை. தூக்கமும் விழிப்பும் இல்லாத ஒரு நிலையில் என்ன செய்ய முடியும்? என் மனத்துக்குள் ஒரு போராட்டம் நிகழ்ந்தது. எழுதலாமென்ற எண்ணத்தை அயர்ச்சி தடுத்தது.

மேலே நிமிர்ந்து பார்த்தேன். அங்கே ஒருவருடைய படம் இருந்தது. அவர் ஒரு வெள்ளைக்காரராகக் காணப்பட்டார். அவருடைய முகத்தில் ஒரு சுறுசுறுப்பும் அவர் பார்வையில் ஓர் ஊக்கமும் தோற்றின. என்னுடைய சோர்ந்த நிலைக்கு நேர் மாறாக இருந்தது அவர் நிலை. எனது உள்ளத்தினுள்ளே அந்தப் படத்தினால் ஓர் உணர்ச்சி உண்டாயிற்று. என் மனத்துக்குள் யாரோ என்னை இகழ்வது போல் இருந்தது. 'இவரல்லவா மனுஷ்ய‌ர்! என்ன துடியாய் இருக்கிறார்! நம்மைப்போல அழுது வழிந்து கொண்டிருந்தால் காரியம் எப்படி நடக்கும்?' என்ற எண்னத்தோடு புதிய ஊக்கமொன்று உண்டாயிற்று. எழுந்தேன். கண்களை நன்றாகக் கழுவிக்கொண்டேன். படுக் கையிலேயே உட்கார்ந்து எழுதத் தொடங்கினேன்.

பக்கத்தில் புத்தகமும் இல்லை; குறிப்புமில்லை. எல்லாம் ஞாபகத்தில் இருந்தன. அரும்பதவுரைப்பிர‌தி கிடைத்தவரலாறு, அதன் இயல்பு, அதைப் பின்னே பதிப்பித்ததற்குக் காரணம், அதன் பெருமை முதலியவற்றை எழுதி முகவுரையை முடித்தேன். மீட்டும் அதைப் படித்துச் செப்பஞ்செய்தேன். அப்பொழுது ஏதோ பெரிய பாரம் நீங்கியதுபோல் இருந்தது. எனக்கு ஊக்கத்தை உண்டாக்கிய அப்படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்து உளங்களித்தேன்.

பொழுது விடிந்தது. நான் எழுதிய முகவுரையை அச்சுக்கூடத்துக்கு அனுப்பினேன்.இரவில் நான் கண்ட அப்படம் யாருடையது என்று விசுவநாத சாஸ்திரியாரைக் கேட்டேன்.

"அவரே எங்கள் எஜமானாகிய நார்ட்டன் துரை" என்றார் அவர். "அவரை நான் நேரே அறியாவிட்டாலும் அவருடைய‌ படத்தினால் நான் பெரிய லாபத்தை அடைந்தேன். அந்தப் படந்தான் எனக்குப் புதிய சக்தியை அளித்தது" என்று கூறி இரவில் நிகழ்ந்தவற்றைச் சொன்னேன்.

சனிக்கிழமையன்று சிலப்பதிகாரம் பதிப்பித்து நிறைவேறியது. ஞாயிறன்று அதைப் புத்தகவடிவத்தில் பார்த்து மகிழ்ந்து கும்பகோணம் சென்றேன். 1892-ஆம் வருஷத்திற்குப் பின் பலருடைய படங்களைப் பார்த்து இன்புற்றிருக்கிறேன். ஆனால் அன்றிரவு எனது தளர்ந்த உள்ளத்திற்கு முறுக்கேற்றிய அப்படத்தையே நான் சிறந்ததாக மதிக்கிறேன்.

சிலப்பதிகாரப் பதிப்பை நான் ஞாபகப் படுத்திக்கொள்ளும் போதெல்லாம் அந்தப் படக்காட்சியும் அதனால் விளைந்த பயனும் என் நினைவுக்கு வருகின்றன.
-----------


19. கும்மாயம்


மணிமேகலை யென்னும் நூலைப் பதிப்பிப்பதற்காக நான் ஆராய்ந்து வருகையில் அந்நூலிலுள்ள‌ பல சொற்களுக்குப் பொருள் விளங்கவில்லை. நாளடைவில் வேறு நூல்களைப் படித்தும், பலரிடம் விசாரித்தும் அவற்றின் பொருள்களைத் தெரிந்துகொண்டேன். சில சமயங்களில் ஒரு சொல்லுக்குப் பொருள் கண்டுபிடிக்க எவ்வளவோ உழைப்பும் சிரமமும் ஏற்பட்டதுண்டு. நான் எதிர்பாராத விதத்தில் சில வார்த்தைகளின் பொருள் தெரிந்ததுமுண்டு. அப்பொழுது எனக்குண்டான இன்பம் மிக அதிகம்.

மணிமேகலையில்,27-ஆவது சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதையில்,
    "பயற்றுத் தன்மை கெடாது கும்மாயம், இய‌ற்றி" (அடி, 175-6)
என்று ஒரு பகுதி உள்ளது. அதிலுள்ள 'கும்மாயம்' என்ற சொல்லின் பொருள் எனக்கு
விளங்கவில்லை; பலரை விசாரித்தும் தெரியவில்லை.அ க்காலத்தில் நான் கும்பகோணத்தில் இருந்தேன்.

அந்நகரிலுள்ள ஸ்ரீ சார்ங்கபாணிப் பெருமாள் சந்நிதி பட்டாசாரிய ரொருவர் அக்காலத்தில் வியாபகராக இருந்தார். அவர் தோற்றப் பொலிவுடையவர். கையில் தோடாக்களை அணிந்திருப்பார். எப்பொழுதும் சால்வையையாவது துப்பட்டாவையாவது போர்த்திருப்பார். பெரிய மனிதர்கள் யாவரும் அவருக்குப் பழக்கம் உண்டு. என்னிடம் பிரியமாக இருப்பார். கோயிலுக்குச் சென்ற காலங்களில் மாத்திரம் அவரை நான் பார்ப்பேன்.

அவர் ஒரு சமயம் என் வீட்டிற்கு வந்தார்; "கோயிலுக்கு வந்து பெருமாளை ஸேவிக்க வேண்டும்" என்றார். ஒரு நாள் வருவதாக நான் சொன்னேன். அது முதல் அடிக்கடி வீட்டிற்கு வந்து அன்போடு என்னை வரும்படி வற்புறுத்தி வந்தார். அவருடைய விருப்பத்திற் கிணங்கி ஒரு நாள் கோயிலுக்குச் சென்றேன். என்னோடு இருந்து தமிழ்ப் பணிக்கு உதவி செய்து வந்த திருமானூர்க் கிருஷ்ணையரென்பவரும் உடன் வந்தார்.

பட்டாசாரியார் எங்களை அழைத்துக் கொண்டுபோய் ஒவ்வொரு சந்நிதியாகத் தரிசனம் செய்வித்தார். அதற்குமுன் பலமுறை நான் பெருமாளைத் தரிசனம் செய்ததுண்டு. ஆயினும் அன்று மிகவும் நன்றாக ஸேவித்தேன். பட்டாசாரியார் ஒவ்வொரு சந்நிதியைப் பற்றிய வரலாறுகளை யெல்லாம் சொன்னார். தரிசனம் செய்த பிறகு, " சிறிது இருக்க வேண்டும்" என்று சொல்லிவிட்டு அவர் மடைப் பள்ளிக்குச் சென்றார். அன்று ஏதோ விசேட மாதலின் பெருமாளுக்குப் பல சிறப்பான நிவேதனங்கள் செய்யப்பட்டிருந்தன. அவற்றில் வகைக்குச் சிறிது சிறிதாக எடுத்து ஒரு பெரிய வெள்ளித் தாம்பாளத்தில் வைத்து ஒருவரை எடுத்து வரச் செய்தார். அந்தத் தாம்பாளத்தைக் கண்டவுடனே, பிரசாதங்கள் வருகின்றனவென்பதை நான் அறிந்தேன். ஒருநாளும் இல்லாமல் அன்று அவ்வளவு உபசாரங்கள் எனக்கு நடைபெறுவதன் காரணம்மட்டும் அப்போது விளங்கவில்லை.

பிரசாதத் தாம்பாளம் கீழே வைக்கப்பட்டது. அதில் பல சிற்றுண்டிகள் இருந்தன. பட்டாசாரியார் ஒவ்வொன்றாக எடுத்து எங்களுக்கு அளித்தார். தேங்குழல், வடைத் திருப்பணியாரம், அதிரசம் முதலியன இருந்தன. நான் அதுகாறும் அறியாத புதிய சிற்றுண்டிகள் சில அதில் இருந்தன. பட்டாசாரியா் ஒன்றைக் கொடுப்பார்; அதைச் சாப்பிட்டுக்கொண்டே "இதற்குப் பேர் என்ன?" என்று நான் கேட்பேன். அவர் அதன் பெயரைச் சொல்வார். அடுத்தபடி ஒன்று வரும். இப்படி ஒன்றன் பின் ஒன்றாக உட்கொண்டு வந்தோம்.

பட்டாசாரியார் ஒரு சிற்றுண்டியை எடுத்தளித்தார். அதை வாயிற் போட்டுக் கொண்டு "இது புதிதாக இருக்கிறதே; இதன் பெயர் என்ன?" என்றேன். "அதுவா? கும்மாயம்" என்றார். "என்ன?கும்மாயமா!" என்று வியப்போடு கேட்டேன். நான் அதற்கு முன் உண்ட மிக்க சுவையுள்ள சிற்றுண்டிகளை மற‌ந்தேன்; சார்ங்கபாணிப் பெருமாள் கோயிலில் இருகிறோமென்ற நினைவு கூட இல்லை. என் மனக்கண்ணின் முன் மணிமேகலையடிகள் வந்து நின்றன. "ஐயா! ஐயா! அதை இன்னும் கொஞ்சம் கொண்டுவரச் சொல்ல வேண்டும்" என்றேன். பட்டாசாரியார் மடைப்பள்ளிக்குச் சென்று அச்சிற்றுண்டியை அதிகமாகக் கொண்டு வரச் செய்தார். அவ்வளவு சிற்றுண்டிகளிலும் கும்மாயந்தான் எனக்கு அதிகப் பிரியமென்று அவர் நினைத்தார் போலும்! கும்மாயத்தை நான் நாவினாற் சுவைத்த பொழுது எனக்கு உண்டான இனிமையைக் காட்டிலும், அதன் பெயரைக் காதினாற் கேட்டபொழுது உண்டான இனிமை மிகுதியாக இருந்தது. மணிமேகலையிற் கண்ட கும்மாயம் மடைப்பள்ளியில் இருப்பதென்று அதுகாறும் அறியாத நான்,"ஐயா!ஐயா! இதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டேன்! இதனை எப்படிச் செய்வது?' என்று கேட்டேன். பட்டாசாரியார் எனக்கு விரிவாக விளக்கினார்.

எனக்கு அவ்வொரு சொல்லின் பொருள் தெரிந்தது ஒரு புதையலை எடுத்தது போல் இருந்தது. "இன்றைக்கு நீங்கள் செய்த உபகாரத்திற்கு நான் என்ன செய்யப் போகிறேன்!" என்றேன். அவர் செய்த உபகாரத்தின் மதிப்பு அவருக்கே தெரிந்திராது. சிற்றுண்டிகளை அளித்ததற்காக நான் உப‌சாரம் சொல்வதாக அவர் நினைத்துக் கொண்டார். "நான் என்ன செய்துவிட்டேன்! உங்களுடைய பிரியம் இருக்க வேண்டும்" என்று அவர் சொன்னார். நாங்கள் அவ‌ரிடம் விடைபெற்றுக் கொண்டோம். அவர் கோயில்வாயில் வரையில் வந்தார். அப்படி வரும்போது, "ஒரு சிறிய விஷயம் நான் சொல்ல வேண்டுவதுண்டு" என்றார். "சொல்லலாமே" என்றேன். "இவ்வூர்ப் போலீஸ் அதிகாரியாகிய ராமசுவாமி நாயுடு என்பவர் மட்டும் எனக்குப் பழக்கமில்லை. இதற்கு முன் இருந்தவர்களெல்லாம் பழக்கமுண்டு. அவரோடு பழக்கம் செய்துகொள்ளச் சந்தர்ப்பம் நேரவில்லை. அதை உங்கள் முகமாகச் செய்துகொள்ள விரும்புகிறேன். அவருடைய குமாரர் வேணுகோபால நாயுடு வென் பவர் தங்களிடம் வாசிப்பதாகத் தெரிகிறது. அவரிடம் ஒருவார்த்தை என்னைப்பற்றிச் சொல்லிவைக்க வேண்டும்" என்றார். நான் அப்படியே செய்வதாக வாக்களித்து விடை பெற்று வந்தேன்; அவருடைய விருப்பப்படியே செய்தேன்.

கும்மாயத்தைப் பற்றி அந்தப் பட்டாச் சாரியரிடம் தெரிந்துகொண்ட பிறகு நீலகேசி யென்னும் நூலிலும் அச்சொல் வந்திருப்பதை யறிந்தேன்; வேறு நூல்களிருந்தும் சில செய்திகள் தெரிய வந்தன. அவற்றை யெல்லாம் சேர்த்து மணிமேகலைக் குறிப்புரையில் எழுதினேன். அப்பகுதி வருமாறு:-

"கும்மாயம் புழுக்கிய பச்சைப் பயற்றோடு சருக்கரை முதலியன கூட்டி ஆக்கப்படுவதொரு சிற்றுண்டி. இப்பெயரோடு இது விஷ்ணு ஆலயங்களில் இக்காலத்தும் வழங்கி வருகின்றது. 'கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கி' (பெரியாழ்வார் திருமொழி,3.3.3) என்பதில் கும்மாயம் என்பதற்கு ஸ்ரீ மணவாள மாமுனிகள் 'குழையச் சமைத்த பருப்பு' என்று பொருள் செய்திருக்கின்றனர். 'பயற்றது கும்மாயம்' (நன்னூல்,சூத்திரம், 299, மயிலை நாதருரை மேற்கோள்,)"*
-----
*(*அடிக்குறிப்பு இந்த இடமே மின் பதிப்புக்கு ஏற்றது)) தினமணி,வருஷ மலர்,1937
---------


20. திருடனைப் பிடித்த விநோதம்


கும்பகோணம் கலாசாலையில் நான் வேலை பார்த்து வந்த காலத்தில் அநேகமாக மற்ற‌ எல்லா ஆசிரியர்களோடும் மனங்கலந்து பழகுவேன். ஒவ்வொருவரிடத்திலும் உள்ள விசேஷ குணங்களைக் கண்டு இன்புறுவேன்.
--------------
**
சிலரிடத்தில் எனக்கு மிக்க மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டன. அத்தகையவர்களில் ஆர்.வி. ஸ்ரீநிவாசையர் ஒருவர்.

கூரிய அறிவு, இடைவிடாத படிப்பு, நேர்மையான குணம், உபகாரசிந்தை என்பவை ஸ்ரீநிவாசையரிடத்தில் குடி கொண்டிருந்தன. அவர் நினைத்தாரானால் மற்றவர்களால் முடியாத காரியத்தை முயன்று சாதித்து விடுவார். கணிதத்தில் அவர் மிக்க புகழ் பெற்ற‌வர். அதனால் 'யூக்ளிட் ஸ்ரீநிவாசையர்' என்றும் அவரைச் சொல்வதுண்டு.

காலேஜில் எந்த உபாத்தியாயரேனும் வராமற்போனால் அவருடைய பாடத்தைச் சிறிதும் சிரமமில்லாமல் நடத்துவார். அவருக்குத் தன் காடு, பிறன் காடு என்ற வேற்றுமை இல்லை.

சிறிய மனஸ்தாபங்களையெல்லாம் பெரியவையாகச் செய்துகொண்டு தாமும் கஷ்டத்துக் குள்ளாகிப் பிறரையும் கலங்கச் செய்யும் சிலரைப் போன்றவர் அல்லர் அவர். அவருடைய கம்பீரமான குணம் சிறு சிறு குற்றங்களிற் கவனத்தைச் செலுத்த விடுவதில்லை. அவருடன் பழகின‌வர்கள் எப்போதும் அவ‌ருடன் பழகிக்கொண்டே இருக்க விரும்புவார்கள். தமக்குப் பிற்காலத்தில் உதவுமே என்று பொருளைச் சேர்த்து வைத்துக் கொள்ளாமல் உப‌காரம் செய்யும் இயல்பு அவரிடம் இருந்தது.

ஸ்ரீநிவாசையர் சில காலம் கும்பகோணம் கலாசாலையில் உபாத்தியாயராக இருந்தார்; பிறகு சென்னை இராசதானிக் கலாசாலைக்கு வந்தார். அப்பாற் சிலகாலம் 'ரெவினியூ போர்டாபீஸி'ல் வேலை பார்த்து வந்து கடைசியில் பத்திரப்பதிவிலாகாவில் தலைமை ஸ்தானத்தை வகித்தார். எல்லா இடங்களிலும் அவருடைய மேதை பிரகாசித்துக்கொண்டு வந்தது.

சற்றேற‌க் குறைய நாற்பது வருஷங்களுக்கு முன் அவர் சென்னையில் இருந்தார். அப்பொழுது மயிலாப்பூரில் தெற்கு மாடவீதியில் மேலைக் கோடியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருந்து வந்தார். அவருடைய வீட்டில் எப்பொழுதும் விருந்தினர்களுடைய கூட்டத்தைக் காணலாம்.

ஸ்ரீநிவாசையருடன் படித்தவரும் அவருடைய நண்பரும் கும்பகோணம் காலேஜில் ஆசிரியராக இருந்தவருமாகிய ஒருவர் சென்னைக்கு ஒரு சமயம் வந்திருந்தார். அவர் ஸ்ரீநிவாசையர் வீட்டிலேயே தங்கினார்.

அக்காலத்தில் மயிலாப்பூரில் இப்பொழுதுள்ள மாதிரி அவ்வளவு அதிகமான வீடுகள் இல்லை. திருட்டுப் பயம் அதிகமாக இருந்தது. அடிக்கடி வீடுகளில் திருட்டுப் போகும். ஸ்ரீநிவாசையருடைய வீட்டில் தங்கியிருந்த ஆசிரியர் இந்த விஷயத்தைக் கேள்வியுற்றார். அங்கே தங்கியிருந்த காலத்தில் ஒவ்வொரு நாளும், "இன்றைக்கு இன்ன பண்டம் களவுபோய் விட்டது", "இன்றைக்கு அந்த வீட்டில் துணிகள் களவு போயின" என்று பலர் கூறுவதைக் கேட்டார். அவருக்கு, 'இவ்வளவு மனிதர்கள் இங்கே வசிக்கிறார்கள்; இவர்கள் இந்தத் திருடர்களைப் பிடித்துச் சரியானபடி தண்டிக்கும் வீரமில்லாமல் இப்படிக் கதை பேசுவதோடு நிற்கிறார்களே!' என்ற எண்ணம் அடிக்கடி உண்டாயிற்று.

அந்த ஆசிரியர் தேக வன்மையோடு மனோதைரியமும் உடையவர். ஒருநாள் யாரோ ஒருவர் ஓரிடத்தில் நிகழ்ந்த திருட்டைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருந்தார். உடனிருந்தவர்கள் திருட்டுப்போன வீட்டினருக்கு நேர்ந்த நஷ்டத்தைப் பற்றி இரங்கினார்கள். அந்த ஆசிரியரோ சிறிதேனும் இரங்கவில்லை; அவருக்கு கோபந்தான் உண்டாயிற்று; "இவர்கள் திருடனைப் பிடிக்கத் தைரியம் சிறிதுமில்லாதவர்கள்; ஆண்பிள்ளைகளென்று சொல்லிகொள்கிறார்களே" என்று பல்லைக் கடித்தார். அவருடைய கை அவரையறியாமலே மீசையை முறுக்கியது. 'நம்மிடம் மாத்திரம் ஒரு திருடன் அகப்பட வேண்டும்;

அப்பொழுது தெரியும் அவன் படும்பாடு' என்று நினைத்தார். தம் கையை இறுக்கிப் பிடித்துப் பல்லை மீண்டும் கடித்தார். அவர், ஒரு திருடன் வருவதுபோலவும் அவனைப் பிடித்து இறுக்கி நசுக்குவதுபோலவும் மனத்திலே கற்பனைசெய்து கொண்டார்.

ஸ்ரீநிவாசையர் தம் வீட்டு மேல்மாடியில் கீற்றுக்கொட்டகையொன்று போட்டிருந்தார். விருந்தினர்கள் அங்கே படுத்துத் தூங்குவது வழக்கம். கொட்டகைக்குத் தென்பக்கம் தனியே ஓரிடத்தில் மணல் பரப்பித் தட்டிகள் வைத்துத் தடுக்கப்பட்டிருந்தது. இரவில் கீழே இறங்கிவரும் அவசியமின்றி எல்லாச் சௌகரியங்களையும் மேலே அமைத்திருந்தார். மேற்கூறிய ஆசிரியரும் அக்கொட்டகையிலே இராத்திரி வேளைகளில் படுத்துவந்தார்.

ஒருநாள் அவ்வாசிரியர் அங்கே படுத்துக் கொண்டிருந்தபோது அவருடைய ஞாபகம் முழுவதும் திருட்டுக்கதைகளிலேயே இருந்தது. தம்முடைய வீரத்தைக் காட்ட வேண்டுமென்ற ஆவல் அவருக்கு மிதமிஞ்சி இருந்தது. அதனால் அவருக்குத் தூக்கம் வரவில்லை; விழித்துக்கொண்டே யிருந்தார்.

நடுராத்திரி வேளை. அப்பொழுது ஏதோ சத்தம்கேட்டது. யாரோ ஓர் ஆள் சந்தடி செய்யாமல் அந்தக் கொட்டகைக்கு வெளியே நடப்பது தெரிந்தது; 'சரி,இன்று அகப்பட்டுக் கொண்டான் திருடன். இவனை லேசில் விடக்கூடாது' என்று ஆசிரியர் உறுதி செய்துகொண்டார். படுக்கையில் படுத்தபடியே மூச்சுக்கூட விடாமல் அந்த உருவத்தைக் கவனித்தார். அவர் தேகம் பதறியது. உடம்பு வேர்த்தது. கைகள் உடனே சென்று பற்ற வேண்டுமென்பதுபோலத் தினவெடுத்தன.

அவர் கண்ட ஆள் தட்டி உள்ள இடத்திற்கு மெல்லச் சென்றான். அப்பொழுது ஆசிரியவீரர் சத்தம் செய்யாமல் எழுந்தார். ஓசைப் படாமல் நடந்தார். அந்த ஆள் தட்டி உள்ள‌ இடத்திற்குள் சென்று உட்கார்ந்தான். அவன் உட்கார்ந்தானோ இல்லையோ உடனே ஆசிரியர் ஒரே தாவலாகத் தாவி அவன் முதுகுப்புறமாகச் சென்று இரண்டு கைகளாலும் அவனை இறுகப் பற்றிக்கொண்டார். பிடிபட்ட ஆள் உளற‌ ஆரம்பித்தான். "திருட்டுப் பயலே, அகப்பட்டுக் கொண்டாயா? எல்லாரையும் ஏமாற்றுவதுபோல் என்னையும் ஏமாற்றலா மென்றா பார்த்தாய்? இந்தத் துடைநடுங்கிகள் ஒரு திருடனையாவது பிடிக்கும் சாமர்த்திய மில்லாதவர்களென்று உங்கள் கூட்டத்தாருக்கு ந‌ன்றாகத் தெரிதிருக்கிறது. அதுதான் இப்படி உங்கள் விளையாடல்களைத் தடையில்லாமல் நடத்திக்கொண்டு போகிறீர்கள். இன்றைக்கு அக‌ப்பட்டுக் கொண்டாய்" என்று அவர் வீரம் பேசத்தொடங்கினார்.

பிடிபட்ட மனிதன் என்ன என்னவோ கூறினான். அவை ஆசிரியர் காதில் விழவில்லை.

இந்தக் கலவரத்தில் அங்கே படுத்திருந்த சிலர் எழுந்து வந்தார்கள். கீழேயிருந்து விள‌க்குகளோடு சிலர் வந்துவிட்டார்கள். அவர்களைக் கண்டவுடன் ஆசிரியர், "பார்த்தீர்களா? இந்தப் பயலைக் கட்டுங்கள். நானும் இவ்வளவு நாள் பார்த்தேன். இன்றைக்கு அகப்பட்டுக் கொண்டான்' என்று பலமாகக் கூவினார்.

வந்தவர்கள் விளக்கைக் கொண்டு வந்து ஆசிரியர் பிடிக்குள் அகப்பட்ட மனிதனைப் பார்த்தார்கள். உடனே அவர்களுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அப்பொழுது ஸ்ரீநிவாசையரும் கீழிருந்து மேலே வந்தார்.

"இவன் எங்கள் வீட்டுச் சமையற்காரனல்லவா? இவனையா திருடனென்று பிடித்தீர்கள்?" என்று ஒருவர் விஷயத்தை வெளிப்படுத்தினார்.

"நான் இவனை இவர்களுக்கு ஏதாவது வேண்டி யிருந்தால் கவனித்துக் கொள்வதற்காக இங்கே படுத்துக்கொள்ளச் சொல்லியிருந்தேன். இவன் எங்கே இவர் கையில் அகப்பட்டான்!" என்றார் ஸ்ரீநிவாசையர்.

" கீழே எல்லோரும் போஜனம் செய்த பிறகு நான் சாமான்களையெல்லாம் ஒழுங்காக எடுத்து வைத்தேன். நாளைக்குச் சீக்கிரம் சமையலாக வேண்டுமென்று எஜமான் சொல்லியிருந்தபடியால் காய் கறியை இன்றைக்கே நறுக்கி வைத்துவிடலாமென்று நறுக்கினதில் பன்னிரண்டு மணியாகிவிட்டது. அப்பால் இங்கே வந்தேன். அந்தப் பக்கம் போனேன். அவ்வளவுதான்: திடீரென்று யாரோ என்னை இறுகப் பிடித்து தெரி்ந்தது. யாராவது திருடனோ என்று நான் பயந்து விட்டேன்; இந்த ஆலமரத்திலுள்ள பிசாசுதானோ வென்ற பயம் வேறு வந்துவிட்டது" என்று சமையற்காரன் சொன்னான். எல்லோரும் வயிறுகுலுங்கச்சிரித்தார்கள். அக்காலத்தில் அவ்வீட்டுக் கருகிலிருந்த ஆலமரமொன்றில் பேய் ஒன்று இருப்பதாகப் பெண்களும் வேறு சிலரும் பயந்து கொண்டிருந்தனர்.

ஆசிரிய வீரர் என்ன செய்வார் பாவம்?பேசாமற் போய்ப் படுத்துக் கொண்டார். அது முதல் திருட்டைப் பற்றிய பேச்சு அவர் இருக்கும்போது எங்கே நடந்தாலும் அங்கே இராமல் அவர் எழுந்து சென்று விடுவார்!"
-----
* ஆனந்த விகடன் தீபாவளி மலர், 1938.


This file was last updated on 20 Jan.2013.
Feel free to send the corrections to the Webmaster.